இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஜூலை, 2015

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

Related image

அண்மையில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்த திருக்குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளை ரேடியோகார்பன்' பரிசோதனைக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர். (ஆதாரம்: http://www.birmingham.ac.uk/news/latest/2015/07/quran-manuscript-22-07-15.aspx
(மேலே படத்தில் அந்த கையெழுத்துப் பிரதிக்குப் பக்கத்தில் இருப்பது இன்றிய கம்ப்யூட்டர் பிரதி. இரண்டும் அட்சரம் பிசகாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.)
உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தி அல்ல என்ற கூறலாம். ஏனெனில் அருளப்பட்ட காலம் முதல் இது இன்றுவரை திருக்குர்ஆனை மூல மொழியில் ஓதிவருவது அவர்களின் பழக்கமாக உள்ளது. ஒலிவடிவிலேயே முழுக் குர்ஆனும் உலகெங்கும் பிரபலமாகி இருப்பதால் அதை யாரும் சிதைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
 இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9)
இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன் உள்ளிட்ட எல்லா மத வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும் மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?
இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தை ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே , அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா? அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.
திருக்குர்ஆனின் தனித்தன்மைகள்
முந்தைய வேதங்களின் இன்று கிடைக்கும் பிரதிகளோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆனின் கீழ்கண்ட தனித்தன்மைகளை நீங்கள் உணரலாம்:
அ) மூலமொழியில் பாதுகாக்கப் படுதல் : இன்று உலகில்  திருக்குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட இறைவேதங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே காணமுடிகிறது. அவற்றின் மூல வசனங்களைக் காண முடிவதில்லை. இதுதான் அவ்வேதத்தின் மூலம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படும் எதையும் நீங்கள் தேடினாலும் காணமுடியாது.
     ஆனால் திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம். அருளப்பட்ட நாள் முதல் அதிகமதிகமான முஸ்லிம்களின் தொடர்ந்த ஓதுதலின் காரணமாக அது ஒலிவடிவிலேயே உலகெங்கும் பிரபலாமாகி இருப்பதும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.
ஆ) நூறு சதவீதம் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே: வானவர் ஜிப்ரீல் மூலமாக இறைவன் அருளிய வேத வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன். இதில்  முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளோ அல்லது வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ சிறிதும் இடம்பெறவில்லை. முஹம்மது நபி அவர்களின் உபதேசங்களும் அவரைப் பற்றிய குறிப்புகளும் அல்லது அவரது வாழ்க்கைக்  குறிப்புகளும் ஹதீஸ் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு தனியாகப் பாதுகாக்கப் படுகின்றன, ஆக திருக்குர்ஆனில் முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. ஆனால் இன்று கிடைக்கும் முந்தைய வேதங்களின் பிரதிகளில் இந்தத் தனித்தன்மையைக் காண முடியாது.
உதாரணமாக பைபிளில் இறைவார்த்தைகளும் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளும் உள்ளன. மேலும் பிற்காலத்தில் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து எழுதிய சம்பவக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன என்பது கிருஸ்துவ உலகமே ஒப்புக்கொள்ளும் உண்மையாகும்.  
இ) சந்தேகங்களுக்கு இடமேயில்லை
2:2. இது திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவதுநான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா? இதுவே திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் – சர்வஞானம் கொண்டவனின் – ஆக்கம் என்பதை நிரூபிக்கிறது.
ஈ) சந்தேகம் கொள்வோருக்கு அறைகூவல் !
இவ்வேதத்தைப் பற்றி சந்தேகம் கொள்வோரைப் பார்த்து இறைவன் விடுக்கும் அறைகூவலையும் எச்சரிக்கையையும் பாருங்கள்:
2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (காப்ரியேல்) மூலம் அருளப்பட்ட இந்த வேதவசனங்களில் உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் இது போன்றதொரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதகுலத்தை நோக்கி சவால் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி!
 2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
உ) இறைவனுக்கே உரிய அதிகார தோரணை!
 மேற்படி சவாலை எதிர்கொள்ள முடியாத சத்திய மறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கையும் விடுக்கிறான். 
 2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வசனங்கள் மூலம் இறைவன் அகல உலக மக்கள் அனைவரையும் நோக்கி விடுக்கும் செய்தி இதுதான்:
இதோ இந்தத் திருக்குர்ஆன் என்பது எனது கட்டளைகளைக் கொண்ட இறுதிவேதம். அகில உலகிலும் இனி இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்காகவும் வழிகாட்ட இது அருளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்களுக்கு மோட்சம் உண்டு. மாறாக யார் இதை மறுத்து இதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிப்பதற்காக இது போன்ற ஒரு அத்தியாயமேனும் இயற்றிக் காட்டட்டும். அதற்காக அகில உலக மக்களையும் அனைத்து சக்திகளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துக் கொள்ளட்டும்.
அந்த முயற்சியில் நீங்கள் தோல்விகண்டால் - நிச்சயமாக அது நீங்கள் தோல்வி காண்பீர்கள் என்பது திண்ணம் - உங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவ்வாறு திரும்ப மனம் இல்லையானால் இறைவனையும் அவன் வேதத்தையும் மறுப்போருக்காக தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். அது எப்படிப்பட்ட கடுமையான நெருப்பு என்றால் தீய மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகளாக எரிந்துகொண்டிருக்கும்.
அதாவது இவ்வுலகின் அதிபதி தன் அடிமைகளை நோக்கி திருக்குர்ஆனைக் காட்டி இதை ஏற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறும் பாணியில் அமைந்துள்ளன இவ்வசனங்கள்! 
ஊ) முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது இவ்வேதம்
ஒன்றை இறைவேதம் என்று சொல்வதாக இருந்தால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதனின் வார்த்தையில் தான் முரண்பாடுகள் வரும். ஏக இறைவனின் வார்த்தையில் முரண்பாடுகள் வருவதற்கு அறவே வாய்ப்பிருக்காது. அப்படி இருந்தால் அது மனிதனின் வார்த்தையாகத் தான் இருக்குமே தவிர இறைவேதமாக இருக்க முடியாது.
இவ்வுலகில் காணப்படும் நூல்களில் பல முன்னுக்குப்பின் முரண்படுவதைக் காணலாம். அதாவது அந்நூலின் பக்கங்களுக்குள் காணப்படும் முரண்பாடு. உதாரணங்கள் பல இருந்தாலும் இதைப் புரிந்து கொள்வதற்காக ஒன்றை மட்டும் இங்கு  காண்போம்:
பைபிளின் எஸ்றா 2 வது அதிகாரத்திற்கும், நெகேமியா 7 வது அதிகாரத்திற்குமிடையே உள்ள காணப்படும் முரண்பாடு
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். (நெகேமியா 7:10)
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.(எஸ்றா 2:5)
எ) காலப்போக்கில் உண்டாகும் முரண்பாடு :
உதாரணமாக  ஐம்பது வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு நூலை எடுத்து இன்று வாசித்துப் பாருங்கள். அது அறிவியல் நூலேயானாலும் சரி, ஆன்மீக அல்லது சட்ட நூல்களானாலும் சரி. இன்றைய மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏராளமான முரண்பாடுகளை நீங்கள் காண முடியும்.
ஆனால் திருக்குர்ஆனின் அற்புதம் என்னவென்றால் மேற்படி இரண்டு முரண்பாடுகளும் எள்ளளவும் இல்லை. இறைவன் கூறுகிறான் 
4:82    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா(இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அருளப்பட்ட காலம் தொட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது திருக்குர்ஆன்!
திருக்குர்ஆனில் முன்னுக்குப்பின் முரண்பாடுகளும் இல்லை. கால வளர்ச்சியின் மூலம் உண்டாகும் மனித ஆக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளும் அறவே இல்லை. காரணம் இது முக்காலத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது!

39:1(யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
விஞ்ஞானமும் மனித அறிவும் வளர வளர புதுப் புது ஞானங்கள் மனிதனுக்குப் புலப்படும்போது எந்த மனித ஆக்கங்களும் காலமாற்றத்தால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆனால் திருக்குர்ஆன் இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடும் சரித்திர உண்மைகளோடும் சிறிதும் முரண்படாமல் தொடர்கிறது! உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. 

 இவைபோக இலக்கியத்தில் திருக்குர்ஆனின் உன்னத நிலைமை, அனைத்து உலக  மக்களையும் கவரும் இசைநயம், முக்காலத்து மக்களுக்கும் அற்புதமாக பொருந்திப் போவது, மனிதனின் அனைத்து வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு போன்ற பல சிறப்புகள் திருக்குர்ஆனை ஒப்பற்ற உயர்வுக்குக் கொண்டு செல்கின்றன.

http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html 
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக