இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 மே, 2024

பின்லாந்து யுவதியின் மனமாற்றம்

 


By Jerry Tom







என் பெயர் பியா (Bea) நான் பின்லாந்தில் மதமற்ற வீட்டில் வளர்ந்தேன்.

சின்ன வயதிலிருந்தே மதம் சார்ந்த உரைகளில் எனக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருந்தது. நான் சிறு வயதில் பைபிளை அதிகம் வாசிப்பேன், ஆர்வத்தை பகிர்ந்து கொண்ட பாட்டியுடன் நிறைய உரையாடுவேன், ஆன்மீகம் பற்றி நிறைய புத்தகங்கள் வாசிப்பேன் (அவரும் இஸ்லாத்த்தில் ஆர்வமாக உள்ளார். எல்லாப் புகழும் இறைவனுக்கே).
இந்த நூல்களில் இருந்து நான் தேடிக் கொண்டிருந்த பதில்கள் எனக்கு கிடைத்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனக்கு 18 வயதாகிய போது லண்டன் செல்ல நேர்ந்தது. அங்கு சில முஸ்லிம்களை சந்தித்தேன். அவர்கள் இஸ்லாத்தை பற்றி எனக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்திய போது ஆரம்பத்தில் எனக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வமே எழவில்லை. எப்போதும் போல எனது சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது என்றும் முடிவு செய்தேன்.
ஆனால் சில உரையாடல்கள் மூலம் நான் மேலும் அறிய முயற்சி செய்தேன். நான் இஸ்லாம் பற்றிய விரிவுரைகளை அதிகமாக கேட்கத் தொடங்கினேன் மேலும் குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்தேன். 2-3 ஆண்டுகள் படித்த பிறகு நான் தேடிக்கொண்டிருந்த அனைத்து பதில்களையும் பெற்றேன். அதனால் நான் இஸ்லாத்தை ஏற்க முடிவு செய்தேன்.
மேலும் எல்லாப்புகழும் இறைவனுக்கே இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறப்பாக உணர்ந்தேன். ஆனால் சில நேரங்களில் கடினமாகவும் இருந்தது. என் குடும்பத்தினர் முதலில் அதை எதிர்த்தார்கள். மற்றும் நான் நண்பர்களை இழந்துவிட்டேன். மேலும் முஸ்லிம்களிடமிருந்தும் முஸ்லிமல்லாதவர்களி டமிருந்தும் எனக்கு அறியாமையில் பங்கு கிடைத்தது. ஆனால் இது போன்ற விஷயங்கள் தான் என்னை வலுவான பெண்ணாக ஆக்குவதை உணர்ந்தேன்.

By ஜெர்ரி டாம் 

புதன், 15 மே, 2024

நாட்டை நேசித்த மக்கள் தலைவன் திப்பு!

நமது நாட்டைப் பீடித்த மிகப்பெரும் சாபக்கேடான காலனி ஆதிக்கத்தின் போது நாம் அனுபவித்த கொடுமைகள் எண்ணற்றவை. ஆனால் இன்று அதே காலனி ஆதிக்க சக்திகள் கார்ப்பரேட் ஆதிக்க  உருவில் நாட்டைக் கொள்ளையடித்து வருவதை ஆராய்வோர் அறியலாம். இவர்களின் கைப்பாவைகள்தான் நம்மை இன்று ஆண்டு வருகிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் நாடு நாசமாகப் போனாலும் செல்வத்தை சேர்ப்பது ஒன்றே இவர்களின் குறிக்கோள். ஏழைகளின் உழைப்பை வரிவிதிப்பின் மூலம் சுரண்டி கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்பிப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். 
 காலனி ஆதிக்க சக்திகளின் தன்மையை நன்றாகப் புரிந்து கொண்டவர் திப்பு சுல்தான் என்ற தன்னலமற்ற தியாகி. எப்பாடுபட்டாவது நம் நாட்டை அவர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்று தன் இன்னுயிரை நீத்தார் அவர். இறையச்சம் தூண்டிய பொறுப்புணர்வு அவரை இயக்கியது. நபிகள் நாயகம் அவர்களின் எச்சரிக்கையை அவர் உணர்ந்திருந்தார்.

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ)

நாட்டுப்பற்று என்பது நாட்டு மக்களை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களைப் பாதுகாப்பதுமே என்பதை முழுமையாக உணர்ந்து அவர் செயல்பட்டதை வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் நாட்டை உள்ளார நேசித்த அப்படிப்பட்ட ஒரு வீரனை இன்று பாசிச சக்திகள் தவறான ஒளியில் சித்தரித்து அவரைப் பற்றிய சரித்திர குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி வரும் கொடுமையையும் இன்று நாம் சந்தித்து வருகிறோம்.  

அசரவைக்கும் ஆளுமை!
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் அசரவைக்கின்றன. காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புரிதல் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

விவசாயப் புரட்சி
வளமான நிலத்தை யாரும் தரிசாகப் போடக்கூடாது. நிலத்தின் உரிமையாளர் பயிரிட வேண்டும் அல்லது நியாயமான குத்தகைக்கு விட்டுப் பயிர் செய்ய வேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்கு மேல் நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், அரசாங்கத்தால் அந்நிலம் பறிமுதல் செய்யப்படும். நிலக்குத்தகை நியாயமானதாக இருக்க வேண்டும். தன் விருப்பப்படி குத்தகைத் தொகையை அடிக்கடி உயர்த்தக் கூடாது. மழையில்லாவிட்டாலும், அதிக மழை பொழிந்து பயிர் மகசூல் பாதிப்படைந்தாலும் குத்தகைத் தொகையை குறைத்து வாங்கிட வேண்டும். திப்புவின் ஆட்சிக் காலத்தில் மூன்று இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. தலித் மக்களுக்கு தனியே நிலம் அளிக்கப்பட்டது. உயர்குலத்தோரின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

அரசு ஊழியர் உறுதிமொழி
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறார் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

உள்நாட்டு வணிகர்களுக்கும் தொழல் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பு
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; ‘முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் சாகேத் ராமன்.

சாதி அமைப்புகள் தளர்வு
நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார் ஆங்கிலேய அதிகாரி புக்கானன். திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793 இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் ஆங்கிலேயரின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

வீண்விரயம் தவிர்ப்பு
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதினார் திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

போர் தர்மங்கள் பேணுதல்
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று காலனி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட காலனி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

அவரது இறுதி வார்த்தைகள் மறக்க முடியாதவை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லாஹ் 
எமக்குச் சாவு வராதா 
துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லாஹ் 
எமக்குச் சாவு வராதா”

(தகவல்கள் நன்றி: வினவு இணையதளம்,)

=======================  

கிழக்கிந்திய கம்பெனியின் சிம்மசொப்னம்

https://www.quranmalar.com/2024/05/blog-post_15.html

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் சிம்மசொப்பனம்!‘


இறைவன் மீதும் மறுமையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அரசாண்ட மன்னர் திப்புசுல்தான். திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர்தான் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் சிம்மசொப்பனம்’ (Nightmare of East India Company) என்பது. “இந்தியாவில் காலனியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
= ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் ஆங்கிலேயத் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு. துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்.
= “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறார் வெல்லெஸ்லி. யாருமே ஒத்துழைக்காத நிலையில் – தன்னைசார்ந்தவர்கள் கூட காலனி அரசின் கைக்கூலியாக மாறிவிட்ட நிலையிலும் - தன்னந்தனியாக காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இறுதிவரைப் போராடி வீரமரணம் அடைந்தார் திப்பு!

நாட்டுப்பற்றுக்கு முன்னுதாரணம்
உண்மையான நாட்டுப்பற்று என்பது நாட்டின் மண்ணை முகர்வதிலோ பாடல்களைப் பாடுவதிலோ இல்லை. மாறாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை உளமார நேசிப்பது என்பதே உண்மை. நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!

இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத் தேவைகளாகும். இந்தப் பண்புகளை நாம் முழுமையாக திப்புவிடம் காணமுடிகிறது.

மதுவிலக்கு
திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். மது உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் சட்டப்படி குற்றம் என அறிவித்தார். மது விற்பனையினால் அரசாங்கத்திற்கு நிதி வரவு உண்டு என்பதற்காக, மக்களின் அறிவை மழுங்கக்கூடிய மதுவை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்தார். மது உற்பத்தியாளர்களின் உரிமங்களை நீக்கம் செய்தார். மக்கள், மதுவை நாடக் கூடாது என்றும், மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

சமூகச் சீர்திருத்தங்கள்
மலபாரில் வாழும் பெண்கள் தோள் சீலை அணிவதற்கான உரிமை குறித்து தெளிவாக உணர்ந்திருந்தார். அவ்வுரிமையை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அது தொடர்பாக, திப்பு சுல்தான், 1785 ஆம் ஆண்டு மலபார் கவர்னருக்குக் கடிதமும் எழுதினார். இதிலிருந்து பெண் உரிமையிலும், பெண் விடுதலையிலும் உறுதியாகச் செயல்பட்டவர் திப்பு சுல்தான் என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

தண்டனை அளிப்பதில் மாறுபட்ட உத்தி
குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வாழும் கிராமத்தில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவற்றுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவை மூன்று அடி உயரத்துக்கு மரமாக வளரும் வரை வளர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இவ்வாறெல்லாம் கூட சுற்றுச் சூழலைப் பேணிட முயன்றார் திப்பு!

தாவரக் கூடாரம் : லால்பாக் தோட்டம்
‘லால்பாக் தோட்டம்’ - திப்புவின் ஆராய்ச்சிக் கூடமாகியது! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரம், செடி, கொடி வகைகளைக் கொண்டு வரச் செய்து பராமரித்தார். மூலிகை, யுனானி மருந்து முறைகளையும் பெருக்கினார்.
திப்பு, தன் ஆட்சியில் அனைவருக்கும் உணவு, வேலை, வசிக்க இடம், ஆடை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்தினார்.
=================
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

ஞாயிறு, 12 மே, 2024

தீண்டாமைக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் கொள்கை!

இன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர். அந்த அருட்கொடைகள் மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கும் இன்னும் இழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

இஸ்லாத்தினால் கரைசேர்ந்த மக்கள்
இந்திய முஸ்லிம்களின் முன்னோர் பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைகளைக் கடந்து வந்தவர்களே. கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் சொல்வதற்கு நிகழ்வுகள் பல இருந்தாலும் ஒரே சில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்தவை இவை. (ஆதாரம்: விக்கிப்பீடியா இணையதளம்) கட்டுரையில் ஜாதியின் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. (நமக்கு நிகழ்வுகள்தான் முக்கியமே தவிர யாரையும் பழிப்பது நோக்கமல்ல)
சக குடிமகனுக்கு அவன் நடை உடை பாவனையிலும் அசைவிலும் சம்பாத்தியத்திலும் உறவுகளிலும் என  எப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன என்பதை கவனியுங்கள். எங்கு அடைக்கலம் பெறுவான் அவன்?
 இவற்றிலிருந்தெல்லாம் எம்மையும் எம் முன்னோர்களையும் காத்தருளிய இறைவனுக்கே எல்லாப்புகழும்! #இஸ்லாம்_ஏன்_எதிர்ப்புக்குள்ளாகிறது? என்பதற்கான ஒரு காரணத்தை நீங்கள் இங்கே காணலாம். 

திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்
திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அவையே திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள் என்றழைக்கப்படுகின்றன.

சமூகக் கட்டுப்பாடுகள்
= ஒரு உயர் குலத்தவர் பக்கத்தில் நாடாளுகின்ற இரண்டாம் வர்க்கத்தினர் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் மூன்றாம் வர்க்கத்தினர் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு உயர்குலத்தவரிடமிருந்து மற்ற மற்ற வர்க்கத்தினர் இன்னின்ன அடி தூரத்தில் தான் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவற்றை மீறுவது குற்றம்.

= தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பிட்ட இனத்தவர் அணியும் ஆடை அணிகலன்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

= உயர் சாதியினரைப் போன்று ஆடை அணிய மற்றவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆண்களும், பெண்களும் கால் மூட்டுக்கு கீழும், இடைக்கு மேலும் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது.

பெண்கள் மார்பை மறைப்பது குற்றம்!
= உயர் சாதியினர் முன் கீழ் சாதி பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்து சென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயல் என்று உயர் சாதியினர் கருதினர். இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மேலாடைகள் கிழித்து எறியப் பட்டது.

= விலையுயர்ந்த ஆபரணங்களை அணியவும், குடை பிடிக்கவும், காலணி அணியவும், அனுமதி மறுக்கப்பட்டது. ஓடு வேய்ந்த வீடுகளில் வசிப்பதும், பால் கொடுக்கும் பசுக்கள் வளர்ப்பதும், வாகனங்கள் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது. திருமண பந்தல்கள் அலங்காரம் மறுக்கப்பட்டது.

= பெண்கள் தண்ணீர் குடத்தை இடையில் சுமந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குடத்தை தலையில் வைத்து இருகைகளாலும் அதை தாங்கிப் பிடித்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டனர்.

சமயக் கட்டுப்பாடுகள்
= இறைவழிபாடு செய்வதிலும், பலவிதக் கட்டுப்பாடுகள் கீழ்சாதியினர் என்று அடையாளப்படுத்தப் பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அரசும், உயர்சாதியினரும் நிர்வகித்து வந்த வழிபாட்டுத்தலங்களில் நுழையவோ, வழிபாடு நடத்தவோ, அவற்றின் வெளிப் பிரகாரங்களில் செல்லவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

= தங்கள் வழிபாட்டிற்கென இவர்கள் எழுப்பிய வழிபாட்டுக் கூடங்களில் கூட உயர்சாதியினர் வழிபடும் தெய்வங்களை வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. வீரபத்திரன், மாடன், சுடலை, வீரன், மாடசுவாமி, இருளன், முத்தாரம்மன், பத்ரக்காளி போன்ற தெய்வங்களையே இவர்கள் வழிபட்டனர்

= மதச்சடங்குகள் அனுசரிப்பதிலும் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெய், பால், போன்ற பொருட்களை வழிபாட்டில் பயன்படுத்த இவர்களுக்கு அனுமதியில்லை. கள், சாராயம் போன்ற பொருட்களை இவர்கள் பயன்படுத்தினர்.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள்
பொருளாதார ரீதியாகவும கீழ்சாதியினர் பல இன்னலுக்கு ஆளாகினர். அபராதம், வரி, நன்கொடை, என்ற பெயரில் வருமானத்தின் பெரும் பகுதியை அவர்கள் இழந்தனர்.

பிராயசித்தம்: தவறு செய்து தண்டிக்கப்பட்டவரகள் அரசுக்கு செலுத்திய அபராதத் தொகையே பிராயச்சித்தம் எனப்பட்டது. பிராயச்சித்தம் என்று பெயரில் தங்களுக்கு விருப்பமான தொகையை அரசு அதிகாரிகள் வசூலித்துக் கொள்ளலாம்.

புருசந்தாரம்: பரம்பரை சொத்துக்கு உரிமையுடைய வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி புருசந்தாரம் ஆகும். இதன் படி சொத்து மதிப்பில் 40 விழுக்காடுக்கும் அதிகமான தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். பிராயசித்தத்தைப் போன்றே இந்த வரியிலும் ஒரு பகுதியை அதை வசூலித்த காரியக்காரர்களே வைத்துக் கொண்டனர்.

தலைவரி: ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அதிகம் பாதிப்புள்ளாக்கிய மற்றொரு வரி தலைவரி (Poll tax) ஆகும். பதினாறு முதல் அறுபது வயது வரையுள்ள ஆண்கள் அனைவரிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கும் இவ்வரியை உறவினர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரியை கொடுக்க முடியாத காரணத்தால் பலகுடும்பங்கள் அண்டை மாநிலமான தமிழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்தவர்களின் உறவினர்களிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது.

இதர வரிகள்
தலைவரியைத் தவிர தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, என்று பல விதமான வரிகள் வசூலிக்கப்பட்டன. நாடார்கள் பனையேறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஏணிக்கு ஏணிகாணம் என்ற வரியும், தளைக்கு (தளை என்பது பணை ஏறும் தொழிலாளிகள் பணை ஏறும் போது கல்களில் அணிந்து கொள்ளும் பனை நாரினால் செய்யப்பட்ட வளையம்) தளைகாணம் என்ற வரியும் வசூலிக்கப்பட்டன. கள் தயாரிப்பவர்களிடமிருந்து ஒரு குடம் கள்ளிற்கு ஒரு நாளி கள் வீதம் வரியாக வசூலி்க்கப்பட்டது.
 
= ஒரு குடிசைக்கு ஒரு பணம் வீதம் குப்ப காச்சா(kuppa katch) என்ற வீட்டு வரியும் வசூலிக்கப்பட்டது. வீடுகளுக்கு கூரை மாற்றும் போது மனை மேய்ப்பான் கொள்ளுமிறை என்றொரு வரியும் வசூலிக்கப்பட்டது.

= அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கும் அங்கு வளர்கின்ற பனை, தென்னை, கமுகு, மா, பலா, புளி, புன்னை, இலுப்பை போன்ற மரங்களுக்கும் வரி கொடுக்க வேண்டும்.

= திருமணமான பெண்களிடமிருந்து தாலியிறை வசூலிக்கப்பட்டது. சிலவகையான ஆடைகள் அணிவதற்கும், அணிகலன்கள் அணிவதற்கும், தலைப்பாகை அணிவதற்கு, குடைப் பிடிப்பதற்கு, பல்லக்கில் செல்வதற்கு, திருமணம் நடத்துவதற்கு என ஒவ்வொன்றிற்கும் அரசுக்குப் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சேர வேண்டியப் பணத்தைவிட பன்மடங்கு அதிகமாக அதிகாரிகள் வரி வசூலித்து வந்ததால், அதிலிருந்து விடுபட சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்.

வரி கட்டாதவர்களுக்கு கடும் தண்டனைகள்:
வரி கொடுக்க தவறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் முதுகில் பாரமான கற்கள் எற்றி வைத்து வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்து தொங்க விடுதல், சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல் போன்றக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

ஊதியமின்றி ஊழியம்
= உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளைப் பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டு வரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாயப் படுத்தப்பட்டனர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் பல குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது.

= நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல்வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுது பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக்காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

= இலவசமாக வேலை செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். 

இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் இந்தப் பொருட்களை திருவனந்தபுரத்திற்குத் தலைச்சுமையாகச் சுமந்து கொண்டு சேர்க்கவும் வேண்டும்.

நமது முன்னோர் அனுபவித்த கொடுமைகளில் இருந்து இந்த சத்தியத்தின் மூலம் நம்மைக் காத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்.

= இறைவன் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (விசுவாசிகளே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளர்களான   கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (திருக்குர்ஆன் 2:286)
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?