இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 பிப்ரவரி, 2013

வன்முறையை ஒழித்திடுமே வான்மறை!


உலகில் அடக்குமுறைக்கு ஆளானவர்களும் அநீதி இழைக்கப்பட்டவர்களும் பழிவாங்க முற்படுவதும் அந்தப் பழிவாங்குதலை எப்பாடுபட்டேனும் நியாயம் அநியாயம் ஏதும் பார்க்காமல் நிறைவேற்றிக் கொள்வதும் மனித வழக்கம் என்பதைக் கண்டு வருகிறோம். ஆனால் இஸ்லாம் மனிதனுக்குள் இறையச்சம் என்ற பண்பை விதைப்பதன் மூலம் இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. (இறையச்சம் என்றால் தன் செயல்களுக்கு இறைவன் மறுமையில் வெகுமதியோ தண்டனையோ வழங்குவான் என்ற உணர்வு). எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது" (குர்ஆன் 5:8).

"
நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே!" (குர்ஆன் 6:15).

"
திண்ணமாக இறைவன் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.." (குர்ஆன் 16:90).

நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.

பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக, மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.

"..அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். இறைவன் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்" (குர்ஆன் 3:134).

"
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான்" (குர்ஆன் 41:34).

இன்று தீவிரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

"...இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது" (குர்ஆன் 2:178) - இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

"
எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது" (குர்ஆன் 42:41).

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது. 
"கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்" (குர்ஆன் 2:178).

"ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்" (குர்ஆன் 42:43).

மன்னிப்பதுதான் வீரமிக்கது என்று குர்ஆன் கூறுகிறது. 
 (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (குர்ஆன் 16:126)

இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கி விடும் அல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக