இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஓடு... ஓடு.... செல்லுமிடம் அறிந்து ஓடு!


Related image
இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது உலகம்.  வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும் நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர் என்பதைக் காண்கிறோம்.  
  இப்படிப்பட்ட கண்ணை மூடிய ஓட்டப்பந்தயத்தில் வாழ்வின் உண்மைகளை மனிதன் மறந்துவிடுகிறான். மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும் தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நாளை தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றிய மற்றும் அவற்றை செலவு செய்தது பற்றிய விசாரணை, அதைத் தொடர்ந்து அதற்கான தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதை உணராத நிலையிலேயே மனிதன் வாழ்வைக் கழித்துக்கொண்டு இருக்கிறான்.
இதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

102:1, 2  செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-......நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.
ஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.

102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.  பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

உண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.

102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
மாறாக, நிதானித்து இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெறும் செல்வம் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது என்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.
 
'மனிதன் “எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?'' என்று நபிகள் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்  (நூல்: முஸ்லிம் 5665 )
: இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக நாம் சேர்க்கும் பொருளில் நமது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும் செலவிடுவான்.
  நிதானத்தை இழந்து இந்த பணவேட்டையில் தங்களை ஈடுபடுத்தியோரின் இறுதி முடிவு இன்னும் பயங்கரமானது. ஆம், தங்கள் புதைகுழிகளில் விழுந்த அவர்கள் இறுதியாக சென்றடைவது கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்ற இருப்பிடத்திற்குத்தான்! அதைத் தான் தொடர்ந்து எச்சரிக்கிறான்:

102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.


102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

நாம் ஏன் பிறந்தோம்?

http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக