இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 ஜூன், 2023

உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?

 #உணவுக்காக_உயிர்களைக்_கொல்வது_பாவமா?

கீழ்கண்ட உண்மைகளை கருத்தில் கொண்டால் இதுபற்றிய நமது ஐயம் விலகக் கூடும்:

1. #உயிரினம்_இன்றி_உணவில்லை: உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே மற்றொரு உயிரினம்தான். நாம் அன்றாடம் உட்கொள்ளும் தாவர உணவு அல்லது குடிநீரில் உள்ளடங்கியுள்ள பாக்டீரியாக்கள் உட்பட அனைத்தும் உயிரினங்களே என்பதும் அனைத்துக்கும் உணர்வுகள் உள்ளன என்பதும் அறிவியல் உறுதிப்படுத்தும் உண்மைகள்!

2. #உணவுச்சங்கிலி_இன்றி_உயிர்கள்_இல்லை: பொதுவாகவே பலமான உயிரினங்கள் பலவீனமான உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழுபூச்சிகள் அவற்றைவிட சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழு பூச்சிகளைத் தவளைகள் உண்கின்றன. தவளை பாம்புகளுக்கு உணவாகிறது. பாம்புகளை கழுகுகள் பதம் பார்க்கின்றன. கழுகுகள் இறந்தால் அவற்றின் உடல்கள் நுண்கிருமிகளுக்கு உணவாகின்றன. இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீர்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலிதான். இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. மனிதன் இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும்.

உதாரணமாக, காடுகளில் முயல், மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் பெருகி முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். இலைதழைகளும் மரங்களும் அழிந்தால் மழை பெய்வது நிற்கும். தொடர்ந்து வறட்சியும் பஞ்சமும் என பூமி வாழ்க்கை ஸ்தம்பித்து விடும்.

3.#படைத்தவன் தீர்மானிப்பதே பாவமும் புண்ணியமும்:
#பாவம்_எது_புண்ணியம்_எது என்பதைப் பிரித்தறிய அனைத்து மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் பொதுவான ஒரு அளவுகோல் நமக்குத் தேவை. மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின்போது நம் பாவ - புண்ணியங்களை விசாரித்து அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.

4. #புலால்_இறைவனிடம்_பாவமல்ல!
உணவுக்காக உயிர்களைக் கொல்வது இறைவன் பார்வையில் பாவமல்ல:
மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதை உண்ணவேண்டும் உண்ணக்கூடாது என்பதை அவர்களைப் படைத்த இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவித்து வந்துள்ளான்.
= 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
= 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21)

உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை இறைவன் அனுமதித்து உள்ளான் என்பதை திருக்குர்ஆன் மூலம் மட்டுமல்ல முந்தைய வேதங்கள் மூலமும் அறிகிறோம்.
# நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
(ஆதியாகமம் 9 அதிகாரம்)

# மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.’


இந்த அனுமதியின் பின்னால் உள்ள உண்மைகளையும் நுணுக்கங்களையும் திட்டங்களையும் அவன் மட்டுமே முழுமையாக அறிவான். அவனது திட்டங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைக்கும் நிலையில் நாம் இல்லை என்பது உறுதி.

5. #இரக்க_உணர்வுக்கும்_நற்கூலி_உண்டு:
இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே! ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.

6. #விவசாயிகளுக்கு_மறுவாழ்வு_தரும்_பக்ரீத்:
பால்தரும் பசுவும் நிலத்தை உழும் மாடும் வயதாகி விட்டால் அவற்றை விற்று இளம் பசுவையோ மாட்டையோ வாங்கினால்தான் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை பெறமுடியும். வயதான மாட்டை அல்லது பசுவை இறைச்சிக் கடைக் காரர்கள்தான் உரிய விலை கொடுத்து வாங்குவார்கள். குறிப்பாக பக்ரீத் பண்டிகை காலத்தில் இவை அதிகமாக விற்றுப் போகும். உண்மையில் இது அதற்கான சீசன். அந்த வகையில் விவசாயிகளைப் பொறுத்த வரையில் இளம் பசு அல்லது மாட்டைக் கொண்டு தங்கள் தொழிலைப் புதுப்பித்துக் கொள்ள பக்ரீத் உதவுகிறது.

7. #கொல்லாமை_விளைவிக்கும்_குழப்பம் !
மேற்படி உதாரணத்தில் உயிர்வதை பாவம் என்று சொல்லி பசுவை அல்லது மாட்டை விற்பதை தடை செய்தால் விவசாயியின் தொழில் தடைபடும். வயதான உதவாத மாட்டை அவிழ்த்துவிட்டால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார். தீனி கொடுக்காமல் கட்டிவைத்து பட்டினி போட்டால் பசிக்கொடுமையால் அது அணுவணுவாக சாகும்.
அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

= நீங்கள் ஒரு விஷயத்தை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) இறைவன் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:216)
----------------

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
#இஸ்லாம்_என்றால்_என்ன?
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

சனி, 24 ஜூன், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 23 இதழ் PDF



திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 23 இதழ் PDF 

(நபிமொழிச் சிறப்பிதழ்) 

இதழ் இல்லம் தேடி வர :9886001357 

பொருளடக்கம்: 

இஸ்லாமிய அறிவுக்கு ஆதாரங்கள் - 2

ஒப்பீடு செய்வீர் - மகிமை அறிவீர்! -4

 நபிமொழிச் சிறப்பிதழ்-5

இறைநம்பிக்கையும் நற்செயல்களும் - 9

ஐவேளைத் தொழுகைகள் பற்றி...10

திருமணம் செய்வது பற்றி.. -12

உண்ணும் ஒழுக்கங்கள்-14

கழிப்பறை ஒழுக்கங்கள் -15

நபித்தோழர்களின் தடுமாற்றம் -16

நோயாளியை நலம் விசாரித்தல்- 17

நபிகளாரின் நகைச்சுவை - 18

பொது இட ஒழுக்கங்கள் -19

கண்ணுறங்கும் வேளையிலே..- 20

வணிக ஒழுக்கங்கள் -21

எவ்வளவு எளிமையான தலைவர் அவர்!-22

சனி, 17 ஜூன், 2023

ஆடை அணிவதா அவிழ்ப்பதா ? எது பகுத்தறிவு ?


1. அவமானப் படுத்துவதே ஆடைக்குறைப்பு
யாரையேனும் அசிங்கப்படுத்த விரும்பினால் அவரது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்துவது காலங்காலமாக நடந்துவருவது.
இவ்வளவு ஏன்? நமது சட்டசபைகளில் எதிர்க்கட்சியினரை அசிங்கப்படுத்த வேஷ்டியை உருவிவிடுவதையும், சட்டைகளை கிழித்து விடுவதையும் நாம் பார்ப்பதில்லையா?
காவல்நிலையங்களில் கூட குற்றவாளி என்று கருதப்படுபவரை வெறும் ஜட்டியுடன் அமரவைத்து அசிங்கப்படுத்துவதைக் காலங்காலமாக கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.
ஆக, ஆடையைக்குறைப்பது பெண்களை அடிமைப்படுத்தும் செயல் மட்டுமல்ல அவர்களை அசிங்கப்படுத்தி இழிவுப்படுத்தும் செயலுமாகும்.
ஆனால் அதேசமயம்... யாரையேனும் மரியாதை செலுத்த அல்லது கண்ணியப்படுத்த விரும்பினால் அவர்களுக்குப் பொன்னாடையைப் போர்த்துகிறோம். இது எதைக் காட்டுகிறது?

ஆம்...பெண்களுக்கு இஸ்லாம் போர்த்தும் பொன்னாடைதான் பர்தா !! அவர்கள் கண்ணியமானவர்கள், மரியதைக்குரியவர்கள் என அறியப்படுவதற்காக அணிவிக்கப்படும் ஆடைதான் பர்தா! 

2) தவறான நாத்திகக் கண்ணோட்டம்!

ஆனால் பெண்களின் உடலை மறைக்கும் பர்தாவை மூடப்பழக்கத்தில் சேர்க்கிறார்கள் நாத்திகர்கள். உடம்பையும், அங்கங்களையும் ஆடைகளால் மறைப்பது மூடத்தனமா? அப்படியென்றால் ஆடைகளை அவிழ்ப்பதுதான் பகுத்தறிவா? அப்படியென்றால் நிர்வாண சாமியார்கள்தான் உச்சக்கட்ட பகுத்தறிவுவாதிகள் என்றாகிவிடுமே? பர்தாவை மூடத்தனமென்பது விபரிதமான சிந்தனையல்லவா? அறிவு வளர வளர மனிதன் ஆடை அணியும் பழக்கத்தை அதிகரித்துக்கொண்டான் என்றுதான் பகுத்தறிவு சொல்கிறதே தவிர குறைத்துக்கொண்டான் என்று ஒரு போதும் சொல்லவில்லையே!

3 ) பர்தா பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
'ஆம்' என்று சொல்பவர்களை, அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சுதந்திரம் என்றால் என்ன?
பேச்சு சுதந்திரம்!, கருத்துச்சுதந்திரம்!, எழுத்துச்சுதந்திரம்! என்றால் என்ன என்பதை நாம் அறிவோம். ஒரு பெண்ணுக்கு என்னென்ன சுதந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை சற்று யோசித்துப்பார்த்து இஸ்லாம் எவற்றையெல்லாம் அவளுக்கு வழங்குகிறது என்பதையும் பாருங்கள்:
- அவள் உயிர் வாழ்வதற்கான சுதந்திரம். (அதாவது இன்றுவரை ஏனைய சமூகங்களில் சர்வசாதாரணமாக நடக்கும் பெண் சிசுக்கொலையில் இருந்து தப்பித்தல்)
- பாதுகாப்புடன் நடமாடும் சுதந்திரம்!
- பெற்றோர் சொத்திலும், கணவர் சொத்திலும், ஏன் தன் பிள்ளைகள் சொத்திலும் கூட உரிமைக்கொண்டாடும் சுதந்திரம்!
- தன் கணவனைத் தெர்ந்தெடுக்கும் சுதந்திரம்!,
- மட்டுமல்ல, தன் கணவனிடத்திலிருந்து தனது வருங்கால பாதுகாப்பிற்காகத் தனக்குத் தேவையான ரொக்கத்தொகையையோ அல்லது சொத்தையொ திருமணத்திற்கு முன்பே அதிகாரத்துடன் நிபந்தனையிட்டுப் பெற்றுக்கோள்ளும் சுதந்திரம்! (அதாவது வரதட்சணைக்கு எதிரான மஹர் எனும் வதுதட்சணை பெறுதல்)
- தனது உணவு, உடை, இருப்பிட வசதிகளை கணவனிடத்திலே அதிகாரத்துடன் பெற்றுக்கோள்ளும் சுதந்திரம்!,
- தனது சொத்துக்களைத் தானே பராமரித்துப் பாதுகாத்து அனுபவித்துக்கொள்ளும் சுதந்திரம்!,
- சுயமாக தொழில் செய்து பிழைத்துக்கொள்ளும் சுதந்திரம்!
- கல்வி கற்கும் சுதந்திரம்!,
- கல்வி கற்றுக்கொடுக்கும் சுதந்திரம்!,
- ஆட்சியாளர்களாகவே இருந்தாலும் குறைகளைத் தட்டிக்கேட்கும் சுதந்திரம்!
பெண்ணுரிமை இயக்கங்கள் போரடுவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த அனைத்து சுதந்திரங்களையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. ஒரு பெண் பர்தா அணிவதால் அவளது இந்த சுதந்திரங்களில் ஒரு இம்மியளவுகூட குறைவதில்லை. ஆனால்
ஆடைக்குறைப்புதான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட ஆபாச சுதந்திரத்தை இஸ்லாமும் சரி, பகுத்தறிவும் சரி ஒரு போதும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளாது.

4) ஆணாதிக்கத்தின் வக்கிர மனோபாவம்:
பெண்களின் ஆடைகளைக் குறைத்து நடமாடவிட்டு அதுதான் சுதந்திரமென்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது, ஆண்களின் வக்கிரப்பார்வையுடன் கூடிய ஆணாதிக்கச்சிந்தனைதான். இதைத்தான் மேலைநாட்டுக்கலாச்சாரத்தில் காண்கிறோம். அங்கே ஆண்கள் கோட்டும் சூட்டும் அணிந்திருப்பார்கள், ஆனால் பெண்களோ அந்தக் கடும் குளிரிலும் முழங்கால், தொடை தெரிய ஆடை அணிந்திருப்பார்கள். மேலை நாட்டுக்கலாச்சாரத்திற்கு சிந்தனை அடிமைகளாகிவிட்ட நம்மவர்கள் இதைத்தான் சுதந்திரமென்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள்!
இவ்வளவு ஏன்? நம் நாட்டில் கூட முற்காலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களை ரவிக்கை இன்றி நடமாட விட்டது, மேல் ஜாதி ஆணாதிக்கத்தின் வக்கிரப் பார்வைதான் என்பதை மறந்துவிட முடியுமா?
ஆக ஆடைக்குறைப்பு பெண்சுதந்திரமல்ல பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடே!

பர்தா- பாதுகாப்புக் கவசம்!
ஜன நடமாட்டம் மிகுந்த தெருக்களில் பர்தா அணிந்த பெண்கள் செல்வதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் !
ஆண்களின் கழுகுப்பார்வைகள் அவளை ஊடுருவுவதில்லை, அவளது அங்கங்களை அளவெடுப்பதில்லை, ஏன்? ஷாப்பிங் மால்கள், பொது இடங்களில் கூட மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மைக்ரோ கேமராக்களைப் பற்றிய பயமின்றி மற்ற பெண்களைவிட வெகு சுதந்திரத்துடன் ஒரு பர்தா அணிந்த பெண் நடமாடுவதைக் காணலாம். நடிகைகள் போன்ற பிரபல்யமான பெண்கள் கூட பொது இடங்களுக்குச் செல்ல ரசிகர்களுக்கும் ஆண்களுக்கும் பயப்படாமல் சுதந்திரமாக நடமாட பர்தாவின் துணையைதான் நாடவேண்டியிருக்கின்றது.
இவ்வளவு பாதுகாப்பான, கண்ணியமான ஆடையை அடிமைத்தனமாக கருதுவது பகுத்தறிவாகுமா?

5) பர்தா முன்னேற்றத்துக்குத் தடை அல்ல!
பர்தா பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது என்பது நாத்திகர்களின் அடுத்தக்குற்றச்சாட்டு. இதுவும் அவர்களது தவறான கணிப்பின் விளைவே! ஆடைக்குறைப்பை அங்கீகரித்தக் கிறித்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் அன்னைத் தெரஸா, முஸ்லீம் பெண்கள் அணிவதுப்போல் ஆடையை அணிந்துக்கொண்டு உலகமக்களுக்கு சேவை செய்து புகழ் பெற வில்லையா? அவரது செயல்களுக்கு அவரது ஆடை தடையாக இருக்கவில்லை மாறாக அவரது கண்ணியத்தைக் கூட்டுவதாகத்தான் அமைந்துள்ளது. இன்றைக்கு பர்தா அணிந்துள்ள முஸ்லிம் பெண்கள் டாக்டர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ...இப்படிப் பலதுறைகளிலே சிறப்பாக உருவாகியிருக்கிறார்கள், இன்னும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிய வருகிறோம்.

6. கல்விக்கு பர்தா தடை அல்ல:
கல்வியை இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டாயக்கடமையாக ஆக்கியுள்ளது. இருப்பினும் முஸ்லீம் பெண்கள் கொஞ்சம் பின் தங்கியுள்ளார்கள் என்பதும் உண்மையே. இதற்குக்காரணம் பர்தா அல்ல மாறாக பர்தா அணியக்கூடாது என்று நிர்ப்பந்தித்த கல்வி நிறுவனங்களே. ஆம்! நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது கல்வியைமட்டும் கொடுக்கவில்லை அதனுடன் அவர்களது கலாச்சாரத்தையும் சேர்த்தே திணித்தார்கள். அதை இன்றைக்கும் நமது கல்வி நிறுவனங்களில் பல பின்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. பல கல்வி நிறுவனங்கள் பர்தாவை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மேம்பட்ட கலாச்சாரமாக கருதும் முழங்கால் தெரியும் கவுன்களை யூனிஃபார்ம் என்கின்ற பேரிலே அணியச்சொல்லி முஸ்லீம் பெண்பிள்ளைகள் மீது தனதுக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள். இந்தக்கலாச்சாரத் திணிப்பு எந்த விதத்தில் நியாயமாகும்? ஏன்? பர்தா அணிந்தால் மண்டையில் கல்வி ஏறாதா? பாதுகாப்பையும் கண்ணியத்தையும் தரும் பர்தா எந்த விதத்தில் கல்விக்கு தடையாகமுடியும்? ஆனால் காலம் மாறிவருகிறது. தற்போது சில கல்வி நிறுவனங்கள் பர்தாவை ஏற்றுக் கொள்கிறார்கள், அதுமட்டுமல்ல முஸ்லீம்களே நிறைய கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார்கள். அவற்றில் அதிகமதிகம் முஸ்லீம் பெண்கள் படித்து பல சாதனைகளைப் புறிந்துவருகிறார்கள். நியாய உணர்வும், பகுத்தறிவுமிக்க சிந்தனையாளர்களும் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்பலாம்!
-----------------------
ஆக்கம்: பேராசிரியர் ஃபரீத் அஸ்லம், புதுக்கல்லூரி, சென்னை
================
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 2 ஜூன், 2023

நாத்திகம் தீண்டாமைக்குத் தீர்வல்ல!

 


விண்ணிற்கு செயற்கைக் கோள்கள் அனுப்பும் இந்த காலத்தில்தான் தாழ்ந்த சாதி சிறுவன் பூஜை பொருளை தொட்டுவிட்டான் என அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பதையும், கல்வி நிலையங்களில் பள்ளி சிறுவர்களை தரையில் அமர வைப்பதையும், அச்சிறுவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுப்பதையும் எல்லாம் காண முடிகிறது. 

விக்கிபீடியா பதிவு

இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் என விக்கிபீடியா பதிவு ஒன்று சுமார் 77 விடயங்களை பட்டியலிட்டுள்ளது. 

ஒரு சில மட்டும் உதாரணத்திற்காக... 

- உயர்ந்த சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த சாதியினர் நடக்கவே கூடாது, 

- கல்வி கற்க கூடாது,

- தோளின் மேல் துண்டு அணிய கூடாது,

- ேதநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை, தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது,

- வயதான பெரியவர்களைக் கூட உயர்ந்த சாதி சிறுவர்கள் பெயர் சொல்லி மரியாதை இல்லாமல் அழைப்பது, 

- உயர் சாதியினர் இல்லங்களில் வேலை செய்யும் தாழ்ந்த சாதியினருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க தனி பாத்திரங்கள்,

- வழிபாட்டுத்தலங்களில் அனுமதி மறுப்பு, 

- மயானங்களில் கூட தாழ்ந்த சாதியினர் இறந்த உடல்களை புதைக்க மறுப்பு, 

- தாழ்ந்த சாதியினருக்கு தனி மயானம், தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு, 

- பொது குளத்தில் தண்ணீர் எடுக்க மறுப்பு, 

- மலம் அள்ளுதல் மற்றும் சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை தாழ்ந்த சாதியினரை செய்ய வைப்பது... உள்ளிட்ட பல தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்டுள்ளது விக்கிபீடியா கட்டுரை. 

தீண்டாமை ஒழிய தீர்வு தான் என்ன? 

தீண்டாமையை கற்பிக்கும் மதங்களே இத்தீமைக்குக் காரணம் என்று கூறி கடவுளை மறுப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு என கருதி நாத்தீக கொள்கையை தேர்ந்தெடுக்கின்றனர். நாத்திகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளேயும் பல பிரிவுகள் இருப்பதையும், ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏளனமாக கருதுவதையும் காண முடிகிறது. 

தீண்டாமைக்கு அடித்தளம் வார்க்கும் நாத்திகம் 

நாத்திகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டார்வினிசம் அடிப்படையில்  வெள்ளையர்கள் பரிணாமத்தில் முன்னேறியவர்கள் எனவும், இந்தியர்கள் போன்ற இடைநிலை நிறம் உடையவர்கள் பரிணாமத்தில் இடைநிலை எனவும், கருப்பர்கள் அதற்கும் பின் தங்கியவர்கள் என கருதுகின்றனர். 

இதன் காரணமாகவே சென்ற நூற்றாண்டில் ஆப்ரிக்காவை சேர்ந்த கறுப்பரான ஓட்டா பெங்கா என்பவரை அழைத்து வந்து அமெரிக்காவில் ஒரு விலங்குகள் அருங்காட்சியகத்தில் குரங்கிலிருந்து  மனிதனாக முழுமையாக பரிணாமம் அடையாத  மனிதர் என பல நாட்களாக கூண்டுக்குள் அடைத்து வைத்து காட்சிப் படுத்தினர். பல நாட்களாக அவர் ஒரு குரங்குடனே கூண்டுக்குள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் மன உளைச்சல் தாங்காமல் 1916-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.  

டார்வினின் ஊகமான பரிணாமக் கொள்கை அடிப்படையில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் பரிணாமத்தில் பின்தங்கியவர்கள் எனும் மூட நம்பிக்கையால்தான் இன்னும் பல கருப்பர்கள் அடக்கு முறைக்கு உள்ளாகின்றனர். 

நன்றி: மணச்சநல்லூர் அப்பாஸ் 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!