இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 செப்டம்பர், 2016

உணவுச்சங்கிலியும் உயிர்வதையும்



உணவுச்சங்கிலி
 = அவனே (யாவற்றையும்) படைத்தான் மேலும் செவ்வையாக்கினான். மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயிதான் (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். (திருக்குர்ஆன் 87:2,3)
உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே மற்றொரு உயிரினம்தான். பலமான உயிரினங்கள் பலவீனமான உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. உதாரணமாக புழுபூச்சிகள் அவற்றைவிட சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழு பூச்சிகளைத் தவளைகள் உண்கின்றன. தவளை பாம்புகளுக்கு உணவாகிறது. பாம்புகளை கழுகுகள் பதம் பார்க்கின்றன. கழுகுகள் இறந்தால் அவற்றின் உடல்கள்  நுண்கிருமிகளுக்கு உணவாகின்றன. அவ்வுடல்கள் மண்ணினால் அரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கலந்து விடுகின்றன. அவை அங்கு வளரும் தாவரங்களுக்கு உரமாகின்றன.  
 அதே போல மான்கள் முயல்கள் மற்றும் ஆடுகள் போன்றவை  தாவரங்களை உண்டு வளர்கின்றன. அவற்றை சிங்கம், புலி போன்றவை வேட்டையாடி உண்ணுகின்றன. ... அந்தச் சிங்கம் இறந்துவிட்டால் அதன் உடலை நரிகள் உண்கின்றன. இதைத்தான் உணவுச் சங்கிலி (Food Chain). என்கிறது அறிவியல்! இவை ஒரு சில குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.


இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலிதான். இந்த பூமி உருண்டையின் மூன்றில் இரண்டு பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. தரைவாழ் உயிரினங்கலானாலும் கடல்வாழ் மற்றும் கரைவாழ் உயிரினங்களானாலும் இதுவே நியதி.  
இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. ஜீவகாருண்யம் பேசிக் கொண்டு இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும். 
உதாரணமாக, காடுகளில் முயல், மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் பெருகி முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். இலைதழைகளும் மரங்களும் அழிந்தால் மழை பெய்வது நிற்கும்.. தொடர்ந்து வறட்சியும் பஞ்சமும் என பூமி வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். 
படைத்தவனுக்கே பரிந்துரையா? 

மனிதகுலம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து நடைபெறும் உணவு வழக்கத்திற்கு மாற்றமாக உணவுக்காக உயிர்களைக் கொல்வது  பாவம் என்று யாரேனும் வாதிடுவது அறியாமையின் வெளிப்பாடே. மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதை உண்ணவேண்டும் உண்ணக்கூடாது என்பதை அவர்களைப் படைத்த இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவித்து வந்துள்ளான். 

= 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
= 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21) 



உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை இறைவன் அனுமதித்து உள்ளான் என்பதை திருக்குர்ஆன் மூலம் மட்டுமல்ல முந்தைய வேதங்கள் மூலமும் அறிகிறோம். இந்த அனுமதியின் பின்னால் உள்ள உண்மைகளையும் நுணுக்கங்களையும் திட்டங்களையும் அவன் மட்டுமே முழுமையாக அறிவான். அவனது திட்டங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைக்கும் நிலையில் நாம் இல்லை என்பது உறுதி.

மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் அநீதி!


நமது அற்ப அறிவுக்கு ஒருவேளை இது பாவமாகத் தோன்றி கால்நடைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டால் அந்த விலங்கினத்துக்கு எதிராகச் செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடும். உதாரணமாக, ஒரு ஏழை விவசாயி தன் வயதான மாட்டை விற்றால்தான் வேறு காளையை வாங்கமுடியும். தன் தொழிலைத் தொடரவும் முடியும். அதை விற்கச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். ஒரு இறைச்சிக்கடைக் காரர் வாங்கவும் தயாராக உள்ளார். அப்போது .’பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும்? 

ஆம், சந்தேகமின்றி  அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். காலாகாலமாக தன் வயதான பால் தராத பசுவை அல்லது உழுவதற்குத் சக்தியற்ற மாட்டை சந்தையில் இறைச்சிக்கடைக் காரர்களுக்கு விற்றுதான் வேறு காளையை வாங்கி வந்தார். ஆனால் இப்போது அவரால் தன் கால்நடையை விற்க முடியாமல் தன் வீட்டிற்கே கொண்டுவர வேன்டிய நிலைமை. அவரது பிழைப்பில் மண் விழுந்ததோடு விபரீதம் முடிவதில்லை. அந்தப் பிராணிக்கு யார் உணவளிப்பது?
அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா? அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் மனிதாபிமானமா?....... இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனைத்து அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் மறுமையில் இறைவனின தண்டனையும் கிடைக்கும். அது நரக நெருப்பல்லாமல் வேறு என்ன? 



சட்டம் இயற்றும் அதிகாரம் நம்மிடம் இல்லை!     
இயற்கையில் செடிகொடிகள் புல்பூண்டு முதல் வளர்வன அனைத்தும் உயிரினங்களே. பலவீனமான உயிரினங்களை பலமான உயிரினங்களுக்கு உணவாக இறைவன் படைத்திருக்கிறான் என்பதை சற்று சிந்தித்தாலே அறியலாம். இந்த ஏற்பாட்டின் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான். புலியிடம் ‘இன்று முதல் நீ புல்லை மட்டும்தான் உண்ணவேண்டும்!’ மானிடம் ‘நீ நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்!’ என்றோ கட்டளையிட நமக்கு அதிகாரமில்லை என்பதை அறிவோம். நம் அற்ப அறிவின் அடிப்படையில் இதில் தலையிட்டு மாற்றங்கள் செய்ய நினைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும். அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
7:56(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
 
2; 216. ….ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.



இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே?



மேற்கண்ட வீடியோவில் இன்றுவரை உடல் அழுகாமல் பாதுகாக்கப்பட்ட சடலங்கள் சிலவற்றைக் காணலாம்.....  ஆம், சிலவற்றை நாம் இன்று காண முடிகிறது. நம்மால் காண முடியாதவையும் எவ்வளவோ இருக்கவேண்டும் என்பதுதானே உண்மை.... 
ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் வேறொன்று....
இந்த சடங்களும் சரி, அரித்துப்போய் மண்ணோடு மண்ணாக கலந்து விட்ட சடலங்களும் சரி... இந்த ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு ஆத்மா குடியிருந்திருக்கிறது ... அது இந்தக் கூட்டை விட்டு வெளியேறியிருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை! நாம் முக்கியமாக பதில் காண வேண்டிய கேள்விகள் இவையே: 

= கூடானது மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டாலும் இதற்குள் வாழ்ந்த மனிதன் என்ற மாபெரும் அற்புதம் அத்தோடு அழிந்துவிடுமா?
= அது வளர்த்து வந்த ஆசாபாசங்களும் அறிவும் ஆற்றலும் உறவுகளும் திடீரென முறிவதா?
= அது விதைத்த வினைகள் அறுவடையின்றி அழிவதா?
= அது செய்த தியாகங்களுக்குப் பரிசேதும் இல்லையா?
= அது செய்த அக்கிரமங்களுக்கு தண்டனை ஏதும் கிடையாதா?
நம் புலன்களுக்கு இன்று அது எட்டவில்லை என்பதற்காக மறுமையை மறுக்க முடியுமா?


இக்கேள்விகளுக்கு அறிவுபூர்வமான பதில்களை வழங்குகிறது இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன்!
அதன்படி நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 
இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!
67:2  .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்,அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன்.
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவும்!
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது;பரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

இவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்!
39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும்பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.
நேரம் குறிக்கப்பட்ட நாள் அது!
அது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.
78:17    .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள்நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும்வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
இன்று நம் வினைகள் பதிவாகின்றன!
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்;அன்றியும் (நன்மைதீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும்அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்எல்லாவற்றையும்நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  
நம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்!
99:6-8 .அந்நாளில்மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டுபல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!
4:57  (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம்அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
தீயோர் நரகில் நுழைவர்!
78:21-26    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
உண்மை இதுவே, மற்றவை ஊகங்களே!
நம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை! மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?

சனி, 24 செப்டம்பர், 2016

திருக்குர்ஆன் அத்தியாயம் 75 - மறுமை நாள்





அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-
75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-
75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

திங்கள், 12 செப்டம்பர், 2016

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு!


நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை!
நமது, நிறம், மொழி, நாடு, தாய், தந்தை, உறவுகள் இவை எவையும் நாமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அமைந்தவை அல்ல என்பதும் உண்மை!
நமது என்று நாம் சொல்லிக்கொள்ளும் உடல், பொருள், ஆவி என இவை எவையும் நமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை! இவற்றுள் ஆவி அல்லது உயிர் என்பது பறிக்கப்பட்டால் மற்ற அனைத்தும் நம்மைக் கைவிட்டுப்போகும் நிலைமை உள்ளதை அறிவோம். உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும் இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு நடப்பவை அல்ல என்பதையும் அறிவோம்.
ஒரு அற்ப இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக பல கட்டங்களைக் கடந்து கருவாக உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக வெளிவந்து தொடர்கிறது நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்! நம் உடல் என்ற மாபரும் தயாரிப்பு (product) எவ்வளவு அற்புதங்களைத் தாங்கி நிற்கிறது! ஒவ்வொரு செல்களும் அதற்குப்பின்னால் வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப இதயமாகவும், சிருநீரகமாகவும், சிறுகுடலாகவும் பெருங்குடலாகவும் வயிறாகவும் நுரையீரலாகவும் கல்லீரலாகவும் மண்ணீரலாகவும் மூளையாகவும் எலும்பாகவும் தசையாவும் ஜவ்வாகவும் கண்களாகவும் காதுகளாகவும் தோலாகவும் முடியாகவும் நகமாகவும் இன்ன பிற பாகங்களாகவும் எல்லாம் பரிணமித்து நிற்கின்றன. இவற்றை ஒன்றுக்கொன்று உரிய முறையில் குறைகளின்றிப் பொருத்தியிருப்பதும் குழாய்கள், ஜவ்வுகள், திரவங்கள் மற்றும் நரம்புமண்டலம் கொண்டு இணைத்திருப்பதும் இவை அனைத்தையும் சமநிலை தவறாது இயக்கி வருவதும் நம் கற்பனைக்கு அறவே எட்டாத அற்புதங்களே! நமது புரிதலுக்கு எட்டும் அற்புதங்கள் போக எட்டாத எண்ணற்ற அற்புதங்கள் பலவும் சேர்ந்துதான் நம் உடல் என்ற அற்புதமும் அது வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் என்ற மாபரும் அற்புதங்களின் தொகுப்பும் இயங்கி வருகின்றன என்பதை எந்த சாமானியனும் சிந்திக்கும்போது அறிய முடியும்.
இவையெல்லாம் தானாகவோ தற்செயலாகவோ நடைபெற முடியாது என்கிறது பகுத்தறிவு! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு எடுத்துரைக்கிறது. நம்மைச்சுற்றி நடக்கும் காரியங்களின் விளைவுகளை அறிந்துகொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் நமக்கு நம் அறிவு நமக்குக் கூறும் உண்மை இது! அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒரு மனிதனைப் போலவோ அல்லது ஒரு நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்போருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச் சொல்லும் பாடமாகும். அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.
உண்மையில் நமது புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) வைத்து எட்டாதவற்றைப் பகுத்து அறிவதே பகுத்தறிவு எனப்படும். ஆனால் பகுத்தறிவுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பலர் இவையெல்லாம் தானாக தற்செயலாக நிகழ்கிறது என்று மூடமாக நம்பி அதையே பகுத்தறிவு என்று விளம்பரம் செய்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!
ஒரு மாபெரும் தூசுப் படலத்தில் காணப்படும் ஒரு நுண்ணிய துகள் போன்றது இன்று நாம் வாழும் பூமி என்ற கோளம். இதன்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் மற்றொரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். சூரிய குடும்பத்தின் அங்கமான இந்த பூமியின் சொந்த அச்சின் மீதான சுழற்சியும் வேகமும் சூரியனிலிருந்து அதன் தூரமும் சூரிய குடும்பத்தில் மற்ற அங்கங்களின் தன்மைகளும் இயக்கமும் எல்லாம் பற்பல அளவைகளை (parameters) மிகமிக நுணுக்கமாகக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைத்துள்ளதால்தான் என்பது அறிவியல் நமக்கு கற்றுத்தரும் உண்மை. இந்த அளவைகளில் சிறு மாற்றம் ஏற்பட்டு சமநிலை தவறினால் மனிதர்களாகிய நாமும் இன்ன பிற ஜீவிகளும் வாழ்வதே சாத்தியமில்லை என்றும் அறிவோம்.
ஆக, நம் உடலும் அதன் உறுப்புக்களும் அதனைச் சூழ உள்ள அனைத்தும் சமநிலை தவறாது இயங்கிவருவது நம்மை இங்கு தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழவைப்பதற்கே என்பதையும் மேற்படி உண்மைகளை ஆராயும்போது அறியலாம். இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வின் உண்மை நோக்கம் என்ன? இதை நாமாக ஊகித்து அறிவதை விட இப்பிரபஞ்சத்தை உண்டாக்கியவனே நமக்கு அறிவித்துத் தந்தால் அதுதானே உண்மையிலும் உண்மை!
அப்படியானால் உங்கள் மீது இவ்வாறு அயராத அக்கறையோடு உங்களுக்கு வேண்டியதெல்லாம் தந்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அந்த இறைவன் உங்களோடு உரையாட முற்பட்டால் அதை வெறுத்து அல்லது மறுத்து ஒதுக்க முடியுமா உங்களால்? ஆம், அவ்வாறுதான் அந்த கருணைமிக்க இறைவன் இந்த பூமியின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மக்களோடு தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் உரையாடியுள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த இறைத்தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர் மூலமாக அனுப்பபட்ட வேதமே திருக்குர்ஆன். நாம் இன்று வாழும் காலகட்டம் இறுதியானது என்பதால் அவரே இறுதிநாள் வரை வரப்போகும் மக்கள் அனைவருக்கும் தூதராவார்.
= இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 2:151)

இறைவனிடமிருந்து வந்த தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு ஒரே செய்தியைத்தான் எடுத்துரைத்தார்கள். அதாவது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் உங்கள் இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களை ஏற்று அவனுக்குக் கீழ்படிந்து வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால் உங்கள் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் நீங்கள் அமைதியைக் காண முடியும். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களுக்குப் பரிசாக மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் என்ற வாழ்விடம் பரிசாகக் கிடைக்கும். ஆனால் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு இறை கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்ததற்கு தண்டனையாக வேதனைகள் நிறைந்த நரகம் வழங்கப்படும் என்பதே அது. இறைவன் வகுத்து வழங்கும் அந்த வாழ்க்கைத் திட்டமே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்:
 1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.

 2. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.
வாழ்க்கை ஒரு பரீட்சை
 = இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை  அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான்.   இந்தப்  பரீட்சைக்கூடத்திற்குள்  நாம் அனைவரும்  அவரவருக்கு  விதிக்கப் பட்ட தவணையில்  வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்  கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள் நன்மைகளாகவும்  கீழ்படியாமல்  மாறாகச்  செய்யப்படும்  செயல்கள் தீமைகளாகவும்  பதிவாகின்றன.  இவ்வாறு  ஒவ்வொருவருக்கும் நன்மைகள்  அல்லது  தீமைகள்  செய்வதற்கு  சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த  தற்காலிகப்  பரீட்சைக் கூடம்! 
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 1:35)
இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
கண்மூடித்தனமான பினப்ற்றுதல் இல்லை!
மேற்கூறப்பட்ட உண்மையை கண்மூடித்தனமாக நம்பாமல் நம்மைச் சூழவுள்ள இயற்கைச் சான்றுகளை ஆராய்ந்து பகுத்தறிய அழைக்கிறது திருக்குர்ஆன்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;  அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி,மாறி வீசச் செய்வதிலும்;  வானத்திற்கும்,  பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதை சிந்தித்து உணரச் சொல்கிறான் இறைவன்.

மறுமை வாழ்க்கை சத்தியமே
மரணத்திற்குப்பின் உயிர்த்தெழுதலும் வாழ்வும் உள்ளதா என்பதை அறிய அதே பகுத்தறிவை பயன்படுத்த அழைக்கிறான் இறைவன்:
= மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (திருக்குர்ஆன் 22: 5)
= பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக  உயிர்ப்பிக்கிறவன்;  நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். (திருக்குர்ஆன் 41:39)
= அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்;  உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின்  உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப் படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 30:19)
மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
.= அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும்,மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றிபின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்குநிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. (திருக்குர்ஆன் 39:42)   

இறைவனை எவ்வாறு அறிவது?
மனிதர்களில் பெரும்பாலோர் இறைவனை உரிய முறையில் அறியாத காரணத்தாலும் அவனைப்பற்றி அறிந்து கொள்ள முற்படாத காரணத்தால் சமூகத்தில் இடைத் தரகர்களும் முன்னோர்களும் எதைக் கற்பித்தார்களோ அவற்றையே கடவுள் என்று நம்பி மோசம் போகிறார்கள். உண்மையில் உலகத்தில் பாவமும் அதர்மமும் பெருகுவதற்கும் கடவுளின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கும் செல்வம் கொள்ளை போவதற்கும் தவறான கடவுள் கொள்கை காரணமாகிறது. ஏகனாகிய படைத்தவனை வணங்குவதற்கு பதிலாக பல்வேறு படைப்பினங்களை கடவுளாக பாவித்து மக்கள் வணங்கும்போது அதனடிப்படையில் மனிதகுலமும் குழுக்களாகப் பல்வேறு பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. இவ்வாறு கடவுளின் பெயரால் நடக்கும் குழப்பங்களைக் காணும் பலரும் கடவுளே இல்லை என்று நாத்திகத்திற்குத் தாவும் நிலையும் உண்டாகிறது.
இறைவனை அறியும் பொருட்டு இயற்கையையும் அன்றாட நிகழ்வுகளையும் ஆராயத் தூண்டுகிறது இறைமறை:
= மனிதன் என்ற அற்புதமே ஓரு பெரும் சான்று !

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா? (திருக்குர்ஆன் 56:57-59)
= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)

வெல்லமுடியா மரணமும் ஓர் சான்று:
= உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (திருக்குர்ஆன் 56:60-62)

நீங்கள் செய்யும் விவசாயமும் ஒரு சான்றே:

= (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களாஅல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
 ''நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.. ''மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்'' (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (திருக்குர்ஆன் 56:63-67)

வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரும் சான்று அல்லவா?
= அன்றியும்நீங்கள் குடிக்கும் நிரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களாஅல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (திருக்குர்ஆன் 56:68-70)

நெருப்பும் ஒரு சான்றே!
= நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களாஅல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? (திருக்குர்ஆன் 56:71, 72)

மீண்டும்மீண்டும் தொடரும் படைப்பு அற்புதம்
= இறைவன் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையாநிச்சயமாக இது இறைவனுக்கு மிகவும் சுலபம். (திருக்குர்ஆன் 29:19)

= ''பூமியில் நீங்கள் பிரயாணம் செய்துஇறைவன் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 29:20)

இவ்வாறு பகுத்தறிவைத் தூண்டி சிந்திக்க வைக்கும் ஏராளமான வசனங்களைத் தாங்கி நிற்கிறது திருக்குர்ஆன்.