இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சொர்க்க வாசற்படியில் முதல் நிமிடங்கள்

 

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொர்க்கவாசலில் காலடி வைத்த முதல் நிமிடங்கள் எப்படி இருக்கும் தெரியுமா!
நிச்சயமாக அந்த நிமிடங்கள் திகைப்பூட்டும் தருணங்களாகவும், தித்திக்க வைக்கும் வேளைகளாகவும், ஆர்ப்பரிக்கும் சமயங்களாகவும்தான் இருக்கப் போகின்றன.
பூலோகத்தில்...
என்றோ ஒரு நாள் மறைந்து போன அன்பர்கள், நண்பர்கள், உறவினர்களை உடலோடும் உயிரோடும் காணும் போது!!!
மதிப்புக்குரிய பெற்றோரை பாசமுள்ள மகனும் மகளும் காணும் போது!
சிறு வயதில் உயிர் பிரிந்த செல்லக் குழந்தையை, தாய்தந்தை காணும் போது!
அன்புள்ள கணவனை, ஏங்கித் தவித்த மனைவி காணும் போது!
பூலோகத்தில்...
நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட உறவுகள் குணமடைந்து சுகதேகிகளாக காணக் கிடைக்கும் போது!
இங்கே வயோதிபர்களாக இருந்தவர்களை அங்கே இளம் வாலிபர்களாக காணும் போது!
இங்கே துன்பத்திலும், துயரத்திலும் வாழ்ந்தவர்கள் அங்கே இன்பமாக உலா வருவதை காணும் போது!
இங்கே குருடர்களாக, செவிடர்களாக, உடல் ஊனமுற்றவர்களாக, புத்தி போதலித்தவர்களாக இருந்தவர்கள் அங்கே குறைகள் ஏதுமற்ற புதுப் பிறவிகளாக நடமாடுவதைக் காணும் போது!
நபிமார்களுக்கு, தூதர்களுக்கு கைகுலுக்கி, ஆரத்தழுவி நேருக்கு நேர் சந்திக்க கிடைக்கும் போது!
எங்கள் நபியாம் அண்ணல் நபியை கண்கொண்டு காணக் கிடைக்கும் போது!
வரலாறு படைத்த நபித்தொழர்களை, தியாகிகளை, சீர்திருத்த வாதிகளை, அறிஞர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது!
நபி நூஹின் கப்பலில் ஏறி தப்பித்தவர்கள், நபி மூஸாவேடு கடல் கடந்தவர்கள், கிடங்கு வாசிகள், குகை வாசிகள், லுக்மானுல் ஹகீம், துல் கர்னைன், என முன் சென்ற சமுதாயத்தினரை காணக் கிடைக்கும் போது!
தங்கம், வெள்ளி, கஸ்தூரி, முத்து, மரகதம், குங்குமத்தினாலான மாளிகைகளை, தரைகளை, பொடிக்கற்களை காணும் போது!
கண் கவரும் அரண்மனைகளையும்,
கூடாரங்களையும் காணும் போது!
நதிகள் பாய்ந்தோடும் நந்தவனங்களை காணும் போது!
பாலாறும் தேனாறும் பாய்ந்தோடுவதைக் காணும் போது!
கைக்கெட்டும் பழங்களையும் கனிகளையும் பறிக்கும் போது!
தங்கத் தட்டுக்களில் அறுசுவை உணவுகள் பரிமாறப்படும் போது!
கையில் மது பானக் கிண்ணத்தோடு சாய்வு இருக்கையில் சாய்ந்த வண்ணம் ஒய்யாரமாக இருக்கும் போது!
சண்டைகள், சச்சரவுகள் அற்ற, குரோதங்கள், குழப்பங்கள் அற்ற, வஞ்சகங்கள், வயிராக்கியங்கள் அற்ற சமாதன யுகத்தில் நுழைந்துவிட்டோம் என்று நினைக்கும் போது!
இனி என்றும் கடமைகள், கட்டுப்பாடுகள் இல்லை என்பது தெரிய வரும் போது!
இனி என்றும் நேய் நொடிகள் இல்லை, மருந்து மாத்திரைகள் இல்லை என தெரிய வரும் போது!
இனி என்றும் துக்கம் துயரம், கஷ்டம் கவலை இல்லை என தெரிய வரும் போது!
இனி என்றும் முதுமை வயோதிபம் இல்லை, மரணம் முடிவு இல்லை என்பது தெரிய வரும் போது!
இனி என்றும் சலிப்பு தட்டாத, சஞ்சலம் ஏற்படாத சுகபோக வாழ்க்கைதான் என்பது தெரிய வரும் போது!
இனி என்றும் அழிவே இல்லாத ராஜ வாழ்கைதான் என்று நினைக்கும் போது!
அரியாசனத்தின் நாயகன் அல்லாஹ் "சுவன வாசிகளே! என்று அழைத்து, "இன்னும் ஏதாவது நான் மேலதிகமாக தர வேண்டுமா? என்ற அவன் ஓசை கேட்கும் போது!
அதற்கு அவர்கள்: நீ எங்கள் முகங்களை வெண்மை ஆக்கினாயே! எங்களை நரகத்திலிருத்து பாதுகாத்தாயே! சுவனத்தில் எங்களை நூழைவித்தாயே! வேறு என்னதான் நாம் உன்னிடம் கேட்க முடியும்? என்று அவர்கள் கூறும் போது!
அந்த நேரத்தில்தான் மகா வல்லவன் அல்லாஹ் இடுதிரை நீக்கி தனது திரு முகத்தை சுவனவாசிகளுக்கு வெளிக்காட்டும் போது!
அந்நேரத்தில் இறை திரு முகம் பார்க்க கிடைப்பதானது சுவனம் கிடைத்ததை விட பெரும் இன்பப் பரிசாக இருக்கப் போகிறது.
பின்னர் அவர்களை நோக்கி அல்லாஹ்: இன்றோடு என் திருப்தியை உங்கள் மீது நான் இறக்கி வைக்கிறேன், இனி என்றும் நான் அதிருப்தி அடையமாட்டேன்.' என்று கூறுவான்.
((சென்று போன நாட்களில் நீங்கள் செய்து வைத்த (நல்லறங்கள்) காரணமாக, இப்போது ஆனந்தமாக உண்ணுங்கள்!பருகுங்கள்! (என அவர்களுக்கு கூறப்படும்).
📖 அல்குர்ஆன் : 69:24
அருளாளன் அல்லாஹ் என்னையும் உங்களையும் அவனது பரந்த சுவத்தில் உயர்ந்த இடத்தில் வாழ வைப்பானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக