இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 மார்ச், 2018

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் இதழ்

பொருளடக்கம்:
- ஈடு செய்யமுடியாத பேரிழப்பு? -2
- வெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை... அங்கு! -6
- வட்டி ஒரு வன்கொடுமை -8
- அறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம் -9
- அறிவியல் எழுச்சியில் இஸ்லாத்தின் பங்கு -12
- வாசகர் எண்ணம்-15
- அறிவியலில் இஸ்லாமியர்களின் பல்துறைப் பங்களிப்பு -16
- யாசகம் தவிர்!-21
- இஸ்லாமியரின் அறிவியல் வீழ்ச்சிக்கான காரணங்கள்- 22
- கருணை காட்டுதல் என்ற சமூகக் கடமை -24


ஞாயிறு, 25 மார்ச், 2018

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை... அங்கு!


Image result for men of success trophy
புகழ்பெற வேண்டி உழைத்தவர்கள்
= அரபு மண்ணில் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர்  ஹாத்திம் தாயி என்பவர் அரபியரிடத்தில் மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். அவரது தாராள குணம் அரேபியர்களிடத்தில் முன்மாதிரியான ஒன்றாக அறியப்பட்டிருந்தது. அவர் ஏழைகளுக்கு உணவளித்தார், வழிபோக்கர்களுக்கு தங்குமிடம் தந்தார். எதிரிகளிடத்திலும் கருணையோடு நடந்தார். பிற்காலத்தில்  அவரது மகன் அதி இப்னு ஹாத்திம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். நபிகளாரின் மிகச்சிறந்த தோழர்களில் ஒருவரானார். ஒருநாள் தனது தந்தையைப் பற்றி நபிகளாரிடம் வினவினார் அவர். “இறைவனின் தூதரே, எனது தந்தை உறவினர்களோடு நல்லமுறையில் நடந்துகொண்டார். ஏழைகளுக்கு உணவளித்து வந்தார். அவர் இதைச் செய்து வந்தார், அதைச் செய்து வந்தார்.. என்று அவர் செய்துவந்த நன்மைகளைப் பட்டியலிட்டுக் கூறிக்கொண்டே வந்தார். பிறகு கேட்டார், அவர் செய்தவற்றுக்கு இறைவனிடம் கூலி ஏதும் கிடைக்குமா?” நபிகளார் பதிலளித்தார்கள், “அதியே, உன் தந்தை ஒன்றை (அதாவது புகழை) அடைய விரும்பினார். அதை அவர் அடைந்தும் விட்டார்.” (முஸ்னத் அஹமது)
புகழ்பெற்ற மனிதர்கள் மண்ணிலிருந்து மறையும் போதெல்லாம் இறுதியில் நடப்பது இதுவே.
அறிவியலில், திரையுலகில், அரசியலில், செல்வசெழிப்பில், கல்வியில், விளையாட்டில், தொழிற்துறையில், வியாபாரத்தில், சமூகசேவையில்... என மனித வாழ்வின் பல்வேறு துறைகளில் இமாலய வெற்றிகளை ஈட்டியவர்களை நாம் கண்டு வருகிறோம். அதேநேரத்தில் ஒரு துறையில் மிகச்சிறந்த அறிவாளிகள் அல்லது ஆற்றல் மிக்கவர்கள் வேறுதுறைகளில் அறிவீனர்களாகவோ அல்லது பலவீனர்களாகவோ இருப்பது கூடும். எனினும் ஒருவருடய அறிவும் ஆற்றலும் அவருக்கு ஆன்மீக ரீதியான பயன் தராவிட்டால் அது ஈடில்லாத பேரிழப்பே!  அவர்கள் இவ்வுலகில் நிகழ்த்திய சாதனைகள், வென்ற விருதுகள், பட்டங்கள், குவித்த செல்வங்கள், புகழ்மாலைகள், நினைவுச்சின்னங்கள் போன்றவை இவ்வுலகைப் படைத்தவனின் பால் எந்த அளவுக்கு மதிப்புக்குரியவை என்பதுதான் இறுதி வெற்றியின் அளவீடு ஆகும்.
இக்கூறப்பட்ட எதுவும் இவ்வுலக வாழ்க்கை என்ற பரீட்சையை நாம் முடித்துக்கொண்டு இறைவன்பால் திரும்பும்போது கூடவராது என்பது ஒவ்வொருவரும் அறிந்ததே. இவ்வுலகில் சாதனைகள் புரிவதற்கு அஸ்திவாரமாக இருந்த நம் உடலையும் புலன்களையும் அறிவையும் ஆற்றல்களையும் வழங்கியவனைப் பற்றி அறியாதிருப்பதும் ஆராயாதிருப்பதும் பகுத்தறிவுக்கு இழுக்கே.  அவனை மறுப்பது என்பது நம்மைப் படைத்து பரிபாலிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் வழங்கும் அருட்கொடைகளுக்கு செய்யப்படும் நன்றிகேடே! மேலும் அந்த இறைவன் தனது செய்திகளை வேதங்கள் மற்றும் தூதர்கள் மூலமாக அனுப்பும்போது அவற்றை அலட்சியம் செய்வதும் புறக்கணிப்பதும் இறைவனிடம் தண்டனைக்குரிய செயல்களே. இதோ இறைவனின் இறுதிவேதம் இவ்வாறு கூறுகிறது:
= “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். (திருக்குர்ஆன் 18:103- 106)

புகழ் பெற்ற பிரபலங்களின் நிலை
இன்றைய உலகில் அதிகாரம், செல்வம், அறிவாற்றல், செல்வாக்கு, புகழ்  என்பவை யாரிடம் உள்ளதோ அவர்கள் எதைப் பரிந்துரைக்கிரார்களோ அவையே உண்மைகளாக- நியாயமானதாக – நேர்மைக்கான அளவுகோலாக சமூகத்தால் மதிக்கப்படுகின்றன. உதாரணமாக...
= எண்ணெய் வள நாடுகளை சதா போர்முனையில் நிறுத்தி ஆயுத விற்பனை மூலம் கொள்ளையடிக்கும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் சமாதானப் பிரியர்களாக உலாவருகிறார்கள்.  தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப்போராட்ட வீரர்களை பயங்கர வாதிகளாக சித்தரிக்கிறார்கள். உலகம் அவற்றை அப்படியே நம்புகிறது.
= சினிமா மூலம் விபச்சாரக் கலாச்சாரத்தை மக்களிடையே பரப்பும் நடிகர்களும் நடிகைகளும் விளம்பரங்களில் தோன்றி நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். மக்கள் அவற்றை அப்படியே நம்பி வாங்குகிறார்கள்.
இன்னும் இவைபோன்ற பல விடயங்களையும் நாம் கண்டு வருகிறோம். பெரும்பான்மை மக்களால் வாய்மையானவர்களாகப் போற்றப்படும் இவர்கள் இறைவனின் பார்வையிலும் அவ்வாறே மதிக்கப்படுவார்களா?
= ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரைப் போன்ற (வசதி படைத்த) வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்எனக் கூறினார்கள். 
அறிவிப்பளர் :ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) (நூல்: புகாரி)

அறிவாற்றல் வழங்கப்பட்டவர்களின் நிலை
அறிவாற்றல் என்பது மனிதனுக்கு இறைவனால் வழங்கப்படும் பார்வை மற்றும் கேள்வி போன்ற ஒரு ஆற்றலே. ஒருவருக்கு அருமையான கண் பார்வை இருந்தும் தனக்கு சுற்றுமுற்றும் பார்ப்பதற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அப்பார்வைப் புலனால் என்ன பயன்? அதேபோலவே அறிவாற்றல் பெற்ற ஒருவர் அதை வழங்கிய இறைவனை பகுத்தறிய பயன்படுத்தாவிட்டால் அதனால் என்னதான் பயன்?

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ( குறள் எண் : 2 )
பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?


---------------------
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
இஸ்லாம் என்றால் என்ன ?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்

http://quranmalar.blogspot.com/2018/03/blog-post.html

வெள்ளி, 23 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்



உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் உடல் நலக்குறைவால் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள அவரது இல்லத்தில் 14 மார்ச்சு 2018 அன்று காலமானார். அவருக்கு வயது 76. பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில்சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே அண்டம் தொடர்பான ஆராய்ச்சியில் பல மைல்கல் சாதனைகளை புரிந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது ‘காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ (A brief history of time) உலக சாதனை புரிந்த நூல்.
மரணம் பற்றிய ஹாக்கிங்கின் கண்ணோட்டம்

ஹாக்கிங் அவர்களைப் பற்றி ஜெர்மனியில் பணிபுரியும் இலங்கைத்தமிழ் இயற்பியலாளர் ராஜ் சிவா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:
ஹாக்கிங்கின்இறப்புக்காக அஞ்சலி செலுத்துவது எந்தளவில் ஏற்புடையது என்று தெரியவில்லை. காரணம் அவரைப் போன்ற குவாண்டம் கோட்பாட்டு இயற்பியலாளர்கள், இறப்பு என்பதை எப்படி வரையறை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் எந்தளவுக்கு உண்மை மற்றும் சாத்தியம்உள்ளது என்பது பலருக்குப் புரியாத விஷயம்.

எந்தப் பொருளானாலும் அது கட்டமைக்கப்பட்ட துகள்களை அழிப்பது என்பது சாத்தியமே இல்லை என்கிறது இயற்பியல். ஒரு பொருளின் அல்லது உயிரின் கட்டமைப்பிற்கான துகள்களை அழிக்கவே முடியாது. அத்துடன் அதன் சக்தியும் அழிந்து போகாது. இவை வேறு வடிவத்தில் உருவாக்கம் அடையலாமேயொழிய அழிக்க முடியாதவை. ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உச்ச இயற்பியலாளர்கள், ஒரு உயிரின் அல்லது பொருளின் கட்டமைப்புக்கான இன்ஃபோர்மேசன்கள் கூட அழிக்க முடியாதவை என்று நம்புபவர்கள். அந்த இன்ஃபோர்மேஷன்கள் பிரபஞ்சத்திலுள்ள கருந்துளைகளின் சுவர்களில் பதிவுசெய்யப்பட்டு வருபவை என்றும்நிரூபிப்பவர்கள். ஸ்டீபன் ஹாக்கிங், லெனார்ட்சஸ்கிண்ட் ஆகியோரின் வாதங்களைப் படித்தவர்கள் இதைப் புரிந்து கொள்ளலாம்.

அதனால் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஒருவர், காற்றில் ஒரு மெழுகுவர்த்தியின் புகைபோல கலைக்கப்பட்டுவிட்டார் என்று மட்டுமே சொல்ல முடியும். முற்றாக இல்லாமல் போய்விட்டார் என்று கருத்து அவரிடமே இருந்திருக்காது. அவரிடம் மட்டுமில்லை. என்னிடமும் இதுபோன்றதொரு கோட்பாட்டு நிலைப்பாடே உண்டு. இறந்த பின்னரும் நாம்ஏதோவொரு வடிவத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருப்போம் என்று இயற்பியல் ரீதியாக நம்புபவன் நான். -ராஜ் சிவா

ஹாக்கிங்கின் தாக்கம்
இவ்வுலகுக்கு ஹாக்கிங்கின் வருகை பற்பல நன்மைகளை வழங்கியுள்ளது என்பதும் ஒரு மாற்றுத் திறனாளியாக நின்று அவர் ஆற்றிய சாதனை பலருக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியதாக அமைந்தது என்பதும் அரும்பெரும் ஆராய்ச்சிகளுக்குப் பின் அவர் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த செய்திகள் அறிவியல் முன்னேற்றத்திற்கு மைல்கல்களாக அமைந்ததும் அனைவரும்அறிந்த உண்மைகளே. கடவுள் மற்றும் மறுமை பற்றிய அவரது சில கூற்றுக்கள் பலரை நாத்திகத்திற்கு கொண்டு சென்றன என்பதும் உண்மையே. ஒரு தலைசிறந்த அறிவியலாளர் சொல்லியிருக்கும் போது அது உண்மையாகாமல் இருக்குமா என்ற எண்ணம் பலரையும் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

அறிவியலில் எல்லைகள் 
அறிவியல் என்றால் என்ன, அதன் எல்லைகள்எதுவரை என்பதை அறிய முற்படாமையே மேற்படி தடுமாற்றத்திற்குக் காரணமாகிறது.
அறிவியல் என்றால் என்ன என்ற அடிப்படைக் கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான விடைகளைத் தரக்கூடும். பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடை, “நம்மைச்சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ளவும், உலகமும்இயற்கையும் எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் மனிதர்கள் மேற்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான, ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே அறிவியல்” என்பதுதான்.

மனிதனே அறிவியலின் மையக்கரு. அதாவது அற்ப ஆயுள் கொண்ட ஆறடி மனிதனின்புலன்களுக்கு நேரடியாகவும் கருவிகள் மூலமாகவும் வந்தடையும் தகவல்களை (sensible data) அடிப்படையாக்கொண்டு உருவாவதே அறிவியல். இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தற்காலிகமாக மின்னி மறையும் ஒரு மிகமிக நுண்ணிய துகள் போன்ற ஒரு ஜீவி அதற்கு மட்டும் விசேஷமாகக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவு என்ற ஆற்றலைக் கொண்டு இப்பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும்இரகசியங்களை துருவித்துருவி ஆராய்ந்தறியும் முயற்சியே அறிவியல் என்றும் கூறலாம்.

இந்த சிறு முயற்சியில் மனித அறிவுக்கு எட்டிய அறிவு என்பது இன்னும் எட்டாத அறிவோடு ஒப்பிடுகையில் கடலில் ஒரு துளி போன்றதே. ஆனால் அதுவே அனைத்துக்கும் இறுதியானது (ultimate) என்று இறுமாந்திருப்பது அறிவின்மை அல்லவா? அறிவியல்ஆராய்ச்சிகளின் அடிப்படையே ‘அறிந்தது கைமண் அளவு அறியாதது உலகளவு’ என்ற உண்மைதான். அனைத்தையும் அறிந்துவிட்டோம் மேற்கொண்டு அறிவதற்கு எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டால் அறிவியல் ஆராய்ச்சிகள் அர்த்தமற்றவை. நாம் வாழும் பேரண்டத்தைப் பொறுத்த ஆராய்ச்சிகளிலும் சரி அணுகூறுகளுக்கு உள்ளே நிகழும் ஆராய்ச்சிகளிலும் சரி வெளி எல்லையும் உள் எல்லையும் இன்னும்கண்டறியப்படாதவை என்பதை அறிவோம். கண்டறியப்படாதவை என்பதை விட அருகே கூட அறவே நெருங்க முடியாதவை என்பதே உண்மை. ஏனெனில் நமது அறிவாற்றல் என்பதும் மிகமிக அற்பமான ஒன்றே.

மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஏனைய ஆற்றல்களைப் போல அறிவாற்றலும் இறைவனால்வரையறுக்கப்பட்ட ஒன்றே. இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்கள் சிலர் ரூஹ் (உயிர்) என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்கள் அப்போது இறைவனிடம் இருந்து கீழ்கண்ட வசனம் அருளப்பட்டது:
= நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். (திருக்குர்ஆன் 17:85
நூல்: புகாரி 125

எவ்வளவுதான் உலகம் போற்றும் அறிவியல்மேதையாயினும் ஒருவர் அற்பமான அறிவை தற்காலிகமாக தாங்கி நின்று மறைந்து போகும் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது அறிவியல் சார்ந்த கருத்தேயானாலும் அது இறுதியானது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். காரணம் இங்கு மேலே குறிப்பிட்டவாறு ஆராய்ச்சி எல்லைகள் வரையறுக்கப் படாதவையாக இருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எப்படி இறுதியானவை என்று கொள்ள முடியும்?

அறிவியலையே முடக்கும் நிலைப்பாடு
புலன்களால் அல்லது கருவிகளால் அறியமுடியாத அல்லது அறியாத எதையும் அப்பட்டமாக ‘இல்லை’ என்று மறுப்பது அறிவியல் ஆராய்ச்சிகளை முடக்கிப்போடும் செயலாகும். மாறாக ‘தெரியாது’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து ‘அது இருக்கக்கூடும்’ அல்லது ‘ அதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்ற நிலைபாட்டை மேற்கொள்வதால்தான் அறிவியல் முன்னேற்றமே சாத்தியமாகிறது. உதாரணமாக அணு என்பதுதான் உடைக்கமுடியாத மிகச்சிறிய பதார்த்தம்என்ற நிலைப்பாட்டுக்கு ஒரு காலத்தில் வந்தது. அப்போது அதுவே இறுதியானது என்று முடிவெடுத்திருந்தால் அதற்குப்பின் நடந்த எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்களை அது முடக்கிப்போட்டு இருக்கும் என்பதை நீங்கள்ஊகிக்க முடியும்.

உதாரணமாக அண்டவியலில் பிரபஞ்ச விரிவாக்கத்தின் பின்னணியில் காலக்சிகளுக்கு இடையே அவற்றைப் பிணைத்து வைத்திருக்கும் சக்தியும் அபாரமான வேக வளர்ச்சியோடு விரிவாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சக்தியும் என்னவென்றே அறியப்படாதவை. அந்தக் காரணத்துக்காக அவற்றை இல்லையென்று மறுக்காமல் அவற்றை கரும்பொருள் மற்றும் கருஞ்சக்தி (dark matter, dark energy) என்று பெயரிட்டு அவற்றின் இருப்பை ஏற்பதைத்தான் அறிவியல் அணுகுமுறையிலும் காண்கிறோம். ஆனால் தன் ஆய்வு எல்லைக்கே தட்டுப்படாதவற்றை இல்லை என்று அப்பட்டமாக மறுத்தால் அது அறிவீனமும் அராஜகமும் அல்லாமல் வேறு என்ன? அந்த அராஜகத்தின் விளைவாக சமூகத்தில் உருவாகும் தான்தோன்றித்தனத்திற்கும் குழப்பங்களுக்கும் ஒழுக்க சீர்கேடுகளுக்கும் இறைவனிடம் தண்டனைகள் காத்திருக்கின்றன.

= அப்படியல்ல; அவர்கள்அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில்பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (திருக்குர்ஆன் 10:39)

ஆன்மீகத்தோடுள்ள அணுகுமுறை
காலம் செல்லச்செல்ல இவ்வுலகில் காணும் படைப்பினங்களைப் பற்றிய அறியாமையை அகற்றும் வேலையை தனது அயராத ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல்செய்துவருகிறது. ஆனால் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் அதுவே தீர்வு வழங்கும்என்று நம்பியிருப்பது பெரும் ஏமாற்றத்தையும் இழப்பையுமே கொண்டுவரும். உதாரணமாக மனிதவாழ்வின் நோக்கம், மனிதன் இங்கு வந்ததன் பின்னணி, மனித வாழ்வில் சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது என்பதற்கான அளவுகோல் போன்ற பலவற்றையும் அறிவியல் நமக்கு சொல்லித்தராது. அறிவியல் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று காத்திருந்தால் பல முக்கியமான விடயங்களை நாம் இழக்கவேண்டி வரும். அது இழப்பு என்பதை விட கடுமையான விபரீதங்களையும் சந்திக்க நேரிடலாம். அறிவியல்கூறுவதுதான் இறுதி (ultimate) என்று எடுத்துக் கொண்டு அதற்கு அப்பாற்பட்டவற்றை அப்பட்டமாக மறுத்தால் ஆன்மிகம் கூறும் மறுமை வாழ்வில் நரகத்தையும் ஒருவர் அடைய நேரிடலாம். அதுவும் நிரந்தர வாழ்விடம்!
= (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை இறைவனே நன்கறிகின்றான்! (திருக்குர்ஆன் 53: 29,30) 

-----------------------------------------
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
இஸ்லாம் என்றால் என்ன ?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html