இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 டிசம்பர், 2018

வானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே!


 ஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து போகிறது! வறுமை, நோய், விபத்து, தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், விவசாயத்தில் வறட்சி போன்ற சோதனைகள் வாழ்க்கையில் குறுக்கிடும்போது பெரும்பாலோர் வாழ்க்கையையே வெறுத்து விடுகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.
( தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 தற்கொலைகள்!)
ஆனால் அதே மக்கள் சற்று பொறுமை காத்து மாற்றி யோசித்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வழிகளைக் காண்பார்கள். அதைத் தொடர்ந்து தன்னம்பிக்கையும் எதையும் தாங்கும் இதயமும் மன அமைதியும் மறுவாழ்வும் அவர்களை வரவேற்கும். (இறைவன் நாடினால்)
தன்னம்பிக்கையோடு மறுவாழ்வு வாழ முத்தான பத்து யோசனைகள்
1. நம்மை நாமே அறிந்து கொள்வோம்
= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் தற்காலிகமாக மின்னி மறையும் நீர்க்குமிழி போன்றது நமது வாழ்வு. நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை! உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும்  இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு  நடப்பவை  அல்ல என்பதையும் அறிவோம்.  நமது  என்று  நாம் சொல்லிக்கொள்ளும் உடல்பொருள்ஆவி என இவை யாவும் நமது முழுமையான  கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை
 = ஒரு அற்ப  இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக  பல கட்டங்களைக் கடந்து கருவாக  உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து  உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக  வெளிவந்து  தொடர்கிறது  நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்தொடர்ந்து பற்பல பருவங்களைக் கடந்து இறுதியாகக் கல்லறையில் சென்று அடக்கமும் ஆகிறது.
இந்த வாழ்க்கை என்பது எதற்காக? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு தெளிவான விடை காண்பதுதான் மன அமைதிக்கான முதல் படிக்கல்.இக்கேள்விகளுக்கு நமக்கு நாமே ஊகித்து விடை காண்பதை விட நம்மைப் படைத்தவன் என்ன கற்றுத் தருகிறானோ அதை ஏற்று அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்வதுதானே அறிவுடைமை?
2. தேவை தெளிவான ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டம்  
இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் அதில் நீர்க்குமிழி போல தோன்றி மறையும் நம் நிலையையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது நமது குறுகிய இந்த தற்காலிக வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான் என்பது புலப்படும்.  இந்த பூமியின் பல்வேறு பாகங்களில் பல்வேறு காலகாட்டங்களில் வந்து சென்ற இறைத்தூதர்களும் இறைவேதங்களும் இந்த உண்மையை உறுதிப் படுத்துகின்றன. இறுதிவேதம் திருக்குர்ஆனும் இதைக் கூறுகிறது:
= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
 இந்த குறுகிய வாழ்வில் இறைவனின் வழிகாட்டுதல்களின் படி அவன் ஏவுவதை செய்து அவன் தடுத்தவற்றைத் தவிர்த்து வாழ்வதுமே அந்தப் பரீட்சை. அவ்வாறு வாழ்வோருக்கு நன்மை எது தீமை எது என்ற தெளிவான கண்ணோட்டம் கிடைப்பதால் இந்த பூமியில் கட்டுப்பாடான வாழ்க்கையும் மன அமைதியும் சாத்தியமாகின்றன. அவ்வாறு இந்தப் பரீட்சையில் வெல்வோருக்கு இறைவன் மறுமை வாழ்க்கையில் சொர்க்கம் என்ற அழியா இன்பங்கள் நிறைந்த வாழ்விடத்தை பரிசாக வழங்க உள்ளான். மாறாக இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் இந்தப் பரீட்சையையும் புறக்கணித்து வாழ்ந்தவர்களுக்கு தண்டனையாக நரகம் என்ற தீரா வேதனைகள் நிறைந்த வாழ்விடத்தையும் வழங்கவுள்ளான்.
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185) 
3. உறுதியானதைப் பற்றிப் பிடித்து வாழ்க்கையில் வெல்லுங்கள்
இதுதான் இவ்வுலகைப் படைத்ததன் நோக்கமாக இறைவனே கூறுகிறான். இதுதான் இறுதியான மற்றும் உறுதியான உண்மை ஆகும். இதைத் தவிர நீங்கள் வேறு எந்த கோணத்தில் சிந்தித்தாலும் வாழ்க்கையின் பின்னணி பற்றியும் வாழ்க்கையின் நோக்கத்தைப்  பற்றியும் எந்தத் தெளிவும் பெறமுடியாது என்பது உறுதி! இதைத் தவிர இவ்விடயத்தில் சொல்லப்படும் அனைத்தும் வெற்று மனித ஊகங்களே. ஊகங்கள் மக்களின் மனஉறுதியைக் குலைத்து கோழைத்தனத்தை உருவாக்குகின்றன. அதனால் அவர்களுக்கு சோதனைகளைத் தாங்கும் துணிவு இருப்பதில்லை.
4. நாத்திகம் தவிர்த்து பகுத்தறிவு வளர்ப்போம்
நாத்திகத்தைப் பின்பற்றுவோருக்கு வாழ்க்கையின் நோக்கம் என்று எதுவும் இல்லை. வாழ்க்கையில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் பேணவேண்டும் என்பதற்கு உந்துதலும் கிடையாது. மனம்போன போக்கில் நன்மை தீமைகளை அவர்களே சுயமாக முடிவு செய்வதால் மது, போதைபொருள், விபச்சாரம், கொலை போன்ற வன்பாவங்களையும் அவர்கள் சந்தர்ப சூழலுக்கேற்ப நியாயப்படுத்துகிறார்கள். எனவே ஒழுக்கம், கட்டுப்பாடு இவை மறைந்து குடும்பங்களிலும் சமூகத்திலும் தான்தோன்றித்தனமும் குழப்பங்களும் அதிகரிக்கின்றன. வாழ்க்கைக்கு அர்த்தமற்றது என்ற சிந்தனை தற்கொலைகளுக்கு தூண்டும் காரணமாகும். எனவே  ஊகங்களை கைவிட்டு இறைவன் கூறும் உண்மைகளைப் பற்றிப் பிடிப்பது மட்டுமே வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும். சோதனைகளை எதிர்கொள்ளும் மனோதைரியத்தையும் கொடுக்கும்
5. வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜமே என்றறிதல் 
வந்து சென்ற கஜா புயல் ஆயினும் சரியே, இதற்கு முன்னர் உங்களுக்கு உண்டான நோயும் சரியே, வியாபாரத்தில் அல்லது தொழிலில் அல்லது கல்வியில் நீங்கள் சந்தித்த ஏதேனும் பின்னடைவும் இழப்பும் சரியே இவை அனைத்தும் இந்தக் குறுகிய வாழ்க்கைப் பரீட்சையின் பாகங்களே என்பதை நாம் கட்டாயமாகப் புரிந்து கொள்ளவேண்டும். செல்வமும் செழிப்பும் இலாபமும் வெற்றியும் எல்லாம் எவ்வாறு வாழ்க்கையின் பாகங்களோ அதே போலவே வறுமையும் பஞ்சமும் நஷ்டமும் தோல்வியும் உங்களை வந்தடையும் என்பதை உங்களைப் படைத்தவனே கூறுகிறான் கேளுங்கள்:  
= மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
6. இறைவனிடம் தஞ்சம் புகுவோம்  
அவ்வாறு சோதனைகளை எதிர்கொள்ளும்போது நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் இறைவனே  நமக்குக் கற்றுத் தருகிறான்:
= அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே மீள்பவர்கள்) என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! (திருக்குர்ஆன்  2:156, 157) 
அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனிடமிருந்தே இந்த சோதனை வந்துள்ளது, அவனே நம் இறுதி அடைக்கலம் என்ற உணர்வோடு பொறுமையை மேற்கொள்வோருக்கு மறுமையில் இறைவனிடம் பரிசுகள் காத்திருகின்றன.
7. மறுமை என்ற ஆறுதல்
மரணம் என்பது வாழ்கையின் முடிவல்ல. மாறாக அதுவே உண்மையான மற்றும் நிரந்தரமான வாழ்க்கையின் தொடக்கமே என்ற புரிதல் மன அமைதிக்கான மாமருந்தாகும். அதுவும் நம்மைப் படைத்து நம்மீது அளவிலா கருணை பொழிந்து பரிபாலிக்கும் இறைவனிடம்தான் நாம் திரும்பிச்செல்கிறோம் என்ற உணர்வு நமக்குள் மேலிடுமானால் விந்தைகள் நிகழாதா என்ன? இன்னும் அந்த அருளாளன் திகட்டாத இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறான் என்று உணர்ந்தால் மனதின் இரணங்கள் மாயாமாய் மறையாதா?
8. மறுமையே நிலையானது என்றறிதல் 
= “இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலை  கடலில் வைத்தால் அதில் ஒட்டிக்கொள்ளும் நீரளவு போன்றதே” என்பது நபிமொழி (முஸ்லிம்)
நல்லோர்கள் சென்றடையும் சொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடமாகும். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?. (திருக்குர்ஆன் 47:15)
இவ்வுலகில் இறைவனைப் புறக்கணித்து வாழ்ந்தோருக்கும் பிற மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களுக்கு அநீதி இழைத்தோருக்கும் பூமியில் அராஜகங்களும் அட்டூழியங்களும் செய்தோருக்கும் சரியான தண்டனைகள் மறுமையில்தான் நிறைவேற்றப்பட உள்ளன. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக உள்ளது நரகம்.
9. இறைவனின் அரவணைப்பை உணர்தல் 
இறைவன் தனது கருணையில் நூறில் ஒரு பாகத்தை மட்டுமே பூமியில் உயிரினங்களுக்கு இடையே பகிர்ந்து அளித்துள்ளான். அதன் ஒரு பாகம் மட்டுமே தாய்ப்பாசம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரி). அப்படிப்பட்ட அளவற்ற அருளாளளின் அரவணைப்பு என்றும் நம்மைவிட்டுப் பிரிவதில்லை என்ற உறுதியான உணர்வு இருந்தால் அனைத்து இழப்புகளும் நமக்கு துச்சமாகவே மாறிவிடும். 
·  அருளாளனை அறிவோம்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு நுண்ணிய துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அதன் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஏதேனும் மற்றொரு நுண்ணிய பொருளைக் காட்டி அதுதான் கடவுள் என்று கற்பிக்கப்படும் போது மக்களின் உள்ளத்தில் – குறிப்பாக இளைஞர்கள் அல்லது குழந்தைகளுக்கு கடவுளைப்பற்றிய மதிப்பு (seriousness) உண்டாவதில்லை. நாளடைவில் அது அவர்களை நாத்திகத்திற்கு இட்டுச்சென்று விடுகிறது. எனவே இவ்வுலகைப் படைத்தவன்தான் உண்மை இறைவன் என்பதையும் அவனது தன்மைகளையும் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
ஏகனான தன்னிகரற்ற இறைவனின் தன்மைகளை மேற்கண்டவாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்கும்போது உண்மையான இறை பக்தியும் இறைவனின் கண்காணிப்பில் இருக்கிறோம், அவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வும் மக்களில் உண்டாகும்.

10. யாதும் ஊரே யாவரும் உறவே என்றறிதல் 
இன்றைய கலாச்சார சீர்கேடு உருவாக்கியுள்ள “நான் மற்றும் என் குடும்பம்” என்ற குறுகிய சிந்தனையும் தன்னம்பிக்கையை இழக்க வைக்கும் காரணியாகும். அதை விடுத்து உலகெங்கும் பரவி இருப்பது நமது குடும்பமே, மனிதகுலம் அனைத்தும் நம் உறவே என்ற பரந்த சிந்தனையின் பால் இறைவன் அழைக்கிறான்:
= மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்.  (திருக்குர்ஆன் 49:13) 
= சகமனிதனை சகோதரனாக பாவிப்பதும் அவனது துயர் துடைப்பதும் ஒரு கட்டாயக் கடமையாகவும் புண்ணியத்தைத் தேடித் தரும் வழிபாடாகவும் கற்பிக்கிறது இஸ்லாம்.
= மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபிமொழி.  
= “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறார உண்பவன் இறைவிசுவாசி அல்ல” என்கிறது இன்னொரு நபிமொழி.
இஸ்லாமியர்களை இன்று புயல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தூண்டிக் கொண்டு இருப்பதும் இந்த உந்துகோல்களே!
ஆம் உடன்பிறப்புக்களே, இனம், நிறம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இறை கூறும் இந்த சகோதரத்துவ உறவோடு நாம் வாழும் வரை-
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
-------------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக