இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 மார்ச், 2024

தொழுகைக்கான அழைப்பின் அற்புதங்கள்


அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது 'பாங்கு' என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.

அதான் எப்படி தொடங்கியது?

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள்.  நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.  சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார்  “மனித குரலை” தொழுகைக்கான அழைப்பிற்கு  பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். 

நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்)  அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.

பாங்கு வாசகங்களின் பொருள்:

அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)

அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனே அனைத்துக்கும் மேலானவன் என்கிறது இந்த முழக்கம். அனைத்துலகும் அவற்றில் உள்ள படைப்பினங்களும் நமக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரமும் என அனைத்தும் அந்த வல்லோனுக்கே சொந்தம், எனவே அவனது அழைப்பான இந்த அதானுக்கு அல்லது பாங்குக்கு பதிலளிப்பீராக என்ற நினைவூட்டுகிறது இந்த வாசகம். 

அவனுக்கு அடிபணிந்து வாழ்வதே நம் வாழ்வின் தலையாய நோக்கம் என்ற உணர்வைப் பெறுவோர் உடனடியாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும் வியாபாரத்தையும் தற்காலிகமாக இடைவெளி கொடுத்துவிட்டு தொழுகையில் பங்கு பெறுகிறார்கள். 

கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:

அஷ்ஹது  அன் லா இலாஹ இல்லல்லாஹ் -  வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

அதாவது நான் அவனது படைப்பினங்களையோ மனிதர்களையோ மனிதர்கள் சமைத்த சிலைகளையோ உருவங்களையோ அல்லது சமாதிகளையோ வணங்க மாட்டேன். மாறாக படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்று உறுதி கூறுகிறேன் என்பதாக இதன் பொருள் விரியும். 

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்

படைத்த இறைவன் யாரை இந்தக் காலத்துக்கு தன் தூதராக அனுப்பியுள்ளானோ அவரை என் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று இதன் பொருள் விரியும். 

மேற்கண்டவை இரண்டும் இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்களாகும். ஐவேளையும் இந்த உறுதிமொழி நமக்கு நினைவூட்டப்படுகிறது. இஸ்லாம் 

ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்

ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்

உண்மையில் இவை இரண்டும்தான் தொழுகைக்கான அழைப்பு வாசகங்களாகும். அதாவது இந்தப் பரீட்சை வாழ்வில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோர்தான் வெற்றி ஈட்டுவார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்தலே இஸ்லாம் எனப்படும். நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறீர்களா இல்லையா என்பதை உரசிப் பார்க்கும் செயல்தான் ஐவேளைத் தொழுகை. 

அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.

லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)

பாங்கின் முக்கியத்துவம்:

பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.

அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல  நன்மைகள் உண்டாகின்றன.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (திருக்குர்ஆன் 23:1,2,9)

தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.

நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.

கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.

சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக