இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 ஆகஸ்ட், 2018

அற்பமானவைகள் எவ்வாறு இறைவனாகும்?

Related image
அறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது, 8800000….....000 (22 பூஜ்ஜியங்கள்) கிலோமீட்டர் தூரம் கொண்டது அறிவியலின் பார்வைக்கு எட்டிய உலகு. எட்டாத உலகோடு ஒப்பிடும்போது இது வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது அறிவியலின் கணிப்பு. எட்டாத மீதியை கரும்பொருள் என்றும் கருஞ்சக்தி (dark matter, dark energy) என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள் அறிவியலாளர்கள். அவ்வளவும் திருக்குர்ஆன் கூறும் ஏழு வானங்களில் முதல் வானத்தில் ஒரு மிகச்சிறு அங்கமே.  அப்படியானால் அவற்றுக்கு அப்பாலுள்ள வானங்கள் எவ்வளவு பிரம்மாண்டமானவை என்பதை நீங்கள் சிந்திபோர் உணரலாம். இவற்றையெல்லாம் படைத்து அதிபக்குவமாக இயக்கிவரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன்! 
அப்படியானால் ஒரு மாபெரும் தூசுப்படலத்தில் ஒரு சிறு துகள் போன்றது நாம் இன்று வாழும் பூமி. அதன் மேல் ஒட்டிக்கொண்டு வாழும் ஒரு நுண்ணிய துகள் போன்றவன் மனிதன். அந்த மனிதனுக்கு இருக்கும் பார்த்தல், பேசுதல், கேட்டல் போன்ற ஆற்றல்கூட இல்லாத பொருட்களை  மனிதர்கள் கடவுள் என்று பாவித்து வணங்கி வருவதை நாம் பரவலாகப் பார்க்கிறோம். 
= வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.  இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:19,20)
மிக அற்பமான ஆறடி உயர மனிதன் தன்னைத் தான் பெரியவனாக நினைத்துக் கொண்டு அகங்காரம் கொள்வதற்குக் காரணம் அவனது பார்வைக்கு எட்டியது மட்டுமே உலகு என்ற  அவனது குறுகிய சிந்தனையும் அவற்றுக்கு அப்பாற்பட்டவற்றைப் பற்றிய அறியாமையும் ஆராயாமையும்தான். அவனைவிட பிரம்மாண்டமான படைப்பினங்கள் அவனது புலன்களுக்கு எட்டாது வாழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வானவர்கள் என்ற இனம். அவர்கள் இவனைப் போல பெருமை அடிப்பதில்லை என்கிறான் இறைவன்.  தொடர்ந்து இந்த அற்பமான பூமியில் இருந்துள்ளவற்றை கடவுளாக பாவித்து வணங்கும் மனிதனிடம் அவற்றின் பலவீனம் பற்றிய சிந்தனையை தூண்டுகிறான்:
= பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா? (திருக்குர்ஆன் 21:21)
உண்மை இறைவனைத் தவிர வேறு தெய்வங்கள் சாத்தியமா?
அற்பமான பூமியில் மட்டுமல்ல வானங்களிலும் அவற்றுக்கு அப்பாலும் வேறு கடவுள்கள் இருப்பது சாத்தியமல்ல என்பதை உணர சாமானிய அறிவே போதுமானது. சாதாரணமாக ஒரு பேருந்துக்கு இரண்டு ஓட்டுனர்கள் இருந்தாலோ ஒரு கல்லூரிக்கு இரு முதல்வர்கள் இருந்தாலோ அங்கு என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம். பூமி மற்றும் சூரிய குடும்பத்தின் இதர கோள்கள் இன்னும் அவற்றுக்கப்பாலுள்ளவற்றில் காணப்படும் ஒழுங்கான  கட்டமைப்பையும் அதிபக்குவமான இயக்கங்களையும் சிந்திப்போர் இவ்வுலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் சாத்தியமே இல்லை என்பதை அறிவார்கள்.
= (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். 21:22) 
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)
பல தெய்வங்கள் உண்மையில் இருந்திருந்தால் அவர்களுக்குள் போட்டி, பொறாமை ஏற்பட்டு அவரவர்களுக்கு சொந்தமானதை வசப்படுத்திக் கொண்டு அவற்றின்மீது ஆட்சி செய்துகொண்டு இருப்பார்கள். ஒன்றையொன்று வெல்ல முற்பட்டு அழிவும் நாசமுமே நிகழ்ந்து இருக்கும் என்பதை சற்று சிந்தித்தால் அறியலாம். எனவே உண்மை என்னவெனில் இறைவன் என்பவன் ஒரே ஒருவன் மட்டுமே அவன் மட்டுமே அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். முழுமையான ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவன் ஏகன், தனித்தவன், அவனைப் போன்றதோ அவனுக்கு நிகரான சக்தியோ அறிவோ ஆற்றலோ கொண்ட எதுவும் எங்கும் இல்லை என்பதே உண்மை!
= அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 21:23) 

இணை தெய்வங்களை வணங்க இறைவன் சொல்லவில்லை!
இறைவன் அல்லாதவற்றை வணங்கும் பழக்கம் இறைவனின் பெயரால் மக்களை சுரண்ட முனையும் இடைத்தரகர்களாலும் ஆதிக்க சக்திகளாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு இறைவன் வழங்கிய அங்கீகாரமோ அத்தாட்சிகளோ அறவே இல்லை என்பது உண்மையான இறைவேதங்களை ஆராயும்போது அறியவரும் உண்மையாகும்.
= அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றனஎன்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (திருக்குர்ஆன்  21:24) 
ஆதிமுதலே போதிக்கப்படும் உண்மை இது!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதும் அவனல்லாத எதுவும் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவை அல்ல என்பதும் ஆதிமுதலே காலாகாலமாக போதிக்கப்பட்டு வரும் உண்மையாகும்.

 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (திருக்குர்ஆன் 21:25
-------------------- 
இஸ்லாம் என்றால் என்ன?
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக