மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 30: 20-21)
விளக்கம்:
மனிதனின் படைப்பும் இனப்பெருக்கமும் இறைவனது வல்லமையையும் ஆற்றலையும் உணர்த்தும் சான்றுகளாகும்
மனிதனின் ஆரம்பம் மண்ணில் உள்ளது; பின்னர் ஒரு அற்பமான துளி (இந்திரியம்), பிறகு அது ஒரு கருக்கட்டியாக மாறுகிறது, பிறகு ஒரு தசைப்பிண்டமாக, பின்னர் மனித உருவில் எலும்புகளாக மாறுகிறது. பிறகு இறைவன் அந்த எலும்புகளுக்குச் சதையை அணிவிக்கிறான். பின்னர் அந்த உருவத்திற்குள் உயிர் ஊதப்படுகிறது; அப்போது மனிதக் கருவாக அவன் கேட்கவும் பார்க்கவும் செய்கிறான். பின்னர் அவன் தன் தாயின் கருவறையிலிருந்து சிறு குழந்தையாகவும் பலவீனமானவனாகவும் வெளிவருகிறான். அவன் வளர வளர அவனது பலமும் அதிகரிக்கிறது; அவன் நகரங்களையும் கோட்டைகளையும் கட்டும் வயதை அடைகிறான். அவன் பல்வேறு தேசங்களுக்கும் கடல்களுக்கும் பயணம் செய்து, வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்வத்தைச் சேர்க்கிறான். அவன் புத்திசாலித்தனமும், அறிவும், தந்திரமும் மிக்கவனாகவும், சுய சிந்தனை மற்றும் கருத்துக்களைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது இறைவனின் ஆற்றலும் அருளுமே!
பின்னர் ஒவ்வொரு மனிதரும் தத்தமது தனிப்பட்ட திறமைக்கு ஏற்ப, இம்மையிலும் மறுமையிலும் மகத்தான காரியங்களைச் சாதிக்கின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான பல்வேறு கலைகளையும் திறமைகளையும் கற்றுக்கொள்கின்றனர். அவற்றை செயல்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தையும் அவர்களுக்கு எளிதாக்கியவன் இறைவன் மட்டுமே! அவன் தூய்மையானவன். அவர்களின் அறிவுத்திறன், தோற்றம், செல்வம், பாக்கியம் மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றில் அவர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தியவனும் அவனே.
அதைத்தான் இறைவன் மேலே கூறுகிறான்:
அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பூமியில் பரவி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்!” என்று.
இன்னும் வேறொரு வசனத்தில் அவன் பின்வருமாறு கூறுகிறான்:
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்). (திருக்குர்ஆன் 40:67)
வேற்றுமைகள் எவ்வாறு?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக இறைவன், ஆதம் (அலை) அவர்களைப் பூமி முழுவதிலிருந்தும் எடுக்கப்பட்ட ஒரு கைப்பிடி மண்ணிலிருந்து படைத்தான். எனவே, ஆதமின் மக்கள் பூமியின் தன்மைகளுக்கு ஏற்பப் பிறந்தனர்; அவர்களில் வெள்ளையர்களும், சிவப்பர்களும், கருப்பர்களும், அவர்களுக்கு இடைப்பட்ட நிறத்தவர்களும், அதேபோல் தீயவர்களும், நல்லவர்களும், மென்மையானவர்களும், கடினமானவர்களும் — அல்லது இவர்களுக்கு இடைப்பட்ட குணமுடையவர்களும் இருக்கிறார்கள்.” (நூல்: அபூதாவூத் மற்றும் திர்மிதீ)
மனிதனுக்குத் துணைவி
தொடர்ந்து இறைவன் கூறுகிறான்: அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரைப் படைத்திருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். (வசனம் 21)
அதாவது, ‘உங்களுக்கு மனைவியராக இருப்பதற்காக உங்கள் இனத்திலிருந்தே பெண்களை அவன் படைத்தான்.’
(நீங்கள் அவர்களிடம் அமைதி பெறுவதற்காக.) இது பின்வரும் வசனத்தைப் போன்றது:
அவனே உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; அவர் அவரிடம் அமைதி பெறுவதற்காக அவரிடமிருந்தே அவரது ஜோடியைப் படைத்தான் (திருக்குர்ஆன் 7:189).
இது ஆதித்தாய் ஹவ்வா அவர்களைக் குறிக்கிறது. இறைவன் அவர்களை ஆதம் (அலை) அவர்களின் இடது பக்க விலா எலும்பிலிருந்து படைத்தான்.
இறைவனின் பூரணமான கருணையால், அவன் அவர்களது மனைவியரை அவர்களது சொந்த இனத்திலிருந்தே படைத்து, அவர்களுக்கு இடையே அன்பையும் இரக்கத்தையும் உண்டாக்கினான். அவர்களுக்கு இடையே பரஸ்பர கவர்ச்சியும் நேசமும் நெருக்கமும் உருவாவதும், தொடர்ந்து இனப்பெருக்கத்தில் உருவாகும் குழந்தை செல்வங்களும், அவை அவர்களின் பந்தத்தை உறுதிப்படுத்துவதும் குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், பிற்காலத்தில் அக்குழந்தைகள் முதுமையடைந்த பெற்றோருக்கு கைத்தாங்கலாக ஆவதும் என அனைத்தும் அந்த இறைவனின் அளவிலாக் கருணையின் வெளிப்பாடுகளே!
“நிச்சயமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன” என அந்த வசனம் நிறைவடைகிறது.
(விளக்கம் மூலம்: தப்சீர் இப்னு கஸீர்)
============


