இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஜூன், 2024

சிலையில்லாமலே நினைவு கூரப்படும் மகான்

 

வீணடிக்கப்படும் வரிப்பணம்

தங்கள் வாழ்நாளில் செய்த சில சாதனைகளுக்காக சிலை வைத்து நினைவு கூரப்படுகிறார்கள் சிலர். இந்திய மாகாணங்களை இணைத்தார் என்றும் சொல்லப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களுக்காக சமீபத்தில் வைக்கப்பட்ட சிலைக்கு சுமார் 9000 கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதை நாம் அறிவோம். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக – நாட்டில் ஏழை மக்களின் நலனுக்காக- நலிந்தவர்களின் மருத்துவ வசதிக்காக – தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றை உருவாக்குவதற்காக – மக்கள் பிரதிநிதிகளிடம் நம்பி ஒப்படைக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம். தொடர்ந்து தங்களால் போற்றப்படும் சில புண்ணிய புருஷர்களுக்காக பலகோடி செலவில் மேலும் சிலைகள் உருவாக்கப்படும் என்றும் அரசாள்வோர் முன்னறிவிப்பு செய்திருப்பதையும் நாமறிவோம்.

இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எதிர் கட்சியினரும் சிலை வைப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களின் சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கிறது. சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலையிட்டு மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம் தொடர்வதை நாம் காண்கிறோம். இச்செயல் பகுத்தறிவுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்களில் யாரும் இதைக் கண்டிப்பதையும் நம்மால் காண முடிவதில்லை!
உருவச்சிலையில்லா உத்தமர்
இந்த வேளையில் உருவச்சிலையோ அல்லது படமோ எதுவுமே இல்லாமல் உலகெங்கும் மக்களால் போற்றப்படும் அந்த மகானைப் பற்றி நாம் நினைவு கூருவோம் வாருங்கள். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் ‘இவ்வுலகைப் படைத்த இறைவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர் எவருமில்லை’ எனும் கொள்கை முழக்கத்தோடு தன் பொது வாழ்க்கையைத் துவங்கினார்கள். அந்தக் கொள்கையை மிகமிக உறுதியாக தன்னைப் பின்பற்றும் மக்களிடையே விதைத்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டார்கள்.
அவர் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ நாம் பார்க்க முடியவில்லை. இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்பது அவர் போதித்த ஓரிறைக் கொள்கையின் உறுதியான தாக்கத்தைக் காட்டுகிறது. படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு என்பது மக்களை உண்மை இறைவனை விட்டும் திசைதிருப்பி மக்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் செயல் என்பதால் நபிகளார் மிகமிகக் கடினமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தன் வாழ்நாளில் எதற்காக பாடுபட்டாரோ அந்த ஏக இறை வழிபாடு பிற்காலத்திலும் தடையின்றித் தொடர ஆவன செய்தார்கள்.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்என்று எச்சரித்தார்கள்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமேஎனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணமும் வகுத்துச் சென்றார்கள்.
--------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

ஞாயிறு, 16 ஜூன், 2024

திருக்குர்ஆன் நற்செய்திமலர் ஜூன் 24 இதழ்


திருக்குர்ஆன் நற்செய்திமலர் ஜூன்  24 இதழ் 

பொருளடக்கம் 

பன்மை சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டல் -2

அக்காட்சியில் நீங்கள்தான் கதாநாயகன்! -77

நன்றி மறந்த மலைப்பாறை வாசிகள்!-10

வாசகர் எண்ணம் -12

அவசரத் தேவை இறையச்சம் பற்றிய கல்வி -13

வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்! -16

தற்கொலைக்கு தண்டனை -17

கடவுளைக் காண வேண்டுமா?-18

சமத்துவத்தை மறுத்த ஆதிக்க சக்திகள் -20

பொறுமை என்ற இறை அருட்கொடை! -23

பாதிரியாரின் சத்தியத் தேடல் -24


================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திருக்குர்ஆன் நற்செய்திமலர் மே 24 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்திமலர் மே 24 இதழ்

பொருளடக்கம் :

மீண்டும் மீண்டும் ஏமாறும் நாடு!- 2

நமது நாட்டின் அடிப்படைக் குறைபாடுகள் -3

பாரதத்தைக் காக்க என்ன வழி? -7

நாம் திருந்தாமல் நாடு திருந்தாது! -10

இறையச்சமே மாற்றத்திற்கான வழி!-113

ஆள்வோரிடம்  இறையச்சம் வந்தால்..?-15

மன்னரின் வறுமை கண்டு அழுத தோழர்!-16

வறியோருக்காக வருந்திய ஜனாதிபதி ! -18

ஊதியக் குறைவு கோரிய ஜனாதிபதி!-22

வேட்பாளர் பெருமக்களின் கட்டாய கவனத்திற்கு.. -23

========= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

உலகை மாற்றிய இறுதி உபதேசங்கள்

 

 அந்த ஹஜ்ஜின்போது பெருமானார் (ஸல்)அவர்கள் ஆற்றிய உரை உன்னதமானது. உணர்ச்சி மயமானது... இது போல சிறந்த உரையை.. சாதனை உரையை.. நிறைவேற்றப்பட்ட பிரகடனங்களின் தொகுப்பை  மிகச்சிறந்த வாழ்வியல் அறிவுரையை.. வரலாற்றில் எவரும் நிகழ்த்தியது கிடையாது. அன்று அவரது வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் உலகெங்கும் சிதறிப் பரந்தன. மனித மனங்களைக் கொள்ளை கொண்டன. உலக வரலாற்றை மாற்றி அமைக்க எதுவாக அமைந்தன.

மற்ற தலைவர்களுக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடு  
= இறந்து போவதற்கு முன் வெறும் தத்துவம் பேசி மரித்தார் சாக்ரடீஸ்!
= தன் இனத்திற்கு இல்லாத பெருமையைஇருப்பதாகக் கூறி மக்களை கவர முயன்றார் ஹிட்லர்!
= தீண்டாமை ஒழியவும் ஜாதிக் கொடுமைகள் ஒழியவும் வாழ்நாள் முழுக்கப் பிரச்சாரம் செய்து அவற்றுக்கான தீர்வு காணாமலேயே மறைந்து போன பெரியார் அல்லது அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகளையும் நாமறிவோம்.
ஆனால் பெருமானாரின் அந்தப் பேருரை உலகெங்கும் மனித குலத்தின் மாண்பைப் போற்றுகின்ற புரட்சியை துவங்கி வைத்தது. மனித உரிமைகளை மீட்கும் உந்துகோலாக அமைந்தது.
குல வெறியும்மொழி வெறியும் கொண்ட மக்களைப் பண்படுத்தி அவர்களிடையே மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பிரகடனப்படுத்தி அதை அங்கீகரிக்க செய்த சாதனை வெற்று அரசியல் பேசி கைதட்டல்கள் வாங்கி பெருமை பாராட்டும் அரசியல் தலைவர்களின் செயல் போன்றதல்ல. தொடரும் சமூகப் புரட்சிக்காக ஊன்றப்பட்ட வேர் அது.
ஒவ்வொரு அசைவிலும் தனது சமூகத்தை வழிநடத்தும் ஒரு மகத்தான தலைவரின் அன்பும்கருணையும்அக்கறையும்கவனிப்பும்கண்காணிப்பும் எச்சரிக்கை உணர்வும் பொங்கி வழிந்த உரை அது.
சமூக அமைதியை நடைமுறைப்படுத்த விழையும் எவருக்கும் இந்த உரையின் ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவம் வாய்ந்தது...  பின்பற்றப்பட வேண்டியது...
இதில் முக்கிய கவனத்திற்குரியவை.
= ஒன்றே குலம்!
= ஒருவனே இறைவன்!
= அக்கிரமம் கூடாது.
= வட்டி கூடாது.
= பழிவாங்கும் வஞ்ச உணர்ச்சி வேண்டாம்.                
= பெண்மையைப் போற்றுவோம்.
= இறைவாக்கும் நபி மொழியுமே நேர்வழிக்கான அடிச்சுவடிகள்.
= உலக சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்.
= இனமொழி நிற அடிப்படையில் பேதமில்லை.
அழியாத வரலாற்று சாதனை
இது போல உன்னதமான உண்மையான இலட்சியப் பிரகடனங்களைக் கொண்ட உரையை உலக வரலாறு அதுவரையும் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. இந்த உரை மூலம் அன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் இன்றளவும் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற தலைவர்களின் உரைகளைப் போல காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன.
நபிகளாரைப் பின்பற்றுவோரின் சிறப்பு பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

"அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில்அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும்இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும்அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும்அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்திஉதவியும் புரிகின்றார்களோமேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளியினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்." ( திருக்குர்ஆன் 7:157. 

நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை

ஹிஜ்ரி பத்தாவது ஆண்டு (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) இறைத்தூதரின் வாழ்க்கை இறுதி நாள்களை நோக்கி நகர்ந்தது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக இறைத்தூதர்(ஸல்) மக்காவிற்கு வந்தார்கள். மக்காவின் அரஃபா மற்றும் மினா மைதானங்களில் மக்களிடையே உரை நிகழ்த்தினார்கள். மனித குலம் முழுமைக்கும் உலகின் இறுதிநாள் வரை மாற்றியமைக்க முடியாத உரிமைப் பிரகடனமாய் அவ்வுரை அமைந்தது. இதை அரஃபா உரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உரை நிகழ்த்தப்பட்ட போது அதை கேட்கத் திரண்டிருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 1,40,000. ஒலி பெருக்கி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அத்தனை பேருக்கும் அவ்வுரை எவ்வாறு எட்டியிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நபிகளாரின் உரையை செவியுற்றவர்கள் அடுத்தடுத்து பின்னால் நிற்பவர்களுக்கு எட்டச் செய்தார்கள். பிற்காலங்களில் அவற்றை ஏடுகளில் பதிவு செய்தவர்கள் ஏனைய நபிமொழிகள் எவ்வாறு அறிவிப்பாளர்களின் தரம் ஆராய்ந்து பதிவு செய்தார்களோ அதேமுறையில் இந்த இறுதி உரையின் முக்கிய பாகங்களையும் பதிவு செய்தார்கள். அவற்றின் தொகுப்பை நீங்கள் கீழே வாசிக்கலாம்:

வரலாற்று சிறப்புமிக்க அரஃபா உரை:

= புகழனைத்தும் ஏக இறைவனுக்கே! அவனைப் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். நம் மனோ இச்சைகளின் கெடுதியைவிட்டும், நம் செயல்களின் தீங்கைவிட்டும் அவனிடமே காவல் தேடுகிறோம். யாருக்கு ஏக இறைவன் நேர்வழிகாட்டியுள்ளானோ அவரை வழிகெடுப்பவர் எவருமிலர்; யாரை அவன் வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமிலர். ஏக இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை ஏதுமில்லை என நான் சாட்சியளிக்கிறேன். முஹம்மத் அவனுடைய அடியாரும் தூதருமாய் இருக்கிறார் என்றும் நான் சாட்சியளிக்கிறேன். (அல் பிதாயா - இப்னு கஸீர் 5/189)

= மக்களே! என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள்! இவ்வாண்டிற்குப் பின்பு மீண்டும் உங்களை இவ்விடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ( இப்னு மாஜா 1892, 1893)

சமத்துவப் பிரகடனம்:

= மக்களே உங்களின் இறைவன் ஒருவனே! ஓர் அரபிக்கு அரபி அல்லாத ஒருவரை விடவோ, அரபி அல்லாத ஒருவருக்கு ஓர் அரபியை விடவோ மேன்மையோ சிறப்போ இல்லை. ஒரு வெள்ளையருக்கு ஒரு கருப்பரை விடவோ, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ சிறப்பேதும் இல்லை. இறையச்சமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக ஏக இறைவனிடம் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் இறையச்சம் அதிகமாய் உள்ளவரே. (பைஹகீ)

= மக்களே ஏக இறைவனை அஞ்சுங்கள்! அடிமையான கருப்பர் ஒருவர் உங்களுக்கு தலைவராய் ஆக்கப்பட்டாலும், அவர் இறைவேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவருக்கு செவி சாயுங்கள்; கீழ்படியுங்கள். (நஸாயீ 4192, திர்மிதி 1706 1706)

சக உயிர்களை மதியுங்கள்:

= மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த நாளும் (துல் ஹஜ் 9ஆம் நாளும்) இந்த நகரமும் (மக்கா நகரமும்) எந்த அளவிற்குப் புனிதமானவையோ அதே அளவிற்கு உங்கள் உயிர்களும், உடமையும், மானமும், மரியாதையும் உங்களுக்குப் புனிதமானவையே. (புகாரீ 1741, 1742, முஸ்லிம் 2334)

= அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பின்பு ஒருவரையொருவர் கழுத்தை வெட்டிக் கொண்டு வழிகெட்டவர்களாக இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்.

அமானிதம் பேணுங்கள்:

= உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (நீதியில் நிலைத்திருங்கள்). நீங்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அப்போது உங்களின் செயல்கள் குறித்து இறைவன் விசாரிப்பான். மார்க்கத்தைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களில் ஒருவர் பிறரின் பொருளுக்குப் பொறுப்பேற்றிருந்தால் அதன் உரிமையாளரிடம் உரிய முறையில் ஒப்படைத்து விடட்டும். (புகாரீ 4406)

பணியாட்களும் சகோதரர்களே:

= மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! உங்களின் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களைச் சீராகப் பராமரியுங்கள். நீங்கள் உண்பதுபோல அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்நீங்கள் உடுத்துவது போல அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள்.

மோசடி வேண்டாம்:

= குறைஷிகளே! மறுமைக்கான தயாரிப்புடன் நாளை மக்கள் வரும்போது, உலகச் சுமைகளை உங்களின் பிடரியின் மீது சுமந்தவர்களாய் வராதீர்கள். அப்போது எந்த விஷயத்திலும் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பவனாக நான் இருக்கமாட்டேன்.

பழிக்குப்பழி மற்றும் வட்டிக்கு முற்றுப்புள்ளி:

= அறியாமைக் கால விவகாரங்கள் அனைத்தும் என்  கால்களுக்குக் கீழே புதைக்கப் பட்டுவிட்டன. அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த கொலைகளுக்குப் பழிவாங்குதல் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுவிட்டன. நம்மிடையே நடந்த கொலைகளில் ரபீஆ இப்னு ஹாரிஸின் மகன் கொலை செய்யப்பட்டதற்கான பழிவாங்குதலை முதலில் நான் தள்ளுபடி செய்கிறேன். - பனூ ஸஅத் குலத்தாரிடம் அவன் பால்குடிச் சிறுவனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப் படுகிறது. நம்மவர் கொடுத்திருந்த வட்டியில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்புக் குரிய வட்டியை முதலாவதாக நான் தள்ளுபடி செய்கிறேன். அவருக்குரிய வட்டி அனைத்தும் அசலுடன் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ( முஸ்லிம் 2334)

சொத்துரிமை மற்றும் விபச்சாரம் பற்றிய தீர்ப்புகள்:

= மக்களே! சொத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமையை இறைவன் வழங்கியுள்ளான். இனி எவரும் தன் வாரிசுகளுக்கு உயில் எழுதக்கூடாது.

= அறிந்து கெள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது.

= திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண் விபச்சாரம் செய்து அதன் மூலம் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை திருமணம் முடித்துள்ள ஆணுக்கே உரியதாகும்.

= திருமணத்திற்குப் பிறகும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.

= தந்தை அல்லாத ஒருவரை தம் தந்தையாக அழைப்பவரின் மீதும், தம் எஜமானனுடன் தன்னை இணைத்துக் கொண்டவரின் மீதும் ஏக இறைவன், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும். அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (நஸாயி 3642, அபூ தாவூத் 2870)

குடும்பத் தலைமைக்கு கட்டுப்படுதல்:

= “ஒரு பெண் கணவனின் வீட்டிலிருந்து அவனுடைய அனுமதி இல்லாமல் எதையும் செலவிடக்கூடாது.”

"உணவையுமா?” என அப்போது கேட்கப்பட்டது.

"ஆம்! அதுதான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறந்ததுஎன்று இறைத்தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். (அபூ தாவூத் 3665)

இரவல் கொடுத்தோர் உரிமைகள்:

= இரவலாக வாங்கப்பட்ட பொருள் உரியவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். பாலைக் கொண்டு பயன்பெற அளிக்கப்பட்ட கால்நடைகள் (பயன்பெற்ற பின்னர்) உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். இழப்பீடு நிறைவேற்றும் பொறுப்பு தலைவனையே சாரும். (அபூ தாவூத் 3665)

கணவன்மார்களின் உரிமையும் கடமைகளும்:

= மக்களே கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் ஏக இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு நன்மையே நாடுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்! ஏக இறைவனின் அமானிதமாக அவர்களைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பதுபோலவே உங்கள் மீதும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. நீங்கள் விரும்பாதவர்களை அவர்கள் உங்களின் வீடுகளுக்குள் அனுமதிக்காதிருப்பது அவர்களின் கடமையாகும். மானக்கேடான காரியங்கள் செய்யாமல் இருக்கவேண்டும். அவர்கள் குற்றம் இழைத்தால் அவர்களைத் தண்டிக்கிற உரிமை உங்களுக்கு உண்டு. அதாவது அவர்களை உங்களின் படுக்கையைவிட்டு ஒதுக்கிவையுங்கள்! காயம் ஏற்படாத வகையில் இலேசாக அடியுங்கள்; அவர்கள் தங்களின் தவறிலிருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்கு முறையாக உணவும் உடையும் அளியுங்கள்! அவர்களுக்கு நன்மையையே நாடுங்கள்! ஏனெனில் உங்களிடம் உங்களின் உதவியாளர்களாகவும், உங்களையே சார்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அதைத் தவிர (பாலுறவு கொள்வதைத் தவிர) வேறுஎதையும் உரிமையாகக் கொள்ளமாட்டீர்கள். ஏக இறைவனின் பெயரை முன்மொழிந்து அவர்களுடன் மணவாழ்க்கை ஒப்பந்தம் செய்துள்ளதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். (முஸ்லிம்  2334, திர்மிதீ 1163, 3087)

ஷைத்தான் மற்றும் தஜ்ஜால் பற்றிய எச்சரிக்கை:

= மக்களே! உங்களின் இந்நகரத்தில், தான் வணங்கப்படுவது குறித்து ஷைத்தான் நம்பிக்கை இழந்துவிட்டான். இருப்பினும் அவன் மகிழும் விதமாக அற்பமாக நீங்கள் கருதும் சில விஷயங்களில் அவனுக்குக் கீழ்ப்படிவீர்கள். எனவே உங்களின் மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாய் இருங்கள். (முஸ்த்தரகுல் ஹாகிம்)

= (பிற்காலத்தில் தோன்றும் பெரும் பொய்யன்) அல் மஸீஹுத் தஜ்ஜால் குறித்து எச்சரிக்கிறேன். இறைவன் அனுப்பிய இறைத் தூதர்களில் எவரும் தம் சமுதாயத் தாரை தஜ்ஜால் குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. இறைத்தூதர் நூஹ்(அலை) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் (அவனைக் குறித்து) எச்சரித்தார்கள்.

அவன் (இறுதிகாலத்தில்) தோன்றுவான். அவன்  தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், உங்களின் இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதை மும்முறை கூறினார்கள். உங்களின் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்ல. அவனோ (தஜ்ஜாலோ) வலக்கண் குருடானவன். அவன் கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப்போல இருக்கும். ( புகாரீ 4402)

மாதத்தின் நாட்களை முன்பின் ஆக்குதல்:

= (மாதத்தின் நாள்களை ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு) முன்பின் ஆக்குதல் இறைமறுப்பை அதிகரிக்கும் செயலாகும். இதனால் இறைமறுப்பாளர்களே வழிகெடுக்கப்படுகிறார்கள். அவர்களே ஒரு மாதத்தின் நாள்களை முன்பின் ஆக்கி ஓர் ஆண்டில் அம்மாதங்களில் போரிடுவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதத்தில் போரிடுவது கூடாது என தடுத்துக் கொள்கிறார்கள். தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கைக்கு சரியாய் ஆக்கி இறைவன் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமானதாய் ஆக்கிக் கொள்வதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார்கள். (இப்னு மாஜா 3055)

= அறிந்து கொள்ளுங்கள்! வானங்களையும் பூமியையும் இறைவன் படைத்த நாளிலிருந்தே அதன் அமைப்புப்படி இப்போதும் காலம் சுற்றிவருகிறது. ஏக இறைவனிடம் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டாகும். வானங்களையும் பூமியையும் இறைவன் படைத்த அன்று இவ்வாறுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அவை துல் கஅதா, துல் ஹஜ் மற்றும் முஹர்ரம். நான்காவது ரஜப் மாதமாகும். (புகாரீ 4662, அபூ தாவூத் 1942)

சகோதரத்துவம் பேணுதல்:

=ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! மனமுவந்து கொடுத்தால் தவிர, ஒரு முஸ்லிமின் பொருள் மற்றொரு முஸ்லிமுக்கு ஆகுமானதன்று. உங்களுக்கே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். (திர்மிதீ 3078)

இஸ்லாமிய கடமைகள் பேணுதல்:

= மக்களே! உங்களின் இறைவனை வணங்குங்கள்! அவனையே அஞ்சுங்கள்! கடமையான ஐவேளைத் தொழுகையைத் தவறாது பேணுங்கள்! நோன்பு நோற்றுவாருங்கள்! மனமுவந்து ஸகாத் கொடுத்துவாருங்கள்! இறைஇல்லத்தை (கஅபாவை) ஹஜ் செய்யுங்கள்! உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்குக் கட்டுப் படுங்கள்! (அப்போதுதான்) நீங்கள் சுவர்க்கம் செல்வீர்கள். (திர்மிதீ 616)

= ஒருவர் குற்றமிழைத்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுக்கப்படும். மகனின் குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (இப்னு மாஜா 1015)

இறுதி வேண்டுகோள்கள்:

= என் பிரார்த்தனையைத் தவிர இறைத்தூதர் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் (உலகிலேயே) முடிந்துவிட்டது. மறுமை நாளுக்கு அதை நான் என் இறைவனிடம் சேமித்து வைத்துள்ளேன். அறிந்து கொள்ளுங்கள்! மறுமையில் இறைத்தூதர்கள் தங்களின் சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்வார்கள். அப்போது என்னைக் கேவலப்படுத்திவிடாதீர்கள்! நான் உங்களுக்காக கவ்ஸர் எனும் நீர்தடாகத்தின் அருகில் அமர்ந்திருப்பேன்.

= மக்களே! எனக்குப் பின்னர் எந்த இறைத்தூதருமிலர். உங்களுக்குப் பின்னர் எந்தச் சமுதாயமும் இல்லை. இங்கு வந்திருப்பவர்கள் வராதிருப்பவர்களுக்கு (இச்செய்தியை) எட்டச் செய்யுங்கள்! செய்தி சென்று சேர்பவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவரை விட நன்றாய் ஆராயும் தன்மை கொண்டவராய் இருக்கலாம். (புகாரீ 67, 105, 1741)

= மக்களே! நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள். என்னுடைய பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களிடையே இறைவேதத்தையும், அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பின்பற்றினால் வழிதவறமாட்டீர்கள். (முஸ்லிம்  2334, இப்னு மாஜா 3074)

 இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்திவிட்டு மக்களை நோக்கி,

"மறுமை நாளில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கப்படும் போது என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டார்கள்.

“(இறைச்செய்திகள்) அனைத்தையும் தெரிவித்துவிட்டீர்கள்; தங்களின் பொறுப்பை தாங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்; நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியளிப்போம்என மக்கள் கூறினார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) தம் ஆட்காட்டி விரலை வானத்தின் பால் உயர்த்தி சைகை செய்துவிட்டு பின்னர் மக்களின் பால் தாழ்த்தி, "இறைவா இதற்கு நீயே சாட்சிஎனக்கூறி தங்களின் அரஃபா உரையை நிறைவு செய்தார்கள். (முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் உரை நிகழ்த்திய இடத்தில் திருக்குர்ஆனின் 5:3 வசனம் அருளப்பட்டது.

இன்று உங்களுக்காக உங்களின் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கிவிட்டேன். உங்கள்மீது என் அருட்கொடையையும் பூர்த்தி ஆக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை உங்களின் மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (திருக் குர்ஆனின் 5:3)


வியாழன், 23 மே, 2024

பின்லாந்து யுவதியின் மனமாற்றம்

 


By Jerry Tom







என் பெயர் பியா (Bea) நான் பின்லாந்தில் மதமற்ற வீட்டில் வளர்ந்தேன்.

சின்ன வயதிலிருந்தே மதம் சார்ந்த உரைகளில் எனக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருந்தது. நான் சிறு வயதில் பைபிளை அதிகம் வாசிப்பேன், ஆர்வத்தை பகிர்ந்து கொண்ட பாட்டியுடன் நிறைய உரையாடுவேன், ஆன்மீகம் பற்றி நிறைய புத்தகங்கள் வாசிப்பேன் (அவரும் இஸ்லாத்த்தில் ஆர்வமாக உள்ளார். எல்லாப் புகழும் இறைவனுக்கே).
இந்த நூல்களில் இருந்து நான் தேடிக் கொண்டிருந்த பதில்கள் எனக்கு கிடைத்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனக்கு 18 வயதாகிய போது லண்டன் செல்ல நேர்ந்தது. அங்கு சில முஸ்லிம்களை சந்தித்தேன். அவர்கள் இஸ்லாத்தை பற்றி எனக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்திய போது ஆரம்பத்தில் எனக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வமே எழவில்லை. எப்போதும் போல எனது சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது என்றும் முடிவு செய்தேன்.
ஆனால் சில உரையாடல்கள் மூலம் நான் மேலும் அறிய முயற்சி செய்தேன். நான் இஸ்லாம் பற்றிய விரிவுரைகளை அதிகமாக கேட்கத் தொடங்கினேன் மேலும் குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்தேன். 2-3 ஆண்டுகள் படித்த பிறகு நான் தேடிக்கொண்டிருந்த அனைத்து பதில்களையும் பெற்றேன். அதனால் நான் இஸ்லாத்தை ஏற்க முடிவு செய்தேன்.
மேலும் எல்லாப்புகழும் இறைவனுக்கே இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறப்பாக உணர்ந்தேன். ஆனால் சில நேரங்களில் கடினமாகவும் இருந்தது. என் குடும்பத்தினர் முதலில் அதை எதிர்த்தார்கள். மற்றும் நான் நண்பர்களை இழந்துவிட்டேன். மேலும் முஸ்லிம்களிடமிருந்தும் முஸ்லிமல்லாதவர்களி டமிருந்தும் எனக்கு அறியாமையில் பங்கு கிடைத்தது. ஆனால் இது போன்ற விஷயங்கள் தான் என்னை வலுவான பெண்ணாக ஆக்குவதை உணர்ந்தேன்.

By ஜெர்ரி டாம் 

புதன், 15 மே, 2024

நாட்டை நேசித்த மக்கள் தலைவன் திப்பு!

நமது நாட்டைப் பீடித்த மிகப்பெரும் சாபக்கேடான காலனி ஆதிக்கத்தின் போது நாம் அனுபவித்த கொடுமைகள் எண்ணற்றவை. ஆனால் இன்று அதே காலனி ஆதிக்க சக்திகள் கார்ப்பரேட் ஆதிக்க  உருவில் நாட்டைக் கொள்ளையடித்து வருவதை ஆராய்வோர் அறியலாம். இவர்களின் கைப்பாவைகள்தான் நம்மை இன்று ஆண்டு வருகிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் நாடு நாசமாகப் போனாலும் செல்வத்தை சேர்ப்பது ஒன்றே இவர்களின் குறிக்கோள். ஏழைகளின் உழைப்பை வரிவிதிப்பின் மூலம் சுரண்டி கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்பிப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். 
 காலனி ஆதிக்க சக்திகளின் தன்மையை நன்றாகப் புரிந்து கொண்டவர் திப்பு சுல்தான் என்ற தன்னலமற்ற தியாகி. எப்பாடுபட்டாவது நம் நாட்டை அவர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்று தன் இன்னுயிரை நீத்தார் அவர். இறையச்சம் தூண்டிய பொறுப்புணர்வு அவரை இயக்கியது. நபிகள் நாயகம் அவர்களின் எச்சரிக்கையை அவர் உணர்ந்திருந்தார்.

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ)

நாட்டுப்பற்று என்பது நாட்டு மக்களை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களைப் பாதுகாப்பதுமே என்பதை முழுமையாக உணர்ந்து அவர் செயல்பட்டதை வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் நாட்டை உள்ளார நேசித்த அப்படிப்பட்ட ஒரு வீரனை இன்று பாசிச சக்திகள் தவறான ஒளியில் சித்தரித்து அவரைப் பற்றிய சரித்திர குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி வரும் கொடுமையையும் இன்று நாம் சந்தித்து வருகிறோம்.  

அசரவைக்கும் ஆளுமை!
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் அசரவைக்கின்றன. காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புரிதல் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

விவசாயப் புரட்சி
வளமான நிலத்தை யாரும் தரிசாகப் போடக்கூடாது. நிலத்தின் உரிமையாளர் பயிரிட வேண்டும் அல்லது நியாயமான குத்தகைக்கு விட்டுப் பயிர் செய்ய வேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்கு மேல் நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், அரசாங்கத்தால் அந்நிலம் பறிமுதல் செய்யப்படும். நிலக்குத்தகை நியாயமானதாக இருக்க வேண்டும். தன் விருப்பப்படி குத்தகைத் தொகையை அடிக்கடி உயர்த்தக் கூடாது. மழையில்லாவிட்டாலும், அதிக மழை பொழிந்து பயிர் மகசூல் பாதிப்படைந்தாலும் குத்தகைத் தொகையை குறைத்து வாங்கிட வேண்டும். திப்புவின் ஆட்சிக் காலத்தில் மூன்று இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. தலித் மக்களுக்கு தனியே நிலம் அளிக்கப்பட்டது. உயர்குலத்தோரின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

அரசு ஊழியர் உறுதிமொழி
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறார் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

உள்நாட்டு வணிகர்களுக்கும் தொழல் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பு
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; ‘முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் சாகேத் ராமன்.

சாதி அமைப்புகள் தளர்வு
நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார் ஆங்கிலேய அதிகாரி புக்கானன். திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793 இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் ஆங்கிலேயரின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

வீண்விரயம் தவிர்ப்பு
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதினார் திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

போர் தர்மங்கள் பேணுதல்
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று காலனி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட காலனி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

அவரது இறுதி வார்த்தைகள் மறக்க முடியாதவை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லாஹ் 
எமக்குச் சாவு வராதா 
துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லாஹ் 
எமக்குச் சாவு வராதா”

(தகவல்கள் நன்றி: வினவு இணையதளம்,)

=======================  

கிழக்கிந்திய கம்பெனியின் சிம்மசொப்னம்

https://www.quranmalar.com/2024/05/blog-post_15.html

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் சிம்மசொப்பனம்!‘


இறைவன் மீதும் மறுமையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அரசாண்ட மன்னர் திப்புசுல்தான். திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர்தான் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் சிம்மசொப்பனம்’ (Nightmare of East India Company) என்பது. “இந்தியாவில் காலனியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
= ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் ஆங்கிலேயத் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு. துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்.
= “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறார் வெல்லெஸ்லி. யாருமே ஒத்துழைக்காத நிலையில் – தன்னைசார்ந்தவர்கள் கூட காலனி அரசின் கைக்கூலியாக மாறிவிட்ட நிலையிலும் - தன்னந்தனியாக காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இறுதிவரைப் போராடி வீரமரணம் அடைந்தார் திப்பு!

நாட்டுப்பற்றுக்கு முன்னுதாரணம்
உண்மையான நாட்டுப்பற்று என்பது நாட்டின் மண்ணை முகர்வதிலோ பாடல்களைப் பாடுவதிலோ இல்லை. மாறாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை உளமார நேசிப்பது என்பதே உண்மை. நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!

இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத் தேவைகளாகும். இந்தப் பண்புகளை நாம் முழுமையாக திப்புவிடம் காணமுடிகிறது.

மதுவிலக்கு
திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். மது உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் சட்டப்படி குற்றம் என அறிவித்தார். மது விற்பனையினால் அரசாங்கத்திற்கு நிதி வரவு உண்டு என்பதற்காக, மக்களின் அறிவை மழுங்கக்கூடிய மதுவை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்தார். மது உற்பத்தியாளர்களின் உரிமங்களை நீக்கம் செய்தார். மக்கள், மதுவை நாடக் கூடாது என்றும், மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

சமூகச் சீர்திருத்தங்கள்
மலபாரில் வாழும் பெண்கள் தோள் சீலை அணிவதற்கான உரிமை குறித்து தெளிவாக உணர்ந்திருந்தார். அவ்வுரிமையை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அது தொடர்பாக, திப்பு சுல்தான், 1785 ஆம் ஆண்டு மலபார் கவர்னருக்குக் கடிதமும் எழுதினார். இதிலிருந்து பெண் உரிமையிலும், பெண் விடுதலையிலும் உறுதியாகச் செயல்பட்டவர் திப்பு சுல்தான் என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

தண்டனை அளிப்பதில் மாறுபட்ட உத்தி
குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வாழும் கிராமத்தில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவற்றுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவை மூன்று அடி உயரத்துக்கு மரமாக வளரும் வரை வளர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இவ்வாறெல்லாம் கூட சுற்றுச் சூழலைப் பேணிட முயன்றார் திப்பு!

தாவரக் கூடாரம் : லால்பாக் தோட்டம்
‘லால்பாக் தோட்டம்’ - திப்புவின் ஆராய்ச்சிக் கூடமாகியது! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரம், செடி, கொடி வகைகளைக் கொண்டு வரச் செய்து பராமரித்தார். மூலிகை, யுனானி மருந்து முறைகளையும் பெருக்கினார்.
திப்பு, தன் ஆட்சியில் அனைவருக்கும் உணவு, வேலை, வசிக்க இடம், ஆடை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்தினார்.
=================
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?