இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

3012 இல் உலகம் அழியுமா?



2012 இல் உலகம் அழியுமா?
*  அழியும்
*  அழியாது
*  தெரியும்
*  தெரியாது
========================================
இந்த புத்தகத்தை குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்கத்திலோ அல்லது குழம்பிய குட்டையை மேலும் குழப்பிவிடும் நோக்கத்திலோ அல்லது ஒரு ஊகத்தின் அடிப்படையிலோ நாம் வெளியிடவில்லை. மாறாக 2012 -இல் உலகம் அழியும் என்று கூறி ஒரு சிலர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்து அது பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்படுவதே இந்த நூல்.
பொருளடக்கம்
1.       யாரைத்தான் நம்புவது? இங்கு சொல்லப்படும் உண்மைகளின் நம்பகத்தன்மை 
2.       திருக்குர்ஆன் அறிமுகமும் வந்த வரலாறும்.
3.       திருக்குர்ஆனின் பாதுகாப்பு.
4.       சந்தேகங்கள் அறவே இல்லாத வேதம்.
5.       திருக்குர்ஆனை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்.
6.       நபிகள் நாயகம்(ஸல்) யார்? அவரது முக்கியத்துவம்
7.       உலக அழிவு பற்றிய கவலை
8.       அழிவுக்கு முன் அறியவேண்டியவை.
9.        

இங்கு சொல்லப்படும் உண்மைகளின் நம்பகத்தன்மை
நமது இந்தத் தெளிவான ஆக்கம் மிகமிக உறுதியான ஆதாரங்களின்  அடிப்படையில் ஆனது. ஆம், யார் இவ்வுலகத்தை உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே அதன் அழிவைப் பற்றிக் கூற முடியும். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன். அவனுக்கு மட்டுமே தன் படைப்பினங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவு உள்ளது.  அந்த வகையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனும் இவ்வுலகின் சொந்தக்காரனும் ஆன இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனையும் அவனது இறுதித் தூதராக இவ்வுலகுக்கு வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்களையும் அடிப்படையாகக் கொண்டதே இந்த ஆக்கம்.
உறுதிமிக்க ஆதாரங்கள்
முதலில் உங்கள் மனங்களில் எழும் சந்தேகங்களை இப்போது தீர்த்து வைப்போம்.......
திருக்குர்ஆன் இறைவனின் வேதம்தான் என்பதை எவ்வாறு நம்புவது?    
அதை அறியும் முன் திருக்குர்ஆன் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 
திருக்குர்ஆன் எப்படி வந்தது?
முஸ்லிம் அல்லாத அன்பர்கள் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவர்களுக்கு ஒலிவடிவில் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதுமே உண்மையாகும்.   இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு   மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.
        ,t;Ntjk;> ahtiuAk; kpifj;NjhDk; Qhdk; kpf;NfhDkhfpa my;yh`;tplkpUe;Nj ,wf;fpaUsg;gl;lJ.(திருக்குர்ஆன் 46:2)
(அல்லாஹ்- உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று வழங்கப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் வணங்குவதற்குரிய ஒரே இறைவன் என்பதாகும். தமிழில் கடவுள் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் ஹிந்தியில் பகவான் என்றும் சொல்வதுபோல அரபிமொழியில் இறைவனைக் குறிக்கும் பதமே அல்லாஹ் என்பது. இவ்வார்த்தையின் சிறப்பாவது, இதற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பன்மையும் கிடையாது. கடவுள் கடவுளர்கள், பகவான் பகவதி, GOD GODS, GODESS  என்றெல்லாம் கடவுளைக் குறிக்கும் பிறமொழி வார்த்தைகள் சிதைவது போல அல்லாஹ் என்ற சொல் ஒருபோதும் சிதைவதில்லை. எப்போதும் ஒருமையிலேயே விளங்கும்.)
(ஸல்- ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் என்பதன் சுருக்கம்- இதன் பொருள்: இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும் என்பது)  
இது இவ்வுலகின் உரிமையாளனான இறைவனின் அறிவுரைகள் என்பதாலும் அவனது இறுதி வேதம் என்பதாலும்   இன்று வாழும் மக்கள் யாவரும் இதன் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.
அடுத்ததாக இந்தத் திருக்குர்ஆன் எப்படி வந்தது, மற்றும் நபிகள் நாயகம் யார் என்பன பற்றி அறிந்து கொள்வோம்:
திருக்குர்ஆன் அருளப்பட்ட விதம்
இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ துளியளவும் கிடையாது. முழுக்க முழுக்க  இறைவார்தைகளை மட்டுமே கொண்ட நூல் திருக்குர்ஆன்! இதை கீழ்வரும் சரித்திர உண்மைகளை அறியவரும்போது புலப்படும்.
முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ்  ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர். பெண்களை அடிமைகளாக நடத்தினர். சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்.  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.
அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற ஒரு சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள். இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள். அதாவது படைத்த இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமையிலும் அமைதியை அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்பது இக்கொள்கை முன்வைக்கும் தத்துவமாகும்.
இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுகிறது.
ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே  சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச்  சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் தங்களுக்கு எதிரியாக இக்கொள்கையைக் கண்டார்கள். விளைவு?    நபிகளாரும் அவரோடு  சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. . பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து பொறுமையோடு தீயோரின் அடக்குமுறைகளை எதிர்கொண்டாலும் ஒருகட்டத்தில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகவே, இறைவனின் கட்டளைப்படி நபிகளார் மக்காவைத் துறந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மதீனா நகருக்குச் செல்ல நேர்ந்தது.
அங்கு ஏற்கனவே இஸ்லாம் பரவியிருந்ததால் அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றார்கள். அது மட்டுமல்ல மதீனாவில் இஸ்லாம் வளர வளர ஒரு இறை நம்பிக்கையாளர்களின் சமூக அமைப்பும் அரசும் அமையும் அளவுக்கு வலிமை பெற்றார்கள். ஆனால் மக்காவின் கொடுங்கோலர்கள் அங்கும் படை எடுத்து வந்து தாக்க, நபிகள் நாயகமும் ஆதரவாளர்களும் தற்காப்புப் போர் புரிய நேரிடுகிறது. தொடர்ந்து நடந்த போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி சத்தியத்திற்கே. மக்கவும் வெற்றி கொள்ளப் படுகிறது. கொடுமை செய்தவர்களுக்கும் நபிகளார் இறுதியில் பொது மன்னிப்பு வழங்க அனைவரும் சத்தியத்தை ஏற்க்கிறார்கள்.. அராபிய நாடு முழுவதும் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தனது 63-வது வயதில் நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் தனது நபித்துவ வாழ்வின் போது அதாவது 40-வது வயதிலிருந்து 63-வது வயது வரை சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளின்போது அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவுரைகளாகவும் கட்டளைகளாகவும் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது.
திருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது?
 திருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை நடத்திப் பார்க்கலாமே!. திருக்குர்ஆனின் உலகெங்கும் உள்ள பிரதிகளை நேரில் நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் இன்று இணையம் மூலமாகவோ அல்லது ஒரு பொது நூலகத்தில் சென்றோ இதை நீங்கள் எளிதில் செய்ய முடியும். அவ்வாறு நீங்கள் பரிசோதிக்கும்போது முந்தைய வேதங்களையும் மற்றும் திருக்குர்ஆனையும் ஒப்பீடு செய்து பாருங்கள். அப்போது நீங்கள் திருக்குர்ஆனின் ஒரு தனித்தன்மையை உணரலாம்.
*  உலகில் இன்றுள்ள மற்ற மத வேதங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே காணமுடிகிறது. அவற்றின் மூல வசனங்களைக் காண முடிவதில்லை. இதுதான் அவ்வேதத்தின் மூலம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படும் எதையும் நீங்கள் தேடினாலும் காணமுடியாது.
*  ஆனால் திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான பிரதிகளைக் நீங்கள் காண முடிக்கிறது. ஒன்று வெறும் அரபுமொழி மூலம் மாத்திரம் இடம்பெற்றுள்ள பிரதிகள். மற்றவை திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பிரதிகள். ஆனால் அவற்றில் அதன் அரபுமொழியில் உள்ள மூலமும் இடம்பெற்று இருக்கும். ஆக மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம்.
  இது எப்படி?
முஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதை அறிவீர்கள்.
 இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக்  காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர்.  தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.
இதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். பாலும் பழமும் கைகளிலேந்தி....... அல்லது நான் ஆணையிட்டால்... போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா? ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.
 புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும்  பலரும் குர்ஆன் வசனங்களை  மனப்பாடம்   செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ஓதப்படுவது என்பதே!
ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.
  உலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே! குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள். (இன்ஷாஅல்லாஹ்)! இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம் (திருக்குர்ஆன் 15:9)

இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன், பைபிள, பகவத்கீதை, உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும் மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?

இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே, அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா? அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக, திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பிறகு இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே இன்று நாம் வாழும் ஒவ்வொருவரும் நம் வாழ்வை திருத்தி அமைக்கக் கடமைப்பட்டுள்ளோம். காரணம், இதன் அடிப்படையிலேயே இறுதித்தீர்ப்பு நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.

சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்
(100 % DOUBT FREE book)
 2:2. ,J jpU NtjkhFk;;> ,jpy; vj;jifa re;NjfKk; ,y;iy> gagf;jpAilNahUf;F (,J) NeHtopfhl;bahFk;.
இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவது நான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா? இதுவே திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் சர்வஞானம் கொண்டவனின் ஆக்கம் என்பதை நிரூபிக்கிறது.
தொடர்ந்து. இவ்வேதத்தைப் பற்றி சந்தேகம் கொள்வோரைப் பார்த்து இறைவன் விடுக்கும் அறைகூவலையும் எச்சரிக்கையையும் பாருங்கள்:
2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (காப்ரியேல்) மூலம் அருளப்பட்ட இந்த வேதவசனங்களில் உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் இது போன்றதொரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதகுலத்தை நோக்கி சவால் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி!
அவ்வாறு இந்த சவாலை எதிர்கொள்ள முடியாத சத்திய மறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கையும் விடுக்கிறான். 
 2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வசனங்கள் மூலம் இறைவன் அகல உலக மக்கள் அனைவரையும் நோக்கி விடுக்கும் செய்தி இதுதான்:
        இதோ இந்தத் திருக்குர்ஆன் என்பது எனது கட்டளைகளைக் கொண்ட இறுதிவேதம். அகில உலகிலும் இனி இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்காகவும் வழிகாட்ட இது அருளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்களுக்கு மோட்சம் உண்டு. மாறாக யார் இதை மறுத்து இதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிப்பதற்காக இது போன்ற ஒரு அத்தியாயமேனும் இயற்றிக் காட்டட்டும். அதற்காக அகில உலக மக்களையும் அனைத்து சக்திகளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துக் கொள்ளட்டும்.
        அந்த முயற்சியில் நீங்கள் தோல்விகண்டால் - நிச்சயமாக அது நீங்கள் தோல்வி காண்பீர்கள் என்பது திண்ணம் - உங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவ்வாறு திரும்ப மனம் இல்லையானால் இறைவனையும் அவன் வேதத்தையும் மறுப்போருக்காக தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். அது எப்படிப்பட்ட கடுமையான நெருப்பு என்றால் தீய மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகளாக எரிந்துகொண்டிருக்கும்.
 அதாவது இவ்வுலகின் அதிபதி தன் அடிமைகளை நோக்கி திருக்குர்ஆனைக் காட்டி இதை ஏற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறும் பாணியில் அமைந்துள்ளன இவ்வசனங்கள்! 
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது இவ்வேதம்
 ஒன்றை இறைவேதம் என்று சொல்வதாக இருந்தால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதனின் வார்த்தையில் தான் முரண்பாடுகள் வரும். ஏக இறைவனின் வார்த்தையில் முரண்பாடுகள் வருவதற்கு அறவே வாய்ப்பிருக்காது. அப்படி இருந்தால் அது மனிதனின் வார்த்தையாகத் தான் இருக்குமே தவிர இறைவேதமாக இருக்க முடியாது.
இவ்வுலகில் காணப்படும் நூல்களில் இரண்டு வகையான முரண்பாடுகளில் ஒன்றையோ அல்லது இரண்டையும் சேர்ந்தோ நீங்கள் காண முடியும்
1.      . முன்னுக்குப் பின் முரண்படுதல்: அதாவது அந்நூலின் பக்கங்களுக்குள் காணப்படும் முரண்பாடு. உதாரணங்கள் பல இருந்தாலும் இதைப் புரிந்து கொள்வதற்காக ஒன்றை மட்டும் இங்கு  காண்போம்:
பைபிளின் எஸ்றா 2 வது அதிகாரத்திற்கும், நெகேமியா 7 வது அதிகாரத்திற்குமிடையே உள்ள காணப்படும் முரண்பாடு
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். (நெகேமியா 7:10)
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.(எஸ்றா 2:5)
2.      இரண்டாவது வகை முரண்பாடு காலத்தால் ஏற்படும் முரண்பாடு. உதாரணமாக, ஐம்பது வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு நூலை எடுத்து இன்று வாசித்துப் பாருங்கள். அது அறிவியல் நூலேயானாலும் சரி, ஆன்மீக அல்லது சட்ட நூல்ளானாலும் சரி. இன்றைய மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏராளமான முரண்பாடுகளை நீங்கள் காண முடியும்.
ஆனால் திருக்குர்ஆனின் அற்புதம் என்னவென்றால் மேற்படி இரண்டு முரண்பாடுகளும் எள்ளளவும் இல்லை. இறைவன் கூறுகிறான் 
4:82     .அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அருளப்பட்ட காலம் தொட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது திருக்குர்ஆன்!
திருக்குர்ஆனில் முதல்வகை முரண்பாடுகளும் இல்லை. கால வளர்ச்சியின் மூலம் உண்டாகும் மனித ஆக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளும் அறவே இல்லை. காரணம் இது முக்காலத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது!
39:1     (யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம்  இறங்கியருளப் பெற்றுள்ளது.
விஞ்ஞானமும் மனித அறிவும் வளர வளர புதுப் புது ஞானங்கள் மனிதனுக்குப் புலப்படும்போது எந்த மனித ஆக்கங்களும் காலமாற்றத்தால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆனால் திருக்குர்ஆன் இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடும் சரித்திர உண்மைகளோடும் சிறிதும் முரண்படாமல் தொடர்கிறது!
திருக்குர்ஆனை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்
உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை உதாரணமாக பாப்போம்:
        தேனின் உற்பத்தி:
  தேனைப் பற்றி அது எவ்வாறு உற்பத்தியாகிறது என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அது பற்றிய போதிய ஞானம் இல்லாதவர்கள் கூறுவார்கள்: தேனீக்கள் பூக்களில் இருந்து ரசத்தை தங்கள் கூடுகளில் சேர்க்கின்றன. அதுதான் தேன் என்பார்கள். ஆனால் நவீன விஞ்ஞானம் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறுகிறது.
 தேனீக்கள் பூக்களில் இருந்தும் கனிகளிலிருந்தும் ரசத்தை உறிஞ்சிய பின் அது அவற்றின் வயிற்றில் ஜீரணிக்கப் பட்டு அதன் வயிற்றில் இருந்து வெளிவருவதே தேன் என்பதும்  பெண் தேனீக்கள்தான் இந்தக் கிரியையைச் செய்கின்றன என்பதும் இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள். கீழ்கண்ட வசனங்கள் இவற்றைத் தாங்கி நிற்பதைப் பாருங்கள்:
''மலைகளிலும் மரங்களிலும் மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (திருக்குர்ஆன் 16: 68, 69.)
1430 முன் எந்த விதமான விஞ்ஞான ஆராய்ச்சியோ நுண்னோக்கிகளோ (microscopes) தொலைநோக்கிகளோ (telescopes) இல்லாத ஒரு காலகட்டத்தில் எந்த மனிதராவது இப்படி ஆழமான விஞ்ஞான உண்மைகள் அடங்கிய வசனத்தைக் கூறியிருக்க முடியுமா? அதுவும் குறிப்பாக எழுத்தறிவோ படிப்பறிவோ இல்லாதிருந்த பாலைவனத்து மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க சற்றும் வாய்ப்பே இல்லை. தெளிவாக இது இறைவனின் வசனமே என்பதையல்லவா பறைசாற்றுகிறது?
 இந்த வசனங்களின் அரபு மூலத்தில் அவளுடைய வயிறு என்று பொருள்படும் புதூனிஹா என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இது பெண் தேனீக்கள்தான் தேன் சேகரிப்பை நடத்துகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வசனங்களின் நடையும் இவ்வளவு துல்லியமான வார்த்தைப் பிரயோகமும் இப்பிராபஞ்சத்தின் படைப்பாளன் சில படைப்பின் இரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது?
இதே போல இன்னும் பல படைப்பின் இரகசியங்கள்.....
அப்படிப்பட்ட மேலும் சில வசனங்களை சுருக்கமாக இங்கு காண்போம்:
கீழே ஒருசில நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளும் அவற்றை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களும் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் என்பது முழுக்கமுழுக்க இவ்வுலகைப் படைத்தவனின் வார்த்தைகளே என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன. 
        பெருவெடிப்புக் கொள்கை மற்றும் நீரே உயிரினங்களின் மூலம் என்ற உண்மை :
21:30. நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும் இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்திய மறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
        மனித உடலில் வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் தோல்களில்தான் உள்ளன என்ற உண்மை: 
4:56     .யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
        இரு கடல்களுக்கிடையே தடுப்பு : கடல்களுக்கு இடையே ஒன்றோடு ஒன்று கலவாத முறையில் தடுப்பு உள்ளது என்ற உண்மை:

25:53    .அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று மிக்க இனிமையும் சவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும் மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
27:61    .இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுககிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
        கோள்களை தடுத்துக் கொண்டிருக்கும் புவி ஈர்ப்பு விசை
35:41    நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
        விண்வெளிப் பயணம் சாத்தியமே என்ற உண்மை:
55:33    .''மனு ஜின் கூட்டத்தார்களே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள்;. ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
        விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்குகின்றது என்ற உண்மை
6:125    அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
        ஓரங்களில் குறையும் பூமி
13:41.    பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும் அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
21:44.    எனினும் இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும் அவர்களுடைய ஆயட்காலம் வளர்ந்தோங்கும் வரை சகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் ?
        சூரியனும் சந்திரனும் கோள்களும் வட்ட வரைக்குள் கட்டுப்பாட்டோடு இயங்குகின்றன எனும் உண்மை:
35:13    .அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
 36:40.   சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
        முளைகளாக மலைகள் : பூமிக்கடியில் பல்வேறு நில அடுக்குகள் ஒன்றோடு ஒன்று பிடிப்போடு இருக்கச் செய்ய பெரும் முளைகளைப் போல் மலைகள் ஆழமாக இறக்கப் பட்டுள்ளன என்ற உண்மை 

16:15    .உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
31:10.    அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
        கருவளர்ச்சியின் நிலைகள்:
22:5     மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும்  உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும் நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
23:13-14. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
        விந்தின் பிறப்பிடம்
86 : 5-7  மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந் தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
இன்னும் பல வசனங்கள் இதுபோல இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம். ஆக, மேற்கூறப்பட்ட உண்மைகள் எதைப் பறைசாற்றி நிற்கின்றன? இறைவனே கூறுவது போல்
32:2 அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.
என்ற உண்மையைத்தானே? எனவே இந்த இறைவேதம் கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறும் சம்பவங்களும் நூறு சதவீதம் உண்மை. இனி எதிர்காலத்தில் நடக்கப்போவதாகக் கூறும் சம்பவங்களும் நூறு சதவீதம் நடந்தே தீரும் என்பதும் உண்மை என்றுதானே நமது பகுத்தறிவு நமக்குச் சொல்கிறது!
நபிகள் நாயகம்(ஸல்) யார்?
அவரது முக்கியத்துவம்
 அடுத்ததாக நாம் இங்கு கையாளப்போவது இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மூலமாக இறைவன் அறிவித்துக் கொடுத்த செய்திகளைத்தான்.  . நபிகளாரின் சொற்கள், அவர்களின் செயல்கள், அவர் அங்கீகரித்தவை ஆகியவற்றின் தொகுப்புக்கு ஹதீஸ் என்று கூறப்படும். இவை தனித் தொகுப்பாக விளங்குகின்றன. நபிகளாரின் தோழர்களால் இவை அறிவிக்கப்பட்டு பிற்காலத் தலைமுறையினரால் அறிவிப்பாளர்களின் தரம் பரிசோதிக்கப் பட்டு மிகக் கவனமாக இவை பதிவுசெய்யப் பட்டுள்ளன. முஹம்மது நபி (ஸல் அவர்கள் அறிவித்த செய்திகளை அறியும் முன் அவர்களைப் பற்றிய சில உண்மைகளையும் நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும்:
முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி.....
நம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் அதுவே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது) என்ற அதே கொள்கையைத்தான் தத்தமது மக்களுக்கு போதித்தார்கள்.
அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி  இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது. என்று போதித்தார்கள். ஆனால் என்ன நடந்தது? தூதுர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் உருவச்சிலைகளை கடவுளாக பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின, இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின. இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக  வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
 எந்த ஓரிறைக் கொள்கையை முன்னாள் இறைத்தூதர்கள் வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும்  இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும்  அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது ஒருசில சிறப்புகளை அறிந்துக்கொள்வது அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் நமக்கு எடுத்துணர்த்தும்.முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை:
1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,
7:65  இன்னும் ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்)
7:85  மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்)
தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் இயேசு(அலை) அவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.
43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
மேற்கூறப்பட்ட உண்மை இன்று நம்மிடையே காணக்கிடைக்கும் பைபிளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
அப்பொழுது அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்குப் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லக் கூப்பிட்டாள் அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் ஊன்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள் அவர் அவனை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். (மத்தேயு 15:22 26 )
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.
2. அடுத்த வேறுபாடு: நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது
3. அடுத்த வேறுபாடு: முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபடுவதைப் போல் இவரை யாரும் வழிபடுவதில்லை.
இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள் என்று எச்சரித்தார்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும் என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.
4. அடுத்த வேறுபாடு: இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.
இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக...... அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள், பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.
அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார்? எவ்வாறு உணவு உண்டார்? உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார்? என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது. அவர் மூலமாக இறைவன் அறிவித்துள்ள செய்திகள்தான் ஹதீஸ் அல்லது நபிமொழிகள் என்று அறியப்படுகின்றன. இவ்வாறு திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்ற இரு உறுதியான அடிப்படைகள்தான் இனி நாம் பார்க்கப் போகும் செய்திகளின் ஆதாரங்கள். உலக அழிவு விடயத்தில் மட்டுமல்ல வேறு எந்த விவகாரங்களானாலும் சரித்திரம், அறிவியல், ஆன்மிகம் மனித வாழ்வியல் ஒழுக்கவியல் என எந்த துறைகளானாலும் சரி, அவை உண்மையா பொய்யா ஊகங்களா கற்பனையா நடக்குமா நடக்காதா என்பதை உரசிப்பார்த்து பிரித்தறிய இந்த இரண்டு ஆதாரங்களோடு பொருத்திப் பாருங்கள். பொருந்தினால் அது உண்மை இல்லையேல் அது கற்பனை அல்லது பொய் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் இவை இரண்டும் இவ்வுலகின் படைப்பாளனிடம் இருந்து வந்தவை. எனவே இவற்றை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
. இவ்வுலகைப் படைத்தவன் திருக்குர்ஆன் மூலமாகவும் அவனது தூதர் மூலமாகவும் என்ன சொல்லித்தருகிறானோ அதுமட்டுமே உலக அழிவு விடயத்தில் முழுக்கமுழுக்க உண்மை. மற்ற அனைத்தும் வெற்று ஊகங்களே என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். இனி இந்த உறுதியான ஆதாரங்கள் உலக அழிவைப் பற்றி மட்டுமல்ல இவ்வுலகின் ஆக்கத்தைப் பற்றியும் அழிவுக்குப் பின் நடக்க இருப்பவை பற்றியும் என்ன கூறுகின்றன என்பதைக் கண்டறிவோம் வாருங்கள். அதற்குமுன்.......
=========================
உலகின் ஆக்கம்- ஏன்? எதற்காக?
10:3.நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே ; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன் ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

 10:4.நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; இறைவிசுவாசம் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
39:5. அவன் வானங்களையும் பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னப்பவன்.

39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால ;நடைகளிலிரந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்?
13:3. மேலும் அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
மேற்படி வசனங்களில் இருந்தும் இன்னும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களில் இருந்தும் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இவ்வுலகு சர்வஞானம் கொண்டவனும் சர்வவல்லமையாளனும் ஆகிய ஏக இறைவனால் வீணாகப் படைக்கப் படவில்லை, மாறாக மிகமிக உயர்ந்த நோக்கங்களோடு படைத்து பரிபாலிக்கப்பட்டு வருகிறது என்பதே!


உலக அழிவு பற்றி நமது பகுத்தறிவு உணர்த்தும் உண்மைகள் 
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும்? என்பதை எவராலும் கூறிவிட இயலாது அல்லவா?; அதுபோலத் தான் இவ்வுலகம் அழியும் என்பதும் திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது. அது இவ்வுலகை எவன் உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதைப் பற்றி அவன் நமக்கு எவ்வளவு அறிவித்துத் தருகிறானோ அவ்வளவு மட்டுமே நாம் இதை கணிக்க முடியும்.
அந்த இறைவன் தனது இறுதித் தூதர் மூலமாக அனுப்பப்பட்ட வேதம் மூலமாகவும் மற்றும் அத்தூதர் மூலமாக அறிவித்த பிற செய்திகள் மூலமாகவும் உலக அழிவைப் பற்றி என்ன கூறியுள்ளானோ அவை மட்டுமே இன்று இவ்விஷயத்தில் இறுதியானவை மற்றும் உறுதியானவை!
அழிவு நிச்சயம்
நமக்குக் கிடைத்துவரும் அறிவியல் செய்திகளையும் அனுபவங்களையும் பொது அறிவைக்கொண்டும் பகுத்தறிவைக் கொண்டும் ஆராயும்போது  இவ்வுலகம் ஒருநாள் நிச்சயமாக அழியும் என்பது புலனாகிறது.
உதாரணமாக, அறிவியல் தகவல்கள் படி சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.
கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும் நாம் அறிந்துள்ளதோ அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.
உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும் நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
இதோ, இவ்வுலகைப் படைத்தவனே நம்மப் பார்த்துக் கேட்கிறான்:
67:16    .வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
67:17    .அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
திருக்குர்ஆன் வசனங்கள் நூற்றாண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் வாழ்ந்துக்கொண்டு இருந்த பாமரர்களை நோக்கியும் பேசுகின்றன. இன்று விஞ்ஞானத்தில் ஓரளவு முன்னேறியிருக்கும் இன்றைய மக்களை நோக்கியும் பேசுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அறியாமை
உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும் அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒருவேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!
அறிவுடைமை ஏது?
ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
ஆனால் உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது.. இதைப் படைத்தவன் கூறுவதைப் பாருங்கள்:
அந்த நிகழ்ச்சி நடக்கும் போது அது நிகழ்வதைத் தடுப்பதும் (அதைத்) தாமதப்படுத்துவதும் முன் கூட்டியே நடக்கச் செய்வதும் எதுவுமில்லை .(திருக்குர்ஆன் 56: 1-3)
ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக மனிதர்கள் எவராலும் கூறவும் முடியாது.
ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் நாம் கவலையோடு ஆராய வேண்டிய விடயம் மற்றொன்று. அதுதான் நாம் ஏன் இங்கு வாழ்கிறோம்? நம்மை ஏன் இறைவன் படைத்தான்? அந்த அழிவுக்கு முன்னரே நமக்கு மரணம் வரலாம் அதன்பின் நம் நிலை என்ன? அந்த அழிவை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அந்த அழிவுக்குப் பின் நம் நிலை என்ன என்பவற்றை  ஆராய்ந்து அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்வதே அறிவுடைமை!
அழிவுக்கு முன் அறியவேண்டியவை 
உலக அழிவு எப்போது என்று அறிந்துகொள்வதை விட நாம் கட்டாயமாக அறிந்து கொள்ளவேண்டிய சில அடிப்படை உண்மைகள் உள்ளன.
 அழிவு என்பது இருவகைகளில் நம்மை அடைய வாய்ப்புள்ளது
1.. நம் உடல் அழிதல் - அதாவது உலக அழிவுக்கு முன்னரே  நமக்கு மரணம் ஏற்படுதல்.
2. உலக அழிவின்போது அதன் பயங்கரங்களில் சிக்கி அதன் மூலம் நமக்கு மரணம் ஏற்படுதல்.
இவற்றில் எது நமக்கு முதலில் வாய்த்தாலும் மரணம் என்ற ஒன்றை நாம் அனைவருமே அடையவிருக்கிறோம் என்பது மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாத ஒன்று. எனவே உரிய முறையில் அந்த அழிவை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்வதுதான் நமது பகுத்தறிவினால் நாம் பெரும் பயன்!
அந்த மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன? மக்களிடையே மூன்று கருத்துக்களை நாம் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
1.      நாம் இருக்கமாட்டோம். மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.
2.      ஆத்மாவிற்கு அழிவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்போம்.
3.      இறைவேதங்கள் கூறுவது போல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல்: நம் செயல்களுக்குக் கூலி கொடுக்கப் படுவோம். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமக்கு நிரந்தர நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கும்
மேற்படி கருத்துக்களில் நமது கருத்து எந்த ஒன்றாகவும் இருக்கலாம் .ஆனால்... 
        மேற்கண்ட மூன்று கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் மூன்றுமே ஒரே நேரத்தில் சாத்தியப்படுவது முடியாத ஒன்று.
        நமது கருத்துக்காக அல்லது ஊகங்களுக்காக உண்மை அல்லது வாஸ்தவம் வளைந்து கொடுக்கப் போவது இல்லை.
        முதல் இரண்டில் எது நடந்தாலும் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு.
        மூன்றாவது விஷயம் நடக்குமானால் நாம் தப்பிக்க வழியில்லை.
எனவே பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் அந்த மூன்றாவது நிலையை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதுதான் பாதுகாப்பான வழிமுறை என்பதுதான். மனித இயற்கையும் அதுவே. உதாரணமாக ஜெர்மனி அல்லது சுவீடன் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு இன்டர்வ்யூ அல்லது ஒரு வேலைவாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அந்நாட்டைப் பற்றி ஆராய ஆரம்பிப்பீர்கள் அல்லவா? ஆராய்ந்து அந்நாட்டின் பொருளாதார சீதோஷ்ண மற்றும் அரசியல் சூழ்நிலைகளை தீரவிசாரித்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்தானே! நாளை நாம் நிரந்தரமாகத் தங்கவுள்ள இடத்தைக் குறித்து நாம் அலட்சியம் காண்பிக்க முடியுமா? அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் நாம் தாமதம் செய்யலாகுமா?
   பகுத்தறிவு கொண்டு இறைவேதங்கள் கூறும் உண்மைகளை ஆராய்ந்தாலும் நமக்கு அதுதான் நாளை நடக்கும் என்பதையும் அறியலாம்.

உலகம் இங்கு என்ன நடக்கிறது?
.....இனி என்ன நடக்கும்?
இறைவேதங்களும் இறைத்தூதர்களும் வாழையடி வாழையாக அவ்வப்போது கூறிவந்த செய்திகளின் சாரம் இதுதான். இறுதிவேதமான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. சுருக்கமாகக் கூறுவதென்றால்........
*          இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது ஒரு பரீட்சை போன்றது.
67:2     .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
18:7. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
2:155    .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
*      இங்கு நமது வினைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன.
36:12    .நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும் அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும் நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
78:29    .நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
நமது செயல்கள் பதிவாகின்றன என்பதை உணர மிகப்பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவை இல்லை. சற்று நம் மூளையைப் பற்றி சிந்தித்தாலே போதும். நாம் கவனித்து செய்யும் செயல்கள் மட்டுமல்ல கவனம் செலுத்தாமல் செய்யும் செயல்கள் (conscious and subconscious) என அனைத்தும் அங்கு பதிவாகின்றன. இவை போக ஒலி, ஒளி வாசம் போன்ற அனைத்துமே மின்காந்த அலைகள் என்பதை நாம் அறிவோம். அவை தன் பாதையில் எதிகொள்ளும் திடப் பொருட்களின் மீது தங்கள் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த அடிப்படையில்தான் ஆடியோ, வீடியோ பதிவுகள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
*      இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது ஒருநாள் இவ்வுலக அழிவு ஏற்படும்.
36:49.    அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50.    அப்போது அவர்கள் மரணசாசனம் சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
78:17-20  .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள் நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும் வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

*      மீண்டும் ஒரு இறைக் கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் ஒருவர் விடாமல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள்.
64:7     (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
36:51- 52 .மேலும் ஸூர் ஊதப்படடதும் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். ''எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும் (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்'' (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
 (அர்ரஹ்மான் என்றால் கருணையாளனான இறைவனைக் குறிக்கும் சொல்)

*      ஒவ்வொரு மனிதர்களும் அவரவர்களின் வினைப் பட்டியல் அவர்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள்
36:65    .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7-8    .எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும் அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
*      யாருடைய நன்மைகள் அதிகமோ அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளில் இருப்பிடம் வழங்கப்பட்டு அங்கு நிரந்தரமாக இன்ப வாழ்வு வாழ்வார்கள்.
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான். இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும் கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன¢ இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
*      யாருடைய தீமைகள் அல்லது பாவங்கள் அதிகமோ அவர்களுக்கு தண்டனையாக நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தொடர் வேதனைகளை அனுபவிப்பார்கள்.
20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ஆக, நமது நாளைய இருப்பிடம் சொர்க்கமா இல்லை நரகமா என்பதை முடிவு செய்யும் பரீட்சைக் கூடமே இந்தத் தற்காலிக உலகம் என்னும் பாடத்தைப் பெறுவோர்தான் உண்மையில் அறிவாளிகள்.
மறுமை நாள் எப்படி சாத்தியமாகும்?
    நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
    மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
    நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
    ''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
    இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.
 ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்
 36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
 அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
    மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
    ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
75:3. 4     (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
உங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான் இறைவன்
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம். இந்த உண்மையைப் பின்வரும் வசனம் மூலமாக நினைவூட்டுகிறான் இறைவன்
39:42  .அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.   
 இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டால், அந்த இறைவன் எல்லாவிதமான பலவீனங்களிலிருந்தும் தூயவன் என்பதையும் அறிந்து கொண்டால், அவனது அதிகாரத்திற்கும், ஆற்றலுக்கும் எந்த எல்லையும் கிடையாது என்பதை விளங்கிக் கொண்டால், தனது வல்லமையை உலகறியச் செய்யும் வகையில் அவன் படைத்து வைத்திருக்கின்ற அதியசயங்களைப் பற்றி சிந்தித்தால் 'எப்படி உயிர்ப்பிக்க முடியும்' என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். எப்படி என்பதைச் சிந்திப்பதை விட இதைச் செய்யக் கூடியவன் எத்தகையவன் என்பதை சிந்தியுங்கள்! அவ்வாறு சிந்தித்தால் மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கி ஒன்றுமற்றுப் போனாலும் அந்த வல்லவனால் மீண்டும் அவனை உருவாக்க முடியும் என்பதை ஐயமற உணர்வீர்கள் என்கிறது திருக்குர்ஆன்!
=============================  
மறுமையே  முக்கியம்!
 நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்க இருக்கிறோம் என்பதும்  இன்று நாம் காணும் இவ்வுலகம் என்பது தற்காலிகமானது என்பதும் மிகத் தெளிவான உண்மைகள்... எப்போது இவ்வுலகம் அழியும் என்பதில்தான் தர்க்கமே தவிர கண்டிப்பாக அழியும் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு கிடையாது. எனவே அழிவு வரும்போது அதன் பயங்கரங்களில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும் அழிவுக்குப் பின் வரக்கூடிய யதார்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்வதே அறிவுடைமையும் பயனுள்ளதும் ஆகும்.
இனி வாருங்கள்....  திருக்குர்ஆனும் நபிமொழிகளும் உலக அழிவு பற்றி எடுத்துரைக்கும் எச்சரிக்கைகளையும் செய்திகளையும் காண்போம்.
ஏன் எச்சரிக்கவேண்டும்?
இவ்வுலகு என்பது ஒரு தற்காலிகப் பரீட்சைக் கூடம் என்பதை நாம் கண்டோம். இதில் அனைத்து மனிதர்களும் அவரவர்களுக்குக் குறித்த தவணைகளில் விதித்த இடங்களில் விதித்த சூழ்நிலைகளில் வருவதையும் போவதையும் நாம் காண்கிறோம். மறுமையில் நிரந்தரமாக மனிதன்  வாழப்போகும் இடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிப்பதே இப்பரீட்சையின் நோக்கம். இப்பரீட்சையில் எவ்வாறு வெல்வது என்பதைக்  கற்றுத் தர இறைவன் தன் தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் அனுப்புகிறான். அதேவேளையில் இவ்வுலகம் என்பது பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு தீய செயல்களுக்கு தூண்டக்கூடிய ஷைத்தான் என்ற கொடிய சக்தியையும் உலவ விட்டிருக்கிறான். யார் இறை வார்த்தைகளை செவிமடுத்து இறைகட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்கிறார்களோ அவர்கள் மறுமையில் சொர்க்கம் செல்கிறார்கள். யார் அவற்றை செவிமடுக்காமல் அலட்சியப்படுத்தி ஷைத்தானுக்கு அடிபணிந்து தான்தோன்றித்தனமாக தங்கள் வாழ்கையை கழிக்கிறார்களோ அவர்கள்  நரகம் செல்கிறார்கள். இவ்வுண்மைகளை இங்கு உணராமல் வாழ்பவர்களும் உள்ளனர். உணர்ந்தவர்களும் உள்ளனர். உணர்ந்தபின்னும் மறந்து வாழ்பவர்களும்  உள்ளனர். இவர்களுக்கெல்லாம் மறுமை என்ற யதார்த்தத்தை உணர்த்துவதற்காகவே அடிக்கடி இறைவன் தன் புறத்திலிருந்து எச்சரிக்கைகளை அனுப்புகிறான்.
        சில எச்சரிக்கைகளை தன் வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் விடுக்கிறான்.
67:16    .வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
67:17    .அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
 67:18   .அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
67:30.    (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால் அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
        சில பொழுது இயற்கை சக்திகளின் சீற்றங்களாக அனுப்புகிறான்.
51:41.-42 இன்னும் 'ஆது' (சமூகத்தரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
51:44. அவர்கள் (சமூது கூட்டத்தார்) தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. ஆகவே அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
        சிலவேளைகளில் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் நோய் ,விபத்து, மரணம், இழப்புக்கள் போன்ற வேதனைகளையும் சோதனைகளையும் கொடுத்து எச்சரிக்கிறான்.
2:155    .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
        இன்னும் சில வேளைகளில் பரீட்சைக் கூடத்தில் இருந்து கொண்டு கும்மாளம் அடிக்கும் மாணவர்களை கூண்டோடு அப்புறப்படுத்துவது போல சில ஊர்களையும் நாடுகளையும் அடியோடு அழிக்கிறான்.
36:31    .''அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் இவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள்'' என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
=======================
அந்த நாள் எப்போது வரும்?
        யாராலும் அறிய முடியாது
அந்த நாள் எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்? என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும் விடை படைத்தவனைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது என்பது தான்.
  எல்லா இறைத்தூதர்களும் தத்தமது மக்களிடம் உலக அழிவைப் பற்றியும் மீண்டும் உயிர்த்தெழுதல் பற்றியும் இறுதித்தீர்ப்பு நாள் பற்றியும் எச்சரித்து வந்தனர். அந்த மக்கள் செய்துவந்த பாவங்களையும் அநியாயங்களையும் கண்டிக்கும் வேளையில் வர இருக்கின்ற இறைவனின் விசாரணை பற்றியும் அவனது தண்டனை பற்றியும் எச்சரித்தே வந்துள்ளனர். அப்போது அம்மக்கள் நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த நாள் எப்போது? அல்லது அந்நாளை இப்போதே கொண்டு வாருங்கள்! என்றெல்லாம் கேள்வி கேட்டும் பரிகாசம் செய்தும் வந்துள்ளனர். இறுதித் தூதரும் இதற்கு விலக்கல்ல! இதோ திருக்குர்ஆன் கூறுகிறது:
        அதன் ஞானம் இறைவனிடமே உள்ளது
அந்த நேரம் எப்போது வரும் என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.   இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.  இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில்  அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
திருக்குர்ஆன் 7:187 
 (முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது   எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்    திருக்குர்ஆன் 33:63)
        எச்சரிப்பது மட்டுமே தூதர் பணி.
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது எனக்கேட்கின்றனர்.   அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே  எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன்  67:25.26)
நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா  அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்) தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன் என்று கூறுவீராக!   (திருக்குர்ஆன்  72:25)
        திடீரென வந்து சூழும்
அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும் என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும். சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ அவர்கள் அறியாத நிலையில் திடீரென அந்த நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா  திருக்குர்ஆன்  12:107)
 அது எப்போது நிகழும் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் அறிந்திருக்கவில்லை  அது இறைவன் மாத்திரமே அறிந்த ஒரு விஷயமாகும் என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன.

அந்நாளை மறைத்து வைத்தது ஏன்?
 
அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாகஅறிவித்து விடலாமே! ஏன்அறிவிக்க மறுக்கிறான் என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்
அந்தநாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில் எந்த மாதத்தில் எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.
மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்குச் சற்றுமுன்பாக பாவமன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான். நல்லவனையும் கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனையும் கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி மறைத்து வைப்பதும் அவசியமே.
நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக்கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியமுடியும் இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை. 

அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி  கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
(திருக்குர்ஆன் 20:15.16)
தொடரும் தலைப்புகள்
அந்த நாள் வரும் முன் தோன்றும் அறிகுறிகள்
உலக அழிவு நாளுக்கு முன் தோன்றும் சில அறிகுறிகளைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இந்த அறிவிப்புகளில் பலதும் இன்று உண்மையாகி வருவதை வைத்தே நபிகளாரின் மொழிகளின் நம்பகத்தன்மையை உணரலாம். அவைப்  பொய்க்காதவை என்றும் இறைவனிடம் இருந்து வந்தவையே என்பதையும் நாம் அறியலாம். கீழே அப்படிப்பட்ட நபிமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன அவற்றின் இறுதியில் நபிமொழித் தொகுப்பு நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கீழ்கண்ட நபிகளாரின் மொழிகள் 1430 வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டவை என்பதையும் இவை அன்றைய மக்களுக்கும் இன்றைய மக்களுக்கும் நாளைய மக்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்டவை. என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்களுக்கிடையே உள்ள அறிவு வளர்ச்சியின் வேறுபாட்டையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இவற்றின் உண்மையான விளக்கத்தை அவை நடக்கப் போகும் காலகட்டம் வரும்போதுதான் முழுமையாகப் பெறமுடியும். உதாரணமாக கீழ்கண்ட நபிமொழியைப் பாருங்கள்:
v  பெண் எஜமானியைப் பெற்றெடுத்தல்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. (நூல்: புகாரி)
இந்த நபிமொழி இன்று இரண்டுவிதமாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.
1.     பெண்கள் தம் தாயை அடிமைகளாக நடத்துவார்கள்.
2.     தங்கள் வேலைக்காரிகளோடு எஜமானர்கள் உறவு கொண்டு அதன்மூலம் அவர்கள் எஜமானர்களின் பிள்ளைகளைப் பெற்றேடுப்பார்கள்
மேற்கண்ட எந்த விளக்கத்தை நாம் எடுத்துக்கொண்டாலும் இரண்டுமே இன்று நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். நபிகளாரின் காலத்தில் இருந்த அடிமைத்தளை இன்று இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் மீண்டும் அப்படியொரு நிலை வந்து அங்கு நடக்கப் போவதையும் இந்நபிமொழி எடுத்துச் சொல்வதாக இருக்கலாம். எந்த சாத்தியக்கூறுகளையும் நாம் தள்ளுபடி செய்ய இயலாது. இறைவனே முழுமையாக அறிந்தவன்.

v  பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி)
v  தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்
நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார் “பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (புஹாரி).
 தகுதியற்றவனிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆள்வதற்கு எந்த தகுதியும் இல்லாத திரைப்பட நடிகர்களிடமும் நடிகைகளிடமும்  முன்னாள் ஆட்சியாளர்களின் மனைவிமார்களிடமும் பிள்ளைகளிடமும் ஆட்சிப்பொறுப்புகள் ஒப்படைக்கப்ப்படுவதும் நாம் கண்டுவருகிறோம்.
v  விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்.
விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்தான்  (புஹாரி 5577, 5580)
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
v  பாலைவனம் சோலைவனமாகும்.
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தை (எழைவரியை)ப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது (நூல் : முஸ்லிம்)
v  காலம் சுருங்கும்.
காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் அஹ்மத்.)
(மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி)
v  கொலை அதிகரித்தல்
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும்என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் புகாரீ)
எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள்  அதிகமாகும்((முஸ்லிம்)

v  நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி)
v  எப்படியாவது சம்பாதித்தல்
 ‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்என்று நபி (ஸல்) கூறினார்கள் (நூல் புகாரீ.)
v  நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அஹ்மத்)
v  பின் தங்கியவர்கள் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். (நூல்: புகாரி)
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி)
ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்களாகுமஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
v  நிர்வாணி மக்கள் தலைவராக ஆகுதல்
 ‘செருப்பணியாத, நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
v  செல்வம் பெருகும்.
இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் வந்து இதற்காகத் தான் என் கை வெட்டப்பட்டதுஎன்பான். கொலைக்காரன் வந்து, ‘இதற்காத்தான் நான் கொலை செய்தேன்என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, ‘இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், திர்மிதீ.)
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (நூல் : புகாரி)
நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரீ)
v  வாழும் ஆசை அற்றுப் போய் விடும்
ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் புஹாரி)
v  பேசாதவை பேசும்
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. (நூல்: அஹ்மத்)
v  ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.( நூல் : முஸ்லிம்)
v  பேச்சைத் தொழிலாக்கி சம்பாதித்தல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511
v  இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121
எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை இறைவனின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (நூல் : திர்மிதீ,, அபூதாவூத்.)
v  மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.  (நூல் : புகாரி)
v  அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம் )
v  வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம்)
v  மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம்)

மாபெரும் பத்து அடையாளங்கள்
மேலே கூறப்பட்ட அடையாளங்களில் சிலவற்றை நாம் இன்றே நாம் கண்டு கொண்டிருக்கிறோம். மற்றவை இனி நடைபெற உள்ளன. ஆனால் கீழே சொல்லப்படுபவை அனைத்தும் இறுதிநாளுக்கு முன் நடைபெற உள்ள பெரிய நிகழ்வுகள் ஆகும். இவற்றை மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
1 -
புகை மூட்டம்
2 -
தஜ்ஜால்
3 - (
அதிசயப்) பிராணி
4 -
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 -
ஈஸா (அலை) இறங்கி வருவது
6 -
யஃஜுஜ், மஃஜுஜ்
7 -
கிழக்கே ஒரு பூகம்பம்
8 -
மேற்கே ஒரு பூகம்பம்
9 -
அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 -
இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.
இந்த பத்து அடையாளங்களில் மிகப்  பிரதானமான மூன்று அடையாளங்கள் ஏற்படுமாயின் இறைநம்பிக்கை கொள்வது கூட பயனளிக்காது என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
'சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறைநம்பிக்கை கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது இறை நம்பிக்கை பயனளிக்காது' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா.)

'
சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது. அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும்போது இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் இறைநம்பிக்கை  பயனளிக்காத நேரமாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். நூல்கள் - புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா.
புகை மூட்டம்

வானம் தெளிவான புகைகளை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.. (அல் குர்ஆன் 44:10-11).

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம், இது ஒரு (இறை விசுவாசியை) ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். (இறை மறுப்பாளரை) பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ மாலிக் (ரலி) நூல் - தப்ரானி.

அதிசயப் பிராணி

அவர்களுக்கு எதிரான தீர்ப்பு உறுதியாகும் போது இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்டுத்துவோம். அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நம் வசனங்களை நம்பாமல் இருந்தது தான் (அல் குர்ஆன் 527:82).

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப்பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைக் தொடர்ந்து அடுத்ததும் தோன்றி விடும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - முஸ்லிம்.

மேற்கில் சூரியன் உதிப்பது
'
சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆனால் அதற்கும் முன்பே நம்பிக்கை கொள்ளாமல் இருந்தோருக்கு அப்போது கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 6506.

தஜ்ஜாலின் வருகை
தஜ்ஜால் என்ற கொடியவனின் வருகை மக்களின் இறை நம்பிக்கைக்கு மிகப்பெரும் சோதனையாக இருக்கும். கிறிஸ்தவர்களிடையே அந்திக்கிறிஸ்து என்று அறியப்படும் இவனைப் பற்றி நபிகளாருக்கு முன் வந்த எல்லா இறைத்தூதர்களும் தத்தமது மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(நூல் – முஸ்லிம்).
அவனைப் பற்றிய வருணனைகள் மற்றும் செய்திகள் பல நபிமொழிகளில் காணக் கிடைக்கின்றன. விரிவஞ்சி அவற்றின் சாரத்தை மட்டும் கீழே தருகிறோம்.
அவன் வந்தால் பூமி முழுதும் பயணம் செய்வான்.. நாற்பது நாட்களில் மக்கா, மதீனா என்ற இரு ஊர்களைத் தவிர எல்லா ஊர்களுக்கும் செல்வான்.அந்த இரு ஊர்களுக்குள் அவனை நுழையவிடாமல் வானவர்கள் தடுப்பார்கள்.
அவன் மக்களிடையே வந்து அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திவிட்டு தன்னையே கடவுள் என்று கூறுவான். வானத்திற்கு மழைபொழியுமாறும் பூமிக்கு விளைவிக்குமாறும் கட்டளையிடுவான்.அவ்வாறே நிகழும். தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான். இவற்றையெல்லாம் செய்து காண்பித்து விட்டு 'இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான்

அவனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் செல்வ செழிப்பும் ஏற்றுக் கொள்ளாமல் படைத்தவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையில் உறுதியாக நிற்பவர்களுக்கு வறுமையும் ஏற்படும். இவ்வாறு உலகம் முழுவதும் தஜ்ஜால் மக்களிடையே பெருங்குழப்பம் விளைவிப்பான். வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் கொள்கைவாதிகள் இடையே வந்து ஆசைவார்த்தைகள் காட்டி சிலரை வழிதவற வைப்பான். அவனை ஏற்காதோருக்குப் பலவிதமான சோதனைகளை ஏற்படுத்துவான். இதோ நபிகளார் கூறினார்கள் :
'தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(நூல்கள் - புகாரீ, முஸ்லிம்).
தஜ்ஜாலின் சோதனைகளில் இருந்து தப்பிக்க சில பிரார்த்தனைகளையும் குர்ஆன் வசனங்களையும் நபிகளார் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவற்றை அறிய விரும்புவோர் நபிமொழி நூல்களை நாடலாம்.
இவ்வாறு மக்களை அவன் வழிகெடுத்து குழப்பம் விளைவித்துக்கொண்டு இருக்கும்போது இறைவன் ஈசா (அலை) அதாவது ஏசு நாதரை அனுப்புவான்.
 ஏசுநாதரின் இரண்டாம் வருகை
அதை அறியும் முன் ஏசுநாதரைப் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழிகளும் கூறுவதைச் சுருக்கமாக இங்கு காண்பது நலம்.
ஆண்துணை ஏதுமின்றி அன்னை மரியாளுக்கு மகனாக அற்புதமாகப் பிறந்தவர் ஏசுநாதர். எவ்வாறு முதல் மனிதரான ஆதாம் மற்றும் முதல் பெண்மணியான ஏவாள் இவர்களின் பிறப்பு அற்புதமானதோ அதுபோல இறைவனின் கட்டளைப் படி நிகழ்ந்த ஒன்றே ஏசுவின் பிறப்பும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் ''குன்'' (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
எல்லா இறைத்தூதர்களும் போதித்த இறைவனுக்குக் கீழ்படிதல்(அரபு மொழியில் இஸ்லாம்) என்ற அதே கொள்கையைத்தான் ஏசுவும் போதித்தார். அதாவது இறுதித்தூதரான முஹம்மது எதை போதித்தாரோ அதையே ஏசுவும் தன் வாழ்நாளில் போதித்தார்.
மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருந்த யூதர்கள்  சத்திய போதனை செய்துகொண்டிருந்த ஏசுவுக்கு எதிராகத் திரண்டார்கள். அவரைக் கொல்ல சதி செய்தார்கள். அவரை சிலுவையில் ஏற்றிக் கொல்ல திட்டம் தீட்டினார்கள். ஆனால் வல்ல இறைவன் அவரைக் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். யூதர்களின் இந்தக் கூற்றை இறைவன் வன்மையாகத் திருக்குர்ஆனில் மறுக்கிறான்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (யூதர்கள்) சபிக்கப்பட்டனர். அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் : 4: 156, -158).
அதாவது ஏசு அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்டு இறைவனால் உயர்த்தப் பட்டார் சிலுவையில் உண்மை ஏசுவை அறையவில்லை ஆனால் ஆள்மாறாட்டம் செய்யப் பட்ட நபர்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதையே திருக்குர்ஆன் நமக்கு ஐயமற எடுத்துரைக்கிறது.
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:55. ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை இறுதி நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
அவ்வாறு காப்பாற்றப்பட்ட ஏசுதான் மீண்டும் பூமிக்கு வருவார். மீண்டும் மக்களை சத்தியத்துக்கு (அதாவது இஸ்லாத்துக்கு) அழைப்பார். கிருஸ்துவ சகோதரர்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகளைத் தெளிவு படுத்துவார். உலக முஸ்லிம்களையும் கிருஸ்துவர்களையும் ஒன்றிணைப்பார்.
இவ்வாறு இறைவனால் தன்னளவில் உயர்த்தப்பட்ட ஏசுநாதர் மீண்டும் பூமிக்கு வருதலையே இரண்டாம் வருகை என அறியப்படுகிறது.
அவர் எவ்வாறு, எங்கு வருவார்கள் என்பதைப் பின்வரும் நபிமொழிகள்  எடுத்துரைக்கின்றன. .
டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாராவு (கோபுரத்து)க்கு அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்கனின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும், தலையை உயர்த்தினால் முத்துப்போல் தண்ணீர் சிதறும். அவரது மூச்சுக்காற்று படும் எந்த இறை மறுப்பாளரும் இறந்தே போவார். பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' எனும் ஊர்வாசலில் அவனைப் பிடித்துக் கொல்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்-திர்மிதீ).
'எனது உயிரை தன் iயில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

தஜ்ஜால் வந்து, பூமியில் பெரும் குழப்பம் விளைவிக்கும் காலகட்டத்தில் ஈஸா நபி (அலை) இறங்கி வந்து, அவனைத் தேடிக் கொல்வார்கள். தஜ்ஜாலின் வருகையைத் தொடர்ந்தே ஏசுநாதரின் அவர்களின் வருகையும் இருக்கும். என்பது தெளிவு.
யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை
ஏசு பூமியில் மீண்டும் வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் என்ற கொடியவர்கள் வருவார்கள்.

'இறுதியில் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள், உடனே அவர்கள் (வெள்ளம் போல்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள்'... (அல் குர்ஆன் 21:96).
அவர்களைப் பற்றி நபிமொழிகளில் காணக் கிடைக்கும் குறிப்புகள் சுருக்கமாக இவையே:
உருவத்தில் சிறிய அவர்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்பவர்களாக இருப்பார்கள். மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்கள் பெருங்குழப்பங்களை விளைவிப்பார்கள்.
யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - அஹ்மத், தப்ரானி.)
ஏசுவின் பிரார்த்தனையால் அழிவர்!

'யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) 'அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது' என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.

'
பூமியில் உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம்' என்று கூறுவார்கள், தங்கள் அம்புகனை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.

பின்னர், ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (நூல் – முஸ்லிம்).

ஏசுவின் நல்லாட்சி
(யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய) அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, 'உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த அருள்வளத்தையும் திரும்பக்கொடு' என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல் அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும். பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின் இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர். கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள் நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - திர்மிதீ.
(தஜ்ஜாலைக் கொன்றபின்) நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.


மேற்படி தகவல்களில் இருந்து தஜ்ஜால் வருகை,  ஏசுவின் வருகை, யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதும் முழுக்க முழுக்க இறைமறுப்பாளர்களும் தீய நடத்தை உள்ளவர்களும் வாழும் போதே உலகம் அழியும் என்பதும் நமக்குத் தெரிகிறது.
 மூன்று பூகம்பங்கள்

'(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள் - நில நடுக்கம் ஏற்படும் அதை நீங்கள் காணும் வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல் – முஸ்லிம்).

இங்கே குறிப்பிடப்படும் பூகம்பங்கள் மூன்றும் பெரிய அளவில் இருக்கும் என்பதையே நமக்கு விளக்குகிறது.
பெரும் நெருப்பு

'யமனிலிருந்து நெருப்புத் தோன்றி மக்களை அவர்களின் மஹ்ஷரின் பால் விரட்டிச்செல்லும். அது நிகழும் வரை மறுமை நாள் நிகழாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் - முஸ்லிம்)

யமனில் தோன்றும் இந்த நெருப்பு மக்களை நாலா திசைகளிலும் சூழ்ந்து கொள்ளும். இந்த நெருப்பின் வளையத்திற்குள் மக்கள் சிக்கிக்கொள்வர்.

அந்த நாளில் என்னதான் நடக்கும்?
. திருக்குர்ஆனில் இறைவன் பல்வேறு விதமாக பல்வேறு இடங்களில் அந்நாளின் நிகழ்வுகளை எடுத்துரைக்கிறான் விரிவஞ்சி அவற்றில் இருந்து ஒரு சிலதை மட்டுமே மாதிரிக்காகத் தருகிறோம். மேலும் அறியத் துடிப்பவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வாங்கிப் படிக்கலாம்.
. இவ்வசனங்கள் அன்றைய பாலைவனத்துப் பாமர மக்களை நோக்கியும், அறிவியல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறியுள்ள இன்றைய கால மக்களை நோக்கியும், அறிவியலின் உச்சக்கட்டத்தை எட்டி நிற்கப் போகும் நாளைய கால மக்களை நோக்கியும் ஒரே நேரத்தில் பேசுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
திருக்குர்ஆனின் 81 ஆம் அத்தியாயத்தில்.......
81:1. சூரியன் சுருட்டப்படும் போது
81:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9. ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று-
81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11. வானம் அகற்றப்படும் போது-
81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
திருக்குர்ஆனின் 80 ஆம் அத்தியாயத்தில்.......
80:33.ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது –
80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் 80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
திருக்குர்ஆனின் 82 ஆம் அத்தியாயத்தில்.......
82:1. வானம் பிளந்து விடும்போது
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
திருக்குர்ஆனின் 70 ஆம் அத்தியாயத்தில்.......
70:8. வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
70:10. ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி விசாரிக்கமாட்டான்.
70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-
70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
70:15.அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
70:16.அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
70:17. (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
70:18.அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
இறுதித் தீர்ப்பு நாளில் விசாரணை  
உலக அழிவுக்குப் பின் இறைவனின் கட்டளை வரும்போது . முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைத்து மனிதர்களும் உயிர்கொடுத்து எழுப்பபடுவார்கள் தொடர்ந்து எழக்கூடிய பெரும் சப்தத்தைத் தொடர்ந்து அனைவரும் இறைவன் முன்னால் விசாரணைக்காக ஆஜராக்கப் படுவார்கள்.
78:17,18.. நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
அன்றைய நாள் விசாரணையில் முழுமையாக நியாயம் தீர்க்கப் படும். அந்த நாளில் விசாரணை குறித்த குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் ஏராளமாக வந்துள்ளன. விரிவஞ்சி சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறோம்.
அனைத்தும் வெளியாகும் நாள்
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:6-8.. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று சொல்லப்படும்).
18:49.இன்னும் பதிவேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ''எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
யார் யாருக்கு எந்த அநியாயம் செய்திருந்தாலும், மோசடி செய்திருந்தாலும் யாரைப்பற்றி புறம், அவதூறு, பொய் போன்றவை பேசியிருந்தாலும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ மறைமுகமாகவோ பகிரங்கமாகவோ அவமானப் படுத்தியிருந்தாலும் ஏளனப் படுத்தியிருந்தாலும் அனைத்துமே வெளிவந்து விடும் நாள் அது. அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
யாரேனும் தம் சகோதரர்களுக்கு மானம் அல்லது பொருட்கள் சம்பந்தமாக அநீதி இழைத்திருந்தால் தங்கக்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயனளிக்காத நாள் வரும் முன் இன்றே பாதிக்கப்பட்டவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளட்டும். இவரிடம் ஏதேனும் நல்லறம் இருந்தால் இவர் செய்த அநீதியின் அளவுக்கு அந்த நல்லறம் எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். இவரிடம் நன்மைகள் ஏதுமில்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர்மேல் வைக்கப்படும் (நூல்: புகாரி)


    (அனைத்தையும்) இழந்தவன் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) கேட்டனர். 'யாரிடம் காசோ ஏனைய சொத்துக்களோ இல்லையோ அவர்தான்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இழந்தவன் யாரெனில்' தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஒருவனைத் திட்டியவனாக இன்னொருவன் மேல் அவதூறு கூறியவனாக மற்றொருவனின் பொருளைச் சாப்பிட்டவனாக வேறொருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, இன்னொருவனை அடித்தவனாக மறுமைநாளில் வருவான். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் இவனது நன்மைகள் வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன்னால் இவனது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவன் மேல் வீசப்படும். பின்னர் நரகத்தில் இவன் வீசப்படுவான்' என்று விளக்கினார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
    (உங்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு) உரிய கடமைகள் மறுமை நாளில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆடு (முட்டியதற்காக) கணக்குத் தீர்க்கப்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
மனித உரிமை மீறல்கள் தீர்க்கப்படும்
    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வந்து அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில அடிமைகள் உள்ளனர். அவர்கள் என்னை நம்புவதில்லை. எனக்கு மாறுசெய்கின்றனர். துரோகம் செய்கின்றனர். எனவே அவர்களை நான் அடிக்கிறேன் திட்டுகிறேன். (மறுமையில்) அவர்களுடன் எனது நிலை எவ்வாறு இருக்கும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கியாமத் நாளில் அவர்கள் உனக்குச் செய்த மாறுபாடு, துரோகம் ஆகியவையும் அவர்களைத் தண்டித்ததும் கணக்கிடப்படும். அவர்களின் குற்றங்களின் அளவுக்கு உன் தண்டனை இருந்தால் இரண்டும் சரிக்குச் சரியாகி விடும். உனக்கு லாபமோ நட்டமோ இராது. அவர்கள் செய்த குற்றங்களை விட நீ வழங்கிய தண்டனை குறைவாக இருந்தால் அது உனக்கு உபரியாக (லாபமாக) அமையும். அவர்களின் குற்றங்களை விட உன் தண்டனை அதிகமானதாக இருந்தால் அவர்களுக்காக உனது நல்லறங்கள் எடுக்கப்படும்' என்று விடையளித்தார்கள். அப்போது அந்த மனிதர் அழுது புலம்பியவராக நகரலானார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் 'கியாமத் நாளில் நீதமான தராசுகளை நாம நிறுவுவோம். எந்த ஆத்மாவுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. கடுகளவாக இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்' என்ற இறைவசனத்தை நீர் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் 'அல்லாஹ்வின் தூதரே! எனது அடிமைகளைப் பிரித்து விடுவது தான் எனக்கும் அவர்களுக்கும் நல்லதாக தெரிகின்றது. அவர்கள் அனைவரும் விடுதலை பெற்றார்கள் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என்று அவர் கூறினார். (நூல்: திர்மிதி)
    மனிதனுக்கு மனிதன் செய்த கொடுமைகள், தீங்குகள் பற்றி இவ்வளவு கடுமையாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்த மனிதனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவரிடம் இவ்வுலகிலேயே பரிகாரம் செய்ய வேண்டும். அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் செய்த நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போவதுடன் பிறரது தீமைகளையும் சுமக்கும் நிலை ஏற்படும்.
    'அன்றைய தினம் எடை போடுதல் உறுதியான ஒன்று. அந்நாளில் எவர்களுடைய எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்' (அல்குர்ஆன் 7:8)
மறுமைக் காட்சிகள்... சொர்க்கம், நரகம்
திருக்குர்ஆன் கூறும் சொர்க்கமும் நரகமும் கற்பனை உலகங்கள் அல்ல. ஒரு மாயையோ கட்டுக்கதைகளோ அல்ல. இன்று நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கும் இவ்வுலகம் எவ்வளவு வாஸ்த்தவமோ அதைவிட வாஸ்த்தவம் அவை. ஏனெனில் இவ்வுலகுகூட தற்காலிகமானது. ஆனால் மறுமை உலகமோ நிரந்தரமானது.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
·  அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்: 
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான், இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன,  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
29:58 எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
நரகமும் காத்திருக்கிறது
·  சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:
20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
23:104 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்¢ இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
32:20 ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்' என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢ ஆகவே விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கிவிடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
சொர்க்கம் செல்ல என்ன வழி?
அன்புக்குரியவர்களே, இதுவரை உலகத்தின் தோற்றம், மனித வாழ்வின் நோக்கம், உலக அழிவு, அழிவுக்குப் பின் நிகழ உள்ளவை ஆகியன பற்றி இவ்வுலகைப் படைத்த இறைவன் தனது இறுதிவேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதராம் நபிகள் நாயகத்தின் மூலமும் கூறும் செய்திகளை சுருக்கமாகப் பார்த்தோம். இவ்விஷயங்கள் பற்றி இவை மட்டுமே உறுதியானவை! நூறு சதவீதம் உண்மையானவை! மற்றபடி இவை பற்றி யார் எதைக் கூறினாலும் அவை அனைத்தும் வெற்று ஊகங்களும் பொய்களுமாகும்.
 இதுவரை அறிந்த செய்திகளில் இருந்து நாம் உண்மையாக பயன் அடைய வேண்டுமானால் இனி நாம் செய்ய வேண்டியது இதுதான். நம்மைப் படைத்த இறைவன்பால் நாம் உடனடியாகத் திரும்பவேண்டும். அவன் நம்மீது அளவில்லாமல் சொரிந்து கொண்டிருக்கும் அருட்கொடைகளுக்கு நன்றி பாராட்டும் முகமாக அவனுக்குக் கீழ்படிந்து வாழ முற்பட வேண்டும். அதாவது இறைவன் நமக்கு வகுத்தளிக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அவன் கூறும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்ந்தால் மட்டுமே அதற்குப் பரிசாக அவன் தரும் சொர்க்கத்தை அடைய முடியும். இதோ இறைவுனும் நினைவூட்டுகிறான் 
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான் உங்களுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
அவ்வாறு தங்களை சீர்திருத்திக்கொண்டு புதுவாழ்வு வாழ விரும்புபவர்கள் முதலில் கீழ்கண்ட உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும்.
வணக்கத்துக்குரிய இறைவன்  அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடிமையும் ஆவார் என்று சாட்சி கூறுகிறேன்   பின்னர் திருக்குர்ஆனையும் நபிகளாரின் முன்மாதிரி வாழ்க்கையையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.
(மீண்டும் நினைவு படுத்துகிறோம்: உங்களையும் இவ்வுலகையும் படைத்து பரிபாலிப்பவனுக்கு தமிழில் கடவுள் என்று சொல்லப்படுவதைப் போல அரபு மொழியில் அல்லாஹ் என்று சொல்லப்படும். அல்லாஹ் என்ற பதத்தின் பொருள் ‘வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பதே. அது முஸ்லிம்களின் கடவுளையோ அல்லது ஒரு அரபுநாட்டுக் குலதெய்வத்தையோ குறிக்கும் சொல் அல்ல.)
அன்புள்ளம் கொண்டவர்களே, நமக்கு படைத்தவன் இருப்பதும் உண்மை, இவ்வாழ்வு தற்காலிகம் என்பதும் உண்மை, நமது செயல்களுக்கு அதாவது நாம் செய்து கொண்டிருக்கும் பாவ புண்ணியங்களுக்கு - இறைவனிடம் விசாரணை உள்ளது என்பதும் உண்மை. மறுமை வாழ்வில் நமது நிரந்தர இருப்பிடம் சொர்கத்திலோ அல்லது நரகத்திலோதான் என்பதும் உண்மை. நம்மில் யாருமே இந்த யதார்த்தங்களை மறுக்கவோ அவற்றை விட்டு விலகி ஓடவோ முடியாது. இவ்வாழ்க்கை என்ற பரீட்சை அனைவருக்குமே  பொதுவானது. இறுதித் தீர்ப்பு நாளின் போது நாம் ஒரே போலவே ஒரே அடிப்படையில்தான் விசாரிக்கப்படுவோம். நமது இன, குல, மத மற்றும் மொழி போன்ற நம்மை பிரித்து வைத்திருக்கும் வேற்றுமைகள் நம்மை சத்தியத்தை ஏற்பதிலிருந்து தடுத்துவிடாதிருக்கட்டும்!
59:18. இறைவிசுவாசிகளே அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்,  இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.



1 கருத்து: