இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஜூன், 2017

அரசியல்வாதிகளுக்கு ஓர் இலட்சிய முன்மாதிரி

  அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதி என்றாலே அப்பட்டமான சந்தர்பவாதி என்ற பிம்பம் உண்டாகியுள்ள இந்த காலகட்டத்தில் தூய்மையான நேர்மையான அரசியலையும் அரசியல்வாதிகளையும் கற்பனை செய்துப்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனால் அரசியல் மாசடைந்துள்ளது என்பதற்காக அதை ஒதுக்கிவைப்பது நாட்டுநலனுக்கு பெரும் கெடு விளைவிப்பது என்பது வெட்டவெளிச்சம். தகுதியற்றவர்களிடமும் கொள்ளையர்களிடமும் ஆட்சிப் பொறுப்பு சென்றடையும்போது ஏற்படும் தீய விளைவுகளைத்தான் இன்று முழுஉலகமும் அனுபவித்து வருகிறது. நாடாள்வோரின் தீராத பணவெறியும் சுரண்டல்களுமே உலகெங்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் ஏழைமக்கள் பசியால் வாடுவதற்கும் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதற்கும் காரணமாகின்றன. அடங்காத பணவெறியும் தீராத புகழ்வெறியும் கொண்டலையும் ஆட்சியாளர்கள் நிறைந்த இவ்வுலகில் இவர்களுக்கு நேர்மாற்றமாக நடந்துகொண்ட ஒரு இலட்சிய ஆட்சியாளரைப் பற்றி இங்கே நினைவு கூருவோம், சற்றே ஒப்பீடு செய்து பாருங்கள்.

ஆட்சிப்பொறுப்பு என்ற உன்னத பதவி
ஒரு நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வளங்களுக்கும் செல்வங்களுக்கும் என அனைத்துக்கும் மேல் ஆதிக்கம் பெறுகிறார் அதன்  ஆட்சிப்பொறுப்பைப் பெறும் ஆட்சியாளர். தனக்கு மேல் யாரும் இல்லை, தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலை அது. ஆனால் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு தவறான கைகளை சென்றடையும்போது அவர்கள் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். பொதுச் சொத்துக்களை தங்களின் மற்றும் வாரிசுகளின் உடமைகளாக ஆக்கிக்  கொள்கிறார்கள்.  நாட்டு வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் சக்திகளுக்கு கைப்பாவைகளாக விலைபோகிறார்கள். இவர்களின் சுயநல நோக்கங்களுக்காக அனைத்து அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் கையாள்கிறார்கள். அதேவேளையில் இறையச்சம் – அதாவது தம் செயல்பாடுகளுக்கு இறைவனிடம் பதில் கூறியாகவேண்டும் - என்ற பொறுப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு வந்து விட்டால் நிலைமை தலைகீழாக மாறும். உத்தம அரசியல் அங்கு உருவெடுக்கும். பூமியும் அமைதிப் பூங்காவாக மாறும்.

அனைத்துத்துறைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம்
அரசியல் உட்பட மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இறைவன் இஸ்லாம் என்ற அவனது வாழ்வியல் நெறி மூலம் வழிகாட்டியுள்ளான். இறைவனின் இறுதித் தூதர் ஒரு இலட்சிய ஆட்சியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தன் வாழ்க்கை முன்னுதாரணம் மூலம் செயல்படுத்திக் காட்டினார்கள்.
= அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:21)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத்தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
அரசுக் கருவூலத்தின் மீது ஆதிக்கம் பெறும் ஒரு ஆட்சியாளர் என்ற வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற முன்னுதாரணம் நம்மை ஆச்சரியத்தின் விளிம்புக்கே கொண்டு செல்கிறது.

ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு இருக்கிறோம்.

மதீனாவில் நபிகள் நாயகத்திடம் ஆட்சித் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் ஒருசேர அமைந்திருந்தது. அதுவும் அன்றைய காலத்து  வல்லரசின் தலைவராக இருந்தார் நபிகளார். அவ்வாறு இருந்த போதும் நபிகளார் தனக்காக எளிய வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆடம்பரத்தின் அருகில் கூட நெருங்கவில்லை. பலநாட்கள் பசியோடு கழித்திருக்கிறார்கள், கந்தைகளை உடுத்திருக்கிரார்கள், எளிய குடிசையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து நாம் காணலாம்.

நெருப்பாகக் கொதித்த அரசுப்பணம்
அரசுப்பணத்தை மிக எச்சரிக்கையோடு கையாண்டார்கள் நபிகளார். தனக்கு மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும் அரசுப்பணத்தை அறவே தடைசெய்தார்கள். ஆட்சித்தலைவர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் போதித்த இஸ்லாத்திற்கும் முரணான ஒன்றல்ல அது.

எல்லாம் இருந்தபோதிலும் அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் மட்டுமின்றி, தன் தலைமுறைகளுக்கும் அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள்.

உதாரணம் ஒன்று:

= நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் முஹம்மதின் குடும்பத்தார் ஜகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள். நூல் : புகாரி 1485, 1491

‘பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள்.

உதாரணம் இரண்டு:

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்'  என்றார்கள். நூல் : புகாரி 851, 1221, 1430

மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

உதாரணம் மூன்று:

= 'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஜகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 2055, 2431, 2433

நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளி வாசலில் குவிக்கப்படும் ஜகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.

தொடர்புடையோருக்கும் தடை
தாமும், தமது குடும்பத்தினரும் ஜகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

= மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஜகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள். நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

'
அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர்தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஜகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஜகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

தனது சொத்துக்களையும் அரசுடமையாக்கிய புரட்சியாளர் 
அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

= எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது) என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். நூல் : புகாரி 2776, 3096, 6729

நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி) க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.

நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்.

'
எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார். (நூல் : புகாரி 3093, 3094)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார். நூல் : புகாரி 6730

கடனாளியாக மரணித்த வல்லரசர்
அவரது ஆட்சிக்காலத்தில் வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய அந்த மாமன்னர் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

= 'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 2068, 2096


மரணிக்கும் போது நபிகளார் விட்டுச் சென்ற சொத்துக்கள்:

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள். (நூல் : புகாரி 2739)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக