இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 நவம்பர், 2021

பாலியல் சட்டங்களை மனிதனே இயற்ற முடியுமா?


 பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் பாராமல் பொது இடங்களில் தூக்கில் இடவேண்டும், குற்றவாளியின் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும், அவனைக் கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்றெல்லாம் குமுறுவதை நாம் காண்கிறோம். மெல்லமெல்ல இந்தக் குமுறல் அடங்குகிறது. சிறிதுகாலம் கடந்த பின் மீண்டும் எழுகிறது. மீண்டும் அடங்குகிறது... மீண்டும் எழுகிறது... அதாவது பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. இந்நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முறையான பாலியல் தொடர்பான விதிமுறைகளும் சட்டங்களும் இல்லாமையே!

பாலியல் தொடர்பான விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உருவாக்கியவனைப் புறக்கணிக்கலாமா?

நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின்,  ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன் என்பதை நாம் முதற்கண் உணரவேண்டும். எந்த ஒரு தனிநபரும் சரி, மனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும்  பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும். சமூகத்தில் உண்டாகும் ஏதேனும்  ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட ஏதேனும் மக்கள் இயக்கங்களும் உதாரணமாக கம்யுனிச இயக்கம், மனித உரிமை இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் போன்றவைகளும் இதற்குத் தகுதி பெற்றவை அல்ல என்பது தெளிவு.

படைத்தவன் மட்டுமே தகுதிபெற்றவன்

ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்தவன் அவர்களின் படைப்பாளன் மட்டுமே. அவன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களை இயற்ற முடியும். அவன் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைத்து மனிதகுலத்துக்கும் பொருத்தமானவை. அனைத்து படைப்பினங்களோடும் இணக்கமானவை. அந்த இறைவன் ஒருவனே அனைத்துலகுக்கும்  சொந்தக்காரன்  என்பதால் அவன் மட்டுமே அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மிருகங்களின் மற்றும் இன்ன பிற படைப்பினங்களின் உரிமைகளையும் பக்குவமான முறையில் பங்கீடு செய்து நிர்ணயிக்கவும் தகுதியானவன். அந்த இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் சட்டங்களின் ஒரு பிரிவே பாலியல் தொடர்பான சட்டங்கள்.

சரி, இந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான்?

இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான்.  இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும். 

பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:

மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின.  அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன். இறைவனின் ஏவல்- விலக்கல்களுக்கு கட்டுப்பட்டு வாழும் முறையே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது.

ஆக, ஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.

சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?

இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.

= அவனே அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும்அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 28:70)

(அல்லாஹ் என்றால்  வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

====================== 

தொடர்புடைய ஆக்கங்கள்:

 காமுகனே கொஞ்சம் நில்! (quranmalar.com)

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக