இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஏப்ரல், 2025

நபிகளாரின் வாழ்விலேயே மிகத் துயரமான நாள்!


சந்தேகத்துக்கு இடமின்றி உலகில் அதிவேகமாகப் பரவும் வாழ்வியல் கொள்கை இஸ்லாம்.  தனது பகுத்தறிவு பூர்வமான கொள்கைகளால் உலகில் ஏறக்குறைய மூன்றில் ஒருவரை தன்னுள் ஈர்த்து நிற்கிறது இஸ்லாம்! இந்த அழகிய வாழ்வியல் கோடிக்கணக்கான உலக மக்களை அவர்களைப் பீடித்திருந்த மூடநம்பிக்கை, மதச் சுரண்டல்கள், தீண்டாமை, ஜாதிக் கொடுமைகள், இனவெறி, அடிமைத்துவம் போன்ற பலசமூகத் தீமைகளில் இருந்து விடுவித்துள்ளது. இன்னும் தொடர்ந்து விடுவித்து வருகிறது என்பது உலகம் அனுபவித்து அறியும் உண்மை! இந்த உலகளாவிய மக்கள் விடுதலை இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் ஆரம்பகால வரலாற்றில் துயரம் மிக்க ஒரு நாளைத்தான் இங்கு காணவிருக்கிறோம். இதை அவரே தனது வாழ்வில் துயரமிக்க நாள் என்று கூறியுள்ளார்..   

தாயிப் நகரத்து வீதியிலே...

மக்காவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த மலைவாசத்தலம் தாயிப். குளு குளு பிரதேசம்.

10 ஆண்டுகள் மக்காவில் தொடர்ச்சியாக இஸ்லாம் கற்பிக்கும் ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணிகளில் ஈடுபட்டு அந்த திருச் செய்தியை யாரும் ஏற்காததால் நபி இன்னொரு களத்தை தேர்வு செய்கிறார்கள்; அதுதான் தாயிப் நகரம்!
அந்த சம்பவம் இதுதான்:
தாயிப் நகரின் சகீப் கோத்திரத்து பெருந்தலைவர்களை நபிகளார் சந்திக்க திட்டமிட்டு அவர்களை அணுகவும் செய்தார்கள். தங்களது திருச்செய்தியை அவர்கள் முன் சமர்பிக்கும்போது அவர்களில் ஒருவன் சொன்னான்: "உம்மைவிட்டால் வேறு யாரும் இறைவனுக்குத் தூதராக கிடைக்கவில்லையோ?"
அடுத்தவனோ, "நீர் உண்மையிலேயே இறைத்தூதராக இருப்பின் எனக்கு உம்மோடு பேசத்தகுதியில்லை! அப்படி இல்லையென்றால்.. என்னோடு பேச உமக்குத் தகுதி இல்லை!"- என்றான் கிண்டலுடன்.
மூன்றாமவன் இவர்களுக்குச் சற்றும் சளைத்தவனாக இல்லை. சொன்னான்: "உம்மை இறைத்தூதராக ஏற்றுக் கொள்வதைவிட அந்த கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிந்துவிடுவேன்!"
அவமானங்களின் மொத்த உருவமாக அவர்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் ஈடேற்றம் பெறுவதற்காக தன்னலம் கருதாமல் அவர்களை நேர்வழிப்படுத்த சென்ற நபிகளார் மீது வன்முறையாளர்களை ஏவிவிட்டார்கள்; மன காயங்களோடு உடல் காயங்களை, ஏற்படுத்துவதற்காக.
கேலி, கிண்டல்கள், கூச்சல் ஆர்ப்பாட்டங்களோடு வெறி கொண்ட அந்த கூட்டம் நபிகளாரை தாயிப் நகரின் தெருக்களில் ஓட விட்டார்கள்.
சொல்லடியுடன், கல்லடியும் சேர நபியின் திரு உடலெங்கும் குருதிமயம்.
கால் செருப்புகள் குருதியின் ஈரத்தால் அன்பு நபியை சறுக்கிவிட அண்ணலார் விழுவதும், எழுவதுமாய் அங்கிருந்து சென்றார்கள்.
வன்முறைப் போக்கு ஊர் எல்லைவரைத் தொடர்ந்தது.
இந்தக் காட்சிகளை தன் துணைவியார் ஆயிஷா(ரலி) யிடம் விளக்கிக் கொண்டிருந்த நபிகளார், "அந்த சூழலில் நான் எங்கே சென்று தப்பித்துக் கொள்வது என்று திசைத் தெரியாமல் ஊருக்கு வெளியே இருந்த ஒரு திராட்சைத் தோப்புக்குள் தஞ்சம் புக வேண்டி வந்தது ஆயிஷா!"என்றார்கள் அன்பு நபி.
நபிகளாரின் பிரார்த்தனை
உடலெல்லாம் வலிக்க மனம் அதைவிட அதிகமாக வலிக்க.. அன்பு நபியின் இருகரங்கள் வானத்தை நோக்கி விரிந்தன.தனது இயலாமையை இறைவனிடமே முறையிடுகிறார்கள். பெரும் பிரார்த்தனையாய் அது வரலாற்றில் பதியப்படுகிறது. இதோ கேளுங்கள்:
"ஓ! இறைவா! எனது பலவீனத்தை, நாதியற்ற நிலையை, மக்கள் முன் எனக்குள்ள இழிநிலையை உன்னிடமே நான் முறையிடுகின்றேன்.
நீயே எனது எஜமானன்.
என்னை யாருடைய கையில் நீ ஒப்படைக்க போகிறாய்?
என்னைத் துன்புறுத்தக்கூடிய தூரத்து அந்நியன் ஒருவனிடமா? அல்லது என்னை எதிர்க்கவென நீ நாடியுள்ள ஒரு பகைவரிடமா?
அதெற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. நீ மட்டும் என்னிடம் கோபம் கொண்டுவிடாதே!
உனது உதவியை அகன்றதொரு பாதையாக மாற்றிவிடு!
உன் பேரருள் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகின்றேன்.
அதன் மூலமே அனைத்து இருள்களிலிருந்தும் ஒளி கிட்டுகின்றது.
அதன் மூலமே இம்மை-மறுமை அம்சங்கள் யாவும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
உனது கோபத்தை என் மீது இறக்கிவிடாதே! உன் சோதனை என்னைப் பீடிக்கச் செய்துவிடாதே! நீ திருப்தி அடையும்வரை என்னை நீ கடிந்து கொள்வாய்! உன் மூலமே அன்றி எந்தவொரு அதிகாரமும் சக்தியும் எனக்கில்லை!"
உடன் வந்த வானவர் படை
இந்த சம்பவம் நிகழ்ந்ததும், தமது தலைக்கு மேலாக கருமேகம் கருத்து வருவதை நபிகளார் கண்டார்கள்.
வானவர் தலைவர் நபிகளார் முன் தோன்றுகிறார்.
"முஹம்மதுவே! (ஸல்) உமதிறைவன் உமது மக்கள் உம்மிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கண்டான். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் கேட்டுக் கொண்டான். உமக்கு உதவியாக என்னை அனுப்பி வைத்துள்ளான்.
இதோ! இந்த மலைக்கு பொறுப்பு வகிக்கும் வானவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நீங்கள் ஒரே ஒரு ஆணையிடுங்கள், இரு மலைகளுக்கு இடையுள்ள இந்த தாயிப் நகர மக்களை நாங்கள் நசுக்கிவிடுகின்றோம்!"
நபிகளாரின் திருமேனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரப்போக்கு இன்னும் நிற்கவில்லை. கல்லடிப்பட்ட இடங்களின் வலியும்-வேதனையும் இன்னும் குறையவில்லை.
கருணையே வடிவான அண்ணலார்
இந்நிலையில் பதறியவாறு அன்பு நபிகளார் சொல்கிறார்கள்: "வேண்டாம்..! வேண்டாம்! இவர்களை விட்டு விடுங்கள். நாளை, இவர்களின் சந்ததிகளாவது எனது செய்தியை ஏற்கலாம். வேண்டாம்! வேண்டாம்..! இவர்களை விட்டுவிடுங்கள்!"
சாதாரண மனிதர்கள் யாராயினும் அங்கு உடனே எழுவது பழிவாங்கும் உணர்வு! அல்லது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த மக்கள் மீது தான் யார் என்று தன்னைப் பெரிதாகிக் காட்டிக் கொள்ளும் உணர்வு! ஆனால் அண்ணல் நபிகளார் இங்கு இவை அனைத்தையும் தவிர்த்து தொலைநோக்கோடு செயல்படுவதைக் காணுங்கள். தன் வலிகளை விட தன் இலட்சியம் முக்கியம் என்பதால் அம்மக்களை அப்படியே மன்னிக்கிறார்கள்!
எதிரிகளை பழிவாங்கும் உணர்வில்லை. எதிரிகள் மீது எந்தவிதமான காழ்புணர்ச்சிகளும் இல்லை. அனைத்தும் அந்த நொடியில் மறைந்து போனது அங்கே!
அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களை சீர்திருத்துவதே தன் பணி, இன்றில்லாவிடினும் என்றாவது நாம் முன்வைத்த கருத்தை இம்மக்கள் சீர்தூக்கிப்பார்த்து திருந்த வழி உண்டு, இந்த மக்கள் ஏற்காவிடினும் இவர்களது தலைமுறைகளாவது இந்த சத்தியத்தை ஏற்கக்கூடும், அதற்கு என்னுள் எழும் பழிவாங்கல் உணர்வோ காழ்ப்புணர்வுகளோ தடையாக நின்றிடக் கூடாது என்று மிக கவனமாக பொறுமையோடு சூழலைக் கையாள்கிறார்கள் கருணை நபிகளார்!
மக்களை சீர்திருத்த விழையும் அனைவருக்கும் இதை ஒரு அடிப்படைப் பாடமாக கற்பிக்கிறார்கள் அருமை நபிகளார்!

அகிலத்தைப் படைத்தவனே அவரைப்பற்றிக் கூறுவதைப் பாருங்கள்:
 (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம்  ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (திருக்குர்ஆன் 21:107)
அண்ணல் நபிகளார் உலக மக்கள் மீது கொண்டிருந்த நேசமோ அளவிடமுடியாதது. இறைவனே அதுபற்றிக் கூறுகிறான்:
அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகவில்லை என்பதற்காக நீங்கள் உங்களை துக்கத்தால் கொன்று கொள்ளப் போகிறீர்கள் போலும். (திருக்குர்ஆன் 26:3) 
நபிகளார் தன்னைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள்:
"ஒரு மனிதர் இரவில், காட்டில் தீ மூட்டினார். அந்த தீயின் ஒளியால் ஈர்க்கப்பட்ட விட்டில் பூச்சிகள் தங்களை மாய்த்துக் கொள்ள நெருப்பருகே வருகின்றன. அதைக் கண்ட அவர் பதறியவராய் இரு கரங்களால் ஓடி ஓடி தடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த உவமைக்கு சற்றும் குறைந்தல்ல என்னுடைய உதாரணமும்!
இந்த மக்கள், நரக நெருப்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களின் இடுப்பை பிடித்திழுத்து தடுத்துக் கொண்டிருக்கின்றேன்!"
இத்தகைய ஒரு உன்னத நோக்கத்தைக் கொண்டவரை பின்பற்றி வாழ்வதாக உறுதிமொழி ஏற்றிருப்பவர்கள்தான் முஸ்லிம்கள்.
-------------------
நபிகள் நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் - நூல் பெறுவதற்கு இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்
=================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

திங்கள், 28 ஏப்ரல், 2025

உழைப்பின் சிறப்பும் உழைப்போர் உரிமையும்


சமூக ஒழுங்குக்கும் தனிநபர் ஒழுக்கத்துக்கும் மூன்று நம்பிக்கைகளை அடிப்படையாக்குகிறது இஸ்லாம். அதனால் மக்கள் இறைவன் கூறும் அறிவுரைகளையும் வாழ்வியல் வழிகாட்டல்களையும் ஒரு காதில் கேட்டுவிட்டு மறுகாதில் விட்டு விடாமல் அவற்றை வாழ்வில் பின்பற்றுகிறார்கள். அதனால் சமூகத்தை ஒழுங்குபடுத்துவதும் எளிமையாகிறது.

  •  மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

மேற்கண்ட இறைவசனத்தில் 1. ஒன்றே மனித குலம் (சக மனிதன் சகோதரனே சரிசமமே) 2. படைத்தவன் ஒருவனே இறைவன் (படைப்பினங்கள் கடவுளல்ல) 3. இறைவனிடமே மீளுதல் மற்றும் இறுதி விசாரணை என்ற மூன்று அடிப்படை விடயங்களும் கூறப்பட்டு இருப்பதைக் காணலாம்.

அதாவது மனிதனைப் பொறுத்தவரையில் அவன் இங்கு தான்தோன்றித்தனமாக வாழக் கூடாது. மாறாக தனது செயல்கள் அனைத்தும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு மறுமை வாழ்வில் இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரிக்கப்பட உள்ளோம் என்ற பொறுப்புணர்வை இவ்வசனம் மனித மனத்தில் விதைக்கிறது. சிறுவயது முதலே இந்த அடிப்படைகளை மனித மனங்களில் விதைத்து சமூக உருவாக்கம் நிகழுமானால் அங்கு மனித உரிமைகளைப் பேணுதல் எளிதாகிறது.

திருக்குர்ஆனில் உழைப்புக்கு மதிப்பு:

வப்தஊ மின் ஃபழ்ளில்லாஹ்  (திருக்குர்ஆன் 62:10)

பொருள்: இறைவனின் அருட்கொடையை நீங்கள் தேடி சம்பாதித்துக் கொள்ளுங்கள்

'வ அன் லய்ச லில் இன்சானி இல்லா மா சஆ'
பொருள்: இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. (திருக்குர்ஆன் 53:39)

விளக்கம்: மனிதனுக்கு அவனது உழைப்புக்கு ஏற்றவாறே பலன் கிடைக்கும். ஆகவே உழைப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

உழைப்பின் மகிமை ப்பற்றி நபிமொழிகள்

  • உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
  • இறைத்தூதரே! பரிசுத்தமான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)
  •  நபி (ஸல்) கூறினார்கள்:  ''உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே! எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.'' அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.)
உழைப்பு பற்றிய நபிமொழிகள்:
  • ”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் இறைவன் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (புகாரி)
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. இதை ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி)

உழைக்க வழிகாட்டிய நபிகளார்
நபிகளாரிடம் மதீனாவாசியான ஒரு தோழர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு தோழர் முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு தோழர்  அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த மதீனா தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அவரிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். 
அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தனது கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், "நீர் பிறரிடம் தேவை உடையவராகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது" எனப்பாராட்டினார்கள்.

 அதாவது உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
இதனைக் கேட்ட மற்ற நபித் தோழர்கள், “இனி நாங்கள் எவரிடமும், எதற்காகவும் கையேந்த மாட்டோம்; கடினமாக உழைப்போம்” என்று உறுதியளித்தார்கள். (நூல்: அபூ தாவூத்))
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 23 ஏப்ரல், 2025

ஆயுத விற்பனையாளர்களின் அதிபயங்கவாதம்!

 


ஆயுத விற்பனையாளர்களின் அதிபயங்கவாதம்!

நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள் .. ஒரு ஸ்கூட்டர் அல்லது  ஏதேனும் ஒரு வாகனத் தொழிற்சாலை தனது தயாரிப்பை மார்கெட்டில் விற்றோழித்தால்தான் அதனால் தனது பிழைப்பை நடத்தமுடியும். அதற்காக என்ன செய்யும்? பைனான்ஸ் கம்பெனிகள் மூலம் தவணைமுறைகுறைந்த EMI போன்றவை அறிமுகப்படுத்தி அந்தத் தயாரிப்பை மக்கள் வாங்க வழிவகை செய்து மார்கெட்டிங் செய்யும். அதாவது மக்களை தங்கள் தயாரிப்பை எப்படியாவது வாங்க வைக்கும் தந்திரங்களைக் கையாளும்.  ஆனால் அவர்களையெல்லாம் பலமடங்கு மீறும் வண்ணம் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைகளை சற்று யோசித்துப்பாருங்கள். அவர்களின் தயாரிப்புகளை நீங்களும் நானுமா வாங்க முடியும்வேறு யார்அருகருகே உள்ள நாடுகள்தான் இவற்றை வாங்க முடியும். வாங்கியாக வேண்டும்! ஆம்வாங்காவிட்டால் அவற்றை ஆள்வோர் ஆட்சியில் தொடர முடியாது என்பதுதான் உண்மை! பலவந்தமாகவும் தந்திரமாகவும் ஆயுதங்கள் அந்நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. வேறு வழியின்றி அந்நாடுகள் போர் செய்யும் நிர்பந்ததுக்கு ஆளாகின்றன.  
ஆம் அன்பர்களேஅதற்கேற்றவாறு உலகளாவிய மட்டத்தில் காய்கள் நகர்த்தப் படுகின்றன. எங்கெல்லாம் எப்படியெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் மக்களுக்கு இடையே இனம், மதம், நிறம் இவற்றின் பெயரால் வெறுப்பு விதைக்கப்படுகிறது. சண்டைகள் மூட்டப்படுகின்றன. மீடியாக்களும் கைக்கூலிகளும் பெரிய அளவில் சம்பளம் கொடுத்து முடுக்கி விடப்படுகிறார்கள். பாமர மக்களை ஏமாற்றும் பெரும்பெரும் நாடகங்கள் அரங்கேறுகின்றன! பாமரர்களின் அப்பாவி உயிர்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! என்றுதான் உலகம் உணருமோ இந்தக் கொடூரத்தை?

போர்கள் என்பவை சாதாரண மக்களின் வாழ்வை கலவரத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கி அவர்களை பீடிக்கும் ஒரு பேரழிவாகும். போருக்கு உள்ளாகும் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அந்நாட்டு வளங்களையும் குறுகிய காலத்தில் கறந்து அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கும் கொடூர செயலாகும்.

பணமுதலைகளுக்கு தீனி 
ஆனால் அதே போர், உலகில் சில பணமுதலைகளுக்கு லட்சக்கணக்கில் டாலர்கள் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு பெருவணிகமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதில் மிக முக்கிய பங்கு வகிப்பவைதான் ஆயுதத் தொழில்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுரண்டல் மாபியாக்கள்!
இப்படியும் 
ஆயுத வணிகம் உலகின் மாபெரும் தொழில்!
உலகில் ஒவ்வொரு வருடமும் ஆயுதங்களுக்காக சுமார் $2 trillion (இரண்டு டிரில்லியன் டாலர்கள்) செலவாகின்றன. இது கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்ற துறைகள் சேர்த்துச் செய்தாலும் குறைவாகவே இருக்கும்.
பெரும் ஆயுத நிறுவனங்கள்:
- Lockheed Martin (USA)
- Raytheon Technologies (USA)
- BAE Systems (UK)
- Northrop Grumman (USA)
- Thales Group (France)
இந்த நிறுவனங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாகும் போர்கள், கலவரங்கள், உள்நாட்டு மோதல்கள் போன்றவற்றிலிருந்து லாபம் தேடும் கம்பெனிகளாக உள்ளன.


அரசியல்வாதிகள்
ஆயுத விற்பனை முதலீட்டாளர்கள்

இந்த தொழில்கள், அரசியல்வாதிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளன. பல முக்கிய நாட்டு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், இந்த கம்பெனிகளில் உத்தியோகபூர்வமாக பணிபுரிகின்றனர்.
உதாரணமாக:
- Dick Cheney–
அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி, ஹலிபர்டன் என்ற ஆயுத, எண்ணெய் ஒப்பந்த நிறுவனத்தின் CEO.
-
பல அமெரிக்க காங்கிரஸ்காரர்கள் – Lockheed Martin மற்றும் Raytheon-இல் முதலீடு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், போர்கள் நடக்க வேண்டும், இடையூறுகள் ஏற்பட வேண்டும் என்பதற்கே திட்டமிட்டு சூழ்ச்சிகள் நடக்கின்றன.
போர் என்பது மெகா வியாபாரம்!
Iraq War (2003):
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் (mass destruction weapons) இருப்பதாக கூறி போர் ஆரம்பித்தது. ஆயுத உற்பத்தியாளர்களுக்கு அதனால் **$138 billion** வருமானம் ஏற்பட்டது.
-Afghanistan War (2001–2021):** 20
ஆண்டுகள் நீடித்த இந்த போரால் மட்டும், Lockheed Martin உள்ளிட்ட நிறுவனங்கள் **$2 trillion** மொத்த பில்லிங் செய்தன.
**
சிறிய நாடுகள் வாடிக்கையாளர்களாக மாறுதல்**
இஸ்ரேல் பஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடத்தி, அதை பாதுகாப்பு நடவடிக்கையென நியாயப்படுத்தி, நவீன ஆயுதங்களை சோதனை செய்து பிறகு விற்பனை செய்கிறது.
India–Pakistan:**
இரு நாடுகளும் ஆயுத ரேஸில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இருபக்கத்திலும் ஆயுதம் விற்று லாபம் சம்பாதிக்கின்றன.

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? என்பதற்கான விடையும் நீங்கள் இங்கே காணமுடியும்.
இஸ்லாம் அனைத்து மனிதகுலமும் ஒன்றே என்ற அடிப்படையில் உலகை ஒருங்கிணைத்து வருகிறது. ஆனால் உலக மக்களை பிரித்தாள நினைக்கும் இந்தக் கொடூரர்களுக்கு இஸ்லாம் பேரிடியாக உள்ளது!
இஸ்லாமில் அநியாயமான உயிர் அழிப்பு பாவம் என்பது மட்டுமல்ல, மனிதர்களை இடையூறு விளைவிக்கக்கூடிய எந்த ஒரு செயலும் இறைவனிடம் பாவமாகப் பதிவு செய்யப்படும்..
ஒரு உயிரைக் கொன்றவனது பாவம், மொத்த மனித குலத்தையே கொன்றதற்குச் சமம்.” (குர்ஆன் 5:32)


இவற்றுக்கான தீர்வுகள் என்ன?
கீழ்கண்டவை தீர்வுகளாக மொழியப்பட்டாலும் திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இவை.  எதுவும் நடைமுறைக்கு வராது என்பது உறுதி!
1. **
உலக அளவில் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாடுகள்:** ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் Arms Trade Treaty (ATT) போன்று, அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டு கடைபிடிக்க வேண்டும்.
2.
ஆயுத லாபத்தில் நேரடி நிதி முறைகள் தடையூட்டப்பட வேண்டும்: அரசியல்வாதிகள் மற்றும் ஆயுத நிறுவனங்களுக்கு இடையிலான நிதிச் சந்தைகளை வெளிப்படையாகச் செய்ய வேண்டும்.
3. **
மக்கள் விழிப்புணர்வு: மக்களின் பணம் போர்களுக்கு செலவாகாமல், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவாக வேண்டும் என்ற புரிதல் ஏற்பட வேண்டும்.

இஸ்லாம் ஒன்றே தீர்வு!

1.. அநீதிக்கு எதிரான உலகளாவிய மக்கள் இயக்கமாக இஸ்லாம் உருவெடுக்கும்போது அநீதியாளர்கள் அடையாளம் காணப்பட்டு மக்களால் ஒடுக்கப்படுவார்கள்.

2. அல்லது அநீதி செய்யும் மக்களின் மனமாற்றம் மூலமாகவும் இதற்கு ஒரு தீர்வு உண்டாகலாம்.

3. மேற்கண்டவை எதுவும் நடக்காவிட்டால் இறுதித்தீர்ப்பு நாள் அன்று அநீதியாளர்களுக்கும் அநீதிக்கு உள்ளானவர்களுக்கும் இடையே உண்டாகும் இறைவனின் நியாயத் தீர்ப்பு மூலம் கண்டிப்பாக முழுமையான தீர்வு உண்டாகும்!

=========================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

பூமி தினம் கொண்டாடுவோம் வாரீர்!

 


உலக பூமி தினம் ஏப்ரல் 22 

கரணம் தப்பினால் மரணம் என்பது போல கீழ்கண்ட காரணிகளில் ஏதேனும் ஒன்று தப்பினாலும் அல்லது சமநிலை தவறினாலும்  இங்கு உயிரின வாழ்க்கைக்கு அழிவுதான். அப்படியானால் நம்மை வாழவைக்கும் இறைவன் எதற்காக இதைச் செய்கிறான்? நாம் சீரியசாக இதை அறிய வேண்டாமா? 

உதாரணமாக கீழ்கண்ட காரணிகளை கவனியுங்கள்:

1. புவி ஈர்ப்பு விசை (Earth’s Gravitational Force) 
பூமியின் ஈர்ப்பு விசைதான் பொருட்களை அதன் மேற்பரப்பில் தங்கவைத்து, வளிமண்டலம், நீர், மற்றும் வாழ்வை நிலைத்திருக்கச் செய்கிறது. இதிலான சிறிய மாற்றம்கூட உலகின் இயல்பை மாற்றக்கூடும்.

2. சூரியன் மற்றும் இதர நட்சத்திரங்கள் (Sun and Stellar Stability)
சூரியனின் உள் சமநிலையே (hydrostatic equilibrium) அதன் வாழ்க்கையை நீடிக்கச் செய்கிறது. இதனுடைய ஒழுங்கு பாதிக்கப்படின் பூமியில் உயிரியலின் முக்கிய செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

3. காந்தவலயம் (Earth’s Magnetic Field)
புவியின் மைய பாகத்தில் உள்ள வெப்பநிலை காரணமாக உருவாகும் காந்தவலயம், சூரிய கதிர்வீச்சில் உள்ள மோசமான பாதிப்புகளிலிருந்து பூமியைக் காப்பாற்றுகிறது. இது இல்லையெனில் உயிரினங்கள் அதிக கதிரியக்கத்தால் அழிவடைந்திருக்கும்.

4. காற்றுமண்டல சமநிலை (Atmospheric Balance)
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் (21%), நைட்ரஜன் (78%), மற்றும் கார்பன் டைஆக்ஸைடு போன்ற வாயுக்களின் சரியான சுழற்சி உயிர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறது.

5. புவியின் சுழற்சி மற்றும் சாய்வு (Earth’s Rotation and Tilt)
பூமியின் 23.5° சாய்வு பருவமாற்றத்துக்கும், சுழற்சி இரவு-பகல் மாற்றத்திற்கும் காரணம். இவை சரியாக இருக்காவிட்டால், பூமியில் உயிரியலின் சுழற்சிகள் முற்றிலும் மாறும்.

6. ஓசோன் அடுக்கு (Ozone Layer)
இது புற ஊதா (UV) கதிர்வீச்சுகளிலிருந்து பூமியை பாதுகாத்து, தோல் நோய் மற்றும் பிற உயிரியலின் பாதிப்புகளை தடுக்கிறது.

7. நீர்சுழற்சி (Water Cycle)

நீரின் ஆவியாக்கம் (Evaporation), மழை (Precipitation), மற்றும் உபரிவாகம் (Runoff) ஆகியவை நீர்சுழற்சியின் (Water Cycle) முக்கியப் பகுதிகள். இவை இயற்கை முறையில் நீர்வளங்களை தற்காலிகமாக பரப்பி, வாழ்க்கை நிலைமைக்கு ஆதாரமாக செயல்படுகின்றன. இது உயிர் வாழ்வின் முக்கிய அம்சமாக உள்ளது.

8. காலநிலை நிர்வாகம் (Climate Regulation) பூமியின் இயற்கைச் சூழல், கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெப்பநிலைக் கட்டுப்பாடு மூலம் சராசரி வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது ஜலவாயுவை சமநிலைப்படுத்தி, பருவநிலை மாற்றங்கள் மற்றும் உயிரின வளர்ச்சியை ஆதரிக்கிறது. சுழற்சிகள் பாதிக்கப்பட்டால், உலக வெப்ப நிலை மாற்றம், பனிப்பரப்புகள் உருகுதல், மற்றும் கடும் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும்.

9. மூலக்கூறுகள் மற்றும் வேதியியல் சீரமைப்பு (Chemical Element Stability) 
கார்பன் (Carbon), நைட்ரஜன் (Nitrogen), ஆக்ஸிஜன் (Oxygen), மற்றும் ஹைட்ரஜன் (Hydrogen) ஆகியவை உயிரின் அடிப்படையான மூலக்கூறுகள். மூலக்கூறுகளின் அளவுகள் சீராக இருக்கவில்லை என்றால், புவியின் இயற்கைச் சூழலிலும் உயிரின வளர்ச்சியிலும் பெரிய அளவிலான இடர்ப்பாடுகள் உருவாகும், இது உலகின் நிலைமையை முழுமையாக மாற்றக்கூடும்.

10. புவி அடிநிலத்தளங்கள் (Tectonic Plate Movements)
நிலப்பகுதி நகர்வுகள் மலைகளை உருவாக்குவதோடு, பூமியின் உள் வெப்பநிலையை வெளியேற்றவும் உதவுகின்றன. இது புவியின் அளவில்லாத வெப்பநிலையை குறைக்கிறது.

11. புவியின் மையம் மற்றும் கோர் (Earth’s Core and Geothermal Activity)
புவியின் மையத்தில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல், காந்தவலயத்தையும் வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

12. ஆபத்திலிருந்து காக்கும் விண்வெளி அமைப்புகள் (Cosmic Stability)
விண்வெளியில் சுற்றி வரும் ஆஸ்டராய்டுகள் (Asteroids) மற்றும் உயர் வேகத்தில் பயணிக்கும் குறுங்கோள்கள் (Comets) பூமியை மோதினால் உலகம் எளிதில் அழிவடையக்கூடும். புவி மற்றும் அதன் நிலைக்கோள் சீராக இயங்குவதால், விண்வெளி ஆபத்துகளிலிருந்து புவி பாதுகாக்கப்படுகிறது. ஆனால், சிறிய மாற்றங்கள் கூட பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். Cosmic Stability எனும் இந்நிலையே, உயிர்களின் பாதுகாப்புக்கும் புவியின் தானியக்க சூழலியலுக்கும் முக்கியமாகிறது.

13. மரங்களின் இயற்கை செயல்பாடு (Natural Functioning of Forests)
காடுகள் வாயுக்களை சீராக மாற்றுவதோடு, நீர் மற்றும் மண்ணின் நிலத்தன்மையையும் பாதுகாக்கின்றன.

14. சமுத்திரங்களின் சூழ்நிலை (Oceanic Currents)
சூடான மற்றும் குளிர்ச்சியான நீரின் இயக்கம், பருவநிலை சமநிலையையும், பசுமை வளங்களை பரப்புவதையும் பாதிக்கின்றன.

15. காற்றின் இயக்கம் (Wind Systems)
காற்றின் இயக்கம் வெப்பநிலையை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துகிறது, இதனால் இயற்கை வளங்கள் நசிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.

16. சந்திரனின் ஈர்ப்பு விசை (Moon’s Gravitational Pull)
இதன் மூலம் கடல் அலைகளில் உருவாகும் ஏற்றத்தாழ்வுகள், புவியின் சுழற்சி வேகம், மற்றும் புவியின் (23.5 பாகை) சாய்விற்கு சமநிலையை வழங்குகிறது.

17. இயற்கை மறுசுழற்சிகள் (Natural Recycling Systems)
கார்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி போன்றவை பூமியின் இயற்கை வளங்களைத் தன்னிறைவாக புதுப்பிக்க உதவுகின்றன.

18. பாறைகளின் கீழ்ப்படிதல் (Erosion and Sedimentation)
பாறைகள் மற்றும் மண்ணின் இயல்பான மாற்றங்கள் ஆறுகளை உருவாக்கவும் புதிய நிலப்பகுதிகளை பரப்பவும் உதவுகின்றன.

19. நிலநடுக்கங்களின் விகிதம் (Frequency of Earthquakes)
இதுவே புவியின் உள் அழுத்தத்தை வெளியேற்ற உதவுகிறது, இதனால் புவியின் நிலைத்தன்மை நீடிக்கிறது.

20. விண்வெளி பாதுகாப்பு (Cosmic Radiation Shielding)
புவியின் காந்தவலயம் மற்றும் வளிமண்டலம், வெளி விண்வெளி கதிரியக்கத்தை தடுக்க முக்கிய பங்காற்றுகின்றன.

இன்னும் இவைபோன்ற 100 முதல் 150 மனிதன் கண்டறிந்த காரணிகள் உள்ளதாக அறிவியல் கூறுகிறது.

ஆக இந்த அனைத்துக் காரணிகளும் - மனிதனால் கண்டறியப்பட்டவையும் சரி, இன்னும் அறிவியலால் கண்டறியப் படாதவையும் சரி - இவை அனைத்தும் மனிதன் என்ற ஜீவியை முக்கியமாக வாழவைப்பதற்காகவே என்பதை பகுத்தறிவு நமக்கு உணர்த்துகிறது. அப்படியானால் மனிதன் என்ற ஜீவி இந்தத் தற்காலிக உலகிற்கு வந்து போவதன் நோக்கம் என்ன?

இதோ இவ்வுலகையும் நம்மையும் படைத்தவன் கூறுகிறான்:

18:7. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
================== 
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!


திங்கள், 21 ஏப்ரல், 2025

திருக்குர்ஆன் நற்செய்திமலர் – ஏப்ரல் 2025 இதழ்

 


 திருக்குர்ஆன் நற்செய்திமலர் – ஏப்ரல் 2025 இதழ்

 உங்கள் இல்லம்தேடி வர இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://www.tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription (மாற்றுமத அன்பர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. 9886001357 எண்ணுக்கு வாட்சப் செய்யவும்)

பொருளடக்கம்

நபிகளார் நிகழ்த்திய நிகரில்லா உலக சாதனைகள்!2

சமூகத்தை அரவணைத்துக் கொண்டாடப்படும் இஸ்லாமியப்  பண்டிகைகள் -6

மன்னிப்பு மற்றும் கருணைக்கு ஓர் நிகரற்ற முன்மாதிரி! - 9

பழைய உணவில் பசியாறிய மாமன்னர்  - 11

பணியாளர் பசியாற்றிய எஜமானர்! -13

ஏழைகளை மகிழ்விக்கும் ஃபித்ரா! - 15

ஜகாத் எனும் ஏழைகளின் உரிமை! - 16

யுவோன் ரிட்லி - 19

சிந்திக்க அழைக்கிறான் இறைவன்! - 18

மனித வாழ்வின் நோக்கம்தான் என்ன? -20

வீணாக மெய் வருந்துவதில்  புண்ணியம் இல்லை! - 22

நம்மை வாழவைப்பது யார்எதற்காக?-24

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

ஒரு கோப்பை பாலில் பலர் பசியாறிய விந்தை!!

 முதலில் கதையல்ல இது நிஜம்!

இதை வாசிக்கக்கூடிய மாற்றுமத அன்பர்கள் சிலருக்கு இப்படியெல்லாம் நிகழ வாய்ப்ப்புள்ளதா என்ற ஐயம் எழக்கூடும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் திருக்குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஊகங்களோ கற்பனைக் கதைகளோ பதிவு செய்யப்படவில்லை என்பதை நீங்கள் முதலில் கவனிக்க வேண்டும். அடுத்ததாக நபிகள் நாயகம் அவர்களுக்கு ஏனைய இறைத் தூதர்களின் வாழ்வுகளில் நிகழ்ந்தது போன்ற அற்புதங்கள் (அதாவது இயற்கைக்கு மாறான நிகழ்வுகள்) நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக நபிகள் நாயகம் என்ற ஒரு நபர் சரித்திரத்தில் வாழ்ந்தார் என்பது, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் மூலம் திருக்குர்ஆன் என்ற உயர்தர இலக்கிய அற்புதம் வழங்கப்பட்டது, அதில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருப்பது, குறைந்த எண்ணிக்கை கொண்ட படைகள் அன்றைய வல்லரசுகளை இல்லாமல் ஆக்கியது, என எல்லாமே அற்புதங்களின் அணிவகுப்புதான்!..


 இனி மேற்கொண்டு படியுங்கள்..
 

நபித்தோழர் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:

எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் கடந்து சென்றார்கள் (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை.

பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.

பிறகு அபுல்காசிம் (நபி(ஸல்)) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். (என்னைப்) பின்தொடர்ந்து வா! என்று சொல்லி விட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் மனைவியாரிடம்) இந்தப் பால் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர்! என அழைத்தார்கள். நான் இதோ வந்துவிட்டேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள் என்றார்கள்.

திண்ணைவாசிகள் வருகை!

திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவும் மாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.

கவலைக்குள்ளான அபு ஹுரைரா

இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. (இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்து விட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமர லானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர் என! அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர்.

நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

பிறகு அபூ ஹிர்! என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன் கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன்.

அதற்கவர்கள் “நானும் நீங்களும் (மட்டும்தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)” என்று கேட்டார்கள்.

நான் “இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்” என்றேன்.

நபி(ஸல்) அவர்கள் “உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்” என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி(ஸல்) அவர்கள் (சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். (நூல்: புகாரி)

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்