இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 செப்டம்பர், 2023

இஸ்லாமிய ஆட்சியில் மாற்றுமதத்தினருக்கு நீதி!


யூதர்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமிய ஆட்சி வந்ததற்கு பிறகு முஸ்லிம்களால் கொடுமைபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. இதை நாம் கீழே வரும் நபிமொழியைக் கொண்டு சரி பார்ப்போம்.

(6819. :புகாரி) இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள். 

(
அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அவ்வாறே 'தவ்ராத்' கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை ('ரஜ்கி') பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை 'யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார். 

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!' என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கம் 'பலாத்' எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவளின் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை பார்த்தேன். 

Volume :7 Book :86

இந்த நபிமொழியில் நாம் பெறும் செய்தி அன்றைய யூதர்கள் அவர்கள் குற்றம் செய்தால் அவர்களின் வேதத்தின் கட்டளைப்படியே தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமியருக்கு எப்படி குர்ஆனின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போல் யூத கிறித்தவர்களுக்கும் அவர்களின் வேத வசனத்தின்படியே தண்டனை வழங்கப்பட்டதையும் நாம் அறிகிறோம்.

அடுத்து ஒரு சம்பவம்

(6917. :
புகாரி)அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். 

(
அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்.
Volume :7 Book :87

இங்கு முகமது நபி தன்னை மற்ற தூதர்களை விட உயர்த்தி பேச வேண்டாம் என்று தடுப்பதை பார்க்கிறோம். முகமது நபி குர்ஆனை தனது சொந்த கற்பனையில் உருவாக்கியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை வந்திருக்காது. ஏனெனில் எந்த மனிதனும் ஒரு மதததையோ ஸ்தாபனத்தையோ உருவாக்குவது தனது சீடர்கள் தனக்கு சேவகம் செய்ய வேண்டும். தனக்கு காணிக்கையாக பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுவர். சாய்பாபா முதற்கொண்டு ரவிசங்கர் வரை இந்த நிலைதான். 

ஆனால் இங்கு நிலைமையை தலைகீழாக பார்க்கிறோம். ஒரு முஸ்லிம் முகமது நபியை உயர்த்தி பேசி ஒரு யூதரை அடித்து விடுகிறார். அந்த யூதரும் முகமது நபியிடம் முறையிட்டால் நீதி கிடைக்கும் என்று நம்பி முறையிடுகிரார். முகமது நபியும் தன்னை புகழ்ந்த முஸ்லிமை கண்டித்து மோசேயை விட என்னை அதிகம் புகழாதீர்கள் என்று அந்த முஸ்லிமுக்கு அறிவுறுத்துகிறார்.

இதுதான் இஸ்லாம்! 

'
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை(முகமது நபியை) அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.'
-
குர்ஆன்
2:146

=================== 


செவ்வாய், 26 செப்டம்பர், 2023

நமக்குள் வாழும் இனவெறி !


நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு....  நம்மில் யாருக்குமே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்டு தர்பாரிலோ, அக்கிரமங்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அதர்மமும் நாளுக்கு நாள் பெருகி வருவதிலோ உடன்பாடு இருக்காது என்பது திண்ணம். ஆனால் நாம் அனைவருமே இந்நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வர நம்மை அறியாமலேயே நீர் பாய்ச்சி உரமூட்டி நமது  பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறோம்.  எப்படி?

தீமைகள் நம் முன் புயலாய் வீசும்போதும் கண்டும் காணாதவர்களாக ஒதுங்கிவிடும் குணம் நமக்கு உண்டு. நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிவிடும் மனப்போக்கு.

நமக்குள்  இயற்கையாகவே ஊறியிருக்கும் இன வெறி! நம் குடும்பம், நம் ஜாதி, நம் மொழி, நம் ஊர், நமது மாநிலம், நமது நாடு...... என நம்மவர்களை மட்டும் நியாயப் படுத்தும் மனப்போக்கு.

மேற்கண்ட இரண்டு மனப்போக்குகளுமே மிக மிக ஆபத்தானவை. இவை இரண்டும் நம்மிடையே தொடரும் வரை இவ்வுலகிலும் நாம் அமைதியைக் காண முடியாது என்பது மட்டுமல்ல, மறுமை வாழ்வில் நம்மை அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி!

நம் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணமுள்ளது, மாற்றான் தோட்டத்து மல்லிகை அது ஊர் முழுக்க மணத்தைப் பரப்பினாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவம் மிக மிகக் கொடியது! ஆனால் இறைவனைப் பற்றியோ அல்லது நம் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ மரணத்திற்குப் பின் வரவுள்ள வாழ்வு பற்றியோ சொர்க்கம் பற்றியோ நரகம் பற்றியோ நமக்கு எச்சரிக்கைகள் வரும்போது அவற்றை இந்த மனோபாவதோடு  அலட்சியம் செய்வது மிகப் பெரிய முட்டாள்த்தனம்!

உதாரணமாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மராட்டியர் ஒருவர் அதற்கான சரியான மருந்த நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அதை  குடிக்கப் போகும்போது அது கர்நாடகத்தில் தயாரானது என்று அறிய வருகிறார். ஆ, இது கர்நாடகத்தில் தயாரானதா? என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன்! என்று அவர் அடம் பிடிப்பாரானால்  அவரை என்னவென்று சொல்வீர்கள்?

அதைப் போலவே கடல் கடந்து வாழும் உங்கள் தந்தை அல்லது தாய் உங்களுக்காக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்ட ஒரு கடிதத்தையோ அல்லது  ஒரு விலை உயர்ந்த ஒரு பொருளையோ தனது கன்னட நண்பர் ஒருவர் மூலம்  கொடுத்தனுப்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். காவிரி நீரை தடுத்த கன்னடர்கள் நமது விரோதிகள் என்று சொல்லி உங்கள் பொருளை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவீர்களா?

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

என்று சரியாகச் சொன்னானே வள்ளுவன், அப்படியல்லவா நாம் உண்மைகளை அணுகவேண்டும்?  

ஆம் அன்பர்களே, நமது மொழியில் அல்லது நமது மதத்தவருக்கு அல்லது நமது நாட்டவருக்கு அல்லது நமது  முன்னோருக்கு வந்த வேதத்தை அல்லது தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்று இறுமாந்திருப்பது இறைவனுக்கு எதிராக நாம் தூக்கும் போர்க்கொடி என்பதை என்பதை நாம் உணரவேண்டும். உங்களைப் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனுக்கு நீங்கள் உங்கள் மொழியின் மீது, நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றோ அல்லது வெறியோ ஒரு பொருட்டல்ல. அனைத்துலக மக்களும் அவன் பார்வையில் சமமே. இப்பரந்த உலகில் அவன் நாடுவோரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன்  தூதர்களாக்கி அனுப்புவது அவன் விருப்பம். அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நமக்கு நன்மை. புறக்கணிப்பது தீமை மட்டுமல்ல பேராபத்து!  வானம், சூரியன், மழை, காற்று போன்றவை அனைத்து மக்களுக்கும் எப்படி போதுவானவையோ அதைப் போலவே அவனது வழிகாட்டுதலும் பொதுவானது!

நமது நிறம். மொழி, குலம், நாடு, இனம் இவையெல்லாம் அவன் நமக்கு தற்காலிகமாக  இவ்வாழ்க்கை எனும் பரீட்சையில் வழங்கியுள்ள ஏற்பாடுகளே. அவை பெருமை அடிப்பதற்க்காகவோ பிறரை சிறுமைப் படுத்துவதவற்க்காகவோ உள்ளவை அல்ல. அவன் நாடியிருந்தால் நம்மை ஆப்ரிக்கவிலோ அமெரிக்காவிலோ கருப்பு இன மக்களாகவோ காட்டு வாசிகளாகவோ படைத்திருக்க முடியும். எனவே நமக்காக அருளப்பட்ட திருக்குர்ஆனை  அரபு நாட்டு வேதம் என்றோ முஸ்லிம்களின் வேதம் என்றோ சொல்லி நாம் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.

இவ்வாறு சத்தியாத்தை சத்தியமாகக் கண்டும் ஏற்க மறுக்கும் இனம் பபுரியாத இனவெறி நமக்குள் எங்கிருந்து வருகிறது? அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான்! அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் நாம் காட்டவேண்டும்தான். ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்கள் அல்லது அவர்கள் செய்து போனதல்லாம் சரி என்ற மனப்போக்கு ஆபத்தானது!

இப்படிப்பட்டவர்களைப் பார்த்து இறைவன் தனது திருமறையில் கேட்கிறான்:

2:170  மேலும், “இறைவன் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

கீழ்காணும் வசனத்தில் இன்னும் வனமையாகக் கண்டிக்கிறான் பாருங்கள்:

31:21  “இறைவன் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
================= 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

புதன், 20 செப்டம்பர், 2023

கல்வியின் குறைபாடே தற்கொலை!

 நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115)

தற்கொலை செய்துகொள்ளும் நபரைப் பொறுத்தவரையில் அவர் எதையுமே இழப்பதில்
லை என்று அவர் கருதலாம். ஆனால் அந்த ஒரு  ஆளுமையை உருவாக்க வேண்டி அவ்வளவு காலம் இரவுபகலாக உழைத்த பெற்றோர்கள் சந்திக்கும் அதிர்ச்சியை அல்லது இழப்பை அவ்வளவு இலேசாக எடுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு ஏற்படாமல் இருக்க அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?

தற்கொலை உணர்வு:

தோல்விகள் அல்லது இழப்புக்கள் அல்லது அவமானங்கள் வரும்போது தனக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வு, மனிதனில் நிராசையையும் விரக்தியையும் தூண்டும் காரணியாகும். தொடர்ந்து வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்வும் தன் வாழ்வை முடித்துக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் என்ற அறியாமை உணர்வும் எல்லாம் சேர்ந்து தற்கொலைகளாக அரங்கேறுகின்றன. 

 ஆனால் அதேவேளையில் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை மனிதனுக்கு நினைவூட்டினால் அவனுள் தற்கொலை உணர்வே எழாமல் பாதுகாக்கலாம். 

படைத்தவனையும் அவன் நெருக்கத்தையும் அறிதல் 

நம்மை இவ்வளவு பக்குவமாக படைத்ததோடு நில்லாமல் நம்மை சற்றும் கைவிடாமல் அயராது பரிபாலித்து வரும் அவனது இறைவனைப் பற்றிய அறியாமையே நமக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வுக்குக் காரணம். 

இறைவனைப்பற்றிய தவறான கருத்துக்கள் 

ஒருபுறம் இறைவனே இல்லை என்று சொல்லும் நாத்திகமும் மறுபுறம் இறைவன் அல்லாத அற்பமான படைப்பினங்களைக் காட்டி அவைகளே கடவுள்கள் என்ற தவறான சித்தரிப்பும் இறைவனைப் பற்றிய அறியாமையை மக்களிடையே வளர்க்கின்றன. பகுத்தறிவை பயன்படுத்தி நம்மைப் பற்றியும் நமது நிலையைக் குறித்தும் சற்று சிந்தித்தால் மட்டுமே இந்த அறியாமை விலகும். இல்லாமையில் இருந்து இபேரண்டத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் அளவற்ற ஆற்றல்களும் கொண்டவனையே இறைவன் அல்லது 'அல்லாஹ்' என்கிறது இஸ்லாம்.  மாறாக மனிதர்கள் சித்தரித்து உருவம் கொடுக்கும் அளவுக்கு அற்பமானவல்ல இறைவன் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் தலையாய பணி:

அறிவியல் என்ற பெயரில் பரிணாமக்கொள்கை போன்ற வெற்று  ஊகங்களைத் திணித்தால் மாணவர்களிடையே நாத்திகத்தை வளர்த்தால் அங்கு மனிதனின் உயர் பண்புகள்  மறைந்து தானும் ஒரு மிருகமே என்ற உணர்வுதான் எழும். பகுத்தறிவு மறைந்து மடமையே அவனுள் உருவாகும். மிருகங்களைப் போல வாழ்க்கை நோக்கமற்றது என்றுதான் அவனை உணர வைக்கும். அதன் விளைவே இந்த தற்கொலைகள்! கல்வி நிறுவனங்கள் இப்போக்கை முதலில் திருத்த வேண்டும்! நிறுத்த வேண்டும்!

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 

நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள உடல் என்ற பேரற்புதமும் நம்மைச்சூழ்ந்து நிற்கும் இந்தப் பேரண்டம் என்ற அற்புதமும் தானாகவோ தற்செயலாகவோ தோன்றவும் முடியாது. தானாகவோ தற்செயலாகவோ அதி பக்குவமான முறையில் இயங்கவோ முடியாது என்கிறது பகுத்தறிவு! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு உரக்கவே எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.

இந்த விசாலமான பிரபஞ்சமும் அது உட்கொண்டுள்ளவற்றின் பேரமைப்பும் நமது உடல் என்ற அற்புதமும் இவற்றின் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)

= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28) 

இறைவனின் நெருக்கத்தை உணருதல் 

ஆம் அன்பர்களே, அந்த தன்னிகரற்ற சர்வவல்லமை கொண்ட இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்று நமக்கு உதவக் காத்திருக்கிறான் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா? இதோ இறைமறைக் குர்ஆனில் அவன் கூறுவதைக் காணீர்:

= நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். (திருக்குர்ஆன் 50:16) 

= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186) 

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நெருக்கத்தில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்கக் காத்திருக்கிறான் என்ற ஆழமான புரிதல் யாருக்காவது உண்டாகிவிட்டால் அந்த மனிதனின் ஆளுமைக்கு மிக உறுதியான அஸ்திவாரம் அமைகிறது. அவனுக்குள் நிராசையும் மனச் சோர்வும் ஏற்பட வழியே இல்லை.

மேற்படி இறைநம்பிக்கையோடு இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும்போது வாழ்க்கையில் கட்டுப்பாடும் (discipline) அமைதியும் உண்டாகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டோடு வாழ்ந்ததற்காக மறுமை வாழ்வில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பமும் நித்திய வாழ்வும் பரிசாகக் கிடைக்கிறது. அவ்வாறு இறை  நம்பிக்கையோடு இறைவனுக்குக் கட்டுப்படும் வாழ்வியல் நெறியே 'இஸ்லாம்' என்று அறியப்படுகிறது. 

=  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கட்டாயம் படிக்க வேண்டிய வேதம் இது!


ஓரு ஒப்பற்ற அற்புத வேதம் அது!
  •  உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1445 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது!
  •  மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி வேதம் அது!
  •  உலகில் வேறெந்த நூல்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்!
  •  மிக மிக உயர்ந்தவனே தனது ஆசிரியன் என்று வாதிடுகிறது அது!
45:2. இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
  •  நூறு சதவீதம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!
2:2 இது (இறைவனின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
  • முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
  • மனிதகுலம் அனைத்தையும் அழைத்து உபதேசிக்கிறது அது!
10:57 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் இறைவிசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது.
  • பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது அது!
38:29 (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
45:20. இது மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும் உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கிறது

  • ஏற்காதவர்களை எச்சரிக்கவும் செய்கிறது!
2:23-24 இன்னும் நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது இதை மறுப்பவர்களுக்காக சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம் அன்பர்களே! பகுத்தறிவுக்கு சவால் விடுத்து தன்னை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்நூல் வேறு ஏதுமில்லை இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் நம் அனைவருக்காகவும் அனுப்பிய திருக்குர்ஆன்தான் அது! 
  • இந்த வேதத்தை நாம் யாரும் அலட்சியம் செய்ய முடியாது, ஒவ்வொருவரும் கட்டாயமாக படித்தே ஆக வேண்டும்!
கட்டாயமாக படிக்க வேண்டுமா? ஏன்?
ஆம், ஏனெனில் இது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனிடமிருந்து நமக்கு அனுப்பப்பட்ட கடிதம்! நம்மை எதற்காக அவன் படைத்தான்? நாம் எப்படி இங்கு வாழ வேண்டும்? அவ்வாறு வாழ்ந்தால் அதன் பயன்கள் என்ன? வாழாவிட்டால் என்ன விளைவுகள் உண்டாகும்? என்பன பற்றியெல்லாம் உறுதியான மொழியில் சந்தேகத்துக்கு இடமில்லாத முறையில் நம் இறைவனே எடுத்துரைக்கும் வேதம் இது!
மேலும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை தற்காலிகமானது என்றும் இங்கு இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் அவர்களுக்கு பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்றும் கட்டுப்படாமல் தான்தோன்றிகளாக வாழ்வோருக்கு தண்டனையாக நரக வாழ்வு உண்டு என்றும் எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அவை இறைவனுக்குப் பொருத்தமானவையாக இருந்தால் அவை புண்ணியங்களாகவும் அவன் தடுத்தவையாக இருந்தால் அவை பாவங்களாகவும் பதிவாகின்றன.
இறுதித் தீர்ப்பு நாளின்போது புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே புண்ணியம் எது பாவம் எது என்பதை இன்று தெளிவாக பிரித்தறிவிக்கும் வேதமாக வந்துள்ளது திருக்குர்ஆன்.

  மேற்கண்ட காரணங்களால் இன்று இப்பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இதைக் கட்டாயமாக படித்தால் மட்டும் போதாது பின்பற்றி வாழவும் கடமைப்பட்டுள்ளான்!

எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே அவற்றைப் பின்பற்றினால் போதாதா?
எங்கள் வேதம் உங்கள் வேதம் என்று ஏதும் இல்லை. அனைத்துமே நம் வேதங்களே! ஏனெனில், நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப் பட்டு உலகெங்கும் பல்கி பெருகியவர்களே. வேதங்களை முன்னர் வந்தவை பின்னர் வந்தவை என்று மட்டுமே பிரிக்கலாம். ஏனெனில் அனைத்துமே ஒரே இறைவனால் அருளப்பட்டவையே! முந்தைய இறைவேதங்கள் அக்காலத்து மக்களுக்காக அருளப்பட்டவையாதலால் அவை காலாவதியாகிவிட்டன. அது மட்டுமல்ல அவ்வேதங்கள் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் பிற்கால மக்களால் மாற்றப்பட்டன. இன்று நாம் இவ்வேதங்களில் எது இறுதியாக வந்ததோ அதை அறிந்து நாம் அனைவரும் பின்பற்றியாக வேண்டும்.

திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா?
இல்லை. சுமார் 1445 வருடங்களுக்கு முன்னால் அராபியாவில் மக்கா நகரில் வாழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு அவரது 40 வயது முதல் அவர் மரணித்த 63-வது வயது வரைப்பட்ட காலகட்டத்தில் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. தனது கவிதையும் உரையும் கலந்த ஒரு ஒப்பற்ற நடையால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலம் முதலே மக்கள் மனங்களைக் கவர்ந்தது. இறைவிசுவாசிகளால் அது அடிக்கடி ஒதப்படலானது.

திருக்குர்ஆனின் வசனங்கள் மூலமொழியிலேயே உலகெங்கும் முஸ்லிம்களால் அவர்களது ஐவேளைத் தொழுகைகளிலும் தொழுகைக்கு வெளியேயும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதை நீங்கள் காணலாம். குறிப்பாக ரமலான் திங்களில் பெரும்பாலோர் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பர். 'குர்ஆன்' என்ற பதத்தின் பொருளே 'ஓதப்படும் ஒன்று' என்பதுதான்.
பக்குவமாகப் பாதுகாக்கப்படும் வேதம்
இறங்கிய காலம் முதல் இன்று வரை உலகெங்கும் எண்ணற்ற மக்களால் மனனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருக்குர்ஆனின் மூலவசனங்கள் ஒலி வடிவிலேயே உலகெங்கும் மனித மனங்களிலும் திருக்குர்ஆன் பிரதிகளிலும் பாதுகாக்கப் படுகிறது. உலகில் எந்த மூலையில் எம்மொழியில் நீங்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை எடுத்துப் பார்த்தாலும் அதில் அரபு மொழி மூலத்தையும் காணலாம்.

உலகம் அழியும் நாள் வரை உலக மக்களுக்கு இதுதான் வேதம் என்பதால் இறைவனே இதன் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்றிருக்கிறான்.
15:9 திண்ணமாக இந்த நல்லுரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.

இன்று காணக்கிடைக்கும் முந்தைய வேதங்களின் பிரதிகளை நீங்கள் எடுத்துப் பார்பீர்களானால் வெறும் மொழி பெயர்ப்புகளைத்தான் பார்க்க முடியும் மூலத்தைக் காண முடியாது. அதற்கு மூல வசனங்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதும் மூல மொழிகளே இன்று இறந்துபோன மொழிகளாக உள்ளன என்பதுமே காரணம்!

திருக்குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதா?
இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. இவ்வேதத்தில் முஹம்மது நபி உட்பட எந்த மனிதர்களின் வார்த்தையும் எள்ளளவும் கலக்காமல் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மற்றும் அவரைப் பற்றிய செய்திகள் அவரது தோழர்களால் பதிவு செய்யப்பட்டு 'ஹதீஸ்' என்று தனி தொகுப்பாக விளங்குகின்றன.

திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
1 ஓரிறைக்கொள்கை :
2. வாழ்வின் நோக்கமும் மறுமை வாழ்வும்:
3. இறைத்தூது
4. மனித குல ஒற்றுமை
5. இறைவன் அல்லாதவற்றை அறவே வணங்கக் கூடாது.

மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை வழங்குகிறது. இல்லறம் திருமணம் ஆண்-பெண் பிரச்சினைகள் குழந்தை வளர்ப்பு தூய்மை உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம் கொடுக்கல்-வாங்கல் பாகப்பிரிவினை குற்றவியல் நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய தீரவுகளை வழங்குகிறது திருக்குர்ஆன்
அவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு இம்மையிலும் அமைதி கிடைக்கிறது. மறுமையிலும் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அலட்சியம் செய்வோருக்கு இம்மையில் அமைதியின்மையும் மறுமையில் நரகவாழ்வும் காத்திருக்கிறது!
================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

திருமறைக் குர்ஆனின் ஆரம்ப வசனங்கள்


அனைத்துப் புகழும் அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது.

அவன் அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோன்.
அவனே இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி. ( திருக்குர்ஆன் 1: 1-3 )
(அல்லாஹ் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரேஇறைவன் என்று பொருள்)

ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அடிப்படையில் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள். காலம் செல்லச் செல்ல படைத்தவனை மறந்து விட்டு படைப்பினங்களையும் இறைத்தூதர்களையும் சிறந்த மனிதர்களையும் அவர்களில் சிலர் வணங்கத் தலைப்பட்டதால் அவர்களுக்குள்ளே பிரிவினைகள் உருவாயின! இன்று நம்மைப் பிரித்து வைத்திருப்பது நமக்குள்ளே பரவி இருக்கும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கடவுள் கொள்கையே! நாம் மீண்டும் ஒரே குடும்பமாக இணைந்து அமைதியாக வாழ விரும்புவோமேயானால் முதன்மையாக நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த மாபெரும் கருணையாளனைப் பற்றிய நமது தவறான கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் நமது மனங்களை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். இறைவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதோ அவற்றைப் பரப்புவதோ அவனைப் படைப்பினங்களோடு ஒப்பிடுவதோ மாபெரும் பாவம் என்பதை நாம் உணர வேண்டும்.

உதாரணமாக நமது தாயைப் பற்றி யாராவது இல்லாததையோ போலாததையோ சொன்னால் நாம் சகித்துக் கொள்வோமா? யாராவது ஒரு தகாத உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப் பெற்றெடுத்த தாய்' என்று கூறினால் எவ்வாறு வெகுண்டெழுவோம்? இந்த கோபம் ஏன் நமது பரிபாலகனுடைய விஷயத்தில் வருவதில்லை?..... நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

ஒரு கணம் அந்த பரிபாலகனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! நாம் அவனை நினைத்தாலும் நினைக்கா  விட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நம்மீது அளவில்லாமல் தன அருட்கொடைகளை அள்ளிச்சொரிபவன் அவன். உதாரணமாக நம் உடலில் நாடியும் இதயமும் துடிப்பதும், இரத்தம் ஓடுவதும்,  ஜீரணம் நடப்பதும், அதனால் உடல் சக்தி பெறுவதும், அசுத்தங்கள் சிறுநீராகவும் மலமாகவும் பிரிவதும்.... என ஒன்று விடாமல் எல்லாமே அவன் செயலே! இவற்றில் ஏதேனும் தடைபட்டுவிட்டால்........ நாம் படும் பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள்.  நம் உடலில் ஒவ்வொரு செல்களும்  நரம்புகளும்  தசைகளும் உறுப்புக்களும் அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று அவற்றுக்குக் கட்டளை இடுவது யார்? அந்தக் கட்டளையின் விளைவு தானே நம் உயிரோட்டம் என்பது? டவரில் இருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கும் வரைதான் நம்மிடம் உள்ள மொபைல் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த சிக்னல் நிறுத்தப்பட்டால் நமது மொபைலும் செயலாற்றுப் போகும்.அல்லவா? அதைப் போலவே, இறைவனிடமிருந்து உயிர் என்ற கட்டளை நிறுத்தப் பட்டால் நம் உடலும்   இறந்த  பிணமே!  இவ்வாறு உடலும் உயிரும் அதைச் சுற்றி உள்ள உலகும் அதில் உள்ளவற்றின்  இயக்கங்களும் என எல்லாமே நம்மை இங்கு வளமாக வாழ வைப்பதற்காகவே  என்பதை சிந்திப்போர் உணரலாம். இவ்வாறு அவன் நம் மீது அளவின்றி காட்டும் பாசத்திற்கும்  நேசத்திற்கும் எவ்வாறு கைமாறு செய்யப் போகிறோம்

#தாய்ப்பாசம்_என்ற_அருட்கொடை 

இவ்வுலகில் மனிதர்களிலேயே  நம் மீது மிக மிக அதிகமாக நேசம் கொண்டவர் நமது தாயார்தான் என்றறிவோம் . அந்தத் தாய் மனதில் தாய்ப்பாசம் என்பதை விதைத்தவன் யார்? அந்தத் தாய்ப்பாசம் மட்டும் அங்கு விதைக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்...... அவள் பத்து மாதம் அனுபவித்த கஷ்டங்களின் விளைவாக ஒவ்வொரு தாயும் தான் குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே 'சனியன்...தொலையட்டும்' என்று குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து இருப்பாள்! அந்தத் தாய் கூட நீங்கள் குழந்தையாக  வெளியில் வந்த பிறகுதான் உங்களை கவனிப்பாள். ஆனால் பத்து மாதங்களாக கருவறைக்குள் மெத்தை அமைத்து உங்களுக்கு உணவூட்டியவன் யார் ? சிந்தித்தீர்களா?  கருவறை முதல் அனைத்து நிலைகளிலும் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து பரிபாலித்து வரும் இறைவனின் கருணை எவ்வளவு மகத்தானது

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் :' இறைவன் தனது கருணையை நூறு பாகங்களாகப் பிரித்தான். அதில் ஒரு பாகத்தை மட்டுமே இந்த பூமியில் விதைத்தான். அதன் விளைவாகத்தான் ஒரு தாய்ப் பறவை தன குஞ்சிடம் பாசம் காட்டுவதைப் பார்க்கிறீர்கள்.

ஆம் அன்பர்களே, மற்ற அனைவரையும் விட இறைவன் நம் மீது காட்டும் பாசம் அளவிட முடியாதது. அதை நாம் அலட்சியப் படுத்தவோ மறக்கவோ கூடாது. அதை உள்ளார உணர்ந்து செயல்படுவதில்தான் வாழ்கையின்  வெற்றி அமைந்துள்ளது. நமது அன்புக்கும் மரியாதைக்கும் முழு முதற்தகுதி வாய்ந்த நமது இரட்சகனை சிறுமைப் படுத்தும் செயல்களை நாம் அறவே தவிர்க்க வேண்டும். அவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பிப்பது மேல் சொல்லப்பட்டது போல்  பெற்றெடுத்த தாயை நாய்க்கு ஒப்பிடுவதை விட மிக மோசமானது. அவ்வாறு செய்வோமேயானால் அந்த இறைவனின் கோபத்திற்கு நாம் ஆளாவோம், இவ்வுலக வாழ்விலும் பற்பல இழப்புகளுக்கும் அமைதியின்மைக்கும் உள்ளாவோம், மேலும் மறுமை வாழ்வில் நிரந்தர நரக வாழ்வுக்கும் உரியவர்களாவோம்

அனைத்துப் புகழும் அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது.
அவன் அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோன்.

அவனே இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி. ( திருக்குர்ஆன் 1: 1-3 )
==============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

வியாழன், 7 செப்டம்பர், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 23 இதழ் மின்பதிப்பு

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் 

பொருளடக்கம்:

வித்தியாசமான கியூ!-2

நபிகளார் கற்றுத் தந்த பிரார்த்தனை -4

வினைப் பதிவேடுகளுக்குப் பஞ்சமில்லை! -5

உலகின் ஆக்கம் - ஏன்? எதற்காக?! -8

உலகம் ஒருநாள் அழியும்! -10

மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன? -12

மண்ணறையில் விசாரணை -16

தீயோருக்குக் காத்திருக்கும் மண்ணறை வேதனைகள் - 18

மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு கோருவோம்!-21

என்னென்ன பாவங்களுக்கு மண்ணறை வேதனை? -23

இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்

புதன், 6 செப்டம்பர், 2023

பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது?

 

பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அதன் அறிவியல் என்ன?
அனேகர் பன்றி இறைச்சியை இஸ்லாம் மாத்திரம்தான் குர்ஆனின் ஊடாக தடுத்திருக்கிறது என்று எண்ணுகின்றனர் . அவ்வாறல்ல பைபிலும் தடுத்திருக்கிறது ஆனால் சில கிறிஸ்த்தவர்கள் தான் பைபிலை புறந்தள்ளி பன்றி மாமிசத்தை சாப்பிடுகின்றனர்.
குர்ஆனில் சுமார் 4 இடங்களில் பன்றி இறைச்சி தடுக்கப்பட்ட கருத்தை வலியுறுத்தி வசனங்கள் உள்ளன.
اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கிறான்;
(அல்குர்ஆன் : 2:173)
மேலும் குர்ஆனில் 5:3,6:145,16:115 போன்ற வசனங்களிலும் பன்றி இறைச்சி தடுக்கப்பட்டிருக்கிறது.
அத்தோடு பைபிலில்
பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாமிசத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.
உபாகமம் 14:8
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
லேவியராகமம் 11:7
இவைகளின் மாமிசத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம், இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
லேவியராகமம் 11:8
இப்படியாக பைபிலில் மிக கட்டாயமாக தடுக்கப்பட்டது பன்றியின் மாமிசம்.
பைபில் மற்றும் இறுதிவேதமான குர்ஆனில் தடைசெய்யப்பட்ட பன்றி மாமிசத்தில் என்ன கேடு இருக்கிறது என்று அறிவியலை கொண்டு தெளிவுபடுத்தவே இப்பதிவு
பன்றி இறைச்சி உண்பதால் 70 விதமான சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்கிறது ஆய்வுகள். அதில் சில முக்கிய தகவலை தொகுத்திருக்கிறேன் .
மனித உடலினுல் சில புழு இனங்கள் பல நாட்களுக்கு வாழ்கின்றன.அதில் சிலவை உணவு சமிபாட்டுக்கு உதவுபவையும் உண்டு.
"டோனியா சோலியம் Taenia solium (pork tapeworm) " என்ற புழு, பன்றி இறைச்சியில் இருந்து மனித உடலில் உருவாகிறது. இது உணவுக்குழாயின் அடிப்பாகத்தில் தங்கி வாழும்.
"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host.
Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long
periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that
migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs.
Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and
an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through
regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as
cysticercosis in muscle and other sites."
அதாவது டேனியா சோலியம் , வைற்றை சூழவுள்ள பகுதிகளில் (ova) முட்டையிடுகிறது. இந்த முட்டைகள்தான் மிக ஆபத்தானவை. இவை மனித இரத்த நாளங்களில் பயணிப்பதால் உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்றுவிடுகின்றன. இந்த முட்டை பரவும் எல்லா இடங்களிலும் நிச்சயம் பாதிப்பை உருவாக்கும். அதிலும் இதயம், மூளை, கண், நுரையீரல் என்பன முக்கியமானவை.
பன்றி இறைச்சியில் டோனியா சோலியம் என்ற புழு மாத்ரமல்ல " ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ் ( Trichura Tichurasis)" என்ற புழுவும் மனித உடலில் பரவும். இரு புழுக்களும் ஒரே மாதிரியான குணமுடையவை.
இப் புழுக்களின் முட்டைகள் பன்றி இறைச்சியை நன்கு வேகவைப்பதால் இறந்து விடுகின்றன என்ற கருத்தும் தவறான ஒன்றாகும். ஏன் எனில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , ட்ரிசுராஸிஸ் முட்டைகளால் பாதிக்கப்பட்ட 24 பேர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர். இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை சமைத்து உண்டவர்கள்தான்.
இவ் புழுக்களில் முட்டைகள் சாதாரண நீரின் கொதி நிலையில் இறப்பதில்லை .
மேலும் பன்றி மாமிசத்தில் உள்ள மித மிஞ்சிய கொழுப்பு,ஹார்ட் அடக்,ஹைபர் டென்ஷன் " பேன்ற நோய்களை இலகுவாக உருவாக்கிவிடும்.
பன்றியை சாப்பிடும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்களில் பாதி போர் ஹைபர்டென்சன் நோயால் பாதிப்படைந்தவர்களே.
நோய்களை ஏற்படுத்துவது மற்றுமன்றி அது சுகாதாரமற்ற ஒரு விலங்கும் கூட. பண்டைய காலங்களிலும் நாகரீக வளர்ச்சியற்ற காலங்கள் மற்றும் இடங்களில் பன்றிகளை மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பயன்படுத்தினர்.
இன்று நாகரிக வளர்ச்சியடைந்துவிட்டதால் மனித கழிவு அகற்ற பன்றிகளை பயன்படுத்துவதில்லை என்பது உண்மையானாலும், இவ் நாடுகளில் இவை ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதால் அதன் கழிவுகளையே அது உண்டு வாழ்கிறது .

எப்படி பார்த்தாலும் பன்றி ஒரு சுகாதாரமற்ற விலங்கு என்பதில் சந்தேகமில்லை.