இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 நவம்பர், 2012

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை!


இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது எனக் கூறுவோர் அதற்குச் சான்றாக,
  • ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம்; பெண்கள் அவ்வாறு மணந்து கொள்ளக் கூடாது;
  • மனைவியைப் பிடிக்காத கணவன் தலாக்' கூறி அவளை விலக்கி விடலாம்;
  • தலாக்' கூறும் உரிமை பெண்களுக்கு இல்லை;
  • விவாகரத்துச் செய்யப்படும் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க இஸ்லாம் மறுக்கிறது;
  • ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் என இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் கூறுகிறது;
  • பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆண்களை விட அதிகப்படியான உடைகளை அணிய வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது;
  • இரண்டு பெண்கள் சாட்சியம் கூறுவது ஒரு ஆணுடைய சாட்சியத்துக்குச் சமமானது என்று இஸ்லாம் கூறுகிறது;
  • அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் தாராளமாக அனுமதி வழங்கியுள்ளது
என்று குற்றம் சாட்டுகின்றனர். 

இந்தக் குற்றச் சாட்டுக்கள் ஏற்கக் கூடியவை தாமா? என்பதைத் தனித்தனியாக ஆய்வு செய்வதற்கு முன்னால் இக்குற்றச்சாட்டுக்கள் எழுவதற்கான காரணம் என்ன என்பதையும் அக்காரணம் சரியானது தானா என்பதையும் ஆராய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமா? 'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற தத்துவத்திற்கு எதிராக இச்சட்டங்கள் அமைந்துள்ளன என்று கருதுவதே இந்தக் குற்றச் சாட்டுக்களுக்கு அடிப்படைக் காரணமாகும். சில விஷயங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான சட்டங்கள் இருப்பது இதனால் தான் சிலருக்கு ஆச்சரியத்தைஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே இரு பாலருக்கும் சட்டங்களில் எந்த விதமான வித்தியாசமும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்.

முதலில் இந்தத் தத்துவம் அறிவுக்கு ஏற்புடையது தானா? என்பதை ஆராய்வோம்.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற சித்தாந்தத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வாதம் கேட்க இனிமையாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

ஆண் வேறு! பெண் வேறு! இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வேறு வேறு!

இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.

எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் உண்மையிலேயே சம நிலையில் இருக்கின்றார்களோ அந்த அம்சங்களில் அவ்விருவரையும் இஸ்லாம் சமமாகவே கருதுகிறது. அந்த அம்சங்களில் ஒரே விதமான சட்டங்களையே இருவருக்கும் இஸ்லாம் விதிக்கின்றது.
 
எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் சமமாக இல்லையோ, இருக்க முடியாதோ அந்த அம்சங்களில் இருவரையும் இஸ்லாம் சமமாகப் பாவிப்பதில்லை.

பெண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி ஆண்களுக்கு மட்டும் இருந்தால் அந்த வகையில் ஆண்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி பெண்களிடம் இருந்தால் அந்த வகையில் பெண்கள் சிறந்து விடுகிறார்கள். இப்படித் தான் இஸ்லாம் கருதுகிறது.

ஆண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்குச் சில சலுகைகளையும், கடமைகளையும் ஏற்படுத்திய இஸ்லாம், பெண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்கு வேறு விதமான கடமைகளையும்,சலுகைகளையும் வழங்குகின்றது.

இரு பாலரும் எல்லா வகையிலும் சமமாக இல்லை என்பது சராசரி மனிதனுக்கும் பளிச்சென்று தெரிகின்றது. எனவே இரு பாலரும் முழுக்க முழுக்கச் சமமானவர்கள் என்று கூறுவது தவறாகும். போலித் தனமான இந்த வாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுக்கின்றது.

ஒரு பெண்ணுக்கு 15 வயதில் ஒரு புதல்வனும் ஒரு வயதிற்குட்பட்ட ஒரு புதல்வனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இரு புதல்வர்களும் அவளது பிள்ளைகள் தாம். இரு பிள்ளைகளையும் குறிப்பிட்ட காலம் வரை அவள் தான் கருவறையில் சுமந்தாள். அவளது பிள்ளைகள் என்ற முறையில் இருவருமே அவளுக்குச்சமமானவர்கள் தாம்.

அதே நேரத்தில் மூத்த புதல்வனுக்கு அந்தப் பெண் கடினமான உணவுகளை வழங்குகிறாள். அவன் விரும்பும் நல்ல உணவுகளை எல்லாம் கொடுக்க மறுப்பதில்லை. ஒரு வயதுக்கு உட்பட்ட மகனுக்கும் அதே உணவை வழங்க மாட்டாள். அப்படி வழங்கினால் அவள் தாயாக இருக்கத் தகுதியற்றவள் ஆகிறாள். மாறாக எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே அவனுக்கு வழங்குகிறாள். மூத்தவனுக்கு வழங்கிய அதே உணவை இளையவனுக்கு வழங்காததால் அவள் பாரபட்சமாக நடந்து விட்டாள் என்று எவரும் கூற மாட்டார்கள்.

இந்தச் சமயத்தில் இளையவனை விட மூத்தவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். ஒரு வயதுக்குட்பட்ட பையனுக்கும், பதினைந்து வயதுப் பையனுக்கும் ஒரே நேரத்தில் பசிக்கிறது. சிறியவனின் பசியைத் தீர்ப்பதற்கே அந்தத் தாய் முதலிடம் தருவாள். அதன் பின்பே மூத்தவனைக் கவனிப்பாள்.

இந்தச் சமயத்தில் மூத்தவனை விட இளையவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இரண்டு புதல்வர்களின் ஜீரண சக்தியிலும், பசியைத் தாங்கும் சக்தியிலும் வித்தியாசம் இருப்பதால் அந்தத் தாய் இருவரையும் வித்தியாசமாக நடத்துவதை நமது அறிவு ஏற்றுக் கொள்கிறது.

இரண்டு புதல்வர்களுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசத்தை விட ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஜீரண சக்தியில் உள்ள வித்தியாசம், நாளடைவில் மறைந்து விடும் தன்மை வாய்ந்தது. ஆண், பெண் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் நிரந்தரமானவை; காலப் போக்கில் மாறாதவை.

எனவே, நிரந்தரமான வித்தியாசங்களின் அடிப்படையில் சில விஷயங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது பாரபட்சமாகாது.
ஒரு மனிதனுக்கு அவனது தாயும், தந்தையும் சமமானவர்களா என்றால் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார்.அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு'என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5971.

தாயாருக்கு அடுத்த இடத்தில் கூட தந்தை இல்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார்கள்.

எல்லா வகையிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஆண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே இஸ்லாம் அவர்களை உயர்த்துகிறது. பெண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே அவர்களை உயர்த்துகிறது. 
  • எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமல்லர்.
  •  எல்லா வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமல்லர்.
  • எல்லா வகையிலும் இருவரும் சமமானவர்களும் அல்லர்.
காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
நன்றி: பிஜே.

அண்டை வீட்டாருக்கு அன்பு செய்!


அண்டைவீட்டார்  எம்மதமாக இருப்பினும் அவர்களோடு அன்பு பாராட்டவேண்டியது ஒரு இறைவிசுவாசியின் கடமை.

சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இறைவனின் மார்க்கம்.

''அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..!" என்று நபி(ஸல்) அவர்கள் தன் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

"தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறை விசுவாசியாக மாட்டார்.'
(நூல்-முஸ்னத் அபூ யஃலா)

=  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்
யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.

=  ஒரு முறை நபிகள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து (வாரிசு உரிமையிலும்) பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று எண்ணுமளவிற்க்கு.
(ஜிப்ரீல்- இறைவனிடம் இருந்துஇறைச்செய்தி கொண்டுவரும் வானவர்)
 
= ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள் இப்படி பதில் சொன்னார்கள்:  
 1.
அவர் உன்னிடம் கடன்கேட்டால் கொடுப்பாயாக
 2.
அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக 
 3.
நோயுற்றால் விசாரிப்பீராக 
 4.
அவருக்கு தேவை ஏற்பட்டால் கொடுப்பாயாக 
 5.
ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக. 
 6.
அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில் பங்கேற்பீராக. 
 7.
சோகம் நிகழ்ந்தல் வருத்ததில் பங்கேற்பீராக. 
 8.
மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக. 
 9.
அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை. 
 10.
பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும் கொடுப்பாயாக 
 11.
அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல் இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல் இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம் ஏற்படால் இருப்பதற்க்கு).



வியாழன், 29 நவம்பர், 2012

சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை!

Image result for environment
இவற்றை வெற்று பிரச்சாரம் என்றோ மதபோதனை என்றோ யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம். கீழ்கண்ட எச்சரிக்கைகள் இவ்வுலகின் உரிமையாளனிடம் இருந்து வந்தவை. எனவே இவற்றைப் பேணாவிட்டால் இன்றில்லாவிடினும் மறுமையில் தண்டனை உறுதி!

மக்கள் கூடக் கூடிய இடங்களான இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அசுத்தப்படுத்தி மக்களை ஏராளமானோர் துன்புறுத்து கிறார்கள். அவ்விடங்களுக்கருகில் நடந்து செல்வது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 
இங்கு அசுத்தம் செய்யாதீர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் செத்தவன் காதில் சங்கு ஊதுவதைப் போன்று நடந்து கொள்கிறார்கள். இந்தத் தீய செயலை இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.

இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல். அல்லது அவர்கள் நிழலாரக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 448

பொதுவாக மலம் கழித்து விட்டால் அனைவரும் கழுவி விடுவோம். ஆனால் சிறுநீர் கழித்தால் அதைப் பெரும்பாலானோர் தூய்மை செய்வதில்லை. அதை ஒரு அசுத்தமாகக் கணக்கிடுவதே இல்லை. ஆங்காங்கே சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இப்படி செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ''இந்த சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்¬த் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: நஸயீ 2041


அதே நேரத்தில் இக்கொடிய செய¬ல் ஈடுபடாமல் பாதையில் கிடக்கின்ற அசுத்தங்களை அகற்றினால் இது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக ஆகி விடுகின்றது. அதனால் இறைவனிடம் கூலியும் கிடைக்கிறது.
இறைநம்பிக்கையின் கிளைகள் 
''இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'இறைவனைத் தவிர வேறு வணக்கத்துக்கு உரியவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையி¬ருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 58
நம்மையும் நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து இறைவனின் நேசத்தைப் பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அவன் வழங்குவானாக!

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

உணவும் வீண்விரையமும்!


உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.
உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும்.

உணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும்.

 யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது.

இவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்...  

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள் ஆவர்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31)

'முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் எவரும் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்தாய் ?... (திர்மிதி)

 நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான். (17:27)

மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமென்றால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது...

''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)

வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்: திர்மிதீ 2258,)

மிகமிக உறுதியான தொனியில் வீண்விரையத்தை இறைவன் கண்டிப்பதைப் பாருங்கள்:
102:6-8         நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

உங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்!


அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (திருக்குர்ஆன் 78:39)
இறுதித் தீர்ப்புநாள் பற்றித்தான்  இறைவன் தன் திருமறையில் மேற்கண்டவாறு எச்சரிக்கிறான்.
நாளைய நம் நிரந்தர இருப்பிடம் ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும் என்பது உறுதி. அது எங்கு அமைய வேண்டும், நமது உணவும் உடையும் இருப்பிடமும் மற்றும் இன்ன பிற சவுகரியங்களும் எவ்வாறு அமையவேண்டும் என்பதை இப்போதே தீர்மானித்தால்தான் முடியும்.  இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆனின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட கீழ்கண்ட ஒப்பீட்டு மெனுவில் உங்கள் சாய்சை டிக் செய்து கொண்டே செல்லுங்கள்:  எது வேண்டுமோ அதற்கான ஆயத்தங்களை இன்றே செய்து கொள்ளுங்கள்!
முன்னேற்பாடு
அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)
மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
வரவேற்பு
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி; ''உங்களிலிருந்து (இறை) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) ''ஆம் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள்; எனினும் சத்திய மறுப்பாளர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. ''நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்'' என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39: 71,72)
தோற்றம்
அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)
ஆனால் அந்நாளில் – (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (80:40)

உணவு
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
பானம்
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)
அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
ஆடை
அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)
(இறைநம்பிக்கையாளர்களும், அல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)
படுக்கை
(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)
தங்குமிடம்
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும். அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள். அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், ''அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள். (67:6-8)
நிரந்தரம்
அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்போரிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள் இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)