இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஜனவரி, 2017

அளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ


55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்) 
மதனீ, வசனங்கள்: 78

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
55:1. அளவற்ற அருளாளன்,
55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
55:7. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
55:8. நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
55:9. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
55:16. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
55:18. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
55:21. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
55:23. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:24. அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
55:25. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:26. (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
55:28. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:29. வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
55:30. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:31. இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
55:32. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
55:36. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
55:38. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:39. எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
55:40. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:41. குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
55:42. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:43. அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).
55:44. அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
55:45. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:46. தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
55:47. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:48. அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
55:49. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
55:51. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:52. அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
55:53. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:54. அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
55:55. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:57. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
55:59. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
55:61. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:62. மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
55:63. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:64. அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
55:65. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:66. அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
55:67. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:68. அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
55:69. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:71. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:73. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:75. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:77. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிரவரி 2017 இதழ்

கீழ்கண்ட இணைப்பிலும் படிக்கலாம்
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusTElaaV9ER01tSEk/view?usp=sharing

தர்மத்திலும் சமூகப் பொறுப்புணர்வு

இஸ்லாமியப் பண்டிகைகள் இரண்டு. ஒன்று ரம்ஜான் மற்றது பக்ரீத். இப்பண்டிகைகளை யாரும் தனியாகக் கொண்டாட முடியாது. இவற்றில் சமூகத்தோடு இணைந்து தொழுகைகள் நிறைவேற்றப்படும். சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அன்று நிறைவேற்றப்பட  வேண்டும்.

இப்பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் அன்று இறைவனின் கட்டளைக்கேற்ப பிராணிகளை அறுத்து பலியிடப்படும். அதன் மாமிசத்தை பலியிடுபவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படும். குர்பானி என்ற நபிகளாரின் காலத்தில் இந்த இறைச்சிக்கு குர்பானி இறைச்சி என்று வழங்கப்படும். இந்த இறைச்சியை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்து உண்ணலாம். அதற்கு தடை ஏதும் இருக்கவில்லை.

இவ்வாறு இருக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை, "உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்" என்று அறிவித்தார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், "இறைத்தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்கள்.
 அதற்கு  இறைத்தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பு : சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 3992) 

வியாழன், 19 ஜனவரி, 2017

இசங்களை முறியடிக்கும் இஸ்லாம்!


யானையை ஆராய்ந்த குருடர்கள் 
 யானையை தன் கையால் தடவி உணர்ந்த ஆறு குருடர்களின் கதையை நாம் அறிவோம்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுப்பினை தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் இன்னதுதான் என்று கூறினார்கள். ஒருவர் யானை என்பது தூண் என்றார். மற்றொருவர் யானை என்பது மரக்கிளை, இன்னும் ஒருவர் யானை என்பது கயிறு என்றும் கூறிய கதையை நாம் அறிவோமே.
அதைப் போன்றதுதான் மனிதனை பற்றியும் அவன் வாழும் பிரபஞ்சத்தின் பின்னணி பற்றியும் சரியான புரிதல் இல்லாதவர்கள்  மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கூறுவது!  

ஆம்! சார்லஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்டு, ஹெகல், கார்ல் மார்க்ஸ் போன்ற மேற்குலக சிந்தனையாளர்களும் இன்ன பிறரும் மனிதனின் குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்காக அவனை பல்வேறு  கோணகளில் சிந்தித்தனர். அவர்களின் இந்த தேடல் எங்கு கொண்டு சென்றது என்பதைப் பாருங்கள்!

= ஒருவர் உடலும் உயிரும் கலந்த மனிதனின் வெறும் உடலைபற்றி மட்டும் சிந்தித்ததால், அதன் முடிவும் உடலை மையமாக வைத்தே இருந்தது.

  = மற்றொருவர் நம் உடல் உறுப்பில்  ஒன்றான வயிற்றை மையமாகக் கொண்டு சிந்தித்ததால், மனிதன் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் பசிதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே இந்த பசியை போக்கிவிட்டால் அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிடும் என்றார் அவர். 

= மற்றொருவரோ, மனிதனுடைய உருவத்திற்கும்,அவனுடைய பாவனைக்கும் ஒத்த மிருகம் ஒன்றைக்காட்டி, அந்த மிருகத்தில் இருந்துதான் மனிதன் பரிணாமம் பெற்றான் என்றார்.

= இன்னுமொருவரோ, மனிதனின் பாலியல் உணர்வுகளை பற்றி சிந்தித்து, மனிதனுடைய  அனைத்து தேவைகளுக்கும் காரணம் அவனது காம உணர்வுதான் என்றார். இந்த பாலியலின் மீதுள்ள கட்டுபாடுகளை நீக்கிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.

 இன்னும் ஒருவரோ மனிதனின் உடல் மற்றும் அவனுடைய இன்னபிற தேவைகளைக்  காட்டிலும் ஆன்மீகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சிந்தித்ததன் விளைவாக மனிதன் ஆன்மீகத்திற்குள் புகுந்துவிட்டால் அனைத்தும் சீராகிவிடும் என்றார்..

இவ்வாறு சிந்தித்தவர்கள் தாங்கள் அடைந்த முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு வாழ்க்கை சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் இயற்றினார்கள். 

இன்னும் சிலர் நாட்டை, மொழியை, இனத்தை அடிப்படையாகக்கொண்ட கோட்பாடுகளையும் வகுத்தார்கள். அவற்றை உருவாக்கியவர்களின் பெயர்களோடு இணைத்து 'இசங்களாக' அறிமுகப் படுத்தினார்கள். அவற்றை மக்களிடையே பிரச்சாரம் செய்து அவற்றின்பால் மக்களை ஈர்த்தார்கள். மனிதவாழ்வின் தற்காலிக பாதிப்புகளுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கும்  உள்ளான மக்கள் பலரும் அவற்றுக்கான தீர்வு தேடியும் தற்காலிக இன்பங்களுக்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் அவற்றின்பால் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளைப் போல் அவற்றில் சென்று விழுந்தார்கள். இன்னும் விழுந்துகொண்டு இருக்கிறார்கள்!

 மனிதன் என்ற அற்புத ஜீவி 

ஆனால் அதிபக்குவம் வாய்ந்த அறிவாற்றலும் நுணுக்கங்களும் தன்னகத்தே கொண்ட தானியங்கி இயந்திரம் போன்றது மனித உடல். எந்த ஒரு மனிதனாலும் மனிதக் குழுக்களாலும் புரிந்துகொள்ள முடியாத சிக்கல்கள் நிறைந்தது அது. இப்பரந்துவிரிந்த மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனிதன் என்ற அற்புத ஜீவியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் நாம் காணலாம். உதாரணமாக நாம் வாழும் இந்த பூமியின் சுழற்சி வேகம், சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம், இரவுபகல் மாற்றம், காற்றுமண்டல அழுத்த அளவு போன்ற நாம் அறிந்தும் அறியாததுமான பற்பல காரணிகள்  கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளதால்தானே இங்கு மனிதவாழ்வு என்பது சாத்தியமாகிறது? இவற்றில் ஏதாவது மீறப்பட்டாலும் அடுத்த நொடியே அனைத்தும் தகர்ந்துவிடும் என்பதை நாம் அறிவோம். அப்படியானால் மனிதன் என்ற பேரற்புதத்தைப் படைத்து அவனுக்காகவே இம்மாபெரும் பேரண்டத்தை உருவாக்கி அவனுடைய  தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து வரும் அந்த படைப்பாளன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சித்தாந்தத்தை நாம் புறக்கணிக்க முடியுமா?

இறைவனால் படைக்கப்பட்ட நாம் அந்த சர்வவல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும்  ஆன இறைவன் வழங்கும் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு அற்பமான அறிவாற்றல் கொண்ட மனிதர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களின் பின்னால் செல்வது நம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வையும் தராது. நமக்கு மோட்சத்தையும் பெற்றுத் தராது.

தான் எவ்வாறு, எதற்கு  இவ்வுலகில் வாழவேண்டும் என்பது பற்றிய அடிப்படை அறிவும் விழிப்புணர்வும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அத்தியாவசியமானதாகும். அதற்கான குறைகளற்ற பரிபூரணமான ஒரு வழிகாட்டுதலை இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவன் எவனோ அவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதே உண்மை. ஆம்! மனிதனின் வாழ்விற்கு ஒரு அர்த்தமும், வழிமுறையும், ஒரு இலக்கையும் கற்பித்தது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களும் அவர்கள் மூலமாக அனுப்பட்ட வேதங்களுமே! அவ்வாறு இறைவனால் வகுத்து வழங்கப்படும் வாழ்வியல் நெறிமுறைகளையே நாம் சமயம் அல்லது மதம் என்கிறோம். அதுவே இன்று அரபு மொழியில் இஸ்லாம் என்று  அறியப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இன்னொரு பொருள் கீழ்படிதல் என்பதாகும். அதாவது இறைவனின் எவல்விலக்கல்களை ஏற்று வாழும்போது பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்.

ஏன் இஸ்லாம்?

ஒரு பொருளை பற்றிய முழுமையான அறிவு அதை தாயரித்தவனுக்குத்தானே இருக்கமுடியும்? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உங்களுடைய வாகனத்தை சற்று கவனித்து பாருங்கள், அந்த வாகனத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் உபரி பாகங்களாக அந்த வாகனத்தின் தாயரிப்பாளர் எதை பரிந்துரை செய்கிறாரோ அதை அப்படியே நாம் பின்பற்றுகிறோம் அல்லவா? அதுவும் எந்த அளவுக்கென்றால் அந்த வாகனத்தின் சக்கரத்திற்கு காற்றழுத்தம் எவ்வளவு புள்ளிகள் இருக்க வேண்டும் என்று வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைகிறாரோ அதை அப்படியே மிகச்சரியாக பின்பற்றுகிறோம்.
 அதை விடுத்து நாம் “இது என்னுடைய வண்டி, அவன் யார் என்னுடைய வண்டிக்கு  இத்தனை புள்ளிகள்தான் காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு?”என்று நாம் யாரும் நினைப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. ஏனென்றால் நாம் அந்த வண்டியின் உரிமையாளர் மட்டுமே தவிர அந்த வண்டியை பற்றிய முழு அறிவு நமக்கில்லை என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். ஆக யார் இந்த வண்டியை தயாரித்தார்களோ அவர்கள் சொல்வதை கேட்டு அதன்படி செயல்பட்டால்  மட்டுமே வண்டி நன்றாக இயங்கும் என்பதை நாம் அறிந்திருகின்றோம்.

 ஒரு சின்னஞ்சிறிய பழுது பார்ப்பதாக இருந்தாலும் கூட அந்த வாகனத்தின் தயாரிப்பாளர் சொல்வதை அப்படியே நம்பி செயல்படும் நாம், நம்முடைய வாழ்க்கை விஷயத்தில் அதே அணுகுமுறையை ஏன் பின்பற்ற மறுக்கிறோம்? செயலாலும் சிந்தனைத்திறனாலும் நுணுக்கத்தாலும் மனிதன் என்ற அற்புதத்தை மிஞ்சிய வேறொரு இயந்திரம் இப்புவியில் இல்லை என்பதை அனுபவபூர்வமாகவே அறிவீர்கள். இந்த அதிபக்குவம் வாய்ந்த மனிதன் என்ற இயந்திரத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவன் அதைப் படைத்து பரிபாலிப்பவனான இறைவனன்றி வேறு யார்?

புறக்கணிக்க முடியுமா? 

நம்மைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் நம்மை இடையறாது பரிபாலித்தும் வருகின்ற அந்த இறைவன் தனது வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் மனித குலத்திற்கு அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அந்த இறைத்தூதர்கள் தத்தமது காலகட்டங்களில் தத்தமது மக்களிடையே முன்மாதிரி புருஷர்களாக நின்று இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியும் சென்றுள்ளார்கள்.
அந்த வரிசையில் நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்ட்டவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அனுப்பபட்ட வேதமே திருக்குர்ஆன்.

 இப்படிப்பட்ட உறுதியான வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட்டு நாமாகவே தான்தோன்றித்தனமாக வாழ்வதும் நம்மைப் போன்ற அற்ப அறிவுகொண்ட மனிதர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கைப் பாதையை ஏற்பதும் இந்த பூமியில் பற்பல குழப்பங்களுக்கும் அழிவுகளுக்கும் அதர்மத்திற்குமே வழிவகுக்கும். மேலும் இறைவனைப் புறக்கணித்ததற்காக அவனுக்கு நன்றிகேடு செய்ததற்காக மறுமையில் அவனது தண்டனைகளையும் பெற்றுத்தரும் என்பதே உண்மை!

= இறைவனின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (திருக்குர்ஆன் 3:83)

ஆக, படைத்தவனான ஏக இறைவன் ஒருவன் மட்டுமே மனிதனுக்கும் இன்னபிற படைப்பினங்களுக்கும் எது சிறந்தது என்பதைப் பக்குவமாக அறிந்தவன். அவை அனைத்தின் நோக்கங்களையும் அவற்றின் உரிமைகளையும் செயல்பாடுகளையும் பற்றிய முழுமையான அறிவு அவனிடம் மட்டுமே உள்ளது. மட்டுமல்ல, நமது இந்தக் குறுகிய வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது செயல்பாடுகளை விசாரிக்கவும் செய்வான். நமது பாவபுண்ணியங்கள் அடிப்படையில் சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ நமது நிரந்தர வாழ்விடங்களாக வழங்கவும் உள்ளான். அந்த இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறியை ஏற்று வாழாதோர் இம்மையில் தற்காலிக சுகங்களை அடைந்தாலும் மறுமையில் பேரிழப்பையே அடைகிறார்கள் என்பதை இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் உறுதிபடக் கூறுவதைக் காணுங்கள்:
=  இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85)
= . அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! .(திருக்குர்ஆன் 61:9)
நன்றி: www.invitetogod.com
தமிழில்: காஜா மொய்தீன்
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!