இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்!

விபச்சாரம் என்பது இன்றுவாழும் சமூகத்தையும் அதன் தலைமுறைகளையும்  சீர்கெடுக்கும் கொடிய பாவம். அதில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. இவ்வுலகில் யாராவது இதைச் செய்து இதன் பாவத்தைக் கழுவிக் களைய விரும்பினால் கசையடி, கல்லெறி தண்டனை போன்றவைகளை எதிர்கொண்டாலே முடியும் என்னும் அளவிற்கு இறைவனின் பார்வையில் இது மிகவும் கொடிய பாவமாகும்.
அந்த விபச்சாரத்தை நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா?
உங்களை நீங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்....
= சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற காட்சிகளை நீங்கள் பார்ப்பதுண்டா?
= சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாச செய்திகள், விளம்பரங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதுண்டா?
= இரட்டை அர்த்தமுள்ளதும் இல்லாததுமான சினிமா பாடல்கள் உங்கள் காதுக்கு மகிழ்ச்சி அளிப்பதுண்டா?
= உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் மேற்கண்டவாறு உள்ள பாடல்களையும் உடல் சேட்டைகளையும் காட்சிகளையும் குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றாக அமர்ந்து ரசிக்கின்றீர்களா?

‘உண்டு’ என்பது உங்கள் பதிலானால்... விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியில் கால்வைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது? என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிட மனம் முயலும். ஷைத்தான் அதற்கான நியாயங்களையும் கற்பித்து உங்களை கவிழ்த்துவிடவும் வாய்ப்புண்டு!
முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் இதைக் கூட்டாக குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பார்க்கும்போது அதற்கு அங்கு அங்கீகாரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.
= இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்:
''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது இறைநம்பிக்கையின்  பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
= விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.  (அல்குர்ஆன் 17:32) என்கிறது இறைவனின் வசனம்.
விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.
கணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று இறைவன் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.
அதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே! அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.
"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!    
(அல்குர்ஆன் 7:33)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)
இந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லையாயினும் விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.
= அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (அல்குர்ஆன் 25:68)
ஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.
ஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்துள்ளார்கள். அவரது வாழ்நாளில் அவருக்கு மறுமையில் நரகத்தின் காட்சிகள் காட்டப்பட்டன. அதை இவ்வாறு நமக்கு விளக்குகிறார்கள்:
நேற்றிரவு கனவு கண்டீர்களா? என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள், “நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரித்தார்கள்.
...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் "இவர்கள் யார்?' எனக் கேட்டேன்..... "அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்'' என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386
(இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.)
சட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்..

எனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள்.
================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக