இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஏப்ரல், 2022

திருக்குர்ஆன் நற்செய்திமலர் 2022 மே மாத இதழ்



திருக்குர்ஆன் நற்செய்திமலர் 2022  மே மாத இதழ்  

பொருளடக்கம்:
இருள் மறைத்தது ஆனால் இறைவன் வெளிப்படுத்தினான்! -2
வாசகர் எண்ணம் -3
பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்! -4
அறிவியல் பற்றிய அறிவுபூர்வமான அணுகுமுறை -7
அறிவியல் அணுகுமுறையை (The scientific Method) உலகுக்குத் தந்த அரபு முஸ்லிம்கள் -10
திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் செவிப்புலன்! -12
அக்னோஸ்டிக் ஒருவரின் பயணம் -13
செவிப்புலனுக்கு ஏனிந்த முக்கியத்துவம்? -18
இறைவனை உணரத்தான் எத்தனை எத்தனை சான்றுகள்! -21 21
இறைவனை உணராத புலன்கள் இருந்தென்ன லாபம்? -22
ஜகாத் வழங்காதிருப்பது பாவம் -23
ஜகாத் மூலம் அச்சமற்ற வாழ்வு! -24
-------------------------------- 

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள் 

இறைவன் ஏன் செவிப்புலனை முதன்மைப் படுத்துகிறான்?


பொதுவாகவே இறைவன் மனிதனுக்கு வழங்கிய மாபெரும் பொக்கிஷம் அவனது உடல். தெருவோரத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட எளியோர் ஆயினும் சரி, மனநலம் குன்றி சமூகத்தின் பரிகாசத்துக்கு ஆளாகும் மனிதர்களும் சரி, உடல் என்ற பொக்கிஷத்தைப் பொறுத்தவரை கோடீஸ்வரர்களே! அந்த அளவுக்கு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் புலன்களும் மதிப்பு மிக்கவை.

பொதுவாகவே ஐம்புலன்களைப் பற்றிப் பேசும் போது மக்கள் அனைவரும் பார்வைப் புலனையே- அதாவது கண்களையே- மிக்க மதிப்பு மிக்கதாக முன்னிலைப்படுத்தி பேசுவதை நாம் அறிவோம்.  ஆனால் நம்மைப் படைத்தவன் பார்வைப் புலனைவிட செவிப்புலனை முதன்மைப்படுத்தி கூறுவதை நாம் திருக்குர்ஆனில் காணலாம். இதில் மிகப்பெரிய சூட்சுமம் இருப்பதை நீங்கள் காணலாம். திருக்குர்ஆன் நம்மைப் படைத்தவனின் வேதமே என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

கீழ்க்கண்ட வசனங்களை படித்து விட்டு தொடரும் அறிவியல் உண்மைகளை கவனியுங்கள்..

= இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன் : 23:78)

= உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் அல்லாஹ்என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக. (திருக்குர்ஆன்: 10:31)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
= உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் : 16:78)


செவிப்புலன் செய்யும் முக்கியப் பணி:

காது அல்லது செவிப்புலன்களின் பணி ஒலி உணர்தல் மட்டுமல்ல. நம் உடலை சமநிலையில் வைத்திருத்தல் என்ற அதி முக்கியமான பணியும்தான். நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்குக் காரணம், நம் காதுதான். மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப்படுத்த உதவுவது செவிப்புலன்தான்.

ஒரு இறந்துபோன சடலத்தை நாம் செங்குத்தாக நிறுத்தவோ அல்லது உட்காரவோ வைக்க முடியுமா சிந்தித்துப்பாருங்கள். ஒரு சைக்கிளை நாம் அதன் சக்கரங்களின் மீது நிறுத்தி வைக்கவும் ஒரு ஸ்டான்ட் இல்லாமல் ஆகாது. ஆனால் ஒரு உயிருள்ள மனிதனால் நிற்கவும் குனியவும் குதிக்கவும் எல்லாம் முடிகிறது என்றால் அதற்குக் காரணம் செவிப்புலனில் அமைந்துள்ள புலன் உணர்வுக்கான கட்டமைப்புதான். மட்டுமல்ல, அவனால் கயிற்றின் மீது நடத்தல், உயரத்திலிருந்து நீருக்குள் குதித்தல், நீந்துதல் போன்ற சாகசங்களையும் நிகழ்த்த முடிகிறது. இந்தப் புலன் உணர்வை equilibrioreception என்கிறார்கள்.

உடல் எந்த வாட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு தன்னைத்தானே சமநிலைப் படுத்திக்கொள்வது இதன் மூலம்தான். கண்பார்வை , தசைகளின் இறுக்கம் அல்லது தளர்வு நிலை இதைத்தவிர , உடலின் பிரத்தியேக சென்சார் நம் செவிப்புலனில்தான் உள்ளது.  அந்த சென்சார் தரும் உள்ளீட்டை , பார்வை மற்றும் தசைகளின் நிலை இவற்றோடு கோர்த்துப்பார்த்து மூளை புரிந்துகொள்கிறது. செவிப்புலனில் அமைந்துள்ள காக்லியா (cochlea) திரவம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்போது யோசித்துப்பாருங்கள், செவிப்புலன் இப்பணியைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று. பார்வை இல்லாமல்கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் மேற்படி சமநிலை தவறிய மனிதனால் எவ்வளவு நாள் வாழ்ந்திட முடியும்? யோசியுங்கள். 

ஒலி உணரும் பணி:

ஒலி அலைகளை காது மடல்கள் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

காதின் மடல்கள் அல்லது சோனைகள் மிக அற்புதமான வடிவம் கொண்டது,. மண்ணெண்ணெய் அடுப்பில் புனல் வைக்காமல், அப்படியே எண்ணெயை ஊற்றினால் எப்படி சிதறி போகும். அதே போன்றுதான், காது மடல்கள். இல்லாவிடில், ஒலி அலைகள் நேரடியாக மண்டைக்குள் மோதி, அதுவே நம்மை கொன்று விடும் அளவுக்கு வலுவானவை. அதைத்தான், காது மடல்களும் அதை சுற்றியுள்ள சிக்கலான அமைப்புகளும வடிகட்டும் வேலையை செய்கின்றன.

இனி படைத்தவன் கூறும் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்போம் வாருங்கள்:

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் 95:4)

 = (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 76:2) 

மேற்படி வசனத்திலும் இறைவன் செவிப்புலனை முதன்மைப்படுத்தி இருப்பதை கவனியுங்கள். ஆம், இந்த செவிப்புலனும் பார்வைப் புலனும் நமக்கு வழங்கப்பட்டு இருப்பது முக்கியமாக இந்தக் குறுகிய வாழ்க்கை என்ற பரீட்சையை செவ்வனே நிறைவேற்றுவதற்காகவே. இந்தப் பரீட்சையின் நோக்கம் என்ன?

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இஸ்லாத்திற்கே உரிய தனித்தன்மைகள்

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் வழிமுறையே இஸ்லாம். ஏனைய மதங்களோடும் மனிதர்கள் உருவாக்கிய கொள்கைகளோடும் ஒப்பிடும்போது கீழ்கண்ட தனித்தன்மைகளை அது கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்:

1-இஸ்லாம் கடவுள் யார் என்பதற்கு எளிய மற்றும் தர்க்கரீதியான புரிதலை வழங்குகிறது - இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் கடவுள் அல்லது இறைவன் என்பவன் முழுமையானவன். - இறைவன் ஒரு மனிதரோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு கற்பனை உருவமோ சிலையோ அல்ல. மூன்றில் ஒன்றோ அல்லது ஒன்றில் மூன்றோ அல்ல. அவனது படைப்பினங்களைப் போல அல்லாமல் இறைவன் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவன். இறைவனின் இலக்கணம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
= சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரேஇறைவன் என்பது பொருள்) 

2. சக மனிதன் சகோதரனே தனக்கு சரி சமமே என்பதை ஆணித்தரமாக பறை சாற்றி அதை உலகளாவ நடைமுறைப்படுத்தியும் வருகிறது இஸ்லாம்.  இனம், நிறம், இடம், மொழி அடிப்படையில் பிரிந்துகிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறது இஸ்லாம்.  மனிதகுல ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் பின்னால் உள்ள உறுதியான காரணத்தை  இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளான் இறைவன்:

 மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)
3 -இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவனின் அனைத்து தூதர்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். யாரையும் நம் மனோ இச்சைப் படி மறுப்பதற்கு இடமில்லை. உலகிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1,24,000 இறைத்தூதர்கள் அனைவரையும் நேசிக்கிறோம். அவர்களில் யாரையும் நாம் மறுக்க முடியாது. சில மதங்களில் உள்ளதுபோல - உதாரணமாக யூதர்கள் இயேசு மற்றும் முஹம்மது நபியை நிராகரிக்கிறார்கள் - மேலும் கிறித்துவத்தில் முஹம்மது நபியை ஏற்பதில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நாம் அனைவரையும் ஏற்றாக வேண்டும். அவர்களில் பாகுபாடு காட்டுதலும் கூடாது.
 (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) இறை விசுவாசிகளும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (திருக்குர்ஆன் 2:285)
4 -இஸ்லாத்தில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே இடைத்தரகர் இல்லை -- இறைவனை நேரடியாக தொழலாம் - இடையில் ஒருவர் தேவை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
5 -ஏதேனும் தனிநபரின் பெயராலோ குழுவின் அல்லது இனத்தின் அல்லது நாட்டின் பெயராலோ அறியப்படாத மார்க்கம் இஸ்லாம். அது தன் பண்பின் பெயரால் அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான இறைவனுக்கு கீழ்படிதல் என்பதே. அவ்வாறு கீழ்படிந்து வாழ்பவரே முஸ்லிம் என்று அறியப்படுகிறார். இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் சரி... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.
6- இஸ்லாத்தில் வழிபாடு என்பது வெறும் சடங்குகளைச் சார்ந்தது அல்ல. இறைவனுக்கு விருப்பமான எந்த ஒரு செயலும் இங்கு வழிபாடே! அனைத்து நல்ல செயல்களும் வழிபாடே. புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தை கூறுதல், வாழ்க்கைத் துணையை மென்மையாக நடத்துதல், பணியாட்களிடம் பண்போடு நடத்தல் என அனைத்தும் வழிபாடே! இவை அனைத்தும் கடவுளால் பெரிதும் வெகுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அதற்கு எதிரானவை - அதாவது இறைவனுக்கு விருப்பமில்லாத எந்த ஒரு செயலும் பாவமே. மக்களை தவறாக நடத்துதல், ஏமாற்றுவது, பொய் சொல்வது, அவதூறு பரப்புதல், அப்பாவி மக்களை காயப்படுத்துவது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பது என அனைத்தும் பாவங்களில் சேரும்.  

  நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.( திருக்குர்ஆன் 2:177)

7. இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக இருக்கிறான். நீங்கள் எப்போதும் (மரணத்திற்கு முன்) மனந்திருந்தி உளமார மன்னிப்பு கேட்டால் அவன் உங்களை கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். பாவமன்னிப்பு கேட்டபின் மீண்டும் அந்தப் பாவத்திற்குத் திரும்பக் கூடாது. இதைத் தவிர பாவமன்னிப்புக்கு குறுக்கு வழிகள் இல்லை. இறைவனின் மன்னிப்பு பெறுவதற்காக எந்த விலையும் கொடுக்க வேண்டியதில்லை. எந்த மனிதரின் அல்லது இறைத்தூதரின் பெயரினாலோ, இரத்தத்தினாலோ இரட்சிப்பு உண்டாக வாய்ப்பில்லை என்கிறது.
8-இஸ்லாம் ஒரு வாழ்வியல் வழிமுறை - அது உங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு துறையிலும் செயல்பாடுகள் ஒழுங்குள்ளதாக அமைக்க உதவுகிறது. உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் தெய்வீக வழிகாட்டல்களும் இஸ்லாத்தில் கிடைக்கின்றன.
9--இஸ்லாத்தின் ஆதார நூல்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் விதமும் ஆச்சரியமானதே! வரலாற்றில் திருக்குர்ஆனைப் போல எந்த புத்தகமும் இவ்வளவு நேர்த்தியாகப் பாதுகாக்கப்படவில்லை. நபிகளாரின் காலம் தொட்டு இன்றுவரை கோடிக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்டும் அடிக்கடி ஒதப்பட்டும் வரும் நூல் இதுபோல எதுவும் இல்லை. உலகம் முழுக்க அன்றுமுதல் இன்றுவரை ஒலிவடிவிலேயே சற்றும் மாற்றமில்லாமல் உலாவரும் ஒரே புத்தகமும் இதுதான்! இறைவனே இதன் பாதுகாப்பை உறுதி செய்கிறான்:
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம் (திருக்குர்ஆன் 15:9)

திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் வாழ்க்கை குறிப்புகளும் நபிமொழிகளும் அடங்கிய ஹதீஸ் தொகுப்பும் அறிவிப்பாளர் வரிசை உட்பட மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தப் பட்டு வருவதும் இஸ்லாத்தின் தனித்தன்மைகளில் ஒன்று.  

10-இஸ்லாம் மார்க்கம் ஆதாரங்கள் மற்றும் தர்க்கத்தின் (logic) அடிப்படையில் அமைந்தது. இஸ்லாம் அறிவில்லாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைத் தடைசெய்கிறது மற்றும் அது உண்மையை அறிய நமது பகுத்தறிவை பயன்படுத்த நம்மை அழைக்கிறது,
 மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (திருக்குர்ஆன் 47:24)
11-இஸ்லாம் கற்பிக்கும் ஒழுக்க விழுமியங்கள் உயர்வானவை. நடைமுறை சாத்தியமானவை. அதனால் அவை வெற்று போதனைகளாக நில்லாமல் இஸ்லாமிய்ர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக மதுவிற்கு அடிமையாதல், கருக்கொலை, சிசுக்கொலை, வரதட்சணை, பாலியல் கொடுமைகள், ஜாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் போன்றவற்றிலிருந்து இஸ்லாமிய நாடுகள் பாதுகாப்பு பெற்றிருப்பதை இங்கு குறிப்பிடலாம்.

12 - இஸ்லாம் கூறும் சொர்க்கம் என்பது ஒரு கற்பனையோ மாயையோ அல்ல. அல்லது வெறும் ஆன்மீக ரீதியிலான அனுபவமோ அல்ல. ஒரு உண்மையான உடல்ரீதியான வாழ்க்கையைத்தான் சொர்க்கத்தில் நீங்கள் அனுபவிக்க உள்ளீர்கள். உண்ணுதல், பருகுதல், இன்னும் இன்ன பிற இன்பங்களை குறைகளற்ற முறையில் திடகாத்திரமான உடலோடு அனுபவிக்கும் இடமே சொர்க்கம்.

------------------------------ 

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!