இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

பெண்ணினத்திற்கு எதிரான ஊடக வஞ்சகம்!

இஸ்லாம் என்றவுடனேயே அது பெண்களை அடிமைப்படுத்தும் மார்க்கம் என்கின்ற தவறான சித்தரிப்பை ஊடகங்கள் இன்றுவரை இலகுவாகவும் தீவிரமாகவும் செய்து வருகின்றன. அறவே மனசாட்சியற்ற, அற்பமும் நீதி என்பதே இல்லாத ஒரு போக்கு இது என்பதை சுட்டிக் காட்டவே இப்பதிவு! ஆபாசங்களையும் திரையுலக கிசுகிசுக்களையும் பரபரப்பூட்டும் கட்டுக்கதைகளையும் மக்களிடையே பரப்பி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட ஊடக முதலைகளிடம் நியாயம் நீதி இவற்றை எதிர்பார்ப்பது தகாத ஒன்றுதான். இருந்தாலும் நடுநிலையாக சிந்திக்கும் மக்களிடம் உண்மையை கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளதல்லவா?

இஸ்லாத்திற்கு முன்னிருந்த பெண்ணடிமைத்தனம்:  

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்ட காலகட்டத்தில் - அதாவது கிபி 625 இல் - அரேபியாவில் பெண்ணடிமைத்தனமும், பெண்கள் போகப்பொருளாக நடத்தப்படும் அவலமும் இருந்து வந்தது. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கக்கூடிய கொடூரமான நடைமுறை கேட்பாரின்றி நடந்து கொண்டிருந்தது! மறுபுறம் உலகின் வேறு பல பாகங்களில் பல்வேறு வடிவில் பென்ணடிமைத்தனங்கள் அரங்கேறிக் கொண்டு இருந்தன.

= பெண்ணுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சை நடத்தி பெண் இகழப்பட்டாள்!
= முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்!
= திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை!
= கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள் பெண்!
= அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்!
= மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள்!
= விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்!
= கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் மதுபோதை வெறிக்கும் பெண்ணின் கற்பு விலைபோனது!
=கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கு ஆளானாள்
பெண்!
= இன்னும் பல வடிவங்களில் பெண்ணினத்துக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கும் நிகழ்ந்து கொண்டு இருந்தன. 

  இஸ்லாத்தின் வரவால் உயிர்பெற்ற பெண்ணுரிமைகள்:
உலகம் இவ்வாறு இருக்கையில்தான் இஸ்லாம் என்ற கண்ணியமான வாழ்வியல் கொள்கையை அரபு நாட்டு மக்களுக்கிடையே அறிமுகம் செய்து அதன் வாயிலாக பெண்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை சமூகத்திலிருந்து அகற்றி அவர்களை மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் நிலையை உருவாக்கினார்கள் நபிகளார்!

அதற்கான அடித்தளங்களை அன்றே பலமாக இட்டுச் சென்றார்கள் அவர்கள். ஆன்மீக உபதேசம் என்பதோடு நில்லாமல் பெண் விடுதலைக்கும் பெண்ணுரிமைகளுக்குமான உரிய சட்டங்களும் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் உயர்ந்த சமூகத்தையும் நிறுவிச் சென்றார்கள் அண்ணலார்! அதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை கோடிக்கணக்கான பெண்களை – தலைமுறை தலைமுறையாக இஸ்லாம் காப்பாற்றி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை! உண்மையில் எந்த பெண்களைக் குறிப்பிட்டு இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என்று ஊடக முதலைகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனவோ அந்த கோடிக்கணக்கான பெண்கள் உயிர் வாழ்வதே இஸ்லாத்தின் வரவால்தான் என்பதை அறிவார்களா அவர்கள்? இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. புள்ளிவிவரங்களை கவனியுங்கள்:

சர்வசாதாரணமான பெண் கருக்கொலைகள்:
= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!
= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)

ஆனால் உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் – அதாவது இஸ்லாமியர்கள் - இக்கொடுமையை நிகழ்த்தாமல் தங்களைத் தாங்களே தடுத்து வருகிறார்கள் என்பது நபிகளாரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சாதனை அல்லவா?

இவருக்கு நிகரான சாதனையாளர் யாருளர்?

அன்று அராபியாவில் உருக்கொண்ட இஸ்லாம் இடைவிடாமல் பரவப்பரவி இன்று உலக மக்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் மேலானோரை ஆட்கொண்டு விட்டது. அக்கொள்கை நிகழ்த்திய மனமாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் வாயிலாக பெண்ணின வரலாற்றில் இன்று நிகழ்ந்த மற்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சிகளை கவனியுங்கள்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்சிசுக்களும் கருக்களும் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டு உயிர்வாழ்ந்து வளர்ந்து வருவதும்..

- உலகங்கும் கோடிக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையில் இருந்து காப்பாற்றப்படுவதும்.. அதற்கு எதிரான மஹர் என்ற வதுதட்சனை பெற்று மணமுடிப்பதும்...

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் முதியோர் இல்லங்களுக்கு விரட்டப்படாமலும் கருணைக் கொலைக்கு உட்படுத்தப்படாமலும் தங்கள் பிள்ளைகள் அரவணைப்பில் வாழ்ந்து வருவதும்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் குடிகார ஆண்களின் அடிக்கும் குத்துக்கும் சித்திரவதைக்கும் ஆளாகாமல் வாழ்வதும்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் பெண்ணுடலை வேட்டையாடி தூக்கி எறிந்துவிட்டு செல்லும் காம வெறியர்களுக்கு பலியாகாமல் இருப்பதும், அந்நியனின் கருவை அநியாயமாக சுமந்து சீரழியாமல் இருப்பதும்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை, போன்று ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெற்று வாழ்வதும்.. எல்லாம் அந்த மாமனிதர் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திச் சென்ற இஸ்லாம் என்ற சித்தாந்தத்தின் விளைவே!

அநியாயங்களுக்கு விருதுகள் வழங்குவோரும் ஒத்து ஊதும் ஊடகங்களும்:
ஆண்டு தோறும் நாடுகள் தோறும் அற்பமான சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்குக் கூட அரசுகள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிப்பதை அவ்வப்போது கண்டு வருகிறோம். இன்னும் பலரை அவர்கள் இறந்து ஆண்டுகள் பல கழிந்தும் அரசுகள் நாட்டின் உயர்விருதுகள் வழங்கி கவுரவிப்பதையும் காணலாம். அதிலும் குறிப்பாக சினிமாவில் அட்டைக் கத்தி வீரர்களுக்கும் திரையில் அப்பட்டமாக விபச்சார சாகசங்கள் நிகழ்த்துவோருக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து அரசுகள் வழங்கும் கவுரவமும் அலாதியானவை. இவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் வியப்புக்குரியவை! அந்த “சாதனையாளர்களைப்” பற்றி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்தி சேனல்களும் யூடியூபர்களும் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் வாரம் வாரமாக நீட்டி முழக்குவதை நாம் காண்கிறோம்.

ஆனால் நபிகளார் நிகழ்த்திய – நூற்றாண்டுகளாக நிகழ்த்திக் கொண்டு இருக்கின்ற – சாதனைகளுக்கு இணையான எதையும் ஊடகங்களால் காட்ட இயலுமா? கோடிக்கணக்கான பெண்களின் பிறக்கும் உரிமையை நிலைநாட்டியவரும், கற்பைக் காப்பாற்றியவரும், கோடிக்கணக்கான பெண்கள் கொல்லப்படுவதிலிருந்தும் சித்திரவதைகளுக்கு ஆளாவதிலிருந்தும் தடுத்த அந்த மாமனிதரின் சாதனைக்கு ஈடு செய்ய எந்த ஒரு விருதும் பட்டமும் எவராலும் கொடுத்துவிட முடியாது, படைத்த இறைவனைத் தவிர! ஆயினும் குறைந்தபட்ச நியாயம் பேணி உங்கள் வாசகர்களுக்கு, பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு அவரது சாதனைகளை இருட்டடிப்பு செய்யாமல் எடுத்துரைக்கக் கூடாதா?

இனி இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையின் பரவலைத் தடுப்பதே உங்கள் இருட்டடிப்புக்குக் காரணம் என்று இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.. இஸ்லாம் இவ்வுலகைப் படைத்தவன் வகுத்து வழங்கிய வாழ்வியல் கொள்கை! அது யார் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மென்மேலும் மெருகோடு பரவவே செய்யும். படைத்தவனே இதைப் பற்றி கூறுகிறான் கேளுங்கள்:

='தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் சத்தியமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)

உங்களுக்கு இறைவனின் எச்சரிக்கை:
= அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,? (திருக்குர்ஆன் 29:68)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
========================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

1 கருத்து: