இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூன், 2022

உலக அழிவுக்கு முன் அறிகுறிகள்!


நமக்கு எப்படி மரணம் நிச்சயமோ அதிப் போலவே இவ்வுலக்த்துக்கும் ஒரு நாள் அழிவுண்டு. உலக அழிவு நாளுக்கு முன் தோன்றும் சில அறிகுறிகளைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இந்த அறிவிப்புகளில் பலதும் இன்று உண்மையாகி வருவதை வைத்தே நபிகளாரின் மொழிகளின் நம்பகத்தன்மையை உணரலாம். அவைப் பொய்க்காதவை என்றும் இறைவனிடம் இருந்து வந்தவையே என்பதையும் நாம் அறியலாம். கீழே அப்படிப்பட்ட நபிமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன அவற்றின் இறுதியில் நபிமொழித் தொகுப்பு நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  
கீழ்கண்ட நபிகளாரின் மொழிகள் 1440 வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டவை என்பதையும் இவை அன்றைய மக்களுக்கும் இன்றைய மக்களுக்கும் நாளைய மக்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்டவை. என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்களுக்கிடையே உள்ள அறிவு வளர்ச்சியின் வேறுபாட்டையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இவற்றின் உண்மையான விளக்கத்தை அவை நடக்கப் போகும் காலகட்டம் வரும்போதுதான் முழுமையாகப் பெறமுடியும். 

உதாரணமாக கீழ்கண்ட நபிமொழியைப் பாருங்கள்:
பெண் எஜமானியைப் பெற்றெடுத்தல்:
  • ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. (நூல்: புகாரி)
இந்த நபிமொழி இன்று இரண்டுவிதமாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. 
  1. பெண்கள் தம் தாயை அடிமைகளாக நடத்துவார்கள்.
  2. தங்கள் வேலைக்காரிகளோடு எஜமானர்கள் உறவு கொண்டு அதன்மூலம் அவர்கள் எஜமானர்களின் பிள்ளைகளைப் பெற்றேடுப்பார்கள்
மேற்கண்ட எந்த விளக்கத்தை நாம் எடுத்துக்கொண்டாலும் இரண்டுமே இன்று நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். நபிகளாரின் காலத்தில் இருந்த அடிமைத்தளை இன்று இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் மீண்டும் அப்படியொரு நிலை வந்து அங்கு நடக்கப் போவதையும் இந்நபிமொழி எடுத்துச் சொல்வதாக இருக்கலாம். எந்த சாத்தியக்கூறுகளையும் நாம் தள்ளுபடி செய்ய இயலாது. இறைவனே முழுமையாக அறிந்தவன்.

தகுதியற்றவர்களிடம் ஆட்சி இருக்கும்
  • "நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டார் “பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (புஹாரி).
தகுதியற்றவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆள்வதற்கு எந்த தகுதியும் இல்லாத திரைப்பட நடிகர்களிடமும் நடிகைகளிடமும் முன்னாள் ஆட்சியாளர்களின் மனைவிமார்களிடமும் பிள்ளைகளிடமும் ஆட்சிப்பொறுப்புகள் ஒப்படைக்கப்ப்படுவதும் நாம் கண்டுவருகிறோம்.

வாழும் ஆசை அற்றுப் போய் விடும்:
  • ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் – புஹாரி)
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்:
  • விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்தான் (நூல்:புஹாரி 5577, 5580)
  • யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
பாலைவனம் சோலைவனமாகும்:
  • செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தை (எழைவரியை)ப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது (நூல் : முஸ்லிம்)
காலம் சுருங்கும்:
  • “காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் அஹ்மத்.)
  • (மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி)
நிர்வாணி மக்கள் தலைவராக ஆகுதல்:
  • ‘செருப்பணியாத, நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
கொலை அதிகரித்தல்:
  • ‘மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் – புகாரீ)
  • எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். ((முஸ்லிம்)
 பூகம்பங்களும் அதிகரித்தல்:
  • நில அதிர்வுகளும், பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி)
எப்படியாவது சம்பாதித்தல்:
  • ‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் (நூல் – புகாரீ.)
நெருக்கமான கடை வீதிகள்:
  • கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அஹ்மத்)
பின் தங்கியவர்கள் உயர்ந்த நிலையை அடைதல்:
  • 'வறுமை நிலையில் நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். (நூல்: புகாரி)
  • ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி)
  • ‘ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
செல்வம் பெருகும்:
  • இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் இதற்காகத்தான் என் கை வெட்டப்பட்டது’ என்பான். கொலைக்காரன் வந்து, ‘இதற்காகத்தான் நான் கொலை செய்தேன்’ என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, ‘இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்’ என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், திர்மிதீ.)
  • யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (நூல் : புகாரி)
  • ’நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரீ)
பேசாதவை பேசும்:
  • விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. (நூல்: அஹ்மத்)
ஆடை அணிந்தும் நிர்வாணம்:
  • ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.( நூல் : முஸ்லிம்)
பேச்சைத் தொழிலாக்கி சம்பாதித்தல்:
  • தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்:
  • ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. (நூல்: புகாரி 3609, 7121)
  • எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை இறைவனின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் : திர்மிதீ,, அபூதாவூத்.)
மாபெரும் யுத்தம்:
  • இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். (நூல் : புகாரி)
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
  • ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம் )
வாரி வழங்கும் மன்னர்
  • கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம்)
மதீனா தூய்மையடைதல்:
  • துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம்)
மாபெரும் பத்து அடையாளங்கள்:
மேலே கூறப்பட்ட அடையாளங்களில் சிலவற்றை நாம் இன்றே நாம் கண்டு கொண்டிருக்கிறோம். மற்றவை இனி நடைபெற உள்ளன. ஆனால் கீழே சொல்லப்படுபவை அனைத்தும் இறுதிநாளுக்கு முன் நடைபெற உள்ள பெரிய நிகழ்வுகள் ஆகும். இவற்றை மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

இந்த பத்து அடையாளங்களில் மிகப் பிரதானமான மூன்று அடையாளங்கள் ஏற்படுமாயின் இறைநம்பிக்கை கொள்வது கூட பயனளிக்காது என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
'சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறைநம்பிக்கை கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது இறை நம்பிக்கை பயனளிக்காது' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா.)

'சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது. அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும்போது இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். நூல்கள் - புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா.
------------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக