இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 செப்டம்பர், 2019

நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!


இன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதாக இருந்தாலும் சரி, வாடகை வீடானாலும் சரி, நமது உடல் என்ற வீட்டில் இருந்து உயிர் பிரிக்கப்படும் போது அந்த வீட்டை விட்டும் பிரிந்தே ஆகவேண்டும் அல்லவா?
அதற்குப் பின்னர் நம் இருப்பிடம்?
ஆம், அது நாம் இங்கு வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது. நாம் சேமித்த புண்ணியங்களையும் பாவங்களையும் பொறுத்தது. நம்மைப் படைத்த இறைவன் நமக்கு ஏவும் செயல்களே புண்ணியங்கள். நாம் செய்யக் கூடாது என்று தடுத்த செயல்களே பாவங்கள் எனப்படுபவை. இவை ஒவ்வொன்றும் எடைபோடப்படும் நாளே இறுதித்தீர்ப்பு நாள் என்பது.  அதுதான் நாம் இப்போது எழுதிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை எனும் பரீட்சையின் முடிவுகள் வெளியாகும் நாள். இறைவனைப் பொறுத்தவரை அவனது காலண்டரில் ஒரு குறிப்பிட்ட நாளாகும். ஆனால் அது எப்போது என்பது நமக்கும் சரி, இறைத் தூதர்களுக்கும் சரி, வானவர்களுக்கும் சரி அறியப்படாத நாளாகும். ஆனால் அது உறுதியாக நடந்தேறும் என்பதில் சந்தேகமேயில்லை.
நிரந்தர இருப்பிடம்
= அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (திருக்குர்ஆன் 78:39)
நாளைய நம் நிரந்தர இருப்பிடம் ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும் என்பது உறுதி. அது எங்கு அமைய வேண்டும், நமது உணவும் உடையும் இருப்பிடமும் மற்றும் இன்ன பிற சவுகரியங்களும் எவ்வாறு அமையவேண்டும் என்பதை இப்போதே தீர்மானித்தால்தான் முடியும்.  இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆனின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட கீழ்கண்ட ஒப்பீட்டு மெனுவில் உங்கள் சாய்ஸை  டிக் செய்து கொண்டே செல்லுங்கள்:  எது வேண்டுமோ அதற்கான ஆயத்தங்களை இன்றே செய்து கொள்ளுங்கள்!
அ) ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு விருந்தாக தங்குவதற்குரிய சுவனபதிகள் உண்டு. . (திருக்குர்ஆன் 32:19)
ஆ) மேலும், பாவம் செய்கிறார்களே அத்தகையோர் அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்பாகும், அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும்போதெல்லாம் அதிலேயே மீட்டப்படுவார்கள், மேலும், நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களே, அந்த (நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப்பாருங்கள்என்று அவர்களுக்குக் கூறப்படும். . (திருக்குர்ஆன் 32:20
இருவகைத் தோற்றங்கள்
அ) அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (. (திருக்குர்ஆன் 80:38,39)
ஆ) ஆனால் அந்நாளில் – (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (. (திருக்குர்ஆன் 80:40)
இரு வகை வரவேற்பு
அ) மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்!  . (திருக்குர்ஆன் 39:73)
ஆ) (இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டதுஎன்று பதிலளிப்பார்கள்.அப்போது கூறப்படும்: நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்! . (திருக்குர்ஆன் 39:71,72)
உணவு
அ) இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம். (திருக்குர்ஆன் 52:22)
ஆ) நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய உணவு; அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போல். . (திருக்குர்ஆன் 44: 43-46)
பானம்
அ) பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; . (திருக்குர்ஆன் 47:15) 
ஆ) அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. . (திருக்குர்ஆன் 78: 24-25)
ஆடை
அ) அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (.(திருக்குர்ஆன்  76:21)
ஆ) அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(திருக்குர்ஆன்  14:50)
படுக்கை
அ) (பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (.(திருக்குர்ஆன்  56:15,16)
ஆ) அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (.(திருக்குர்ஆன்  7:41)
தங்குமிடம்
அ) அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (.(திருக்குர்ஆன்  61:12)
ஆ) நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21) 
நிரந்தரம்
அ) அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
ஆ) நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்போரிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள் இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)
மேற்படி பட்டியலில் உங்கள் சாய்ஸ் ‘அ’ என்பதாக இருந்தால் நீங்கள் அதற்கான உழைப்பை இன்றிலிருந்தே நீங்கள் துவங்க வேண்டும். உங்களைப் படைத்த இறைவன் தந்த வாழ்க்கை நெறிப்படி உங்கள் வாழ்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மாறாக சாய்ஸ் ‘ஆ” என்றால் நீங்கள் உங்கள் மனம்போனபடி வாழலாம்.
----------------------------------- 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?


வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்!


ஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல நாடுகளில் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்ற மக்கள் பல்வேறு விதமான அல்லல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதையும் அறிவோம். பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப் படுதல், அகதிகளாக வெளியேற்றம், சீனாவில் உக்யூர் முஸ்லிம்களுக்காக தடுப்பு முகாம்கள், அவர்களுக்கு ரமலான் மாதம் கூட நோன்பு வைக்கத் தடை, திருக்குர்ஆன் படிக்கத் தடை, பல்வேறு நாடுகளில் இஸ்லாமியரகளின் வாழ்வாதாரமும் வாழ்விடங்களும் சூறையாடப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து போர்களுக்கு உள்ளாக்கப்படுதல், சொந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேற்றப் படுதல் போன்ற பலவும் நிகழ்வதை அறிவோம். நம் நாட்டிலும் இன்று சில மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருப்பதும் இஸ்லாமியர் உரிமைகளை மறுப்பதும் இஸ்லாமியருக்கு கொடுமை இழைத்தவர்களைக் குற்றமற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்வதும் எல்லாம் நடந்துகொண்டு இருப்பதை அறிவோம். இவற்றிற்கு வேறுபல காரணங்களும் இருந்தாலும் இஸ்லாம் என்ற கொள்கைக்கு எதிராக ஆதிக்க சக்திகள் திரண்டு போரிடுவதே முக்கிய காரணமாக உள்ளது என்பதை ஆராய்வோர் அறியலாம். ஆதிக்க சக்திகள் ஏன் இஸ்லாம் என்ற இந்த வாழ்வியல் கொள்கை கண்டு பயப்படுகிறார்கள்?
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும்.  இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது நம்மைப் படைத்தவனுக்குக் கீழ்படிந்து அவன் வழங்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று  வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். இது மனித இனம் அனைத்துக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் கொள்கை. இதன்படி, இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.
இஸ்லாம் ஏன் குறி வைக்கப்படுகிறது?
ஒரே நாடு, ஒரே இனம் சார்ந்த அல்லது ஒரே மொழி பேசக்கூடிய மக்களில் எவராவது இஸ்லாம் என்ற கொள்கையை ஏற்றவுடன் ஏன் இவ்வாறு சக மக்களின் அல்லது ஆதிக்க சக்தியினரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுகிறது?
= அதுவரை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வோடு பாவங்களில் வாழ்ந்தவர்கள்...
= கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தான்தோன்றித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்...
= நிறபேதம் இன பேதம் மொழிபேதம் பாராட்டி பிரிவினை வாதம் பேசிக்கொண்டு இருந்தவர்கள்..
= விபச்சாரம், குடி, போதைப் பழக்கத்தில் மூழ்கி இருந்தவர்கள்..
= கொலை, கொள்ளை, இலஞ்சம் போன்றவற்றில் மூழ்கி இருந்தவர்கள் மற்றும் இவற்றுக்கு துணை போனவர்கள்..
தங்கள் தவறுகளை உணர்ந்து தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்ற உணர்வு மேலிட தன்னைத் தானே திருத்திக் கொண்டு இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை  ஏற்று கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ முற்பட்டால் ஏன் அவர்கள் மீது அடக்குமுறைகளும் வன்முறைத் தாக்குதல்களும் முடுக்கிவிடப்படுகின்றன?
ஆம் அதற்குக் காரணம் இருக்கிறது..
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
= இஸ்லாம் தனிமனிதனை மட்டுமல்லாமல் முழு சமூகத்தையும் சீர்திருத்த முயல்கிறது என்பது இங்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
= ஒன்றே மனித குலம், மனிதர்கள் அனைவரும் சரி சமமே ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்பதை இஸ்லாம் அடிப்படையாக போதிப்பதோடு அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறது. அதனால் இனத்தின், நிறத்தின், குலத்தின், ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கையை முழுமூச்சாக எதிர்க்கிறார்கள்.
= படைத்தவன் மட்டுமே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன், அவனை நேரடியாக பொருட்செலவின்றி அணுக முடியும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதை நடைமுறைப் படுத்தியும் காட்டுகிறது. இந்த செயல் கடவுளின் பெயரால் மக்களை சுரணடும்  இடைத்தரகர்களை அமைதி இழக்கச் செய்கிறது! மூடநம்பிக்கைகளை பாமர மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது அறவே பிடிக்காது!
= இஸ்லாம் வட்டி, விபச்சாரம், சூதாட்டம் இவற்றுக்கு தெளிவான தடை விதித்து இக்கொள்கையை ஏற்றுக்கொண்ட மக்களை இத்தீமைகளில் இருந்து காப்பாற்றுகிறது. அதனால்  இத்தீமைகளை வைத்துக்கொண்டு வயிறு வளர்ப்பவர்களுக்கும் மக்களை சுரண்டுபவர்களும் இஸ்லாம் பரவுவதை முழுமூச்சாக எதிர்க்கிறார்கள்
= தன்னைச் சுற்றி நன்மையை ஏவுவதையும் தீமைகளைத் தடுப்பதையும் இறைவிசுவாசிகளின் மீது கடமை என்கிறது இஸ்லாம். அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று நாட்டை சுரண்டும் ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் கைப்பாவை ஆட்சியாளர்களுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவற்றின் காரணமாக ஆதிக்க சக்திகள் தங்கள் சக்தி வாய்ந்த ஊடகங்கள் மூலம் இஸ்லாத்திற்கு எதிராக பெரும் பரப்புரைகள் மேற்கொள்கிறார்கள். தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு  இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்படியான நிகழ்வுகளை நடத்தி இஸ்லாத்தின் மீது அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாம் வெகுவேகமாகப் பரவி வருவதைத் தடுக்க மக்களை தங்கள் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்யத் துடிக்கிறார்கள்.
இறுதியில் இஸ்லாமே வெல்லும்  
உண்மையில் இஸ்லாத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளவர்கள் இது அவைகளைப் படைத்த இறைவன் தந்துள்ள வாழ்வியல் கொள்கை என்பதையும் அவர்கள் உட்பட அனைவரையும் வாழவைக்க வந்தது என்பதையும் அந்த இறைவனிடமே இறுதி மீளுதலும் விசாரணையும் உள்ளது என்பதையும் அறிந்திருந்தால் அவர்கள் போக்கு நேர் எதிர்திசையில் திரும்பும். அவர்களும் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டு உலகில் அமைதியை நிலைநாட்டப் பாடுபடுவார்கள். அவர்கள் திருந்தினாலும் சரி, திருந்தாவிட்டாலும் சரி இறுதியாக இஸ்லாமே வெற்றிபெறும் என்பதை இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)
================== 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 


http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஆகஸ்டு 2019 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஆகஸ்டு இதழ்
பொருளடக்கம்:
சுற்றுச்சூழல் காப்பதும் இறை வழிபாடே! -2
சுற்றுச்சூழல் பாதுகாக்க இறை வழிகாட்டுதல் -4
நீர் அருந்துவதன் ஒழுக்கங்கள்-6
சித்திரவதைக்கு ஆளாகி சத்தியத்தை மறுத்த நபித்தோழர்! -7
ஈவிரக்கமற்ற ஆயுத முதலைகள்-8
உணவை இரவில் மூடிவைத்தல் -10
ஆயுத விற்பனைக்காக உருவாக்கப்படும் போர்முனைகள்!-11
ஐவேளைத் தொழுகைகளின் சிறப்பு -12
திருக்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா? -13
சமூக நல்லிணக்கத்திற்கு நபிகளாரின் வழிமுறை -16
தொழுகை- ஒழுக்கம் வளர்க்கும் பயிற்சி -17
மத நூல்களைத் தவறாகத் திரிப்பது எப்படி? -18
பணிவோடு உண்ணுங்கள் -20
இரவல் தந்தவன் கேட்கின்றான்.. கொடுக்கத் தயாரா?-21
பயங்கரவாதமும் அதிபயங்கரவாதமும் -23
கொல்லவந்த போதும் மன்னித்த பெருந்தகை!-24
வாசகர் எண்ணம் -25