இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 மே, 2023

மறுமை பற்றிய பகுத்தறிவு பூர்வமான ஆய்வு!


 மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன? மக்களிடையே மூன்று கருத்துக்களை நாம் பரவலாகப் பார்க்கமுடிகிறது.

1. நாம் இருக்கமாட்டோம். மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.
2. ஆத்மாவிற்கு அழிவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்போம்.
3. இறைவேதங்கள் கூறுவது போல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல்: நம் செயல்களுக்குக் கூலி கொடுக்கப் படுவோம். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமக்கு நிரந்தர நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கும்.
மேற்படி கருத்துக்களில் நமது கருத்து எந்த ஒன்றாகவும் இருக்கலாம் .ஆனால்...
• மேற்கண்ட மூன்று கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் மூன்றுமே ஒரே நேரத்தில் சாத்தியப்படுவது முடியாத ஒன்று.
• நமது கருத்துக்காக அல்லது ஊகங்களுக்காக உண்மை அல்லது வாஸ்தவம் வளைந்து கொடுக்கப் போவது இல்லை.
• முதல் இரண்டில் எது நடந்தாலும் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு.
• மூன்றாவது விஷயம் நடக்குமானால் நாம் தப்பிக்க வழியில்லை.
எனவே பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் அந்த மூன்றாவது நிலையை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதுதான் பாதுகாப்பான வழிமுறை என்பதுதான். மனித இயற்கையும் அதுவே.
உதாரணமாக ஜெர்மனி அல்லது சுவீடன் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு இன்டர்வ்யூ அல்லது ஒரு வேலைவாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அந்நாட்டைப் பற்றி ஆராய ஆரம்பிப்பீர்கள் அல்லவா? ஆராய்ந்து அந்நாட்டின் பொருளாதார சீதோஷ்ண மற்றும் அரசியல் சூழ்நிலைகளை தீரவிசாரித்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்தானே! நாளை நாம் நிரந்தரமாகத் தங்கவுள்ள இடத்தைக் குறித்து நாம் அலட்சியம் காண்பிக்க முடியுமா? அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் நாம் தாமதம் செய்யலாகுமா?
பகுத்தறிவு கொண்டு இறைவேதங்கள் கூறும் உண்மைகளை ஆராய்ந்தாலும் நமக்கு அதுதான் நாளை நடக்கும் என்பதையும் அறியலாம்.
நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
"நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர்." (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.

நபிகளாரிடம் கேட்கப்பட்ட கேள்வி:
ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்:
36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!"
மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
"22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்:
75:3. 4 "(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்."
================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 1 மே, 2023

இந்நாள் இறைத்தூதரின் தனிச்சிறப்புகள்

 


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும்  அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது தனிச்சிறப்புகளை அறிவது அவசியம். 

முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை: 

1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதர்:

முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  

நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். ஓரிடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை உடனுக்குடன் உலகெங்கும் காணக்கூடிய  அளவுக்கு நாம்  முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலுக்கு ஏற்றவாறு இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள் என்றே நாம் விளங்கமுடிகிறது. இனி இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர். 

2. வேதம் சிதையாமல் பாதுகாக்கப் படுதல்:

 முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது,  

மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1440 ஆகியும் அட்சரம் பிசகாமல் அப்படியே மூலமொழியிலேயே பாதுகாக்கப் படுவது, கோடிக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்டு இருப்பது, உலகில் எந்த புத்தகத்தையும் விட அதிகமதிகமாக ஒதப்படுவது போன்ற  விவரங்களை கீழ்கண்ட லிங்கில் வாசிக்கலாம்:

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

 இப்பாதுகாப்பு பற்றி இறைவனே கூறுகிறான்:

=“நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9) 

3. கடவுள் ஆக்கப்படாத இறைத்தூதர்:

இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!. 

அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார். 

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது. 

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார். 

4.  பக்குவமாக பாதுகாக்கப்படும் வாழ்க்கை வரலாறு:

இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் (அதாவது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக அறிவிக்கப் பட்டது முதல் அவரது மரணம் வரை உள்ள காலகட்டம்)  ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இந்த ஹதீஸ் தொகுப்புகளில் நீங்கள் நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் நம்பகத்தன்மை பற்றிய குறிப்புகள் உட்பட ஆவணப்படுத்தப்பட்டு இருபதைக் காணலாம். இவற்றிலும் சந்தேகத்திற்கு இடம்தரக் கூடியவைகளை அறிஞர்கள் வடிகட்டி அவற்றை 'ஸஹிஹ் ஹதீஸ்கள்' என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. 

5. பின்பற்றத்தக்க முன்மாதிரி: 

ஒருவரை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக நாம் ஏற்கவேண்டும் என்றால் அவரிடம் மனித வாழ்கையின் அனைத்து துறைகளுக்குமான முன்மாதிரியை நாம் பெறவேண்டும். திருக்குர்ஆன் மற்றும் மேலே கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நபிகளாரிடம் இருந்து அத்தகைய ஒரு முன்மாதிரியை பெற முடிகிறது. மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய வழிகாட்டுதலையும் முன்மாதிரியையும் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகி உள்ளன. அவர் கூறிய வார்த்தைகள் அவர் செய்த செயல்கள்  பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் ஹதீஸ் தொகுப்புகளில் தெளிவுறப் பதிவாகி உள்ளதால் அவை இஸ்லாமியர்களுக்கு நடைமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டு நூலாக விளங்குகின்றன. மட்டுமல்ல, இன்று அவை இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகவும் ஆகின்றன. 

6. அணுஅணுவாக பின்பற்றப்படும் முன்மாதிரி:

நபிகளாரின் வரலாற்றின் இன்னொரு அற்புதம் என்னவென்றால், அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:

= அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:21)

மேற்கூறப்பட்ட தனிச்சிறப்புகளில் இருந்து இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பத நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
இதயங்களை வென்ற இறைத்தூதர்