இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 டிசம்பர், 2012

சிலைவழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்?


இஸ்லாமியர்களைப் பார்த்து கேட்கப்படும் முக்கியமான கேள்வி இது.

சிலை வழிபாட்டை மட்டுமல்ல சிலுவை வழிபாட்டையும் சமாதி வழிபாட்டையும் அதாவது தர்கா வழிபாட்டையும் இஸ்லாம் எதிர்க்கிறது என்பதே உண்மை! இவை அனைத்துமே இஸ்லாத்தில் இறைவனுக்கு இணைவைத்தல் என்று அறியப்படுகிறது.
இணைவைத்தல் என்றால் என்ன?
- படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பினங்களை வணங்குவது மற்றும் பிரார்த்திப்பது  
- இவ்வுலகிலிருந்து மறைந்துவிட்ட மனிதர்களின் உருவச்சிலைகள்,, சமாதிகள் (தர்காக்கள்), அல்லது வேறு கற்பனை உருவங்களை வணங்குவது அல்லது அவர்களிடம் பிரார்த்திப்பது
- இறைவன் அல்லாத எதனையும் இறைவன் என்றோ கடவுள் என்றோ அழைப்பது மற்றும் பிரார்த்திப்பது
- ஏகனான இறைவனுக்கு இல்லாத மக்களையும் மனைவிமார்களை எல்லாம்   கற்பித்து அவர்களை வணங்குவது.
- இன்னும் இவைபோன்ற செயல்களுக்கு இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறப்படும்.
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு இப்பாவத்தைக் கண்டிக்கிறது:
பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம்

' .....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்...... (திருக்குர்ஆன்31:13)
 'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.'  (திருக்குர்ஆன் 4:48)
இணைவைப்போருக்கு தண்டனை நிரந்தர நரகம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதிஇழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)

(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

திருக்குர்ஆன் இப்பாவத்தைக் கண்டிப்பது போலவே முந்தைய இறைவேதங்களும் இதைக் கண்டிப்பதைக் காணலாம்.

கொலை, கொள்ளை, விபச்சாரம் என்றெல்லாம் பல  பாவங்கள் இருக்கும்போது இந்த இணைவைக்கும் பாவத்தை ஏன் பாவங்களில் எல்லாம்  தலையாயது  என்கிறான் இறைவன்? அப்படியென்ன விபரீதம் இதில் இருக்கிறது? பெரும்பான்மையான மக்களால் இப்பாவம் பரவலாக செய்யப்பட்டு வருவதால் இதன் விபரீதம் மக்களால் உணரப்படாமலேயே தொடர்கிறது. ஆனால் சற்று கவனமாக சிந்தித்தால் இது நம்மையும் நம் நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கும் எவ்வளவு கொடிய புற்றுநோய் என்பதை அறிந்து கொள்வீர்கள்:

1. இது மிகப்பெரிய நன்றி கேடு : நம்மைப் படைத்தது மட்டுமல்ல , ஒன்று விடாமல் நம் தேவைகளை ஒவ்வொரு நொடிகளும் அயராது நிறைவேற்றி வருபவன் அந்த மாபெரும் கருணையாளன். நாம் தாயின் கருவறையில் உருவானது முதல் நமக்கு உணவு, நீர் , காற்று, தாய் தந்தை அரவணைப்பு, என்று தொடங்கி நாம் மரணத்தைத் தழுவும்  வரை நம் மீது அவன் காட்டிவரும் கருணை அளப்பரியது. நமது தேவைகளை நிவர்த்தி செய்யும் விதம் நமது உடலையும் ,   உறுப்புக்களையும், இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் வடிவமைத்து இயக்கி வருபவன் அவன். அவற்றுக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா?  இந்த அருட்கொடைகளில் ஏதாவது ஒன்று தடைபடும் பொது நாம் படும் பாட்டை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இணைவைத்தல் என்ற செயல் மூலம் என்ன செய்கிறோம்? அவனுக்கு காட்ட வேண்டிய நன்றியறிதலை ஒரு உயிரற்ற உணர்வற்ற ஒரு பொருளுக்கு நாம் காணிக்கையாக்குகிறோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.
என்ற குறள் இறைவனின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மை. ஆம் அவர்களுக்கு உய்வில்லைதான். நரக நெருப்புதான் அவர்களுக்கு மறுமையில் காத்திருக்கிறது. 

2. பாவங்கள் பெருக மூல காரணம் இது : மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக கடவுளைப் பற்றிய பயம் வேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான்.  உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வந்ததன் விளைவு மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. ஆக, இந்த  இறைவனுக்கு இணை வைக்கும் செயல்தான் இன்று நாட்டில் காணப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணம் அல்லது ஊற்றுக் கண் என்றுணரலாம். அப்படிப்பட்ட கடவுள் பயமற்ற தலைமுறைகள் உருவாகும் போது  பாவங்கள்  கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.
ஒரு உதாரணமாக, எவரது வீட்டிலாவது சில நண்பர்கள் மது அருந்தக் கூடுவார்களாயின், அப்போது அங்கு ஏதாவது சாமிப்படங்களோ சிலைகளோ இருந்தால் முதலில் அதை மூடிவிட்டு தங்கள் பாவத்தைத் தொடர்வதை நீங்கள் காணலாம். அதுதான் கடவுள் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஊறியிருப்பதே அதற்குக் காரணம்!
3. இது இறைவனை இழிவு படுத்தும் செயல் . நமது அன்புக்கும் மரியாதைக்கும் முழு முதற்தகுதி வாய்ந்தவன் நமது இரட்சகன். அவனது வல்லமையும் ஆற்றலும் அறிவும் அளவிட முடியாதவை. அவனுக்கு மரியாதை செய்கிறோம் என்று சொல்லி கற்களையும் மரங்களையும் மனிதர்களையும் சமாதிகளையும் சூரியனையும் சந்திரனையும் நட்சந்திரங்களையும் காட்டி இவை எல்லாம் கடவுள்கள் என்று கற்பிப்பது பொய் மட்டுமல்ல, அது அவனை சிறுமைப் படுத்தும் செயல். உதாரணமாக நமது தாய்க்கு பதிலாக ஒரு நாயின் அல்லது பன்றியின் உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப் பெற்றெடுத்த தாய்' என்று யாராவது கூறினால் எவ்வாறு வெகுண்டேழுவோம்அகில உலகத்தையும் அண்ட சராசரங்களையும்  படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு உயிரற்ற உணர்வற்ற பொருட்களை ஒப்பாக்குவது எவ்வளவு பெரிய இழிசெயல்!
4. இது மிகப்பெரிய பொய்! எப்படிஉதாரணமாக ஒருவர்  ஒரு பேனாவைக் காட்டி ‘இதோ இது ஓர் யானை நம்புங்கள் !’  என்று கூறினால் அதை பொய் என்பீர்களாஇல்லை உண்மை என்பீர்களாஆம் சிந்தியுங்கள் அன்பர்களே! எப்படிப்பட்ட படுபயங்கரமான பொய்! அதை மக்கள் பரவலாக நம்புகிறார்கள் என்றால் அந்த மக்களை எவ்வாறு அழைப்பீர்கள்? இன்று உங்கள் கண் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறது பாருங்கள்!  உணர்வற்ற  உயிரற்ற உருவங்களையும்  சமாதிகளையும் காட்டி இவர்தான் கடவுள் அல்லது  இதுதான்  கடவுளின்   உருவம்  என்றோ  சொன்னால்  எவ்வளவு  பெரிய  பொய் அது! அதிகமான பேர் அந்தப் பொய்யை நம்பி விட்டால் அது உண்மையாகி விடுமா
ஆதியும் அந்தமும் அற்ற என்றென்றும் உயிர் வாழும் சர்வ வல்லமை கொண்ட இறைவன் எங்கே? மனித கரங்கள் உருவாக்கிய உயிரற்ற உருவங்கள் எங்கே? எதனோடு எதனை ஒப்பாக்குகிறார்கள்? இது படித்தவர்களையும் பாமரர்களையும் ஒரேபோல தனக்கு பலிவாங்கும் ஒரு பெரும் பொய்!

5. மோசடிகளில் எல்லாம் மிகப் பெரிய மோசடி இது: மேற்கண்ட மாபெரும் பொய்யை மையமாக வைத்து மிகப்பெரிய மோசடி அரங்கேறுகிறது. கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத் தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை  அடிக்கிறார்கள்.  உண்மையில் படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள். அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது. மிக மிக வேகமாகப் பரவும் நாசக்கார மோசடி இது. எந்த அளவுக்கு என்றால் நாட்டின் இயற்க்கை வளங்களும் பொருள் வளங்களும் மனித வளங்களும் சூறையாடப்பட்டு  நாடு பிற்போக்கான நிலைக்கு தள்ளப்படுகிறது. வளங்கள் பல இருந்தாலும் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடும் நிலை ஏற்படுகிறது.
இதற்கு உலகிலேயே மிகப்  பெரிய உதாரணம் எது தெரியுமா?  வேறு ஏதுமல்ல, நமது தாய்த்திரு நாடுதான்! 
‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.?  பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதா? மிக மிக உண்மை அது! இயற்கை வளங்களாலும், செயற்கை வளங்களாலும், மனித வளத்தாலும் அறிவு வளத்தாலும் ஒருசேர  தன்னிறைவு பெற்றுள்ள நாடு  நம்நாட்டைப் போல் உலகில் எங்குமே இல்லை. உலகிலேயே முன்னிலை வல்லரசாக திகழ வேண்டிய நம்மை பின்னுக்குத் தள்ளி வைத்திருப்பது எது? நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கேள்வி இது.
கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்.
அ. இந்நாட்டில் எந்த வித உற்பத்தியோ சேவையோ மக்களுக்கு தராமல் மக்களின் பணத்தை மட்டும்  கறந்து கொண்டிருக்கும் வியாபாரம் எது?
ஆ. மக்களின் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த வித முதலீடும் மூலதனமும் இல்லாமல் மூலைக்கு மூலை, நாளுக்கு நாள் பெருகி வரும் வியாபாரம் எது?
இ.  நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களின் நலனுக்கோ எவ்வித பங்களிப்பும் செய்யாது பெரும் ஊதியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்கள் யார்?
ஈ.  நாட்டின் கறுப்புப் பண முதலைகளுக்கும் சுரண்டல்காரர்களுக்கும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அலைகழித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் யார்?
இவற்றுக்கும் இன்னும் இவை போன்ற கேள்விகளுக்கும் நாம் பெறும் ஒரே  விடை - இறைவன் அல்லாதவற்றை கடவுளாக சித்தரித்து செய்யப்படும் மோசடி வியாபாரமும் அந்த வியாபாரிகளும் ஊழியர்களும்தான்.

இம்மோசடியின் பாதிப்பு!
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளான நிலையிலும், உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடாகவே இதுவரை இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 26 கோடியே 3 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.இவர்களில் கிராமப்புறங்களில் 19 கோடியே 32 லட்சம் பேரும், நகரங்களில் 6 கோடியே 71 லட்சம் பேரும் வசிக்கின்றனர். இவர்களில், 75 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழ்கின்றனர்.இந்தியாவில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை குறித்து உலக வங்கியும் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41.6 சதவீதமான 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது

 நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் நமது நாட்டின் 40 சதவிகிதத்திற்கும்  மேற்பட்ட குடிமகன்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும்போது நாட்டின் செல்வங்கள் இவ்வாறு தன்மீது எது கொட்டப் படுகிறது, தனக்கு எதை அணிவிக்கிறார்கள் என்பதையே அறியும் உணர்வுகளில்லாத திடப் பொருட்கள் மீது கொட்டப்படுவது எவ்வளவு பெரிய வஞ்சனை!  கருணையற்ற செயல்! அவற்றை வைத்து இடைத்தரகர்கள் என்ற  போர்வையில் வயிறு வளர்க்கும் இம்மாபெரும் மோசடியாளர்களுக்கு ஈடான வேறு யாரையாவது  உங்களால் காட்ட முடியுமா?
மனித உடல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்தம் எங்காவது உறைந்து இறுகி விட்டால் உடலின் இயக்கங்கள் ஸ்தம்பித்து நோய் வந்து அழிந்து விடும். அதேபோல் ஒரு நாட்டின்  பொருளாதாரம் சீராக இருக்க. வேண்டுமானால் நாட்டின் செல்வம் உடலுக்குள்  இரத்தம் இறுகி விடுவது போல் உறைந்து விடக்கூடாது. மீண்டும் நம் நாடு பொருளாதாரத்தில் மீட்சி பெற வேண்டுமானால் இறைவனின் பெயரால் சுரண்டப்படும் இந்தக் கொள்ளைகளை தடுத்து நிறுத்த அனைத்து மதத்தவர்களும் பாடுபட வேண்டும். படைத்தனை  விட்டு விட்டு நாம் யாரையும் வணங்க மாட்டோம் என்ற முடிவுக்கு நாம் அனைவரும வந்தேயாக வேண்டும்.

நமது நாட்டின் பெரும்பகுதி பொருளாதாரத்தை முடக்கிப் போடுவது மட்டுமல்ல, நாட்டின் பெரும் பெரும் ஊழல பேர்வழிகளுக்கும் கறுப்புப் பணமுதலைகளுக்கும் அவர்கள் போலீசில் சிக்காமல் அடைக்கலம் கொடுப்பதும் இந்த இடைத்தரகர்கள்தான். கடவுளை எங்கள் மூலமாகத்தான் அணுக வேண்டும என்று கூறிக்கொள்ளும் இவர்கள் நடத்தும் ஆசிரமங்களும் மடங்களும் அடிக்கடி பெரும்புள்ளிகளால் விஜயம் செய்யப்படுவதையும் பெரும்பெரும் தொகைகளை செலுத்தி இவர்களின் பாதங்கள் தரிசிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு வருகிறோம்.

6. மூட நம்பிக்கைகள் உருவாக மூல காரணம் இது: உயிரற்ற உணர்வற்ற  ஒன்றை சக்தி உள்ளாதாக மனிதனை நம்பவைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக பல மூடநம்பிக்கைகள் இடைத்தரகர்களால்  உருவாக்கப்படுகின்றன. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை தங்களுக்கு ஏதாவது துன்பங்கள் வந்து விடும் என்று பயந்து இவர்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை அப்படியே நம்புகிறார்கள். அது மட்டுமல்ல நாடு முழுக்க அதை பரப்பவும் செய்கிறார்கள். இவற்றின் காரணமாக நாட்டு மக்களின் பொருளாதாரமும் உழைப்பும் நேரமும் வீண்விரையங்களுக்கு உள்ளாகின்றன.

7. மனித குலத்தை பிளவு  படுத்தும் கொடிய பாவம் இது: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. இந்தக் கொடுமைக்கு பலியான நாடுகள் பல. அவற்றில் சிறந்த உதாரணம் நமது நாடுதான். நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்,, ஒரே மாமிசம் ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்? ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்ல, ஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன. இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால், இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றால் எந்த பயனும் கிடையாது. அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.
     இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து மதம் மாறியவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்த இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே! அம்பேத்கர் , பெரியார் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் தங்களின் வாழ்நாளை இத்தீமைகளுக்கு எதிராக போராடிக் கழித்தனர். ஆனால் இவர்கள் யாராலும் செய்ய முடியாத தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு இவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது இந்த ஏக இறைக்கொள்கை! நம் நாட்டில் மட்டுஅல்ல, உலகெங்கும் மக்களைப் பிரித்து பகைமையை விதைத்து வரும் இனவெறி, நிறவெறி, மொழிவெறிப் பேய்களை  அடக்கி அழிக்கிறது இந்த ஓரிறைக் கொள்கை! அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி மற்றும் இனவெறி கொண்டு சிதறுண்டு ஒருவரையொருவர் வேட்டையாடிக்கொண்டு இருந்த மக்கள் இன்று ஒரே அணியில் தோளோடு தோள் நின்று தொழுவதும் அன்னியோன்னியமாகப் பழகுவதும் இன்று உலகம் கண்டுவரும் கண்கொள்ளாக் காட்சிகள்! ஆம், இன்று அங்கெல்லாம் வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த ஓரிறைக்கொள்கை!

8. நாத்திகம், கம்யுனிசம் போன்ற உண்மை மறுப்புக் கொள்கைகள் உருவாகக் காரணம்: கடவுளின் பெயரால் நடைபெறும் மோசடிகளையும் அட்டுழியங்களையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் பெரியார், காரல் மார்க்ஸ் போன்றோர்கள் தத்தமது நாடுகளில் கண்டார்கள். இதன் விளைவாக கடவுளே இல்லை என்று அப்பட்டமாக மறுக்க ஆரம்பித்தார்கள். அந்த அக்கிரமங்களால் பாதிக்கப் பட்டவர்கள் அவர்களோடு சேர்ந்து ஆங்காங்கே  ஆதிக்கசக்திகளை எதிர்க்க  இவை நாளடைவில் இயக்கங்களாக உருவாயின. ஆனால் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை தெளிவானது. பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை உணரச் சொல்கிறது குர்ஆன்!

9. மனிதனின் சுயமரியாதையை அடகு வைக்கச் செய்யும் இழிவு: பகுத்தறிவு படைத்த மனிதனை அவனைப் போன்ற மனிதனுக்கு முன்னாலும் அவனைவிட அறிவில் குறைந்த பிராணிகளின் முன்னாலும் மட்டுமல்ல, அறவே அறிவும் உணர்வும் அற்ற கற்களுக்கும் மரக்கட்டைகளுக்கும் முன்னால் தலைகுனியவும், சாஷ்டாங்கம் செய்யவும் வைக்கிறது இந்த இணைவைக்கும் பாவம். சர்வ வல்லமையும் ஆற்றலும் கொண்ட இறைவன் முன்னால் மட்டுமே மனிதன் தலைகுனிய வேண்டும். அவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ வேண்டும் என்கிறது இஸ்லாம். அவ்வாறு வாழ்ந்தால் எந்த படைப்பினகளையும் அஞ்ச வேண்டியதில்லை என்ற மனோ உறுதி வளர்க்கப் படுகிறது. இந்த இறைவன் கற்றுத் தரும் மார்க்கத்தைப் போல ஒரு சுயமரியாதை இயக்கத்தை உலகில் எங்கிலும் காணமுடியாது.

10. பகுத்தறிவையும் அறிவாற்றலையும் முடமாக்கும் இழிசெயல்: சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு கற்களையும் கட்டைகளையும் காண்பித்து இவை எல்லாம் கடவுள் கற்பிக்கப் படுகிறது. ஜீரணிக்க முடியாத பிஞ்சு உள்ளங்கள், "அப்பா! இது எப்படிப்பா கடவுள் ஆகும்?" என்று எதிர் கேள்வி கேட்கும்போது, தந்தையர் சொல்லும் பதில் அனைவருக்கும் தெரிந்ததே. "டேய், கடவுள் பற்றி அப்படியெல்லாம் கேட்கக் கூடாது. சொன்னா அப்படியே நம்பு!". இவ்வாறு வளரும் குழந்தைகளின் பருவத்திலிருந்தே அறிவு முடமாக்கப் படுகிறது. ஆனால் உண்மை இறைமார்க்கமோ படைப்பினங்களையும் வானம் பூமி இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கத் தூண்டுகிறது. அவ்வாறு படைத்தவனை உணர்ந்து அவனை வணங்கச் சொல்கிறது. மூதாதையர்களை கண்மூடிப் பின்பற்றாதே என்று எச்சரிக்கிறது.
      .நிச்சயமாக வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
 (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும் இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும் இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (திருக்குர்ஆன் 88:17-20.)
இவ்வாறு திருமறையின் பல வசனங்கள் இறைவனை அறிய படைப்பினங்களை ஆராய்ந்து பார் என்று மனிதனைத் தூண்டுவதைக் காணலாம்.

11. மனிதனின் தைரியத்தை இழக்கச் செய்து கோழையாக்கும் இழிவு:
கண்டதெல்லாம் கடவுள் என்று மனிதன் நம்பும்போது ஒரு தெய்வத்தை `வணங்கிவிட்டு மற்ற தெய்வத்தை விட்டு விட்டால் அது ஏதாவது நம்மைச் செய்து விடுமோ என்ற பயமும் குற்ற உணர்வும் மனிதனை அலைக்கழிக்கின்றன. நாம் வணங்கும் தெய்வம் நம்மைப் போன்ற ஒரு படைப்பினமே அல்லது நம்மைவிடச் சிறியதே என்ற உணர்வு மேலிடுவதால் மனிதன் எதைக்கண்டாலும் பயந்து கோழையாக காலத்தைக் கழிக்கிறான். ஆனால் படைத்தவனை வணங்கும்போது மனிதனுக்கு படைப்பினங்களைப் பற்றிய பயமே போய்விடுகிறது. சர்வவல்லமையுள்ள ஏன் இறைவன் என்னோடு துணை உள்ளான், அவனை மீறி எந்த படைப்பினமும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற உணர்வோடு அவன் வாழ்வதால், அவனுக்கு ஒப்பிட முடியாத தன்னம்பிக்கையையும் தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தைரியமும் உண்டாகிறது.
ஆக, இறைவனுக்கு இனைவைத்தலை எதிர்ப்பதற்கு மேற்கூறப்பட்டவை  மட்டுமல்ல, இவை போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் முடித்துக் கொள்வோம்.

ஆக, மீண்டும் தெளிவு படுத்துகிறோம் சிலைவழிபாட்டை மட்டுமல்ல, சிலுவை வழிபாட்டையும் தர்கா வழிபாட்டையும் நாம் எதிர்க்கிறோம் என்பதை! இறைவனுக்கு இணைவைக்கும் செயல் யார் செய்தாலும் அது பாவமே.! மறுமையில் அவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் காத்திருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க இவ்வுலக வாழ்விலேயே இப்பாவம் எப்படிப்பட்ட அழிவையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் அறிந்தோம். நாம் எம்மதத்தில் பிறந்திருந்தாலும் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் சரி, அனைவருமே படைத்த இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மட்டுமே நமது இம்மை மற்றும் மறுமையின் வெற்றி அமைந்திருக்கிறது.
====================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

5 கருத்துகள்:

  1. மதங்கள் அந்த அந்த பிரதேசங்களின் வாழ்கை முறைகளிலே தன தங்கி இருந்தது ...... ஹிந்து மதம் செழிப்புமிக்க ஆசியா கண்டத்தில் ஒரு குறையும் இன்றி இருந்தது. ஹிந்துக்கள் இயற்கையை வணங்கியவர்கள் இயற்கையும் அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தது அதனால் தான் எல்லா பொருள்களையும் ஒரு குறையும் இன்றி வழங்கும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தார்கள் .......... மரம் நதி பூக்கள் அனைத்திலும் இறைவனை கண்டார்கள் .. மருதம் நெல்லை குறிஞ்சி நெய்தல் பாலை ....... என சிறப்பாக இருந்தது ஹிந்து மதம். அரபியர்கள் வாழ்க்கைமுறை பற்றி அனைவருக்கும் தெரிந்ததே ஒரு வறண்ட பாலைவனத்திலே தோன்றிய மதம் அபிஷேகம் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருக்க ஞாயமில்லை தானே.............

    தற்போது எண்ணெய் வளம் இருப்பதால் தானே அரேபியா நாடுகள் பணவசதி உள்ள நாடுகளாக இருக்கின்றன ........
    ஹிந்து மதம் ..... மதம் மட்டுமல்ல வாழ்க்கை முறை.

    பதிலளிநீக்கு
  2. "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது".

    என திருவள்ளுவர் தெளிவாக எக்காரணத்தை கொண்டும் இறைவனுக்கு இணை துணை கற்பிக்க(கூடாது) வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து மதங்களும் இறை ஒன்றே என்பதை ஏற்றுக்கொண்டாலும்,யாருமே நேரில் காணாத இறைவனுக்கு உருவம் கற்பிக்கப்பட்டதன் விளைவு அதை பத்திரிக்கை, காலண்டர் பீடி புகையிலை விளம்பரங்களில் அச்சிட்டு தெருவில் நடைபாதை சாக்கடைகுப்பைமேடுகளில் வீசப்பட்டு மனிதர்களின் காலில் மிதி படும் நிலை க்கு அதை உருவாக்கியவர்களே காரணம்

      நீக்கு