இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஜூலை, 2022

#பக்ரீத்_பண்டிகையும்_ஜீவகாருண்யமே!

 #பக்ரீத்_பண்டிகையும்_ஜீவகாருண்யமே!

அனைத்து மனித குலமும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்பதை நிறுவி மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உலகில் நிலைநாட்டும் மார்க்கம் இஸ்லாம். நமது மனித குலத்தை நேர்வழி நடத்த அனுப்பப்பட்ட அனைத்து இறைத் தூதர்களையும் நாம் ஏற்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் இருந்து நன்மையான வாழ்வியல் பாடங்கள் கிடைக்கப் பெறின் அவற்றை தயக்கமின்றி பின்பற்றவும் வலியுறுத்துகிறது இறைமார்க்கம் இஸ்லாம்.

அந்த வகையில் சுமார் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இறைத் தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் - அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகுக) அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து பாடம் பெறும் நாளே பக்ரீத் எனும் தியாகத்திருநாள்!

அவரிடம் இறைவன் கேட்டது ஆச்சரியமான ஒன்று!
ஆம், அவர் தள்ளாத வயதில் அற்புதமாகப் பெற்றெடுத்த மகனையல்லவா இறைவன் தனக்காக தியாகம் செய்யுமாறு கேட்டான்! அதுவும் அந்த ஆருயிர் மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் பணித்தான்! அதையும் எவ்விதத் தயக்கமும் இன்றி நிறைவேற்றத் துணிந்தார் இப்ராஹீம்(அலை) அவர்கள். உடனேயே இறைவன் அவரது பரீட்சையில் அவர் வெற்றிபெற்று விட்டதை அறிவித்து அதற்குப் பகரமாக இரு ஆடுகளை அறுத்துப் பலியிடுமாறு பணித்தான்.

இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் இவ்வாறு கூறப்படுகிறது:
= என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார்.

என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இதுதான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது இறைசாந்தி உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (திருக்குர்ஆன் 37 : 100-111)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

அந்த தியாகச் செம்மலின் இச்செயலை உலகுள்ளவரை மனிதகுலம் என்றும் நினைவு கூர வேண்டும் அதிலிருந்து இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் பாடத்தை அவர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருமுறை அந்நாளைத் தியாகத் திருநாளாகக் கொண்டாடும்படி பணித்தான்.

#தியாகத்தின்_ஆண்டுவிழா_பக்ரீத்:
இத்தியாகத்தின் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் முகமாக வசதியுள்ள அனைத்து இறைவிசுவாசிகளும் தங்களால் இயன்ற ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ பலிகொடுத்து அதன் இறைச்சியை உறவினர்களோடும் ஏழைகளோடும் பங்கிட்டு உண்ணுமாறு பணித்துள்ளான் இறைவன். மாட்டை அல்லது ஒட்டகத்தை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் பலி கொடுக்கலாம்.

இன்று செல்வ வளமுள்ள நாடுகளில் இவ்வாறு பலி கொடுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சி பதப்படுத்தப் பட்டு ஏழை நாடுகளில் உள்ள மக்களிடையே விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. ஏழைகளின் உணவுத் தேவை நிறைவேறுதல், சகோதர உணர்வு பகிர்தல் உறவினர்களோடு உறவைப் புதுப்பித்தல், நாட்டில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப் படுதல் என்பன போன்ற பல நன்மைகளை இந்நாள் தாங்கி வந்தாலும் இறைவன் முக்கியமாக பார்ப்பது நம் இறையச்ச உணர்வைத்தான்.
இதோ தனது திருமறையில் கூறுகிறான்:
= அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22 : 37)

ஆக, இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தில் நம்மைப் பரீட்சிப்பதற்காக நம்மிடம் அமானிதமாகத் தரப்பட்டுள்ளவையே நமது உயிரும், உடலும், உறவுகளும், உடமைகளும். இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே என்ற உண்மையை நம்மில் ஆழமாகப் பதியவைக்கிறது தியாகத் திருநாள்!

மேலும் இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது ஆருயிர் மகனை இறைக் கட்டளைக்காக பலி கொடுக்கத் துணிந்தை நினைவூட்டி நாம் குறைந்த பட்சம் நம் தேவை போக மேல்மிச்சமாக நம்மிடம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை இறைவன் கற்பிக்கும் தான தர்மங்களுக்காக அர்பணிக்கவும் தூண்டுகிறது இந்நாள்!

உயிர்பலி பற்றிய ஐயங்களும் தெளிவும்:
#உணவுக்காக_உயிர்களைக்_கொல்வது_பாவமா?
கீழ்கண்ட உண்மைகளை கருத்தில் கொண்டால் இதுபற்றிய நமது ஐயம் விலகக் கூடும்:

1. #உயிரினம்_இன்றி_உணவில்லை: உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே மற்றொரு உயிரினம்தான். நாம் அன்றாடம் உட்கொள்ளும் தாவர உணவு அல்லது குடிநீரில் உள்ளடங்கியுள்ள பாக்டீரியாக்கள் உட்பட அனைத்தும் உயிரினங்களே என்பதும் அனைத்துக்கும் உணர்வுகள் உள்ளன என்பதும் அறிவியல் உறுதிப்படுத்தும் உண்மைகள்!

2. #உணவுச்சங்கிலி_இன்றி_உயிர்கள்_இல்லை: பொதுவாகவே பலமான உயிரினங்கள் பலவீனமான உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழுபூச்சிகள் அவற்றைவிட சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழு பூச்சிகளைத் தவளைகள் உண்கின்றன. தவளை பாம்புகளுக்கு உணவாகிறது. பாம்புகளை கழுகுகள் பதம் பார்க்கின்றன. கழுகுகள் இறந்தால் அவற்றின் உடல்கள் நுண்கிருமிகளுக்கு உணவாகின்றன. இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீர்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலிதான். இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. மனிதன் இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும்.


உதாரணமாக, காடுகளில் முயல், மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் பெருகி முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். இலைதழைகளும் மரங்களும் அழிந்தால் மழை பெய்வது நிற்கும். தொடர்ந்து வறட்சியும் பஞ்சமும் என பூமி வாழ்க்கை ஸ்தம்பித்து விடும்.

3.#படைத்தவன் தீர்மானிப்பதே பாவமும் புண்ணியமும்:
#பாவம்_எது_புண்ணியம்_எது என்பதைப் பிரித்தறிய அனைத்து மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் பொதுவான ஒரு அளவுகோல் நமக்குத் தேவை. மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின்போது நம் பாவ - புண்ணியங்களை விசாரித்து அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.

4. #புலால்_இறைவனிடம்_பாவமல்ல!
உணவுக்காக உயிர்களைக் கொல்வது இறைவன் பார்வையில் பாவமல்ல:
மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதை உண்ணவேண்டும் உண்ணக்கூடாது என்பதை அவர்களைப் படைத்த இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவித்து வந்துள்ளான்.
= 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
= 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21)

உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை இறைவன் அனுமதித்து உள்ளான் என்பதை திருக்குர்ஆன் மூலம் மட்டுமல்ல முந்தைய வேதங்கள் மூலமும் அறிகிறோம்.
# நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
(ஆதியாகமம் 9 அதிகாரம்)

# மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.’


இந்த அனுமதியின் பின்னால் உள்ள உண்மைகளையும் நுணுக்கங்களையும் திட்டங்களையும் அவன் மட்டுமே முழுமையாக அறிவான். அவனது திட்டங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைக்கும் நிலையில் நாம் இல்லை என்பது உறுதி.

5. #இரக்க_உணர்வுக்கும்_நற்கூலி_உண்டு:
இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே! ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.

6. #விவசாயிகளுக்கு_மறுவாழ்வு_தரும்_பக்ரீத்:
பால்தரும் பசுவும் நிலத்தை உழும் மாடும் வயதாகி விட்டால் அவற்றை விற்று இளம் பசுவையோ மாட்டையோ வாங்கினால்தான் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை பெறமுடியும். வயதான மாட்டை அல்லது பசுவை இறைச்சிக் கடைக் காரர்கள்தான் உரிய விலை கொடுத்து வாங்குவார்கள். குறிப்பாக பக்ரீத் பண்டிகை காலத்தில் இவை அதிகமாக விற்றுப் போகும். உண்மையில் இது அதற்கான சீசன். அந்த வகையில் விவசாயிகளைப் பொறுத்த வரையில் இளம் பசு அல்லது மாட்டைக் கொண்டு தங்கள் தொழிலைப் புதுப்பித்துக் கொள்ள பக்ரீத் உதவுகிறது.

7. #கொல்லாமை_விளைவிக்கும்_குழப்பம் !
மேற்படி உதாரணத்தில் உயிர்வதை பாவம் என்று சொல்லி பசுவை அல்லது மாட்டை விற்பதை தடை செய்தால் விவசாயியின் தொழில் தடைபடும். வயதான உதவாத மாட்டை அவிழ்த்துவிட்டால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார். தீனி கொடுக்காமல் கட்டிவைத்து பட்டினி போட்டால் பசிக்கொடுமையால் அது அணுவணுவாக சாகும்.
அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

= நீங்கள் ஒரு விஷயத்தை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) இறைவன் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:216)
----------------

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
#இஸ்லாம்_என்றால்_என்ன?
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக