இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூன், 2016

பாவத்தின் சம்பளமா மரணம்?


ஒருவருக்கு மரணம் வந்தாலே அவர் பாவி என்று தீர்மானிப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. அதேபோல  ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலையும்  பரவலாக மக்களிடம் உள்ளது.
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் இந்த ஆதாரமற்ற நம்பிக்கைகளைத் தவறு என்று எடுத்துக் கூறுகின்றன.

சிறு வயது அல்லது இளம் வயது மரணம்
ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.
சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.
இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதை இறைவன் தான் விரும்பியவாறு நடத்துகிறான். நுண்ணறிவாளனான அவன் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தப் பரீட்சைக் கூடத்திற்கு வந்துசெல்லும் கெடுவை நிர்ணயித்துள்ளான். அந்த அடிப்படையில் மனிதர்களின் பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றன.  ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. கீழ்கண்ட இறைவசனங்கள் இதைத் தெளிவாகக் கூறுவதைக் காணலாம்:
= ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 7:34)
= அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 10:49)
= மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
= மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 35:45)
= அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்) (திருக்குர்ஆன் 40:67)
= அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 63:11)

சிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக அல்ல என்பதைக் கீழ்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்:

“ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, இரண்டு குழந்தைகள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரண்டு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

சனி, 25 ஜூன், 2016

சிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்

உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி தனது 74ஆவது வயதில் ஜூன் 4 அன்று மரணமடைந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நியுகாசில் (Newcastleநகரில்  தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பிரபலாமானவை. அதில் ஒரு சிறுவனின் கேள்விக்கு அலி அளித்த பதில் அவர் எவ்வளவு தீர்க்கமான சிந்தனை கொண்ட அறிவாளி என்பதை எடுத்துரைக்கின்றது. ஒன்பது நிமிட வீடியோ கிளிப் யூ டியுப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வெகுவாக உலகெங்கும் பகிரப்பட்டு வருகிறது. இதன் தமிழாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குவதில் திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மகிழ்ச்சியுறுகிறது.


  

சிறுவன்: “முஹம்மத், நீங்கள் குத்துசண்டையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்ய போகிறீர்கள்?
கேள்வியைக் கேட்டவுடன் முஹம்மது அலி “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று இரண்டுமுறை குறட்டை விடுவதைப்போல பாவனை செய்கிறார். தொடர்ந்து சிரித்துக்கொண்டே “நான் உறங்கப் போகிறேன்!” என்கிறார். தொடர்ந்து ....
“நான் ஓய்வு பெற்றபின் என்ன செய்ய போகிறேன் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.
ஆனால் நான் இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் அது உங்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கலாம்.
குறுகிய வாழ்வும் பயனும்
இந்த வாழ்க்கை உண்மையிலேயே சிறியது. இதில்தான் உங்களுடைய தூக்கம், பள்ளி வாழ்க்கை, பொழுதுபோக்கு அனைத்தும் அடங்கியிருக்கிறது. நம்முடைய பாதி வாழ்க்கை எதுவும் செய்யாமலே கழிந்து விடுகிறது.
இப்போது எனக்கு 35 வயது ஆகிறது. இன்னும் 30 வருடங்களில் எனக்கு 65 வயது ஆகிவிடும். நமக்கு ஒரு முன்மாதிரி இல்லையெனில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 65 வயதில் உங்கள் மனைவி அதை உங்களுக்கு கூறுவார். 65 வயதில் உங்களால் அதிகமாக எதுவும் செய்ய வழியே இல்லை.
இதோ பாருங்கள், இன்னும் நான் 30 வருடங்களில் 65 வயதை அடைந்து விடுவேன்.

அந்த வருடங்களில் 9 வருடங்கள் எனது தூக்கத்திலேயே கழிந்துவிடும். ஆக அந்த 30 வருடங்கள் முழுவதும் பகலை நான் காண முடியாது. நான் திரும்ப அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. அடுத்த 30 வருடங்களில் என்னுடைய எல்லா பயணங்களும் சேர்த்தால் 4 வருடங்கள் காலி! சினிமா, பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என என்னுடைய பொழுதுபோக்குகளுக்கு 3 வருடங்கள் காலி! ஆக 30 வருடங்களில் 16 வருடங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கலாம். இவ்வாற நம்முடைய சொந்த வாழ்க்கை பெரும்பாலும் பயனற்றதாக கழிகிறது. சரி, இந்த 16 வருடங்களில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதுதான் கேள்வி! அப்படித்தானே!
இது பயனுள்ளதாக அமைய என்ன வழி?

ஆம், ஒரு வழி இருக்கிறது...  அது என்ன?

இறைவனை சந்திக்க இன்றே தயாராவது

அதுதான் இறைவனை சந்திக்க இன்றே தயாராவது..... இறைவன் தன்னிடம் தயார்செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முயற்சிப்பது....

ரியல் எஸ்டேட் தொழிலோ வியாபாரம் செய்வதோ, குத்துசண்டை வீரர்களுக்கு பயிற்சி அழிப்பதோ இவை எல்லாம் என்னை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப்போவதில்லை.

“சரி.. இங்கு எத்தனை பேர் நம்புகிறீர்கள் இறைவன் இருக்கிறான் என்று? எத்தனை பேர் நம்புகிறீர்கள் இந்த சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்த சக்தி ஒன்று நமக்கு மேலே இருக்கிறது என்று? எத்தனை பேர் நம்புகிறீர்கள் நம்மை விட அறிவுடைய ஒரு சக்தியே இவற்றை படைத்தது என்று?

பலர் கைகளைத் தூக்குகிறார்கள்.

“எத்தனை பேர் நம்புகிறீர்கள் இறைவனே இல்லை என்று?

ஒரு சிலர் கைகளைத் தூக்குகிறார்கள்..

இறைவன் இருப்பதற்கான சான்றுகள்
முஹம்மது அலி மேஜை மீது இருந்த கண்ணாடிக் குவளையைக் காட்டி....
“சரி. இறைவனை நம்ப மறுப்பவர்களிடம் கேட்கிறேன்... இதோ இந்த கண்ணாடி குவளை... இதை எந்த மனிதனும் உருவாக்கவில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களாஇது தன்னைத்தானே உருவாக்கி கொண்டது என்றால் நீங்கள் நம்புவீர்களா? இல்லைதானே, நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். யாரும் நம்ப மாட்டார்கள்...  இந்த தொலைக்காட்சி நிலையம்... இதை யாரும் உருவாக்கவில்லை என்று நான் சொன்னால் முஹம்மத் அலிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்வீர்கள்.
ஆக,  இந்தக் குவளை தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இந்த ஆடைகள் தன்னைத்தானே  உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இந்த கட்டடம் தன்னைத்தானே  உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இம்மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றி சற்று சிந்தித்துப்பாருங்கள். இந்த சந்திரன் எப்படி தானாக வர முடியும்? இந்த சூரியன், நட்சத்திரங்கள், நெப்டியூன், வியாழன், செவ்வாய் மற்றும் இயற்கை இவை எல்லாம் எந்த அறிவின் பின்துணையும்  இல்லாமல் ஒரு திட்டமில்லாமல் எவ்வாறு தானாக உருவாக முடியும்? இவையெல்லாம் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.

நம் வினைகளுக்கு எதிர்வினை உண்டு
அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நமது செயல்களெல்லாம் கண்காணிப்பில் உள்ளன. அந்த இறைவனால் நாமெல்லாம் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறோம் என நம்புகிறேன். ஒரு மனிதன் அனைத்து யூதர்களையும் கொன்று விட்டு அப்படியே சென்று விட்ட ஹிட்லர் மாதிரி இருக்க வேண்டுமா? அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்றாக வேண்டும். அதற்கான ஏற்பாடு இந்த உலகில் இல்லை என்பதை அறிவீர்கள். அந்த குற்றவாளி இப்போது தண்டிக்கப்படவில்லை என்றால் அவன் மரணித்த பிறகு தண்டனை கிடைக்கும். அதற்கான ஏற்பாடுதான் மறுமையில் நரகம்!  

ஆக, நான் குத்து சண்டையிலிருந்து ஓய்வு பெறும் போது நான் என்ன செய்யப்போகிறேன்?
நான் இறைவனை சந்திப்பதற்கு தயாராக வேண்டாமா? ஏனெனில் என்னுடைய விமானம் விபத்துக்குள்ளாகலாம். நம் நாட்டில் விமானங்கள் விபத்துக்கு உள்ளாகவில்லையா மற்றும் சில நேரங்களில் அவை மோதிக்கொள்ளவில்லையா?
ஒவ்வொரு நாளும் மனிதர்கள் இறக்கவில்லையா? எனக்கும் மரணம் என்பது நிச்சயம். மரணத்திற்குப் பிறகு நமக்குக் காத்திருப்பது சொர்க்கம் அல்லது நரகம்! இந்த இரண்டில் ஒன்றுதான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நரகம் என்பது  நினைப்பதற்கே  அதிர்ச்சியான ஒன்று! இறைவனது கட்டளைப்படி வாழாவிட்டால் நான் நரகத்தில்  என்றென்றும் முடிவே இல்லாமல் எரிந்து கொண்டிருப்பேன். அந்த நரகத்தைத் தவிர்க்க நான் என்ன செய்யப் போகிறேன்? இதைத்தான் நான் சிந்தித்தாக வேண்டும்.

இறைவனை சந்தோஷப்படுத்தும் வழி
 நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டீர்கள்... அதற்கு சாதாரணமாக என்னால் விடையளிக்க முடியாது. நான் குத்து சண்டையை விட்டு வெளியே வந்தபின்பு மக்களுக்கு  என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்யப்போகிறேன். அதனால்தான் நான் இங்கு ஜானி வாக்கருடன் இருக்கிறேன். இங்கே ஒரு ஏழை மனிதர் அமெரிக்காவுக்கு வந்தார். சில வறுமையில் வாடும் சிறுவர்கள் பணம் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய என்னை ஒருவர் அழைத்துக் கொண்டிருக்கிறார். இறைவன் என்னை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை பலமாக நம்புகிறேன்  நான் குத்துச்சண்டையில் ஜோ பிரேஸியரை வீழ்த்தி விட்டேன் என்பதற்காக இறைவன் என்னை புகழபோவதில்லை. ஜோ பிரேஸியர் விஷயத்திற்காக  இறைவன் எனக்கு எதுவும் தரப்போவதில்லை. இறைவன் நான் ஆங்கிலேயனா அமரிக்காக்காரனா  என்பதை கவனிக்கப் போவதில்லை. எல்லாம் அவனுக்கு சமமே. எல்லாம் அவனுடையதே.  ஆனால் இறைவனைப் பொறுத்தவரையில் நாம் எவ்வாறு பிற மக்களிடம் நடந்து கொள்கின்றோம், எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுகின்றோம் என்பது தான் முக்கியம்!
. அதனால் நான் என்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தானதர்மங்கள் செய்வதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், மக்களை ஒன்றுபடுத்தவும், மதத்தின் பெயரால் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு எதிராகப் போராடவும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன்.
நம் எல்லோருக்குமிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க இந்த உலகத்தில் நாம் செயல்பட்டே ஆகவேண்டும்.
நீண்ட ஆயுளானாலும் முடிவுக்கு வரும்  
ஆக நான் இறந்த பின் அங்கு சொர்க்கம் இருந்தால் அதை நான் அடையவே விரும்புகிறேன். யோசித்துப்பாருங்கள், நாம் இன்னும் எவ்வளவு நாள் வாழப்போகிறோம்? 80 வருடங்களா? இங்கே இருக்கும் ஒவ்வொருவரிலும் சிலர் இன்னும் 20 வருடங்களில் மரணிக்கப் போகிறோம். சிலர் 50 வருடங்களில்... சிலர் 30 வருடங்களில்...  இன்னும் சிலர் 60, 70 வருடங்களில்.... அவ்வளவுதான்! மீறி மீறி நீங்கள் 125 வருடங்கள்  வாழ்ந்தாலும்... ம்ம் அதற்கு வாய்ப்பே இல்லை.. அதுவும் ஒரு முடிவுக்கே வந்தே ஆகவேண்டும்! சரி, அவ்வாறு 250 வருடங்கள் வாழ்வதாக வைத்துக்கொண்டாலும் அதிலும் நாம் என்ன சாதித்துவிடப் போகிறோம்? அதிகபட்சமாக 145 வருடங்கள் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு பிறகு அதுவும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்தானே!
அவ்வளவு வேண்டாம், 80 வருடங்கள் இந்த பூமியில் இருக்கப் போகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். உண்மையில் இந்த வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதுதானே உண்மை?  நமக்கு தரப்பட்ட இந்த தவணையை நாம் எவ்வாறு செலவளித்தோம் என்பதையே இறைவன் பார்க்கப் போகிறான். அதைப் பொறுத்தே நமது நாளைய இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும்.

உண்மை வாழ்வு இங்கல்ல!
இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மை வாழ்க்கை அல்ல. உண்மையான நீங்கள் உங்களுக்கு உள்ளே இருக்கிறீர்கள். உங்கள் உடலுக்கு வயதாகிறது... தோற்றம் மாறுகிறது.... நீங்கள் கண்ணாடின் முன் நின்று பாருங்கள். உங்களில் சிலருக்கு பற்கள் இல்லை... உங்களது தலைமுடி கொட்டிப்போகிறது. உங்களது உடம்பு பலவீனமடைகிறது. ஆனால் உங்களுடைய உயிர் அல்லது ஆத்மா என்றும் மரணிக்காது. அவை என்றென்றும் வாழப்போகின்றன. ஆக உங்களுடைய உடல் என்பது ஆத்மாவையும்  உயிரையும் தக்கவைத்துள்ள இடமாகும்.

உண்மையில் இந்த உடலுக்குள் தற்காலிகமாக உயிரை வைத்து உங்களை இறைவன் சோதிக்கிறான்... எவ்வாறு பிறரிடம் நாம் நடந்து கொள்கிறோம், இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறீர்களா இல்லையா என்பதை பரிசோதிக்கவே இந்த வாழ்க்கை!
 நம்முடைய உண்மையான நிரந்தரமான வாழ்விடம் சொர்க்கத்தில் அமைய வேண்டுமானால் இன்றே நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பாருங்கள், இந்த உடல் நீண்ட நாள் நீடிக்கப்போவதில்லை. இந்த கார், இந்த கட்டிடம், அதைக் கட்டியவர் மரணிக்கும்போது அவை இங்கேயே இருக்கப் போகிறது. இங்கிலாந்தில் நிறைய மன்னர்கள், ராணிகள் இருந்தார்கள். ஆனால்  இப்போது இறந்து விட்டனர். ஆக ஒருவர் இறந்தபின் இன்னொருவர் வருகின்றார். நாம் இங்கே நிலைத்திருக்கப் போவதில்லை.
மரணம் முடிவல்ல!
 நாம் எல்லோரும் பயணிகள் என்பதே உண்மை! நம்முடையது என்று கூறிக்கொள்ளும் படியாக  எதையும் நாம் சொந்தம் கொண்டாட முடியாது. உங்கள் குழந்தைகள் உட்பட உங்கள் மனைவி உட்பட யாருமே உங்களுக்கு சொந்தம் கிடையாது. அனைத்தையும் அனைவரையும் மரணத்தின்போது விட்டுசென்றேயாக வேண்டும். மிக மிக முக்கியமாக நாம் சிந்திக்கவேண்டியது  என்னவென்றால் நாம் மரணிக்கும் போது என்ன நடக்கும் என்பதே!  நாம் போகப்போவது சொர்க்கத்திற்கா இல்லை நரகத்திற்கா? இதில் அலட்சியம் காட்டுவது ஆபத்து! ஏன்?
அது முடிவே இ்ல்லாதது (eternity) முடிவே இ்ல்லாதது என்றால் என்ன?  உதாரணத்திற்கு ஸஹாரா பாலைவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஸஹாரா பாலைவனத்தில் எவ்வளவு மணல் இருக்கிறது? உதாரணத்திற்கு ஒரு துளி மணல் 1000 வருடங்களுக்கு ஒப்பாகும் மற்றும் நீங்கள் நரக நெருப்பில் இருக்கும் போது, நீங்கள் மரணிக்கும் போது நீங்கள் நரகத்தில் என்றென்றும் எரியப்போகிறீர்கள் மற்றும் என்றென்றும்.. என்றென்றும்.. அதற்கு முடிவே இல்லை.

 அது எவ்வளவு தூரம் என்று புரிந்துகொள்வதற்காக உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்... ஸஹாரா பாலைவனம்... அதில் எவ்வளவு மணல் துளிகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்... இப்போது அவை அனைத்தையும் நீங்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கவேண்டும். ஒரு துளி மணலை எடுத்தபின் அடுத்த துளிக்காக ஆயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும் இவ்வாறு ஸஹாரா பாலைவனமே தீரும்வரை ஒவ்வொரு துளி மணலையும் நீங்கள் சேகரிக்கப் போகிறீர்கள். இப்படியே பாலைவனம் முழுதும் தீரும் வரை இதைத்தான் செய்யப் போகிறீர்கள். உங்களுக்குப் புரிகிறதா eternity என்பது எவ்வளவு நீண்ட காலகட்டம் என்று?

ஆக, நான் ஒரு நாள் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. அதன் பின்னர் நரகத்திற்கு செல்லப் போகிறேன் என்று கற்பனை செய்தால் அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மரணம் எந்த நேரமும் எனக்கு நேரலாம். நான் அடிக்கடி பயணம் செய்பவன். நான் விமானத்தில் செல்லும் போது அது விபத்துக்குள்ளாகலாம். அப்போது நான் மறுமையை நேருக்குநேர் சந்தித்தே ஆகவேண்டும். இறைவனின் விசாரணையை யாரும் தப்பிக்க முடியாது. இவ்வுலகில் நீங்கள்  மக்களைக் கொல்லலாம் கொள்ளை அடிக்கலாம். எல்லாம் செய்துவிட்டு போலீஸ் பிடியில் சிக்காமலும் தப்பிக்கலாம். ஆனால் இறைவன் ஒருவனின் பார்வையை விட்டோ அவனது தண்டனையை விட்டோ ஒருக்காலும் தப்பிக்க வழியேயில்லை. அதனால் சிறந்தது என்னவென்றால் நரகத்தைத் தவிர்த்து அவனது சொர்க்கத்தை அடைவதற்காக ஆவன செய்வதுதான் என்று நினைக்கிறேன். ஆம், என் இறைவனை சந்திக்க தயாராகப் போகிறேன். அதுதானே அறிவார்ந்த செயல்?
மொழிபெயர்ப்பு உதவி: சுதா 
http://quranmalar.blogspot.com/2013/09/blog-post_24.html 
மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்

வியாழன், 23 ஜூன், 2016

மனித உரிமை க்கான அடிப்படை

Image result for human rights
அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்று தனித்தனியாகப்  போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை.

ஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள்

அப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.

 மனித உரிமைகள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.

அந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.

திருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
 அதாவது, ஒன்றே மனித குலம்ஒருவனே இறைவன்அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம்நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் ஆக்குகிறது இந்த இறைவசனம். 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா?

மனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் காப்பாற்றிவிட முடியும்.... மரணத்திலிருந்து அல்ல... அதைவிட விபரீதமான வேதனைகளில் இருந்து...உண்மையில் மரணம் என்பது ஒரு முடிவல்ல. மாறாக ஒரு தொடக்கம் என்பதே பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் கண்டடையும் முடிவாகும். இம்மாபெரும் பிரபஞ்சத்தில் மிகமிக நுண்ணிய ஜீவிகளான நாம் நமது நீர்க்குமிழி போன்ற தற்காலிக வாழ்வையும் இயல்புகளையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் சொல்பவை உண்மையே என்பது புலனாகும். அதாவது இந்த உலகம் என்ற தற்காலிக பரீட்சைக் கூடத்தில் படைத்த இறைவனுக்கு நன்றி உணர்வோடு அவனுக்குக் கீழ்படிந்து வாழ்வோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்பதே அந்த உண்மை.

 ஆக, வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைந்து இதன் அடுத்தகட்டமான மறுமையில் சொர்க்கம் புக வேண்டுமானால் படைத்த இறைவனை அறிந்து அவனை வணங்குவது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்தவன் என்பதும் பகுத்தறிவு நமக்கு உரைக்கும் அடுத்த உண்மையாகும். அவன் அல்லாத அனைத்தும் படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பொய்யான கற்பனையும் வீணும் ஆகும். அது உண்மை இறைவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு செய்யும் நன்றிகேடாகும்.

மேலும் அப்படிப்பட்ட ஒரு செயல் இறைவனைப்பற்றிய மதிப்பு மற்றும் மரியாதை உணர்வை மனித மனங்களில் இருந்து போக்கி விடுவதால் இறையச்சம் என்பது இல்லாமல் போகிறது. அதனால் சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க காரணமாகிறது. அச்செயல் கடவுளின் பெயரால் இடைத்தரகர்கள் மோசடி நடத்தி மக்களை ஏய்த்துப் பிழைக்க வழிவகுக்கிறது. மனிதகுலத்துள் பிரிவினை உண்டாகவும் அது காரணமாகிறது. பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமான இந்தப் பாவத்தை திருக்குர்ஆனில் இறைவன் வன்மையாகக் கண்டிக்கிறான்.
= நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை (இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை) மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.. (திருக்குர்ஆன் 4:48)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)

= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரீ (1238)

மரணவேளையில் மனிதனைக் காப்பாற்றும் கலிமா
மனிதர்கள் யாராயினும் மரணத்திற்கு முன்னராக இந்தப் பாவத்தில் இருந்து மீண்டு “படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். அவனைத்தவிர யாருமே வணக்கத்திற்கு உரியவர் அல்ல” என்ற உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழிந்தால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. அவர் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றி பெற்று மறுமையில் சொர்க்கம் செல்கிறார் என்று இஸ்லாம் கூறுகிறது.

‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற அந்த உறுதிமொழி வாசகமே கலிமா என்று இஸ்லாமிய வழக்கில் அறியப் படுகிறது. இதன் பொருள் “வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை” என்பதாகும். அத்துடன் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராவார்) என்று சேர்த்து சொல்வது கலிமாவின் விரிவாக்கமாகும்.

கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்:

ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுத்து நினைவூட்ட வேண்டும்.
= “உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 1523, 1524

= “உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னு ஹிப்பான் 7/272

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சார்களில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா? சிறிய தந்தையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் மாமாதான் எனக் கூறினார்கள். பிறகு அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'ஆம்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத் 12104, 13324

முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்:

மரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவர் என்றால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும். அது நபிவழியுமாகும்.

கலிமா மூலம் காப்பாற்றப்பட்ட மனிதர்:

= யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து,” நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் தனது தந்தையைப் பார்த்தார். “நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதைக் கேள்” என்று அவரது தந்தை கூறினார். உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். “இவரை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1356, 5657

கலிமாவை மறுத்ததால் கரைசேராத தந்தை!

சிறுவயதில் இருந்தே அனாதையாக வாழ்ந்த நபிகள் நாயகம் அவர்களை சிறுவயதில் இருந்து அரவணைத்துப் பாதுகாத்து வளர்த்தவர் அவரது பெரிய தந்தை அபூதாலிப். அவர் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமல் முன்னோர்கள் மார்க்கமே சரி என்று வாழ்ந்தவர். அவரை மரணத்திற்கு முன் எப்படியாவது கரைசேர்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் நபிகளார்.

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே இஸ்லாத்திற்கு விரோதிகளாக இருந்த அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் “அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா?” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் “நான் அப்துல் முத்தலிபின் வழியில்தான் இருப்பேன்” என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார்.
அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி) நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772

இவ்வுலகமும் இறைவனும் மரணமும் எப்படி அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவானவையோ அவ்வாறே மரணத்திற்குப்பின்னால் தொடரும் மறுமையும் இறுதித்தீர்ப்பும் சொர்க்கமும் நரகமும் பொதுவானவையே. மக்கள் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக வாஸ்தவம் வளைந்து கொடுக்காது. எனவே மாற்றுமத அன்பர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது சத்தியத்தை எடுத்துச் சொல்லி அவர்களை மீளாத்துயரில் இருந்து காப்பாற்ற வேண்டும். அதுவே உண்மையில் மனித நேயம்.
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

செவ்வாய், 21 ஜூன், 2016

பாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை!


நாத்திகர்களைப் பொறுத்தவரை பாவம் பற்றியோ மன்னிப்பு பற்றியோ கவலைப் படுவதில்லை. ஆத்திகர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் கடவுளிடம் இருந்து தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் கடவுளை நம்பும் ஆத்திகர்களும் பாவங்களில் அதிகமாக மூழ்குவதற்குக் காரணம் பாவமன்னிப்பு அல்லது பாவ பரிகாரம் பற்றிய தெளிவின்மையே. பாவபரிகாரம் என்ற பெயரில் சில இடைத்தரகர்கள் அறிமுகப்படுத்தியுள்ள சில சடங்குகளை உண்மை என்று  பலர் நம்புகின்றனர்.  அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் தங்களின் பாவங்கள் கழுகப்பட்டு விடுகின்றன என்ற நம்பிக்கை அவர்களை மேலும் பாவங்கள் செய்ய ஊக்குவிக்கிறது.
வேறு பலர் ஒரு குறிப்பிட்ட மனிதரில் நம்பிக்கை கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்றும் நம்புகின்றனர். அந்த புனிதர் அனைத்து மனிதர்களின் பாவங்களுக்காகவும் தன்னையே தியாகம் செய்தார் என்று இவர்கள் நம்புவதால் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் அனைத்துமே மன்னிக்கப்பட்டவையே என்ற உணர்வு மேலோங்குகிறது. முக்கியமாக மதுப்பழக்கம் விபச்சாரம் போன்றவை பூமியில் பெருக இது ஒரு காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் உண்மை இறை மார்க்கமோ இறைவனை மாபெரும் கருணையாளன் என்று அறிமுகப்படுத்தும் அதேவேளையில் இடைத்தரகர்கள் கற்பிக்கக்கூடிய வீண் சடங்குகள் அல்லது மூடமான நம்பிக்கைகள் மூலம் பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை என்கிறது. 

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து  விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)
ஆனால்ஒருவர் செய்த பாவத்திற்கு அவரே பொறுப்பாவார் என்றும் மனம்வருந்தி இறைவனிடம் முறையிட்டு மன்றாடுதல் மூலமே பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு என்று தெளிவுபட கூறுகிறது. பாவத்தை நினைத்து வருந்துதல், பாவமன்னிப்புக்காக இறைவனிடம் மன்றாடுதல், மீண்டும் பாவத்தின் பக்கம் மீளாதிருத்தல் ஆகிய மூன்று நிபந்தனைகளும் பேணப்பட்டாலே பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்படும் என்கிறது இஸ்லாம்.
தனிநபர்களை பாதிக்கக்கூடிய குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட நபர் மன்னித்தாலே யன்றி இறைவன் மன்னிப்பதில்லை என்றும் சமூகங்களை பாதிக்கக்கூடிய விபச்சாரம், கற்பழிப்பு, கொலை போன்ற பெருங்குற்றங்களுக்கு இவ்வுலகிலேயே அதற்குரிய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் இறைவனிடம் மன்னிப்பு உண்டு என்றும் தெளிவுபடுத்துகிறது இஸ்லாம்.

மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல்

எந்த மனிதராக இருந்தாலும் அவரால் மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். உடல், பொருளாதாரம் மற்றும் மன ரீதியாக நம்மால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டும். மனிதர்களுக்கு அநீதி இழைத்த நிலையில் நாம் மரணித்தால் மறுமையில் தண்டனைகளை நாம் சந்திக்க நேரும்.
= மற்றவரின் மானம், அல்லது வேறு பொருள் சம்பந்தமாக ஒருவர் ஏதேனும் அநீதி இழைத்திருந்தால் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் செல்லாத நாள் வருவதற்கு முன் இன்றே அவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளவும். இவரிடம் நல்லறங்கள் இருந்தால் இவர் செய்த அநியாயத்தின் அளவுக்கு இவரிடமிருந்து நல்லறம் பிடுங்கப்படும். இவரிடம் நன்மைகள் இல்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது சுமத்தப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2449, 6534
நஷ்டவாளி யார் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யாரிடம் காசுகளும், தளவாடங்களும் இல்லையோ அவர் தான் நஷடவாளி என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் ஒருவர் வருவார். அதே சமயம் இவனைத் திட்டியிருப்பார்; அவன் மீது அவதூறு கூறியிருப்பார்; இவனது சொத்தைச் சாப்பிட்டிருப்பார்; அவனது இரத்தத்தை ஓட்டியிருப்பார்; இவனை அடித்திருப்பார். அதன் காரணமாக இவர் செய்த நன்மைகள் இவனுக்கும் அவனுக்குமாக வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன் இவரது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பின்னர் இவர் நரகில் வீசப்படுவார். இவர் தான் மறுமை நாளில் நஷ்டவாளி  என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4678

செவ்வாய், 14 ஜூன், 2016

சிலைவணக்கமும் சிந்திக்கவேண்டிய உண்மைகளும்



உலகில் சிலை வழிபாட்டை கடைப்பிடிப்பவர்கள்  அதிகம் உள்ளனர். இந்த கட்டுரையில் சிலை வணக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், சிலைவணக்கத்திற்கு ஆதரவாக சொல்லப்படும் காரணிகளையும் ஆய்வு செய்யவிருக்கிறோம்.

சிலை வணக்கமுறைக்கு சொல்லப்படும் காரணங்கள் ::

1. சிலை இறைவன் அல்ல!! சிலை இறைவனின் சின்னம் / அடையாளம்  மட்டும் தான். (symbol of god)
2. சிலை, மனதை  ஓர்மைப்படுத்துவதற்கு தான், அச்சிலையையே இறைவனாக நாங்கள் நம்பவில்லை. 
3.நாங்கள் சிலையை வணங்கவில்லை, சிலை மூலமாக இறைவனை வணங்குகிறோம். 
4. எங்கள் தலைவர்களையும், முன்னோர்களையும் மதிப்பதற்காக அவர்களின் புகைப்படங்களையும், சிலையையும் வைத்து மதிப்பது போல, இறைவனை மதித்து வணங்குகிறோம்.
5. இறைவன் எங்கும் இருக்கிறார். அந்த சிலையிலும் இருக்கிறார். எனவே, சிலையை வணங்குவது தவறல்ல!!
6. சிறு உதாரணங்களை வைத்து தான் குழந்தைகளுக்கு விளக்க முடியும். ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான். அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.  
நினைவில் கொள்க: :

இறைவனுடைய உருவம், ஒரு அனுமானம் தான். யாரும் இறைவனை பார்த்ததில்லை. ஆக வணங்கப்படும் இறைவனுடைய உருவம் அவனுடையதல்ல!! அவையெல்லாம் மனிதனின் அனுமானங்கள் தான். மனிதன் அவனுடைய அனுபவங்களை வைத்து, அதாவது அவனுடைய அன்றாட வாழ்வில் பார்த்தவற்றை, கேள்விப்பட்டவற்றை  வைத்து இறைவனுக்கு உருவத்தை கொடுத்துள்ளான்.

சிலைவணக்கம் ஒரு பெரும் பாவம். ஏன்?

"சிலை வணக்கம் தவறல்ல, சிலை வணங்கப்படுவதே இறைவனை  வணங்க வேண்டும் என்று நோக்கத்திற்காக தானே!! நம்முடைய நோக்கத்தையும் எண்ணத்தையும்  இறைவன் அறிவார் அல்லவா..?? ஆக இதில் எந்த தவறுமில்லை " என்று மக்கள் நினைக்கிறார்கள்.

என்னதான் நல்ல எண்ணத்துடன் சிலை வணக்கம் செய்தாலும், கீழ்காணும் காரணங்களால், சிலை வணக்கம் ஒரு பெரும் பாவமாகிறது.

1. இறைவன் , சிலைவழிப்பாட்டை அனுமதிக்கவில்லை:

மனிதர்கள் சிலை வணக்கம் மூலம் இறைவனை வணங்க இறைவன் அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு #உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் , உங்களை நினைவு ஏற்படுத்துவதற்காக ஒரு நாயை அல்லது ஒரு குரங்கை போன்ற உருவம் வடித்து, இது தான் நீங்கள் என்று கூறுவார்களேயானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்னைவிட தரத்தில் தாழ்ந்த இனத்தோடு அவனை ஒப்பிடும் போது, அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அந்த ஒப்பீடு தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனுக்கு, இவ்வுலகத்தில் உள்ள எல்லா வஸ்துகளும் அவனுடைய தரத்திற்கு கீழ் தான். படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம் தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க, தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா

உங்களுக்கென்று வரும் போது, ஏற்று கொள்ள முடியாத ஒரு ஒப்பீட்டை  இறைவனுக்கு செய்வது எப்படி சரியாகும்? இந்த  ஒப்பீடு, எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்

2. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள் இறைவனை இழிவுபடுத்துகின்றன:

இறைவனை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால், இறைவனுக்கு இழிவு தான் ஏற்படுகிறது. உதாரணமாக , இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள், காலண்டரிலும், பைகளிலும், வெடிகளிலும், லாட்டரி டிக்கட்டிலும், திருமண அழைப்பிதழ்களிலும், ஏன் பீடியிலும் கூட பார்க்க முடிகிறது. 2015, 2014 ஆம் ஆண்டு காலண்டர்களின் நிலை என்ன? "இறைவனுடைய உருவம்" கொண்ட காலண்டர் குப்பையில் வீசப்படுகிறது. கிழித்து எறியப்படுகிறது. லாட்டரி டிக்கட்டுகளுக்கும், புத்தகங்களுக்கும், பைகளுக்கும், திருமண அழைப்பிதழ்களுக்கும் இதே நிலை தான். இறைவனுடைய உருவத்தை கொண்ட பீடிகளோ, மண்ணில் பலரிடம் மிதிபபடுவதும், கழிப்பறையில் போடப்படுவதும் வழக்கமானதாகிவிட்டது. அறிந்தோ, அறியாமலோ இறைவனுக்கு உருவம் கொடுப்பதன் மூலம், அவனை நாம் இழிவு தான் செய்கிறோம்.

இது போன்ற செயல்கள், நமது புகைப்படத்திற்கு ஏற்பட்டாலோ அல்லது நமது பெற்றோரின் புகைப்படத்திற்கு ஏற்பட்டாலோ, அதை நாம் ஏற்போமா..??  ஏற்க மாட்டோம் தானே. ஆனால் இறைவன் விசயத்தில் எப்படி ஏற்றுக்கொண்டுள்ளோம்? அந்த உருவம் உண்மையில் இறைவனின் உருவம் தான் என்று நாம் நம்பியிருந்தால், நாம் இவ்வாறு செய்வோமா? இதை நாம் சிந்திக்க வேண்டும்.

3. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்களின் நிலை என்ன?

இறைவனுக்கு கொடுக்கப்படும் சில உருவங்களை நம்மால் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
உதாரணத்திற்கு:  பானையை போன்ற தொப்பை,கோரமான முகம், முன்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள்.. இது போன்ற தோற்றமுடையவரை, நீங்கள் திருமணம் செய்ய விரும்புவீர்களா ? அல்லது உங்களின் பிள்ளைக்கு திருமண முடிக்க விரும்புவீர்களா?

உலகில் உள்ள அழகை கண்டு நாம் வியக்கிறோம். அந்த அழகை படைத்த கடவுள்,  எவ்வளவு அழகாக இருப்பார்? நமக்கே ஏற்றுக்கொள்ளாத ஒரு உருவத்தை இறைவனுக்கு கொடுப்பது, அநீதி இல்லையா ..??

4. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள், இறைவனின் இலக்கணத்தை சிதைக்கிறது::

மனிதன் தனது அனுபவத்தை வைத்து உருவம் கொடுக்க முற்பட்டால், கடவுளும் மனிதரை போன்றவர் தான் என்ற எண்ணத்தில், கடவுளுக்கும் , மனிதனுடைய பல பலகீனங்களை (குடும்பம், மனைவி, வைப்பாட்டி, தூக்கம், மறதி போன்றவற்றை) சாட்டுவான். இது இறைவனின் இலக்கணத்தை சிதைக்கிறது; அதனால் கடவுளை மனிதன் குறைத்து மதிப்பிட, அவனது செயல்களில் கவனக்குறைவு ஏற்படுகிறது.

இறைவனுக்கு உருவம் கொடுத்து, தலையில் இருந்து பிறந்தவன் உயர் சாதிக்காரன், காலில் இருந்து இருந்து பிறந்தவன் தாழ்ந்த சாதிக்காரன் என்றெல்லாம் சொல்ல்பவர்களை நாம் பார்க்கிறோம். இப்படி மனிதை பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்று பிரிக்கும் தவறான கொள்கையை சொல்வதற்கு கூட இறைவனுக்கு உருவம் கொடுக்கப்பட்டது தான் காரணமாக உள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரலாம். 

மனதை ஓர்மைபடுத்துவதற்கு சிலைகள் தேவையா?? 

இல்லை!! தேவையில்லை.  ஏனென்று கீழ்கண்ட காரணங்கள் விளக்கும். 

1. சிலை முன்பாக நின்றுகொண்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்பவர்களை நாம் பார்த்திருப்போம்..!! மனதை ஓர்மைபடுத்துவதற்கு சிலைகள் தேவையெனில் பின்பு ஏன் கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்?

2. ஒரு அவசர தேவைக்காக இறைவனிடம் பிரார்திக்கும் போதுதான் மனதை ஓர்மைபடுத்துவது மிக மிக அவசியம். உதாரணத்திற்கு: பைக்கில் பயணம் செய்கிறீர்கள் , பிரேக் (brake) பிடிக்கவில்லை, பதற்றத்தோடு இறைவனிடம், "கடவுளே என்னைய காப்பாத்து" என பிரார்த்திப்பீர்கள். அச்சமயத்தில் மனதை ஓர்மைபடுத்த சிலையையோ அல்லது புகைப்படத்தை தேடுவீர்களா...?? நேரடியாக பிரார்த்திப்பீர்களா...?? இது போன்ற ஒரு சிலையில்லாமல் அவசர தேவைக்காக இறைவனிடம் நேரடியாக முடியுமென்றால் ஏன் மற்ற நேரங்களில் முடியாது?


3. மனதை ஓர்மைபடுத்துவதற்கு தான் சிலைகள் என்றால், மனதை ஓர்மைபடுத்த எந்த பொருளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாமே..?? உதாரணமாக ஒரு பல்பை பற்றி சிந்தித்துக் கூட மனதை ஓர்மைபடுத்தலாம். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. ஆக மனதை ஓர்மைபடுத்துவதற்கு தான்  சிலைகள் என்று சொல்லப்படும் காரணமும் உண்மையல்ல!!!

4. மனதை ஓர்மைபடுத்துவதற்கு மட்டும் தான் சிலைகள் என்றால், அந்த சிலைகள் மற்ற பொருள்கள் போல் நடத்தப்பட வேண்டும். அந்த சிலைகளுக்கு பூஜைகள் செய்வதும், அதற்க்கு அபிஷேகம் செய்வதும் அந்த சிலைகள் கடவுள்களாகவே பார்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. உருவ வழிபாட்டினர் மனதில் இறைவனை நினைத்தால், குறிப்பிட்ட உருவம் தான் நினைவில் வரும் ;அது தான் இறைவன் என மனதிலும் பதிவாகிவிட்டது. எனவே சிலையை தான் இறைவன் என நினைக்கிறார்கள்..


சிலை வணக்கமுறைக்கு சொல்லப்பட்ட காரணங்களான
1. அந்த சிலை  இறைவன் அல்ல!! இறைவனின் சின்னம் / அடையாளம்  தான். (symbol of god)
2. சிலை, மனதை  ஓர்மைப்படுத்துவதற்கு தான், அச்சிலையையே இறைவனாக நாங்கள் நம்பவில்லை. 
3.நாங்கள் சிலையை வணங்கவில்லை, சிலை மூலமாக வணங்குகிறோம்.

இவையனைத்தும் உண்மையல்ல என்பதே தெளிவு..


5. இறந்து போன மனிதருக்காக, ஆண்டு நிறைவு சடங்குகள் நடத்துவது, மக்களிடையே வாடிக்கையாக நடக்கும் ஓர் விசயம். ஒருவேளை இறந்தவரின் புகைப்படம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால்,  வேறு யாருடைய புகைப்படத்தையாவது வைத்துக்கொள்வீர்களா..?? மாட்டீர்கள் என்றால், , இறைவனுக்கு மட்டும் ஏதோ ஓரு உருவம் கொடுக்கலாமா...??

இறைவன் எங்கும் இருக்கின்றனா..??

இறைவன் எங்கும் இருக்கிறார், சிலையிலும் இருக்கிறார். எனவே சிலையை வணங்குவது தவறல்ல!! என மக்கள் நினைக்கின்றனர்; ஆனால் இந்த நம்பிக்கையும் தவறானதே!!


1. இறைவன் எங்கும் இருக்கிறார் என்றால், எந்த பொருளை வேண்டுமானாலும் வணங்கலாமே!! எதற்காக சிலையை, புகைப்படத்தையும் வணங்க வேண்டும்..?? உதாரணத்திற்கு:  பேனா, நாற்காலி, மேஜை என எல்லாவற்றையும் வணங்கலாமே...?? இதை சிலை வழிபாடு செய்பவர்கள் ஒத்துக்கொள்வார்களா?


2. இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது ஒரு தவறான வாதம்; படைப்புகளுக்கு ஆரம்பமும் முடிவும் உள்ளது; படைப்பாளன்,  படைப்புகளில் உள்ளான் என்றால், படைப்புகளின் முடிவில், படைப்பாளனின் நிலை என்னவாகும்.??


3. நம் பிரபஞ்சத்தில், பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும் உண்டு. இரண்டும் சேர்கையில், ஏதும் இல்லாமல் ஒரு சூனியமாகி விடும். ஆக இறைவன் எங்கும் இருக்கிறார் எனில், பொருளிலும் எதிர்ப்பொருளிலும் இருக்கிறார் , அப்படிதானே!!! பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும், இரண்டும் சேர்கையில், கடவுள்  சூனியமாகி இல்லாமல் போய்விடுவாரா?? ஆக ,இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது பொருத்தமற்றது;

எனவே "இறைவன் எங்கும் இருக்கிறார், சிலையை வணங்குவது தவறல்ல!! "" என சொல்லப்படும் காரணமும் சரியானதல்ல!!


வணக்கவழிப்பாட்டில் மனதை ஓர்மைப்படுத்துவது எப்படி ..??
      
  இறைவனின் பண்புகளான அன்பு, கருணை, மன்னித்தல், ஞானம், ஆற்றல் போன்றவற்றை சரிவர அறிந்து வணங்கினால், வணக்கத்தில் மனதை ஓர்மைபடுத்தலாம்;  மற்றும் அந்த வழிபாடு அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்..
          

அனைவரும் சிந்திக்கவேண்டிய முக்கியமான விசயம், என்றைக்காவது எந்த சிலையும் புகைப்படமும் இல்லாமல், இறைவனை வணங்கியதுண்டா..?? முயற்சித்து பார்க்காமல், வெறுமனே மறுப்பது சரி தானா...??

சாதாரண  மக்களுக்கு, கடவுளை வணங்க, சிலை தேவை...???

சாதாரண  மக்களுக்கு, கடவுளை வணங்க, சிலை தேவை என்ற வாதமும் தவறானதே!! ஏனென்றால்,

1) இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என, உலகில் பல லட்சகணக்கான மக்கள், சிலை வழிப்பாடு இல்லாமல் வணக்க வழிபாடுகள் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். பெரும்பாலான மக்களால் முடியும்போது, எப்படி சிலரால் மட்டும் செய்ய முடியாது என சொல்லமுடியும்....??

2. "சிறு உதாரணங்களை வைத்து தான் குழந்தைகளுக்கு விளக்க முடியும். ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான், அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்." என்றெல்லாம் சொல்வது,  "குழந்தையால் சூரிய கதிர்களை பார்க்கமுடியாது,அதனால் சின்னதாய் சூரியனை வரைந்து காட்ட வேண்டும் " என்று சொல்வது போலுள்ளது.

3. எந்த ஒரு விசயத்திலும் / தலைப்பிலும் சரி, அதன் அடிப்படை விசயங்கள் மிக உறுதியாக , சரியாக இருத்தல் வேண்டும் ; அப்போது தான் வருங்காலம் நன்றாக அமையும்; உதாரணத்திற்கு: - ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு கணக்கு வாத்தியார் 2+2 = 4; என சொல்லிக்கொடுக்கிறார்.. அந்த மாணவன் , என்னதான் +2, காலேஜில் படிக்கசென்றாலும் சரி, கணிதத்திலேயே PH.D முடித்தாலும் சரி, 2+2=4 தான், அது மாறாது.

ஒன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது 2+2 =4 அல்ல, 2+2= 6 என சொல்லிதந்துவிட்டு பரிட்சை முடிந்ததும் நான் சொன்னது தவறு, 2+2=4 தான், என சொல்வீர்களா..?? இல்லை பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு சொல்லலாம் என நினைத்து காத்துக்கொண்டிருப்பீர்களா..?? ஆரம்பித்திலேயே உண்மையை/நிதர்சனத்தை சொல்லாவிட்டால், அவன் வருங்காலம் தான் பாதிக்கப்படும்..

இதே போல, ஆன்மீக வழிப்பாட்டின் அடிப்படையும் மாறாதது தான். எனவே,  ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான், அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்." என்றெல்லாம் சொல்வது தவறு. 

இந்து வேதங்கள், சிலை வழிப்பாட்டை கடுமையாக விமர்சிக்கிறது.. வேதங்களையும், உபநிதங்களையும் படித்தோமேயானால், இந்து மதம், சிலை வணக்கத்திற்கு எதிரானது என்பதை அறியலாம்; வேதங்களையும், உபநிதங்களையும் பின்பற்றக்கூடிய ஆரியா சமாஜ், பிரம்மோ சமாஜ், காயத்ரி சமாஜ் போன்றய அமைப்புகள், சிலை வணக்கத்திற்கு எதிராக பேசுகிறார்கள். சிலை வணக்கத்தை  பாவமாக கருதுகிறார்கள்.

"நல்லதையே செய்வோம் ,கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் கவலைபட வேண்டாம்" எனக் சிலர் கூறுவர்.

வெறுமனே நல்ல மனிதனாக இருந்தால் மட்டும் போதுமென்றால், பின்பு ஏன் இறைவனை வணங்குகிறீர்கள்...??

நல்ல மனிதனாக வாழ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு  இறைவனை சரிவர வணங்குவதும் முக்கியம்; இறைவன் சொன்ன வழியில் வணங்கவேண்டும் ; இறைவன் தடுத்த வழியில் அவனை வணங்குவது எப்படி சரியானதாகும்..??

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை புரிந்துக்கொள்ள முயற்ச்சிப்போம். "A" என்றொரு நபர், ஏழைகளுக்கு, முடியாதவர்களுக்கு உதவுவது,உணவளிப்பது போன்ற  பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர். மிகச் சிறந்த மனிதர் என சமூகத்தில் பெயர் எடுத்தவர்; ஆனால் ஒரு நாள், இவர் நம் நாட்டின் ரகசியங்களை எதிரி நாட்டிற்கு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது..

"B" என்றொரு இன்னொரு நபர், சமூக சேவைகளில் ஈடுபடவில்லை;  சமூகத்தில் பெயர் வாங்கவில்லை;  பெரிதாக எந்த நற்செயல்கள் செய்ததில்லை, ஆனால் தன் நாட்டிற்கு விசுவாசமானவராய் இருந்தவர்.

இந்த இரண்டு நபர்களில், யார் சிறந்தவர் ? நபர் "A" சில நல்ல விசயங்கள் செய்ததால், மன்னித்துவிடலாமா? முடியாது ஏனெனில் நாட்டின் இரகசியங்களை காசாக்கி சொந்த நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளார்; துரோகம் செய்துள்ளார்; இச்செயலுக்கு பல நாடுகளில் மரணதண்டனை கொடுக்கப்படும்,அவ்வளவு பெரிய பாவமாக தான் பார்க்கபடுகிறது.

அதே போல, நற்செயல்கள் செய்பவர்களை இறைவன் விரும்புகிறான் ; ஆனால் இறைவனை விட்டுவிட்டு மற்ற பொருள்களையும், சிலைகளையும் கடவுள்களாக எடுத்துக்கொண்டால்,  இந்த துரோகத்தை இறைவன் மன்னிப்பானா..?? இறைவனுக்கு கீழ்படாதவர் முழுமையான நல்ல மனிதராக எப்படி ஆகமுடியும்..?? ஒருவன் நல்ல மனிதன் ஆவதற்கு, இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விசயத்திலும் கீழ்பட்டவராக இருக்க வேண்டும்.

எனவே, "நல்லதையே செய்வோம் ,கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் கவலைபட வேண்டாம்" என்ற வாதமும் சரியானதல்ல!!

வணக்கம் என்பது, வணக்கத்துக்குரியவருக்கே உரித்தானது ஆகும். இறைவன் மட்டும் தான் உயர்விலும், மேன்மையிலும், ஞானத்திலும் ஆற்றலிலும் உயர்ந்தவர் ஆவார். ஆக அவரே வணக்கத்துக்குரியவர் ஆவார். இறைவனுக்கு நிகர் எவருமில்லை. வணகத்தை வேறு பொருட்களுக்கோ, சிலைக்கோ,மரத்துக்கோ,மட்டைக்கோ சமர்பித்தால், அது இறைவனை இழிவுபடுத்துவதாகும். 

கருத்துச் சுருக்கம் :: 

1. சிலை வணக்கம் ஒரு பெரும்பாவம்.
2.இறைவன் சிலை வணக்கத்தை அனுமதிக்கவில்லை.
3.இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள், இறைவனை இழிவுபடுத்துகிறது.
4.கடவுளின் உருவங்கள், கடவுளின் இலக்கணத்தை சிதைக்கிறது.
5. இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்களை, நம் மனமே ஏற்பதில்லை.
6. மனதை ஓர்மைப்படுத்த சிலை தேவையில்லை, இறைவனின் தன்மைகளை சரிவர சிந்தித்து மனதில் வைத்துக்கொண்டு வணங்கினால் மனதை ஓர்மைப்படுத்த முடியும்.

7. இறைவன் எங்கும் இருக்கிறார், அதனால் சிலைவழிபாடு தவறில்லை என வைக்கப்பட்ட வாதமும் தவறானதே!!!