இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2015

சமூகப் புரட்சிகளுக்கு உயிர்நாடி மந்திரம்



பதினான்கு நூற்றாண்டுகளாக பாரெங்கும் ஊரெங்கும் சமூகப் புரட்சிகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒப்பற்ற சாதனைக்கு சொந்தக்காரர் மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்).
அவர் கொண்டுவந்த திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் எங்கெல்லாம் சென்றடைகிறதோ அந்த இடங்களிலெல்லாம்
= மனித உரிமை மீட்பு,
= இனவெறி ஒழிப்பு,
= ஜாதி ஒழிப்பு,
= நிறவெறி ஒழிப்பு,
= மனித சமத்துவம் நிலைநாட்டல்,
= மனித சகோதரத்துவம் நிலைநாட்டல்,
= பெண்ணுரிமைகள் மீட்பு,
= பெண்சிசுக்கொலை ஒழிப்பு,
= வரதட்சணை ஒழிப்பு,
= பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு
= விபச்சார ஒழிப்பு
= குடும்ப அமைப்பின் பாதுகாப்பு,
= குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம்
= தனிநபர் நல்லொழுக்கம்,
= மது, போதை தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு
= வட்டி ஒழிப்பு
= வறுமை ஒழிப்பு,
= வழிபாட்டு உரிமை மீட்பு
= இடைத்தரகர் ஒழிப்பு
= மூடநம்பிக்கை ஒழிப்பு
= ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு,
= ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு,

போன்ற பற்பல சமூகப் புரட்சிகளை உண்டாக்காமல் இருப்பதில்லை. மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் புரட்சிகள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை.

நபிகளாரைப் பின்பற்றுவோரின் சிறப்பு பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

"அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்." ( திருக்குர்ஆன் 7:157.
நபிகள் நாயகம் உயிரோடு இருக்கும்போதும் சரி இன்றும் சரி, அவர் நடத்திக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சிகளுக்கு ஆணிவேராக இருப்பது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற அவரது ஓரிறைக் கொள்கை முழக்கமே.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் யாரும் இல்லை என்பதே இதன் பொருள்.
‘அல்லாஹ்’ என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல்லாகும். சமூகத்தில் சீர்திருத்தம் ஏற்படுவதற்கும் ஒழுக்கம், அமைதி போன்றவை திரும்புவதற்கும் இதுவே உயிர்நாடி என்பதை சற்று சிந்தித்தால் உணரலாம்.

நபிகளார் கூறினார்கள்: “லா இலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்கள், வெற்றி அடையுங்கள்” என்று.
இவ்வுலகில் பாவங்களும் தீமைகளும் அதிகரிப்பதற்கும் அராஜகங்களும் அட்டூழியங்களும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் முக்கியக் காரணம் தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வுதான். தனிநபர்களில் இருந்து அரசாள்வோர் இதுவே நியதி.
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக, நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என் நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம் நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் - என்ற பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப் பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். கடவுள் அல்லாதவற்றை எல்லாம் காட்டி அவற்றை கடவுள் என்று கற்பிக்கும் போது இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு அகன்று போவதால் மக்களிடம் இறையச்சமே உண்டாவதில்லை.
இவ்வாறு இறையச்சம் இல்லாத தலைமுறைகள் உருவாகும்போது பாவம் செய்ய அஞ்சாத சமூகம் உருவெடுத்து அங்கு அமைதியின்மையும் கலவரங்களும் மேலோங்குகின்றன. இவை ஒருபுறம் நாட்டின் ஒழுக்க வீழ்ச்சிக்கு காரணமாகும்போது மறுபுறம் தவறான கடவுள் கொள்கை நாட்டில் மிகப்பெரும் இழப்புகளையும் விபரீதங்களையும் ஏற்படுத்துகிறது.

 கடவுளின் இலக்கணங்கள்  
திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கடவுளின் முக்கிய இலக்கணங்களை கூறுகிறது:
= 112: 1-4. நபியே நீர் சொல்வீராக: அல்லாஹ் ஒரே ஒருவனே. அல்லாஹ் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை
= 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்"" என்று கூறுவீராக.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது ஏகனாகிய இறைவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து இராதவன். தாய் தந்தை, மனைவி, மக்கள் என எந்த உறவுகளும் இல்லாத தனித்தவன். தன்னிகரற்றவன். அவனை எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கலாம். அவனிடம் நேரடியாக நம் தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என்ற கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன மேற்படி வசனங்கள். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின் உண்மை இலக்கணங்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
பிற ஆபத்துகள்:
 இவ்விலக்கணங்களை ஆராயாமல் இறைவன் அல்லாதவற்றையெல்லாம் கடவுள் என்று நம்பி வழிபடும்போது எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப் படுகிறது. படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. எந்த தரகர்களும் தேவை இல்லை. எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப்படுகிறது.  பாமரர்களின் சம்பாத்தியங்களும் செல்வங்களும் இடைத்தரகர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன
ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம் உலகெங்கும் செய்து வருகிறது.
= கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத்தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை அடிக்கிறார்கள். 
= ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மக்காவில் மறு அறிமுகம் செய்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக