இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜூலை, 2020

இரவல் தந்தவன் கேட்கின்றான்.. கொடுக்கத் தயாரா?


Understanding Arab Culture—Islam and the Five Pillars of Faith நம்மில் ஒவ்வொருவருக்கும் வாய்த்துள்ள உடல், பொருள் ஆவி என எதுவுமே நமதல்ல. இதன் உண்மை உரிமையாளன் இறைவன்தான் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு இரவலாக இறைவன் தந்துள்ள இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்டால் அதை திருப்பிக் கொடுக்க நம்மில் யாருக்குத்தான் எளிதாக மனது வரும்? உதாரணமாக நம்மிடம் யாசிக்க யாராவது ஏழைகள் வந்துவிட்டால் அல்லது நம்மிடம் உபரியாக உள்ள செல்வத்தின்பால் தேவையுடையவர்கள் நம்மிடம் வந்து இறைஞ்சிக் கேட்க வந்துவிட்டால் நம் மனநிலை எப்படி மாறுதல் அடைகிறது? நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.


இறைத் தூதர்களில் ஒருவரான இப்ராஹீம்(அலைஹிஸ்ஸலாம் - அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகுக) அவர்களிடம் இறைவன் கேட்டது ஆச்சரியமான ஒன்று! ஆம், அவர் தள்ளாத வயதில் அற்புதமாகப் பெற்றெடுத்த மகனையல்லவா இறைவன் தனக்காக தியாகம் செய்யுமாறு கேட்டான்! அதுவும் அந்த ஆருயிர் மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் பணித்தான்! அதையும் எவ்விதத் தயக்கமும் இன்றி நிறைவேற்றத் துணிந்தார் இப்ராஹீம்(அலை) அவர்கள். உடனேயே இறைவன் அவரது பரீட்சையில் அவர் வெற்றிபெற்று விட்டதை அறிவித்து அதற்குப் பகரமாக இரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு பணித்தான்
இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் இவ்வாறு கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார்.
என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.
 இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (அல்குர்ஆன் 37 : 100-111)

 அந்த தியாகச் செம்மலின் இச்செயலை உலகுள்ளவரை மனிதகுலம் என்றும் நினைவு கூர வேண்டும் அதிலிருந்து இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் பாடத்தை அவர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருமுறை அந்நாளைத் தியாகத் திருநாளாகக் கொண்டாடும்படி பணித்தான்.
தியாகத்தின் ஆண்டுவிழா பக்ரீத்
இத்தியாகத்தின் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் முகமாக வசதியுள்ள அனைத்து இறைவிசுவாசிகளும் தங்களால் இயன்ற ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ பலிகொடுத்து அதன் இறைச்சியை உறவினர்களோடும் எழைகளோடும் பங்கிட்டு உண்ணுமாறு பணித்துlள்ளாள்ளான் இறைவன். மாட்டையும் ஆட்டையும் ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் பலி கொடுக்கலாம். இன்று செல்வ வளமுள்ள நாடுகளில் இவ்வாறு பலி கொடுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சி பதப்படுத்தப் பட்டு   ஏழை நாடுகளில் உள்ள மக்களிடையே விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. ஏழைகளின் உணவுத் தேவை நிறைவேறுதல்சகோதர உணர்வு பகிர்தல் உறவினர்களோடு உறவைப் புதுப்பித்தல் என்பன போன்ற பல நன்மைகளை இந்நாள் தாங்கி வந்தாலும் இறைவன் முக்கியமாக பார்ப்பது நம் இறையச்ச உணர்வைத்தான். இதோ தனது திருமறையில் கூறுகிறான்:
= அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22 : 37)
தியாகத் திருநாள் தாங்கி நிற்கும் பாடங்கள்

இத்தியாகத்திருநாளில் முக்கியமாக நாம் பெறவேண்டிய பாடங்கள் இவையே:
= இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தில் நம்மைப் பரீட்சிப்பதற்காக நம்மிடம் அமானிதமாகத் தரப்பட்டுள்ளவையே நமது உயிரும்உடலும்உறவுகளும்உடமைகளும். இவற்றை நமது என்று சொல்லிக் கொண்டாலும் இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே.
= இரவல் தந்தவன் இவற்றைத் திருப்பிக் கேட்கும்போதும் எடுக்கும்போதும்  நாம் உணர்ச்சிவசப்பட்டு ஏசுவதோ அவனது சாபத்தைப் பெற்றுத் தரும் வார்த்தைகளோ உச்சரிப்பதோ கூடாது. அவ்வாறு நாம் அவற்றை இழக்க நேரிடும்போது பொறுமையை மேற்கொள்வதோடு இறைவன் இச்சோதனைக்கு நிச்சயமாக மறுமையில் பரிசு தருவான் என்ற உறுதியான நெஞ்சோடு இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
2:155.-157.: ஓரளவு அச்சத்தாலும்பசியாலும் செல்வங்கள்உயிர்கள்மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும்அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி  பெற்றோர்.  
எந்த அளவுக்கு இறைவனுக்கு நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக ஆகிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக நாம் சோதிக்கப்படுவோம். எந்த அளவுக்கு நாம் சோதிக்கப்படுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனிடம் நமக்கு வெகுமதிகளும் உயர் பதவிகளும் காத்திருக்கின்றன.
= இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது ஆருயிர் மகனை இறைக் கட்டளைக்காக பலி கொடுக்கத் துணிந்தார்கள். நாம் குறைந்த பட்சம் நம் தேவை போக மேல்மிச்சமாக நம்மிடம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை இறைவழியில் அர்பணிக்க முன்வரவேண்டும்.
=========== 
உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா? 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_5399.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

ஞாயிறு, 19 ஜூலை, 2020

வலியின்றி அமையாது உலகு!

'அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க' என்பது நாம் அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை!
வலியின் முக்கியத்துவத்தை யே இது உணர்த்துகிறது.
வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு வீதியில் உங்கள் டூ வீலரில் பயணித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வீடு வந்து சேர்ந்ததும்தான் காண்பீர்கள், உங்கள் காலின் ஒரு சுண்டு விரல் மிஸ்ஸிங் என்பதை! வழியில் எவ்வளவு இரத்தம் வழியில் கொட்டிப் போயுள்ளது என்பதையும் அறிந்திருக்க மாட்டீர்கள்!  
அவ்வளவு ஏன்? வலி என்ற ஒன்று இல்லாவிட்டால் சாலைப் போக்குவரத்து தாறுமாறாகப் போய்விடும். சட்டம், நீதி, நியாயம் என்பவை மட்டுமல்ல, மனிதவாழ்வே  அர்த்தமற்றாதாகிப் போய்விடும். அனைத்தும் வலி என்ற உணர்வையே மையம்கொண்டுள்ளன. ஆம், அந்த வலி மையம்கொண்டு இருப்பது இந்தத் தோலில்தான்! வலி உணரும் நரம்புகளைத் (pain receptors)  தாங்கி நிற்பது இந்தத் தோல்தான்!
தோல் என்ற அற்புதத்தைப் படைத்த இறைவன் தன் திருமறையில் வெளிப்படுத்தியுள்ள பிரபஞ்ச இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பது வேறு விடயம்.
 4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோஅவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்அவர்களின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களைஅவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கெனஅவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.




நமது உடலின் பாதுகாப்பிற்காக இறைவன் ஏற்படுத்திய ஏற்பாடே வலி!
=  வலி உணர்வலைகள் 0.61 m/ s வேகத்தில் காயம் அல்லது எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் இருந்து மூளைக்கு செல்கின்றன.  உடலில் தோல்களிலும் மூட்டுகளின் மேற்பரப்பிலும் சிறப்பு வலி உணரும் நரம்புகள் (pain receptors) உள்ளன. உடலில் எங்காவது அடி விழுந்ததும் தானியங்கியாக இந்த நரம்புகள் தூண்டப்படுகின்றன. தண்டுவடம் மூலம் இவை மூளைக்கு உணர்வலைகளாக கொண்டுசெல்லப் படுகின்றன. மூளை அவற்றை வலியாகப் பதிவு செய்து உடனேயே அடிவிழுந்த பகுதிக்கு தற்காப்புக்கான கட்டளை இடுகிறது. உதாரணமாக ஒரு சூடான பொருளின் மீது வைத்த கையை எடுக்க வைக்கிறது. அனைத்தும் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. பலமான அடி அல்லது வெட்டுகள் விழும்போது வலி உணரும் நரம்புகள் வீரியமாக செயல்படுகின்றன... வீரியமாக வலியைத் தூண்டும் இரசாயனங்களை வெளிப்படுத்த மூளை தூண்டுகிறது. 
மூளையில் வலி உணரும் நரம்புகள் இல்லை.அதனால் மூளை வலியை உணருவதில்லை. மூளையின் செயல்பாடுகள் தடைபடுவதில்லை.   வலி உணர்வு மூளைக்கு செல்வதன் முன்னால் அதைக்  கட்டுப்படுத்தவோ தடுக்கவோ  மைய நரம்பு மண்டலத்தால் முடியும். மூளை பல்வேறு வேலைகளை கவனித்துக்கொண்டு  இருக்கும் போது அவற்றிலிருந்து  மீண்டு வரும்வரை அவ்வாறு நிகழ்கிறது. உதாரணமாக போர் முனையில் அல்லது விளையாட்டில் ஈடுபடும்போது அலுவல்  முடிந்தபின்னரே வலி உணரும் படலம் ஆரம்பிக்கும்!

செவ்வாய், 14 ஜூலை, 2020

ஆதிக்க வெறியர்களை அச்சுறுத்தும் மாமனிதர்!



உலக வரலாறு பல தலைவர்களைக் கண்டுள்ளது. ஆனால் அவர்களின் தாக்கம் அவர்களின் வாழ்நாள் வரையோ அல்லது அதைவிட இன்னும் சிறிது காலமோதான் நீடித்தது என்பதையும் அறிவோம். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் அஞ்சுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும் போலி ஆன்மீகவாதிகளும் அமைதி இழக்கிறார்கள். நலிந்த நாடுகளைக் கொள்ளையடிக்கும் வல்லரசுகள் வலிமையை இழக்கின்றன. உலக சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது. ஆம், அவர்தான் அண்ணல் நபிகளார் என்ற மாமனிதர்!

அவர் போதித்த அறிவார்ந்த கொள்கையின் தாக்கம் உலகெங்கும் பரவப் பரவ என்ன நிகழ்கிறது? ஆம், அதன் காரணமாக இந்த மண்ணில் தங்களுக்கு பறிபோன மனித உரிமைகளைக் குறித்து பாமர மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதுகாறும் தங்களை மதத்தின் பெயராலும் மூடநம்பிக்கைகளின் பெயராலும் வீண்சடங்குகளின் பெயராலும் பிணைத்து வைத்திருந்த அடிமைத்தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஆதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இப்புரட்சியின் விளைவாக தங்கள் ஆதிக்கம் பறிபோவதை உணரும் சுயநல சக்திகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்வது என்று வழியறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை பாமரர்களையும் உலகத்தின் நலிந்த நாடுகளின் செல்வங்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு சுகம் கண்டிருந்த இந்தக் சுயநலக் கூட்டத்தால் இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

அப்படி என்னதான் போதித்தார் இம்மாமனிதர்? அதை சற்று அறிவோம் வாருங்கள்:
அவர் போதித்த கொள்கை அல்லது கோட்பாட்டின் பெயர்தான் இஸ்லாம் என்பது. இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இக்கோட்பாடு முன்வைக்கும் தத்துவம் ஆகும்.
அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (தமிழில் கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.
இது அனைவருக்கும் பொதுவான ஓர் கொள்கை!
- இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.
தலைசிறந்த வாழ்க்கை இலட்சியம்:
- யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு – அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம்:
இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அவர்கள் மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.
மனிதகுல ஒற்றுமையும் சகோதரத்துவமும்:
இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.
நன்மையை எவுதலும் தீமையைத் தடுப்பதும் கடமை :
இக்கொட்பாட்டின்படி  இதனை ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.

இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்றும் ஏன் இந்த மாமனிதரை இவர்கள் கடுமையாக அவதூறுகள் கூறி விமர்சிக்கிறார்கள் என்றும்!
= தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் வெகுண்டெழுகிறார்கள். விபச்சாரம், கொலை, கொள்ளை, வட்டி, இலஞ்சம், ஊழல் பேர்வழிகளுக்கு தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு இது இடையூறாகிறது.
= இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது! மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது!
= நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.
= மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள்
ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
='தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.'
= அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – இறைவனுக்கு இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) (அல்-குர்ஆன் 9:32,33)
இந்த இறைவாக்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி புலர்ந்தது வருவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.
நூற்றாண்டுகளாக தொடரும் தாக்கம்: அந்த இறைத்தூதரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால்? காலம்காலமாக ஆதிக்க வெறியர்களாலும் இடைத்தரகர்களாலும் ஏமாற்றப்பட்ட மக்கள் இந்த மாமனிதரது உபதேசங்களைக் கேட்டபின் சத்தியத்தை உணர்ந்து இவர்களைக் கைவிட்டுவிட்டால் எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?
இந்த உயர்ந்த போதனைகள் தங்களின் ஆதிக்கத்தில் உள்ள மக்களை வந்தடைந்தால் நம்மையும் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை வெகுவாக கவ்விக்கொண்டுள்ளது. எனவே தங்களிடம் எஞ்சியுள்ள ஆதிக்க பலத்தினால இந்தப் புரட்சியை எப்படித் தடுப்பது என்று இரவுபகலாக யோசிக்கிறார்கள். சதித்திட்டங்கள் தீட்டுகிறார்கள். அவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் காணும் நபிகளாரைப் பற்றிய இழிவான விமர்சனங்களும் தவறான சித்தரிப்புகளும்!

நபிகளார் கொண்டுவந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்திற்கும் உறுதியான சித்தாந்தத்திற்கும் ஒரு மாற்று இருந்தால் அதை முன்வைத்து வாதாடி இந்த மக்களை தடுத்திடலாம். அவ்வாறு ஒரு மாற்றுத் திட்டம் எதுவும் தங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இதுதான்! கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்றவர்களிடம் உள்ள ஒரே குறுக்கு வழி வசைபாடுவதும் கேலி செய்வதும் கேலிச்சித்திரங்கள் வரைவதும் அவதூறு கூறுவதும்தான்!
உலகெங்கும் கோடானுகோடி மக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் அளவுக்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்த அவரை காமவெறியன் என்றும் அயோக்கியன் என்றும் வாய்கூசாமல் வசை பாடுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலமும் கார்டூன்கள் மூலமும் சித்தரித்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இணையதளம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் எப்படியெல்லாம் அவரை தவறாக இட்டுக்கட்டி சித்தரிக்க முடியமோ அவ்வாறெல்லாம் சித்தரித்தும் இவர்களின் வெறி அடங்குவதில்லை!
ஆனால் இவர்களின் இந்த சதித்திட்டங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்பதையே உலகம் நமக்குப் பாடமாக போதிக்கிறது. இந்த மாமனிதர் மறைந்து நூற்றாண்டுகள் பதினான்கு கடந்து விட்டன. இவர் போதித்த மார்க்கத்தின் வளர்ச்சி என்றும் எறுமுகத்தையே கண்டு வருகிறது, உலக மக்கள் தொகையின் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியை இன்றுவரை ஈர்த்துள்ளது எனும் உண்மையே அதற்கு சான்றாக நிற்கிறது! தொடர்ந்து இது உலகின் எந்த ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். காரணம் அவர் போதித்தது இவ்வுலகின் உரிமையாளனும் பரிபாலகனும் ஆகிய இறைவனின் மார்க்கம்!

ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மலர்ந்து வரும் மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதேவேளையில் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனியுங்கள்:
= நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)
--------------------------- 

புதன், 8 ஜூலை, 2020

அறிவியலுக்கு அடித்தளம் தந்த ஆன்மிகம்!


Astrological Sphere | home of livingmoonastrology.comஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆக்கபூர்வமான அறிவியலுக்கும் மனிதகுல நன்மைக்கும் வழிவகுக்கக் கூடும்.

அறிவியல் என்பது மனிதன் தனக்கு வழங்கப் பட்டுள்ள புலன்கள், பகுத்தறிவு, உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டு பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற இரகசியங்களில் சிலவற்றைத் துருவித்துருவி ஆராய்ந்து அறியும் முயற்சி. அவ்வாறு பெற்ற அறிவை மனிதனின் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியும் அறிவியலில் அடங்கும்.
ஆன்மிகம் என்பது இவ்வுலகைப் படைத்த இறைவன் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இறைவன், மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு, மனித வாழ்க்கையின் நோக்கம், வாழவேண்டிய முறை, சரி, தவறு, நியாயம் அநியாயம் என்பதற்கான அளவுகோல், மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை இவை போன்ற விடயங்கள் அவற்றில் அடங்கும். இறைவனைப்பற்றிய உணர்வை மனித மனங்களில் விதைத்து அவனை நெறிமுறைப்படுத்துவதும் சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதும் ஆன்மீகத்தின் நோக்கமாகும்.
ஆன்மீகத்தை உறுதிப்படுத்தும் அறிவியல் 
அறிவியலாளர்கள் தம் வழியில் எதையாவது ஆராய்ந்து கண்டுபிடித்து அறிவிக்கும்போது அவை பற்றிய குறிப்புகள் தாங்கள் ஏற்கனவே படித்த இறைவேதங்களில் காணப்படும்போது ஆன்மீகவாதிகளை அது வியப்படைய வைக்கிறது. ஆன்மீகத்தின் பார்வையில் வேதங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்த இறைவனின் வார்த்தைகள். வேதங்கள் மூலம் அவன் கூறும் சில பிரபஞ்ச ரகசியங்களை அறிவியல் கண்டுபிடித்து உறுதிப் படுத்தும்போது ஆன்மீகவாதிகள் தங்கள் வேதங்களின் நம்பகத்தன்மையை உணர்கிறார்கள் அவர்களது இறைநம்பிக்கையை அது வலுப்படுத்துகிறது. இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் அவர்கள் உணர்கிறார்கள். இறைவன் கூறும் வாழ்வின் நோக்கமும் அவன் பரிந்துரைக்கும் வாழ்வியலும் மறுமை வாழ்க்கையும் சொர்க்கமும் நரகமும் எல்லாம் உண்மை என்பதை வலுவாக உணர்கிறார்கள்.
இவ்வாறு ஆன்மீக வெளிப்பாடுகளை அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதிப் படுத்தும்போது சமூகத்தின் நன்னடத்தை மேம்படவும் வழிகோலுகிறது.
மறுபக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு எதிராக வரும்போது அவை எதிர்மறை விளைவுகளை உண்டாக்கவும் செய்கின்றன. உண்மைக்குப் புறம்பான ஆன்மீக கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பான அறிவியல் கருத்துக்களும் ஊகங்களும் சமூகத்தில் பரவும்போது குழப்பங்களுக்கும் கலவரங்களுக்கும் வித்திடுகின்றன என்பதும் உண்மையே. இன்னும் ஆன்மீகத்தோடு தொடர்பில்லாமல் உண்டாகும் அறிவியல் வளர்ச்சிகள் மனிதகுலத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடுகளுக்கு பதிலாக அழிவுக்கே துணைபோகும் என்பதை நாம் அனுபவபூர்வமாகவே அறிவோம்.
ஆன்மீகமும் அறிவியலும் கைகோர்த்தால்..?
ஆம், உண்மையில் அறிவியலின் கைபிடித்து அதற்கு நடைபழக்கியது ஆன்மீகமே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? முடியாவிட்டாலும் நம்பியே ஆக வேண்டும். ஏனெனில் உண்மை அதுவே!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பாலைவனப் பெருவெளியில் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் எப்படிப்பட்ட சிந்தனை இருந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கவலையெல்லாம் உணவைப் பற்றியும் அதை சம்பாதிப்பதைப் பற்றியும் மட்டுமே இருந்திருக்கும்! ஆனால் அப்படிப்பட்ட அரபு மண்ணில்தான் இன்றைய அறிவியல் புரட்சிக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த விஞ்ஞானிகள் உருவானார்கள்.
ஐரோப்பா அன்று இருண்ட காலத்தில் வாழ்ந்தபோது அந்த மண்ணில் இருந்துதான் அறிவியலின் அடிப்படைகள் உருவாகி வளர்ந்தன. பிற்காலங்களில் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு அவை ஐரோப்பியர்களால் கைப்பற்றப் பட்டு அவர்கள்தான் அறிவியலின் முன்னோடிகள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்த காலனி ஆதிக்க சக்திகளும் இந்த உண்மைகளை மறைத்து வைப்பதில் பெரும் பங்காற்றின. ஆயினும் சில மறைக்கப்படாத விடயங்கள் இன்றும் தலைகாட்டவே செய்கின்றன. உதாரணமாக அல்ஜிப்ரா, ஆல்கஹால், அல்கெமியா போன்ற அறிவியல் பதங்கள் அரபு முஸ்லிம்களிடம் இருந்து அறிவியல் அடிப்படைகள் உருவாகின என்பதற்கு சாட்சி பகர்ந்து கொண்டு இருக்கின்றன. 
இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜெர்மனிய நூலில்,
மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கணிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்துமேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாய்ச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.

இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில்,

இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம்தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். அவர்களே அரிஸ்டோட்டில்பிளேட்டோஇயுக்லித் தொலமி ஆகியோரின் நூல்களை அறபு மொழியில்பெயர்த்து பாதுகாத்தனர். அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று குறிப்பிடுகின்றார்.
பகுத்தறிவு கொண்டு அறிவாய் படைத்தவனை!
இந்த சிந்தனைப் புரட்சி அந்தப் பாலைவன மணலில் துளிர்விடக் காரணமாக அமைந்தவை அன்று இறைவேதம் திருக்குர்ஆன் தூவிய விதைகளே! அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அந்த மண்ணில் இறங்கிய இறைவசனங்களில் சிலவற்றைப் பாருங்கள்:
= (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (திருக்குர்ஆன் 88:17-20)
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
நபிகளாரின் சத்திய அழைப்பு: 
நபிகள் நாயகம் அன்று மக்காவில் இவ்வுலகைப் படைத்த இறைவனைப் பற்றியும் இந்த உலக வாழ்வின் நோக்கம் பற்றியும் இறுதித்தீர்ப்பு நாள் பற்றியும் மறுமையைப் பற்றியும் நல்லொழுக்க வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியம் பற்றியும் போதித்து இஸ்லாம் என்ற இறைநெறிக்கு மக்களை அழைத்தார்கள். அந்த சத்தியப் பிரச்சாரத்தின்போது கடவுள் கடவுள் என்று முன்னோர்கள் கற்பித்த உருவங்களையும் படைப்பினங்களையும் விட்டுவிட்டு இவ்வுலகைப் படைத்த இறைவனை நேரடியாக வணங்க மக்களை அழைத்தார்கள். அவனை பகுத்தறிவு பூர்வமாக அறிய படைப்பினங்களைப் பற்றி ஆராயத் தூண்டினார்கள். அவரது பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இறைவன் புறத்திலிருந்து திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன. அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் இங்கே காண்கிறீர்கள்.
இறைவனின் உள்ளமையும் இறைமார்க்கம் கூறும் இறுதிநாள் விசாரணையும் மறுமை வாழ்வும் எல்லாம் உண்மையே என்பதைப் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணர இறைவனின் படைப்பினங்களை கூர்ந்து நோக்கவும் ஆராயவும் இறைவன் கூறுவதை இவற்றில் காணலாம்
= 38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
= 32:27. அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
= 56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
= 56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
= 56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
= 56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
அறிவியல் புரட்சிக்கு அடித்தளமான ஆன்மீகம் 
இன்னும் இவைபோன்ற ஏராளமான இறைவசனங்களை நாம் திருக்குர்ஆனில் காணலாம். அறிவைத் தேடுவதும் இறைவனின் படைப்பினங்களைப் பற்றி ஆராய்வதும் புண்ணியம் தரும் செயலே என்பதை இறைவேதத்தை அன்றாடம் ஓதும் மக்கள் உணரத் தொடங்கினார்கள். படைப்பினங்களைப் பற்றிய ஆய்வுகளை முக்கியமான கடமையாக மேற்கொள்ளத் துவங்கினார்கள். இவ்வாறுதான் நாம் இன்று காணும் – அனுபவிக்கும் – அறிவியல் புரட்சியின் வேர்கள் அடித்தளமிடத் துவங்கின. இஸ்லாம் வளர வளர இஸ்லாமிய ஆட்சியும் வெகுவாக விரிவடைய அறிவியல் ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டன. அறிவைத் தேடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அறிவியல் வளர்ச்சிக்கான தளங்கள் அமைக்கப்பட்டன. மருத்துவம், கணிதம், வானவியல், புவியியல், இரசாயனவியல் போன்ற பல துறைகளும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.
படைப்பின் இரகசியங்களை தாங்கி நிற்கும் அற்புத வேதம்
= நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்தியத்தை மறுப்போர் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (திருக்குர்ஆன் 21:30)
= நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)
திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட காலம்
முதல் தொடர்ந்து பாமர மக்களையும் படித்தவர்களையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம். ஒருபுறம் அறிவியலுக்கு அடிப்படையான தூண்டுதலை வழங்குகிறது. மறுபுறம் பல ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் பால் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது . உதாரணமாக இக்கட்டுரையில் நாம் எடுத்தோதியுள்ள வசனங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை விலங்கியல் (zoology), புவியியல் (geology), வானவியல் (astronomy) போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தூண்டுபவையாக உள்ளதைப் பாருங்கள்.
அதேபோல பிற்காலங்களில் நவீன அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகள் திருக்குர்ஆன் வசனங்களில் புதைந்து கிடப்பதையும் நாம் காணமுடிகிறது. உதாரணமாக மேற்கூறப்பட்ட வசனங்களில் - மலைகள் பூமியில் முளைகளைப் போல் ஆழமாக நாட்டப்பட்டுள்ளன என்ற உண்மை, பெருவெடிப்புக் கொள்கை (bigbang theory), உயிர்களின் தோற்றம் நீரிலிருந்தே (aquatic origin), கோள்களுக்கு இடையே புவிஈர்ப்பு விசை (gravitational force) போன்ற உண்மைகள் புதைந்திருப்பதைக் காணமுடிகிறது.
--------------------- 
தொடர்பான இதர கட்டுரைகளைப் படிக்க க்ளிக் செய்யுங்கள் :
திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஏப்ரல் இதழ் - மின்வடிவம்
https://www.quranmalar.com/2018/03/blog-post_73.html