இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 செப்டம்பர், 2019

நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!


இன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதாக இருந்தாலும் சரி, வாடகை வீடானாலும் சரி, நமது உடல் என்ற வீட்டில் இருந்து உயிர் பிரிக்கப்படும் போது அந்த வீட்டை விட்டும் பிரிந்தே ஆகவேண்டும் அல்லவா?
அதற்குப் பின்னர் நம் இருப்பிடம்?
ஆம், அது நாம் இங்கு வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது. நாம் சேமித்த புண்ணியங்களையும் பாவங்களையும் பொறுத்தது. நம்மைப் படைத்த இறைவன் நமக்கு ஏவும் செயல்களே புண்ணியங்கள். நாம் செய்யக் கூடாது என்று தடுத்த செயல்களே பாவங்கள் எனப்படுபவை. இவை ஒவ்வொன்றும் எடைபோடப்படும் நாளே இறுதித்தீர்ப்பு நாள் என்பது.  அதுதான் நாம் இப்போது எழுதிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை எனும் பரீட்சையின் முடிவுகள் வெளியாகும் நாள். இறைவனைப் பொறுத்தவரை அவனது காலண்டரில் ஒரு குறிப்பிட்ட நாளாகும். ஆனால் அது எப்போது என்பது நமக்கும் சரி, இறைத் தூதர்களுக்கும் சரி, வானவர்களுக்கும் சரி அறியப்படாத நாளாகும். ஆனால் அது உறுதியாக நடந்தேறும் என்பதில் சந்தேகமேயில்லை.
நிரந்தர இருப்பிடம்
= அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (திருக்குர்ஆன் 78:39)
நாளைய நம் நிரந்தர இருப்பிடம் ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும் என்பது உறுதி. அது எங்கு அமைய வேண்டும், நமது உணவும் உடையும் இருப்பிடமும் மற்றும் இன்ன பிற சவுகரியங்களும் எவ்வாறு அமையவேண்டும் என்பதை இப்போதே தீர்மானித்தால்தான் முடியும்.  இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆனின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட கீழ்கண்ட ஒப்பீட்டு மெனுவில் உங்கள் சாய்ஸை  டிக் செய்து கொண்டே செல்லுங்கள்:  எது வேண்டுமோ அதற்கான ஆயத்தங்களை இன்றே செய்து கொள்ளுங்கள்!
அ) ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு விருந்தாக தங்குவதற்குரிய சுவனபதிகள் உண்டு. . (திருக்குர்ஆன் 32:19)
ஆ) மேலும், பாவம் செய்கிறார்களே அத்தகையோர் அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்பாகும், அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும்போதெல்லாம் அதிலேயே மீட்டப்படுவார்கள், மேலும், நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களே, அந்த (நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப்பாருங்கள்என்று அவர்களுக்குக் கூறப்படும். . (திருக்குர்ஆன் 32:20
இருவகைத் தோற்றங்கள்
அ) அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (. (திருக்குர்ஆன் 80:38,39)
ஆ) ஆனால் அந்நாளில் – (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (. (திருக்குர்ஆன் 80:40)
இரு வகை வரவேற்பு
அ) மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்!  . (திருக்குர்ஆன் 39:73)
ஆ) (இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டதுஎன்று பதிலளிப்பார்கள்.அப்போது கூறப்படும்: நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்! . (திருக்குர்ஆன் 39:71,72)
உணவு
அ) இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம். (திருக்குர்ஆன் 52:22)
ஆ) நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய உணவு; அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போல். . (திருக்குர்ஆன் 44: 43-46)
பானம்
அ) பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; . (திருக்குர்ஆன் 47:15) 
ஆ) அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. . (திருக்குர்ஆன் 78: 24-25)
ஆடை
அ) அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (.(திருக்குர்ஆன்  76:21)
ஆ) அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(திருக்குர்ஆன்  14:50)
படுக்கை
அ) (பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (.(திருக்குர்ஆன்  56:15,16)
ஆ) அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (.(திருக்குர்ஆன்  7:41)
தங்குமிடம்
அ) அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (.(திருக்குர்ஆன்  61:12)
ஆ) நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21) 
நிரந்தரம்
அ) அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
ஆ) நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்போரிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள் இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)
மேற்படி பட்டியலில் உங்கள் சாய்ஸ் ‘அ’ என்பதாக இருந்தால் நீங்கள் அதற்கான உழைப்பை இன்றிலிருந்தே நீங்கள் துவங்க வேண்டும். உங்களைப் படைத்த இறைவன் தந்த வாழ்க்கை நெறிப்படி உங்கள் வாழ்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மாறாக சாய்ஸ் ‘ஆ” என்றால் நீங்கள் உங்கள் மனம்போனபடி வாழலாம்.
----------------------------------- 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக