இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 மார்ச், 2022

அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

 


அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

-    முஹம்மது கத்தாபி MISc.

இவ்வுலகத்தில் வாழக்கூடிய கோடான கோடி உயிரினங்களில் மனித படைப்பை இறைவன் உயர்ந்த படைப்பாக ஆக்கி இருக்கிறான்.

= மற்ற படைப்புகளைப்போல் அல்லாமல் மனித படைப்பை இறைவன் தன்  கரங்களால் படைத்து தன்னுடைய (ரூஹால்) ஆன்மாவால் உயிர்கொடுத்தான்.

= அதன் விலா எலும்பிலிருந்து அதன் துணையை படைத்து அவ்விருவரையும் சுவனத்தில் முதன்முதலாக வாழவைத்தான்.

= அனைத்து ஏனைய படைப்பினங்களின் மீதும் ஆளும் வல்லமையும் இறைவன் கொடுத்தான்!

இப்படி மனிதனுக்கு பல்வேறு விதமான உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கியதை திருமறைக் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்:

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் : 95:4)

= நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  (திருக்குர்ஆன் : 17:70)

இவ்வாறான சிறப்பை ஏனைய உயிரினங்களுக்கு வழங்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

திருமணம் என்ற சிறப்பு கட்டமைப்பு

மற்ற உயிரினங்களுக்கு திருமணம் என்கின்ற கட்டமைப்பு கிடையாது ஆனால் மனித சமூகத்திற்கு மட்டுமே இந்த திருமணம் என்ற பந்தம் உள்ளது.

நாத்திகம் விளைவித்த நாசங்கள்!

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற அறவே நிரூபிக்கப்படாத டார்வினின் ஊக சித்தாந்தத்தை அறிவியல் சாயம் பூசி பரப்பினார்கள் நாத்திகர்கள். இன்னும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவாக மனிதனின் சிந்தனையில் ‘நீ ஒரு மிருகம். அது போல உன் மூதாதையர்களும் மிருகமே. அதனால் உனக்கென்று திருமணமோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை. உன் விருப்பம் போல யாரோடும் உறவு கொள்ளலாம். பிரியலாம்’ என்கிற சிந்தனை பொதுப்புத்தியில் புகுத்தப்பட்டது.

இவ்வாறான சிந்தனையின் மூலம் மனிதனுக்குள் மிருகத்தனமான சிந்தனைகள் வருவது இயல்பானது. உணவு தேவைகளை நிறைவேற்றுவதிலும் பாலியல் தேவைகளை அடைவதிலும் மிருகங்கள் எவ்வாறு அடைகின்றன அவ்வாறே மனித சிந்தனையும் இருக்கும். இந்த மிருகத்தனமான சிந்தனை விளைவித்து வரும் நாசங்களைத்தான் இன்று கண்டு வருகிறீர்கள்.. கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகள், பாலியல் வன்கொடுமைகள், காதலித்துக் காமப் பசியாறிவிட்டு காணாமல் போகும் காமுகர்கள், கருக்கொலைகள், சிசுக்கொலைகள், கள்ளக்காதல் விபரீதங்கள், தந்தைகளற்ற பிள்ளைகள் என கணக்கில்லாத சீர்கேடுகளை இந்த “மிருக சிந்தனை” விளைவித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.   

கண்ணியமிக்க படைப்பினத்துக்கு நேர்ந்த இழிவு:

மனிதனை உயர்ந்த கண்ணியமிக்க அழகிய படைப்பாக படைத்தவன் அவனிடமிருந்து உயர்ந்த நெறிகளையும் பண்புகளையும் செயல்களையும் எதிர்பார்க்கிறான். அதற்காகவே தன் வேதங்களையும் தூதர்களையும் அவ்வப்போது மனிதர்களுக்கு அனுப்பிவைத்தான். அந்த வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் ‘மனிதர்களே  நீங்கள் உயர்ந்த படைப்பினம். உங்கள் கண்ணியத்தை இழந்து விடாதீர்கள். ஷைத்தானுக்கு அடிபணிந்து தரம் தாழ்ந்து விடாதீர்கள்’ என்பதை மீண்டும் மீண்டும் இறைவன் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளான்.

இதற்கு மாற்றமாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் ஊக சித்தாந்தம் உண்மையில் மனிதனை ஒரு தாழ்வான எண்ணத்திற்கு அவனை அழைத்துச் செல்கின்றது. அதன் விளைவுகளைத்தான் இன்று நாம் இறைவனையும் மறுமையையும் ஏற்காத சமூகங்களில் கண்டு வருகிறோம். அடிப்படையில் எண்ணங்களே நம்மை வாழ வைக்கின்றன. எண்ணங்களே நம்மை உயர்த்தவும் செய்கின்றன தாழ்த்தவும் செய்கின்றன. தாழ்ந்த எண்ணங்கள் தவிர்த்து உயர்ந்த எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் ஆணித்தரமாக அவன் படைப்பின் துவக்கத்தை நினைவூட்டி புரியவைக்கிறது.

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில் மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களைத் தவிர, அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. (திருக்குர்ஆன் 95:4-6)

இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் இறைவனுடைய வார்த்தைகளான இறை வேதத்தை ஏற்று கட்டுப்படக்கூடிய மனிதர்களாக  வாழ்வோர் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கும் நல்ல சிந்தனைகளையும் உயர்ந்த நெறிகளையும் விட்டுச் செல்வார்கள். இப்படிப்பட்ட இறைசிந்தனை ஏற்று வாழ்வதே இவ்வுலகத்தின் உயர்ந்த பண்பாட்டுக்கு வித்திடும். இதனடிப்படையில் செயல்படுவோர் மறுமையில் உயர்வான சொர்க்கத்தை அடைகிறார்கள்.

==================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?


1 கருத்து:

  1. atheists are not animals, religious people are the real animals. Christian sanghis in america, sanghis in india, buddhist sanghis in srilanka, Myanmar, and talibans in afghan, pak.

    பதிலளிநீக்கு