இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்!



இந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது. மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும்  சந்திக்க உள்ளார்கள். மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும்  அடைய உள்ளார்கள்.
இது ஒரு பரீட்சைக்கூடம்!
 இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா?

இறைவன் கேட்கிறான் பாருங்கள்:
23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''
இறைவனின் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
ஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?

10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
நரகமும் காத்திருக்கிறது
சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும்.
ஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர்நோக்கியுள்ள உண்மைகள். எதுவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக்கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது ........ மரணம் நம்மை வந்து அடையும் வரை!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்
அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!”
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157  '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே  உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'

மேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து!

இந்த மந்திரம் பயன்பட வேண்டுமானால் அது உள்ளடக்கியுள்ள இரண்டு உண்மைகளை நாம் புரிந்து கொண்டு அதில் உறுதி கொள்ளவேண்டும்: 
1. கலப்படமற்ற தூய்மையான இறைநம்பிக்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவனே என் உண்மையான இறைவன். அவன் மட்டுமே நம் வணக்கத்திற்கும் நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவும் நாம் முழுமையாக சார்ந்திருக்கவும் தகுதியானவன். அவனால்லாத எதையும் கடவுள் என்று அழைப்பதோ வணங்குவதோ பெரும் பாவமும் வீணும் ஆகும்.

2. மறுமை நம்பிக்கை: வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமை வாழ்வையும் மேற்கூறப்பட்டவாறு உறுதியாக நம்புதல்.
  
 நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ்டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணராதவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறைநம்பிக்கையாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்!
 ஆம், இந்தத் தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே, இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமே இதில் எனக்கு நேர்ந்துள்ள இந்த இழப்பு அதன் ஒரு பாகமே என்று உணரும்போது இழப்பினால் உண்டாகும் விரக்தி உணர்வு நீடிப்பதில்லை. எல்லாம் வல்ல இறைவனே என்னோடு துணை இருக்கிறான் தன்னம்பிக்கை உணர்வும் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வு மறுமையில் எனக்குக் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் இறை விசுவாசிகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. மேலும் நமக்கு ஏற்படும் சோதனையை சாதைனையாக மாற்றும் வழியையும் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுப்பதைப் பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்குப் பகரம் வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான் (நூல்: முஸ்லிம்) 
  http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_5347.html 

திங்கள், 2 செப்டம்பர், 2013

அன்னை மரியாளை மகிமைப் படுத்தும் திருக்குர்ஆன்!



அன்னை மரியாளை மகிமைப் படுத்தும் திருக்குர்ஆன்!
= 'ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது    (லூக்கா 1:42).
= மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (திருக்குர்ஆன் 3:42)
= மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் இறைவன்  இறைநம்பிக்கையாளர்களுக்கு உதாரணமாகக் கூறுகிறான்.. அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ஆத்மாவிலிருந்து ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - இன்னும், அவர் இறைவனை வணங்கி வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். (திருக்குர்ஆன் 66:12)
===================================
அன்புள்ள கிருஸ்தவ உடன்பிறப்புக்களே!
எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அன்னை மரியாளும் அவர் அற்புதமாகப் பெற்றெடுத்த இயேசுநாதரும். அந்த புனித பெண்மணியைப் பற்றி இறுதிவேதம் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை உங்களோடு பகிர்த்து கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம். .....
நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவனே! எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நம் குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால்  நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.

திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில் அன்னை மரியாள் பற்றியும் அவரது அற்புத குமாரன் இயேசுவின் பிறப்பு பற்றியும் அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:

சோதனைகளின் துவக்கம்!
= இறைவன் பரிசுத்த ஆவியான கேபிரியலை அன்னை மரியாளிடம் அனுப்பி அவரைக் கருத்தரிக்கச் செய்ததைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
17.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (பரிசுத்த ஆவியை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
18. '
நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று (மர்யம்) கூறினார்.
19. '
நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'என்று அவர் கூறினார்.
 20. 'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?' என்று (மர்யம்) கேட்டார்.
21. '
அப்படித்தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்,  நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்' (என்று ஜிப்ரீல் கூறினார்.)
திருமணம் ஆகாமலே கருவுற்றதைத் தொடர்ந்து அன்னையவர்கள் கடுமையான மனவேதனைக்கும் சமூகத்தில் சோதனைகளுக்கும் ஆளாகிறார்கள். திருமணமாகாத ஒரு கன்னிப்பெண் திடீரென கர்ப்பிணியானால் மக்கள் வெறுமனே விட்டுவிடுவார்களா? அவரது தர்மசங்கடமான அனுபவத்தை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
24. '
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. '
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்)
26.
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக!
இயேசுவின் பிறப்பும் ஏச்சும் பேச்சும்!
இவ்வாறு அற்புதமான முறையில் எந்த ஆணின் துணையுமின்றி ஏசு என்ற அற்புத மகனைக் கற்பம் தரித்துப் பெற்றேடுக்கிறார்கள்  அன்னை மரியாள் அவர்கள்! இனி அந்த மகவைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு முன்னால் சென்றாக வேண்டுமே! அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப்  பாருங்கள்! எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன்? எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொள்வேன்? குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும்?’
.... ஆம் அவர் எதிர்பார்த்தபடியே மக்கள் கடுமையாக அவரை ஏசினார்கள்.
27. (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். 'மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?' என்று அவர்கள் கேட்டனர்.
28. '
ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை' (என்றனர்)

கற்புக்கரசியைக் காப்பாற்றிய அற்புதம்!
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அன்னை மரியாள் அவர்கள் என்ன செய்தார்கள்? அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள்? அன்றைய யூத சட்டப்படி விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனை கல்லால் எறிந்து கொல்லப்படுவதுதான் என்றறிவோம். இருந்தும் அன்னை மரியாளைக் காப்பாற்றியது எது? பிறகு எப்படி அவர்களைப் புனிதப் பெண்மணியாக ஏற்றுக் கொண்டார்கள்? குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக் கொண்டார்கள்? ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? .....
இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா? மேலே படியுங்கள்: 
29. அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! 'தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?' என்று அவர்கள் கேட்டார்கள்.
30.
உடனே அவர் (அக்குழந்தை), 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.
31, 32.
நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.  என்னை துர்பாக்கிய சாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
33.
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் (இறை சாந்தி) இருக்கிறது' (என்றார்)
ஆம் அன்பர்களே, இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். மரியாளைத் தூற்றிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அந்த அற்புதத்தைக் கண்கூடாகக் கண்டது. குழந்தை ஏசு வாய்திறந்து பேசிய அற்புதத்தை! இந்த அற்புதம்தான் கர்புக்கரசியான மரியாளை மக்களின் அவதூறுகளில் இருந்து காப்பாற்றியது. அந்த நிமிடம் வரை மரியாளைத் தூற்றிய மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அன்னையவர்களின் தூய்மையைப் போற்ற ஆரம்பித்தார்கள். இறைவன் மிகப் பெரியவன்! இந்த மாபெரும் அற்புதம்தான் அங்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  கைக்குழந்தை ஏசு பேசிய வார்த்தைகளும் இங்கு நாம் கவனிக்க வேண்டியவை.
= இதுதான் ஏசு செய்த முதல் அற்புதம்!
= இவைதான் ஏசுவின் முதல் வார்த்தைகள்! 
34. இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.
(அத்தியாயம் 19 – ‘மரியம் வசனங்கள் 16 முதல்  34 வரை )
ஆண்துணையின்றி குழந்தை பிறப்பது அசாத்தியமானது என்று சொல்லி ஏசுவின் பிறப்பைப் பற்றி நம்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உறைக்கும் வண்ணம் திருக்குர்ஆன் ஒரு அழகிய வாதத்தை முன்வைக்கிறது:
3: 59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!
அதாவது  முதல் மனிதர் ஆதம் தாயும் தந்தையும் இன்றி மண்ணிலிருந்து படைக்கப் பட்ட ஓர் அற்புதம். அதை நீங்கள் நம்புகிறீர்கள். அதை நிகழ்த்திய அதே இறைவனுக்கு தந்தையில்லாமல் ஒரு மனிதரை உருவாக்க முடியாதா? ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா? என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்துணர வைக்கிறான் இறைவன்!
ஆம் அன்பர்களே, ஒன்றை ஒன்று மெய்ப்பிப்பவையே உண்மை இறைவேதங்கள்.  இறைவேதங்களின் வரிசையில் இறுதியாக வந்ததே திருக்குர்ஆன்! அன்னை மரியாளைப் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் அவர்களின் அரிய பண்புநலன்கள் பற்றியும் இன்னும் பல சிறந்த செய்திகளைத் தாங்கி நிற்கிறது திருக்குர்ஆன்!
உண்மையில் அன்னை மரியாளை உலகத்தில் உயிர்வாழும் அனைத்து இறை விசுவாசிகளுக்கும் இறைவன் ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஆக்கியுள்ளதாக திருக்குர்ஆன் குறிப்பிடுவதைக் காணுங்கள்
=. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் இறைவன்  இறைநம்பிக்கையாளர்களுக்கு உதாரணமாகக் கூறுகிறான்.. அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ஆத்மாவிலிருந்து ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - இன்னும், அவர் இறைவனை வணங்கி வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். (திருக்குர்ஆன் 66:12)