இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 பிப்ரவரி, 2014

தேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.

இன்று பொதுவாக யாரையாவது ‘தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது?’ என்று கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிவீர்கள்...... தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும் அந்தக் கூட்டில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்பதே பதிலாக இருக்கும்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 16:68

பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக்குர்ஆன் 16 :69)

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது. 

இதில் பல அறிவியல் உண்மைகள் அடங்கியுள்ளதைக் காணலாம்
= தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து சேர்ந்து விடும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

"நீ எளிதாகச் சென்று திரும்பு" என்று தேனீக்களுக்கு இறைவன் உள்ளுணர்வு ஏற்படுத்தியிருப்பதாக இவ்வசனத்தில் கூறுகின்றான். 

தேனீக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவை எளிதாகத் திரும்பி விடும் என்பதையும் அதற்கேற்ப தேனீக்களுக்குள் உள்ளுணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் திருக்குர்ஆன் அன்றே கூறி விட்டது. 

= இரண்டாவதாக, தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும் அந்தக் கூட்டில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்றும் நம்பி வந்தனர். 

இது தவறு என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனீக்கள் அந்தத் திரவத்தைத் தமக்கு உணவாகத் தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான் அத்திரவத்தைத் தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது என்றும், தேனாக மாற்றுவதற்கு கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர். 

இந்த உண்மையையும் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் சொல்கிறது. 

"மலர்களிலிருந்தும், கனிகளி லிருந்தும் நீ சாப்பிடு" என்று கூறு வதன் மூலம் அவை அத்திரவத்தை உணவாகத் தான் உட்கொள்கின்றன என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. 

= மூன்றாவதாக, தேனீக்கள் மலர்களிலிருந்து உணவாக உட்கொண்ட இந்தத் திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக உற்பத்தியாகின்றது. 

தேனீக்களின் கழிவு வெளியேறும் துவாரத்தைத் தவிர, தேன் வெளியேறுவதற்காக மற்றொரு துவாரமும் தேனீக்களிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் துவாரம் வழியாக வெளியேறும் தேன் தான் தேன் கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது. 

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். 

ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன், தேனீக்கள் சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், "அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது" என்று கூறுகின்றது. 

சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை. 

நான்காவதாக, தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

ஐந்தாவதாக இன்னொரு உண்மை.... பெண் தேனீக்கள் தான் இந்த தேன் உற்பத்தி செய்கின்றன என்பது. இங்கு இறைவனின் கட்டளைகளும் பெண்பாலைப் பார்த்துப் பேசுவதைப் போல அமைந்துள்ளதைக் காணலாம். உதாரணம் 'இத்தஹிதீ , குலீ போன்ற வினைசொற்களும் 'மின் புத்தூநிஹா' (அவளுடைய வயிற்றில் இருந்து) போன்ற சொற்பிரயோகங்களும் இதை உறுதி செய்கின்றன.

இவ்வுலகைப் படைத்தவன் வெளிப்படுத்தும் படைப்பின் இரகசியங்களில் இதவும் ஒன்று என்பதை உணர்த்துகின்ற வசனமாக இது திருக்குர்ஆனில் அமைந்துள்ளது.

நன்றி Shahul Allwatch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக