இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

நாட்டைக் காப்போம்! நாட்டு மக்களை நேசிப்போம்!

Related image
நாட்டுப் பற்று என்பது என்ன?

 நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல, மாறாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை உளமார நேசிப்பது என்பதே உண்மை. நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும்  நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.
 ஆனால் இன்று சில சுயநல ஆதிக்க சக்திகள் ஒரு சில மாயைகளை உருவாக்கி அவற்றை நாட்டுப்பற்றாக சித்தரித்து நாடகமாடுகிறார்கள். பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் மேடைகளில் வீரவசனங்கள் பேசுவதும் எல்லாம் நாட்டுப்பற்றாக சித்தரிக்கப் படுகிறது. இவற்றில் எந்த அளவுக்கு ஆத்மார்த்தம் உள்ளது என்பதையும் இவற்றில் பெரும்பாலானவை   விளம்பரத்துக்காக செய்யப்படுபவையே என்பதையும் நாம் அறிந்தே இருக்கிறோம்.
 நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது  என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!
 இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில்  வரவேண்டுமானால்  அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத்  தேவைகளாகும்.
 நம்மைப் படைத்த இறைவன் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைத் திட்டத்திற்கே அரபி மொழியில் இஸ்லாம் என்று வழங்கப் படுகிறது. அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் நாட்டை அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது.
 இன, மொழி, நிற, மத வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்கள் சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.
 மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம். (திருக்குர்ஆன் 49: 13)
 மேலும் நாட்டு மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
 'மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்'என்பதும் 'மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்'என்பதும் நபிமொழிகள்.
 இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கை - அதாவது பூமியில் நன்மைகளை நடப்பாக்கவும் தீமைகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை - இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது.இதை மிஞ்சும் நாட்டுப்பற்றை எங்கேனும் காணமுடியுமா? ?


‘சுதந்திர' இந்தியாவின் இன்றைய நிலை:
 நம் தாய்த்திருநாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில் நாட்டுமக்கள்  சந்தித்துக் கொண்டு இருக்கும் அபாயங்களை அடையாளம் கண்டு அதைத் திருத்த வழியுண்டா என்று ஆராய்ந்து செயல்படுவது நாட்டுப்பற்று கொண்ட  ஒவ்வொருவர் மீதும் கடமையாகிறது.
= கருக்கொலை, சிசுக்கொலை, என்று தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொ ழிக்கும் பெற்றோர்கள்...
= பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்...
= காதலர்களைக் கைப்பிடித்து போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து செல்லும் பிள்ளைகள். காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கைவிட்டு ஓடும் காமுகர்கள்...
= மறுபுறம் வட்டி, இலஞ்சம், ஊழல், கொலைகள், கொள்ளைகள், அடக்குமுறைகள், வன்முறைகள் போன்ற அயராது தொடரும் குற்றங்களை இனி தடுக்கவே முடியாது என்று முடிவுகட்டி ஒதுங்கியும் பதுங்கியும் பயந்தும் பணிந்தும் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு வாழ்கிறது சமூகம்! பலரும் வாழ்க்கையையே வெறுத்த நிலை!

தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை:
 தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது.  நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதைத் தவிர வரதட்சணைச் சாவு, மதுபோதையால் ஏற்படும் குற்றங்கள், கொலை, கொள்ளை, திருட்டு இன்னும் இவை போன்று நாட்டில் நடக்கும் பற்பல குற்றங்களின் எண்ணிக்கைகள் ஏறுமுகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள்  நமக்குத் தெரிவிக்கின்றன.
 ஏறத்தாழ 94 விழுக்காடு பாலியல் குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே நேர்கின்றன என்பதுபோன்ற அவமானகரமான விவரங்களையும் அவை தாங்கி நிற்கின்றன.

இவை போக...
= அதிக மகசூல் மூலம் கொள்ளை லாபம் காண ஆட்கொல்லி இரசாயனங்களை எருவாக விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்! மனிதனுக்கு நோய்களை உருவாக்கும் வைரஸ்களைப் பரப்பி அவற்றை எதிர்கொள்ளும் மருந்துகளையும் உற்பத்தி செய்து உலகளாவிய கொள்ளை நடத்தும் மேற்கத்திய கொடுரங்கள்!
 இன்னும் அவலங்களின் பட்டியல் நீளமானது ....!

 இனம், மொழி, நிறம், இடம் இவற்றின் பெயரால் அப்பாவி மக்களைப் பிரித்தாண்டு  மக்களைக் கொள்ளை அடிக்கும் சுயநல தலைவர்களும் அரசியல்வாதிகளும் இது பற்றி என்றுமே கவலை கொண்டதில்லை. நாடு எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் வருமானமும் புகழும் ஆதிக்கமும் தடைபடாது தொடரவேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். பெரும் பாவங்களான மது, விபச்சாரம் இவற்றை சட்டபூர்வமாக்கி அதன் மூலமே தங்கள் வருமானத்தையும் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்  இக்கொடியவர்கள்தானே நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்?
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: 'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே, அவரிடமும் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்.... (நூல்: புகாரி, முஸ்லிம்)

தன் கையே தனக்கு உதவி!
 ஆம், சகோதர சகோதரிகளே, இந்நிலைமை மாறி நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற ஒரேயொரு வழிதான் உள்ளது. அதுதான் நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளுதல் என்ற வழி. இன்று தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதுதான் நாட்டில் தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகுவதற்கும் மக்கள் விரக்தியின் விளிம்பை அடைந்திருப்பதற்கும் மறுக்கமுடியாத காரணம். 

 வாருங்கள், ஒழுக்கம் விதைப்போம்..
 இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். .. அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
 அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே  என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
 இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
 படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வௌ;வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன.  இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.

3. இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
 அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.

 ஆக இந்த உண்மைகளை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும். மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்குகியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
தொடர்புடைய பதிவுகள்:

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்கு உள்ளாகிறது?- விடியோ  

இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அன்புள்ள வலைப்பதிவாளர் அவர்களுக்கு, எனது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தொடர் இந்த http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html லிங்கில் வந்து கொண்டிருக்கிறது. இவைகளில் சென்று முதலில் "அறிமுகம் மற்றும் நுழையும் முன்" பகுதிகளைப் படித்தால் என்னைப்பற்றி விவரம் தெரியவரும்.
    இவைகள் மேலும் கீழேயுள்ள பல வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. http://www.islamkalvi.com/?page_id=103796
    http://readislam.net/pdf/salahuddin.pdf
    http://ilayangudikural.blogspot.sg/
    http://islamhistory-vanjoor.blogspot.sg/
    http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html
    என்னால் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்ட ஷிர்க் இல்லாதபாடல் லிங்க்: https://www.youtube.com/watch?v=zYluBPv-2kc
    இன்ஷா அல்லாஹ் இவைகளை தங்கள் ப்ளாக்கில் வெளியிட்டு நம் சமுதாயத்திற்கு இவைகளை எத்தி வைக்கும் பணிக்கு எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் விவரங்களுக்கு zubair61u@gmail.com கொள்ளவும். வஸ்ஸலாம்.
    கூ.செ.செய்யது முஹமது

    பதிலளிநீக்கு