இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஜூன், 2023

நாத்திகம் தீண்டாமைக்குத் தீர்வல்ல!

 


விண்ணிற்கு செயற்கைக் கோள்கள் அனுப்பும் இந்த காலத்தில்தான் தாழ்ந்த சாதி சிறுவன் பூஜை பொருளை தொட்டுவிட்டான் என அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பதையும், கல்வி நிலையங்களில் பள்ளி சிறுவர்களை தரையில் அமர வைப்பதையும், அச்சிறுவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுப்பதையும் எல்லாம் காண முடிகிறது. 

விக்கிபீடியா பதிவு

இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் என விக்கிபீடியா பதிவு ஒன்று சுமார் 77 விடயங்களை பட்டியலிட்டுள்ளது. 

ஒரு சில மட்டும் உதாரணத்திற்காக... 

- உயர்ந்த சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த சாதியினர் நடக்கவே கூடாது, 

- கல்வி கற்க கூடாது,

- தோளின் மேல் துண்டு அணிய கூடாது,

- ேதநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை, தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது,

- வயதான பெரியவர்களைக் கூட உயர்ந்த சாதி சிறுவர்கள் பெயர் சொல்லி மரியாதை இல்லாமல் அழைப்பது, 

- உயர் சாதியினர் இல்லங்களில் வேலை செய்யும் தாழ்ந்த சாதியினருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க தனி பாத்திரங்கள்,

- வழிபாட்டுத்தலங்களில் அனுமதி மறுப்பு, 

- மயானங்களில் கூட தாழ்ந்த சாதியினர் இறந்த உடல்களை புதைக்க மறுப்பு, 

- தாழ்ந்த சாதியினருக்கு தனி மயானம், தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு, 

- பொது குளத்தில் தண்ணீர் எடுக்க மறுப்பு, 

- மலம் அள்ளுதல் மற்றும் சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை தாழ்ந்த சாதியினரை செய்ய வைப்பது... உள்ளிட்ட பல தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்டுள்ளது விக்கிபீடியா கட்டுரை. 

தீண்டாமை ஒழிய தீர்வு தான் என்ன? 

தீண்டாமையை கற்பிக்கும் மதங்களே இத்தீமைக்குக் காரணம் என்று கூறி கடவுளை மறுப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு என கருதி நாத்தீக கொள்கையை தேர்ந்தெடுக்கின்றனர். நாத்திகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளேயும் பல பிரிவுகள் இருப்பதையும், ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏளனமாக கருதுவதையும் காண முடிகிறது. 

தீண்டாமைக்கு அடித்தளம் வார்க்கும் நாத்திகம் 

நாத்திகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டார்வினிசம் அடிப்படையில்  வெள்ளையர்கள் பரிணாமத்தில் முன்னேறியவர்கள் எனவும், இந்தியர்கள் போன்ற இடைநிலை நிறம் உடையவர்கள் பரிணாமத்தில் இடைநிலை எனவும், கருப்பர்கள் அதற்கும் பின் தங்கியவர்கள் என கருதுகின்றனர். 

இதன் காரணமாகவே சென்ற நூற்றாண்டில் ஆப்ரிக்காவை சேர்ந்த கறுப்பரான ஓட்டா பெங்கா என்பவரை அழைத்து வந்து அமெரிக்காவில் ஒரு விலங்குகள் அருங்காட்சியகத்தில் குரங்கிலிருந்து  மனிதனாக முழுமையாக பரிணாமம் அடையாத  மனிதர் என பல நாட்களாக கூண்டுக்குள் அடைத்து வைத்து காட்சிப் படுத்தினர். பல நாட்களாக அவர் ஒரு குரங்குடனே கூண்டுக்குள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் மன உளைச்சல் தாங்காமல் 1916-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.  

டார்வினின் ஊகமான பரிணாமக் கொள்கை அடிப்படையில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் பரிணாமத்தில் பின்தங்கியவர்கள் எனும் மூட நம்பிக்கையால்தான் இன்னும் பல கருப்பர்கள் அடக்கு முறைக்கு உள்ளாகின்றனர். 

நன்றி: மணச்சநல்லூர் அப்பாஸ் 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

செவ்வாய், 30 மே, 2023

மறுமை பற்றிய பகுத்தறிவு பூர்வமான ஆய்வு!


 மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன? மக்களிடையே மூன்று கருத்துக்களை நாம் பரவலாகப் பார்க்கமுடிகிறது.

1. நாம் இருக்கமாட்டோம். மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.
2. ஆத்மாவிற்கு அழிவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்போம்.
3. இறைவேதங்கள் கூறுவது போல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல்: நம் செயல்களுக்குக் கூலி கொடுக்கப் படுவோம். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமக்கு நிரந்தர நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கும்.
மேற்படி கருத்துக்களில் நமது கருத்து எந்த ஒன்றாகவும் இருக்கலாம் .ஆனால்...
• மேற்கண்ட மூன்று கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் மூன்றுமே ஒரே நேரத்தில் சாத்தியப்படுவது முடியாத ஒன்று.
• நமது கருத்துக்காக அல்லது ஊகங்களுக்காக உண்மை அல்லது வாஸ்தவம் வளைந்து கொடுக்கப் போவது இல்லை.
• முதல் இரண்டில் எது நடந்தாலும் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு.
• மூன்றாவது விஷயம் நடக்குமானால் நாம் தப்பிக்க வழியில்லை.
எனவே பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் அந்த மூன்றாவது நிலையை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதுதான் பாதுகாப்பான வழிமுறை என்பதுதான். மனித இயற்கையும் அதுவே.
உதாரணமாக ஜெர்மனி அல்லது சுவீடன் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு இன்டர்வ்யூ அல்லது ஒரு வேலைவாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அந்நாட்டைப் பற்றி ஆராய ஆரம்பிப்பீர்கள் அல்லவா? ஆராய்ந்து அந்நாட்டின் பொருளாதார சீதோஷ்ண மற்றும் அரசியல் சூழ்நிலைகளை தீரவிசாரித்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்தானே! நாளை நாம் நிரந்தரமாகத் தங்கவுள்ள இடத்தைக் குறித்து நாம் அலட்சியம் காண்பிக்க முடியுமா? அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் நாம் தாமதம் செய்யலாகுமா?
பகுத்தறிவு கொண்டு இறைவேதங்கள் கூறும் உண்மைகளை ஆராய்ந்தாலும் நமக்கு அதுதான் நாளை நடக்கும் என்பதையும் அறியலாம்.
நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
"நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர்." (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.

நபிகளாரிடம் கேட்கப்பட்ட கேள்வி:
ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்:
36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!"
மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
"22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்:
75:3. 4 "(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்."
================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 1 மே, 2023

இந்நாள் இறைத்தூதரின் தனிச்சிறப்புகள்

 


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும்  அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது தனிச்சிறப்புகளை அறிவது அவசியம். 

முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை: 

1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதர்:

முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  

நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். ஓரிடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை உடனுக்குடன் உலகெங்கும் காணக்கூடிய  அளவுக்கு நாம்  முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலுக்கு ஏற்றவாறு இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள் என்றே நாம் விளங்கமுடிகிறது. இனி இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர். 

2. வேதம் சிதையாமல் பாதுகாக்கப் படுதல்:

 முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது,  

மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1440 ஆகியும் அட்சரம் பிசகாமல் அப்படியே மூலமொழியிலேயே பாதுகாக்கப் படுவது, கோடிக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்டு இருப்பது, உலகில் எந்த புத்தகத்தையும் விட அதிகமதிகமாக ஒதப்படுவது போன்ற  விவரங்களை கீழ்கண்ட லிங்கில் வாசிக்கலாம்:

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

 இப்பாதுகாப்பு பற்றி இறைவனே கூறுகிறான்:

=“நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9) 

3. கடவுள் ஆக்கப்படாத இறைத்தூதர்:

இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!. 

அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார். 

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது. 

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார். 

4.  பக்குவமாக பாதுகாக்கப்படும் வாழ்க்கை வரலாறு:

இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் (அதாவது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக அறிவிக்கப் பட்டது முதல் அவரது மரணம் வரை உள்ள காலகட்டம்)  ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இந்த ஹதீஸ் தொகுப்புகளில் நீங்கள் நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் நம்பகத்தன்மை பற்றிய குறிப்புகள் உட்பட ஆவணப்படுத்தப்பட்டு இருபதைக் காணலாம். இவற்றிலும் சந்தேகத்திற்கு இடம்தரக் கூடியவைகளை அறிஞர்கள் வடிகட்டி அவற்றை 'ஸஹிஹ் ஹதீஸ்கள்' என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. 

5. பின்பற்றத்தக்க முன்மாதிரி: 

ஒருவரை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக நாம் ஏற்கவேண்டும் என்றால் அவரிடம் மனித வாழ்கையின் அனைத்து துறைகளுக்குமான முன்மாதிரியை நாம் பெறவேண்டும். திருக்குர்ஆன் மற்றும் மேலே கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நபிகளாரிடம் இருந்து அத்தகைய ஒரு முன்மாதிரியை பெற முடிகிறது. மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய வழிகாட்டுதலையும் முன்மாதிரியையும் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகி உள்ளன. அவர் கூறிய வார்த்தைகள் அவர் செய்த செயல்கள்  பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் ஹதீஸ் தொகுப்புகளில் தெளிவுறப் பதிவாகி உள்ளதால் அவை இஸ்லாமியர்களுக்கு நடைமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டு நூலாக விளங்குகின்றன. மட்டுமல்ல, இன்று அவை இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகவும் ஆகின்றன. 

6. அணுஅணுவாக பின்பற்றப்படும் முன்மாதிரி:

நபிகளாரின் வரலாற்றின் இன்னொரு அற்புதம் என்னவென்றால், அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:

= அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:21)

மேற்கூறப்பட்ட தனிச்சிறப்புகளில் இருந்து இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பத நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 19 ஏப்ரல், 2023

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

 


பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.
சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!
எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.
குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.
அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.
உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.
குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.
பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.
இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை’ என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.
டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.
இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.
முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.
மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
‘என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு’ எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.
உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் – நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.
ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.
உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.
இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.
ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.
யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?
கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?
யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?
இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.
மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.
நன்றி:

M A Ahamed Yaser

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

மனிதகுலம் மீட்சி கண்டது அவராலே!

  அண்ணல் நபிகளாரின் இலக்கு அனைத்துலக மக்களையும் அவர்கள் இவ்வுலகில் அவர்களைப் பீடித்துள்ள அடிமைத்தளையில் இருந்தும், அவர்கள் படும்  துன்ப துயரங்களில் இருந்தும் சீர்கேடுகளில் இருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதேவேளையில் மறுமையில் நரகத்தில் இருந்து மீட்டு அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. அதாவது  அவர்களின் இம்மையும் மறுமையும் செம்மையாக அமைய வேண்டும் என்பதே இலக்கு! அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறையே இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இதை மக்களுக்கு போதிக்கவே அவர் இறைத் தூதராக அனுப்பட்டார்.  

எதிலிருந்தெல்லாம் பாதுகாப்பு?

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அவரைப் பின்பற்றியவர்களும் சரி இன்று பின்பற்றிக்கொண்டு இருக்கக்கூடிய உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களும் சரி கீழ்கண்ட தீங்குகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள் அல்லது பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம்:

= படைத்தவனை நேரடியாக வணங்கக் கற்றுக் கொண்டதால் கடவுளின் பெயரால் மக்களை சுரண்டும் இடைத்தரகர்களின் தீமையில் இருந்து பாதுகாப்பு. 

= இஸ்லாம் கற்றுத்தந்த மனித சமத்துவக் கொள்கையை பின்பற்றுவதால் குல மேன்மை இன மேன்மை பாராட்டும் சுயநல ஆதிக்கவாதிகளின் தீங்கிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையில் இருந்தும் விடுதலை.

= அனைத்து மனிதகுலமும் ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்று நம்புவதால் நிறவெறி, இன வெறி, மொழிவெறி, ஜாதிவெறி இவற்றில் இருந்து விடுதலை! இவற்றின் காரணமாக உண்டாகும் சண்டைகளில் இருந்து பாதுகாப்பு!

= வரதட்சணைக் கொடுமை, கட்டாயத் திருமணம், பெண்ணுரிமைகள் மறுப்பு, பெண் சிசுக்கொலை, பெண் கருக்கொலை, சொத்துரிமை மறுப்பு போன்றவற்றில் இருந்து பெண்ணினத்திற்கு பாதுகாப்பு..

= குடும்ப அமைப்பு பேணுதல், ஆடைக் கட்டுப்பாடு, அந்நிய ஆண்-பெண் கலந்துறவாடத் தடை போன்ற கட்டுப்பாடுகள் மூலம் பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு.. சமூக சீரழிவில் இருந்து பாதுகாப்பு.

= வட்டி, ஊக வாணிபம், மோசடி வியாபாரம் போன்றவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு! ஜகாத் மூலம் வறுமையில் இருந்து விடுதலை!

= இறைவனையும் மறுமையையும் பற்றிய நம்பிக்கைகள் ஆழமாக விதைக்கப்படுவதால் தனி நபர் ஒழுக்க சீர்கேடு, மது மற்றும் போதைப்பொருள், விபச்சாரம் போன்ற தீங்குகளில் இருந்து பாதுகாப்பு.  

மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை. 

இறைவன் இந்த தூதரைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர் அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.  (திருக்குர்ஆன் 7:157)

மக்களின் துன்பப்படுவது கண்டு வருந்துபவர்: 

அகிலத்தின் அருட்கொடையாக வந்த அந்த அண்ணல் மக்களின் உணர்வுகளோடு உணர்வுகளாகக் கலந்தவர். அகிலத்தின் இறைவனே சான்று வழங்குவதைக் காணுங்கள்:

= (இறை விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (திருக்குர்ஆன்  9:128)

திருந்தாத மக்களுக்காக அதிகம் வருந்தியவர்:

 நாளை மறுமையில் யாரும் நரகத்தில் சென்று விழக் கூடாது என்ற ஏக்கம் அவரை இடைவிடாமல் வாட்டியது. இறைவனே அதை எடுத்துச் சொல்வதைப் பாருங்கள்:  

= (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! (திருக்குர்ஆன் 18:6)

=========== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

கடமை தவறாத சீர்திருத்தவாதி!


ஏதேனும் ஒரு பிரபலம் அல்லது அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.
இதைக் கேட்கின்ற அவர் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமே! தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் தலைவருக்கே இந்நிலை என்றால் என்றால் ஆன்மீகத் தலைமைப் பீடத்தில் உள்ளவர்கள் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களுக்காக கோவிலே கட்டப்படும், பக்தர்களின் கூட்டம் கூடும் என்பதெல்லாம் நாம் அறிவோம்.

அப்படிப்பட்ட நிகழ்வொன்று இறைவனின் இறுதித்தூதர் வாழ்வில் நடந்த போது என்ன நிகழ்ந்தது என்பதையே இங்கு நாம் காண இருக்கிறோம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) மூலம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சில ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனாலும், ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட நான்கு பெண் மக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருந்தனர்.

மதீனாவுக்கு வந்து அங்கே மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமது பாட்டனார் இப்ராஹீம் நபியின் பெயரை அக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் எல்லா தந்தையரும் மகிழ்ச்சியடைவதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், ஆண் குழந்தையைக் கொடுத்த இறைவன் சிறு வயதிலேயே அக்குழந்தையைத் தன் வசம் எடுத்துக் கொண்டான். பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார்.
(நூல் : அஹ்மத் )
இக்குழந்தை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைத்திருந்த அன்பைப் பின் வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது…
இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் வீட்டில் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா? என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது இரக்க உணர்வாகும் என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம் என்றும் கூறினார்கள்.
நூல் : புகாரி
தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது.
சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.
யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.
மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது.
கடமை தவறாத தலைவர்:
அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.
மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.
சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்யமின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில்தான் இருந்தார்கள்.
ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.
(நூல் : புகாரி)

இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
===============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று !

ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 7:34)

(மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 7:35)

ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள்.
(அல்குர்ஆன் : 7:36)

எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:37)

அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.”
(அல்குர்ஆன் : 7:38)

மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:39)
(உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும்.
(அல்குர்ஆன் : 7:40)

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்!
(அல்குர்ஆன் : 7:41)

(இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
(அல்குர்ஆன் : 7:42)

மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”
(அல்குர்ஆன் : 7:43)

பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக!
(அல்குர்ஆன் : 7:44)

அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள்.
(அல்குர்ஆன் : 7:45)

மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 7:46)

மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!”
(அல்குர்ஆன் : 7:47)

பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.”
(அல்குர்ஆன் : 7:48)

மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:49)

மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”
(அல்குர்ஆன் : 7:50)

அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”
(அல்குர்ஆன் : 7:51)