இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 செப்டம்பர், 2012

இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?

Related image
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
= இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்கு அக்கிரமங்கள் நடக்குமா?
= இறைவிசுவாசிகளுக்கு ஏன் நோய்கள் மற்றும் இன்னபிற துன்பங்கள் நேர்கின்றன?
= கடவுளை நம்பாதவர்களும் கடவுளைக் கும்பிடாதவர்களும் நன்றாகத்தானே வாழ்கிறார்கள்? அவர்களுக்குக் கடவுளை வணங்காததால் எந்த இழப்பும் நடப்பதில்லையே?

இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுவது இயல்பே. ஆனால் பெரும்பாலோர் இது கடவுள் நம்பிக்கை. இதில் கேள்விகள் கேட்கக்கூடாது. கடவுளைப் பற்றிய  நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி தங்களைத்தாங்களே சமாதானப்படுத்தி சிந்திக்காமல் இருந்து வருகிறார்கள். இது பற்றிய தெளிவின்மை நாளடைவில் இவர்களை நாத்திகத்திற்க்குக் கொண்டு சென்று விடுகிறது.
ஆனால் உண்மையான இறைமார்க்கம் இவற்றுக்குத் தெளிவான விளக்கங்களைத் தருகிறது. பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இதற்கான தெளிவைப் பெறவைக்கிறது.

மேற்க்கண்ட சந்தேகங்கள் எழுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால். அது இவ்வுலகம்தான் எல்லாமே, இதற்கப்பால் ஒன்றும் கிடையாது என்ற குறுகிய கண்ணோட்டம்தான்!
ஒரு கிணற்றில் பிறந்து வளர்ந்த இரண்டு தவளைகள் அந்தக் கிணற்றின் ஆழ  அகலங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தன. அப்போது மேலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக இறக்கப்பட்ட வாளி தண்ணீரோடு இத்தவளைகளையும் அள்ளிச்சென்றது. கிணற்றுக்கு வெளியே வந்து விழுந்த தவளைகள் சுற்றும்முற்றும் பார்த்து வியப்படைந்தன. அப்போதுதான் தங்கள் கிணறு என்பது இவ்வூரில் எவ்வளவு சிறிய இடம் என்பதை உணர்ந்தன.
 இப்போது அந்தத் தவளைகளை ஒரு பறக்கும் வாகனத்தில் ஏற்றிச் மேலே சென்று காண்பித்தால் அப்போது அவை உணரும் இந்த ஊர் என்பது மாவட்டத்தின்  ஒரு பாகம் என்பதை. இன்னும் மேலே செல்லச் செல்ல தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் புலப்படும். பிறகு இந்தியா, ஆசியாக் கண்டம், இன்ன பிற கண்டங்கள் புலப்படும், இன்னும் மேலே செல்லச் செல்ல  பூமி ஓர் பந்து போன்ற உருண்டை என்பதும் இந்த பூமி சூரியகுடும்பத்தின் ஓர் அங்கம் என்பதும் இப்பரந்த பிரபஞ்சத்தின் ஒரு மிக மிக நுண்ணிய ஒரு துகளே தங்கள் வாசித்திருந்த பூமி என்பதுமெல்லாம்  அந்த கிணற்றுத்தவளைகளுக்குப் புலப்படும்.
அந்தக் கிணற்றுத் தவளைகள் போன்ற நிலையில்தான் நம்மில் பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் தங்கள் அறிவுக்கும் சிந்தைக்கும் பூட்டுபோட்டு அடக்கி வைத்து இவ்வுலகின் இயல்பை சிந்திக்க மறுக்கிறோம். இது தவறு. இப்படிப்பட்ட குறுகிய சிந்தனை இப்படிப்பட்டவர்களை இறைவ.னைப் பற்றியும் அவனது திட்டங்களைப் பற்றியும் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இவ்வாழ்க்கையின் உண்மை நிலையை கண்மூடிக்கொண்டு மறுப்பதன் விளைவாக முடிவில் அவர்கள் நரக நெருப்புக்கு இரையாகிறார்கள்.
வாருங்கள் சற்று பரந்த மனப்பான்மையோடு சிந்திப்போம்.....
 இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? அவ்வாறு சிந்திக்கும்போது இறைத்தூதர்க்ளும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப் பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்! எனவே இங்கு செல்வமும் வறுமையும் நல்லவையும் தீயவையும் நியாயமும் அநியாயமும் நம் முன் மாறிமாறி வரும். நல்லோர்களுக்குத் துன்பமும் தீயோர்களுக்கு இன்பமும் கிடைப்பதெல்லாம் இங்கு சகஜம். ஆனால் அவற்றைப் பார்த்துவிட்டு அவசரமாக எந்த முடிவுக்கும் நாம் வந்துவிடக்கூடாது. ‘இறைவனே இல்லைஎன்றும் இறைவன் இருந்திருந்தால் இந்த அநியாயம் நடக்குமா?’ என்றெல்லாம் பிதற்றுவது அறியாமையின் வெளிப்பாடுகளே!
உடனுக்குடன் தண்டித்தால் என்ன ஆகும்?
 ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா? அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான். அக்கூடத்திற்குள்  வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை? இறைவனே தன் திருமறையில் கூறுகிறான். 
மனிதர்களுடைய அநீதியின் காரண மாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள். . (திருக்குர்ஆன் 18:58.)
என்று தணியும் நீதியின் வேட்கை?
  இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப்  பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன்  முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தொல்வியுறுவோருக்கு  நரகமும் விதிக்கப்படும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185..)
ஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.
நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)

அதாவது ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டித் தாக்கியிருந்தால் முட்டப்பட்ட ஆடு முட்டிய ஆட்டைத் தாக்கும் வாய்ப்பை அன்று இறைவன் வழங்குவான்.
 இவ்வுலகைப் பொறுத்தவரையில் இதுதான் இறைவனின் ஏற்பாடு. இதைத் தட்டிக்கேட்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் மிகமிக அற்பமானவர்கள். நம் சிற்றறிவைக் கொண்டு இப்பரந்த பிரபஞ்சத்தின் படைப்பாளனின் திட்டங்களை ஆராயவும் எடைபோடவும் முடியாது என்பதை ஒப்புக்கொண்டு அவன் தனது தூதர்கள் மூலமாக எதை அறிவித்துத் தருகிறானோ அவற்றை அப்படியே ஏற்பதுதான் அறிவுடைமை! 
================ 
இஸ்லாம் என்றால் என்ன?
அல்லாஹ் என்றால் யார்?
http://www.quranmalar.com/2012/10/blog-post_8.html


4 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைமறைவு நண்பரே,
      இஸ்லாம் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முன் உங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துவது கடமையாகிறது. முதலில் இங்கு நன்மைகள் எவை தீமைகள் எவை அல்லது புண்ணியங்கள் எவை மற்றும் பாவங்கள் எவை என்பதை நாம் அனைவரும் அறியக் கடமைப்பட்டுள்ளோம். நாம் இருவரும் வெவ்வேறு மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாவபுண்ணியங்களை எவ்வாறு தீர்மானிப்பது?

      பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலைப் பாவமாகவோ புண்ணியமாகவோ தீர்மானிக்க முடியுமா? அல்லது ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா? அல்லது நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா? அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? king is always right! –(அரசன் எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா? அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா?
      இப்படி எந்த வழியில் நாம் நன்மை – தீமை அல்லது பாவம் – புண்ணியம் பற்றி ஆராய்ந்தாலும் நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். எனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்: இதை உங்களால் ஒப்புக்கொள்ள முடிகிறதா பாருங்கள்!

      யார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும் உண்மை. அவன்தான் இப்பெரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. எனவே நம் பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.

      அது மட்டுமல்ல, இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வை ஒரு பரீட்சைக் களமாக இறைவன் அமைத்துள்ளதையும் நாம் மறந்து விடக்கூடாது.
      "உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். "(திருக்குர்ஆன்62:2.)
      இந்தப் பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது! மாறாக எந்த மனிதனும் மனிதர்களின் குழுக்களும் நீதிமன்றங்களும் சட்டசபைகளும் பாராளுமன்றங்களும் இன்ன பிற ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களும் பாவ-புண்ணியங்கள் எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. காரணம் இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி இறைவன் மட்டுமே. அன்று அவனே நமது வாழ்க்கையில் நாம் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ விதிக்க இருக்கிறான்.
      ஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம். மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம். இவ்வுண்மையை மறுத்து நம் மனோ இச்சைகளுக்கும் முன்னோரின் பழக்கவழக்கங்களுககும் இன்னபிற சக்திகளுக்கும் செவிசாய்த்து நாம் வாழ்ந்தால் மிஞ்சுவது இவ்வுலகில் குழப்பமும் அமைதியின்மையும் கலவரங்களுமே. மறுமையிலோ இறைவனின் கோபத்தையும் அவனது தண்டனையாக நரகத்தையுமே அடைய நேரிடும்.
      எனவே முதலில் நன்மை தீமைகளை அளவுகோல் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள். நீங்கள் கூறியபடி நாய்கள் ஏன் ஊளை இடுகின்றன என்பதற்கு தெளிவான விளக்கங்கள் நபிமொழிகளில் உள்ளன. அதைப் பிறகு சொல்கிறேன்.

      நீக்கு
  2. Masha Allah good article, clearly explained the purpose of creation.
    لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 
    (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 2:256)

    பதிலளிநீக்கு
  3. கத்அப்லஹா மன்ஷக்காஹா, மனதைபரிசுத்தபடுத்தியவன் வெற்றிபெற்றுவிட்டான், திருமரைக் குர்ஆன், அப்துல்றஸ்ஸாக், வெளிமடைநகரம், சிரிலங்கா

    பதிலளிநீக்கு