இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2020

விமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்!


மாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற்கான தண்டனையைப் பெறாவிட்டால் மறுமையில் இறைவனால் கடுமையாக –நரகத்தில்- தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அவரை மிகவும் வாட்டி எடுத்தது. எனவே தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளும் நோக்கில் நபிகளாரிடம் வந்து முறையிட்டார். தனது குற்றத்தை தானே ஒப்புக்கொண்டு அதற்கான இறை தண்டனையை - அதாவது கல்லெறி தண்டனையை – தன்மீது நிறைவேற்றுமாறு கோரினார். நபிகளாரும் அவரை தீர விசாரித்த பின்னர் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதில் அவர் கொல்லப்பட்டார்.   

இந்நிலையில் தோழர் இருவர் பேசிக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களின் செவிகளில் விழுந்தது.. ஒருவர் சொன்னார் , பார்த்தீரா அவரை! இறைவனே அவரது குற்றத்தை மறைத்து விட்டான். (வேறு யாரும் அவர் செய்ததை காணவில்லை) எனினும் அவர் மனம் விடவில்லை. தாம் நடந்து கொண்டதை பகிரங்கமாக எடுத்துக் கூறியதால் இப்போது நாயை அடிப்பது போல அடித்து சாகடிக்கப்பட்டார் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.

சற்று நேரம் சென்றது. வழியில் ஒரு கழுதை செத்துப்போய் அதன் வயிறு ஊதிய வண்ணம் காலைத் தூக்கிக் கொண்டு பார்ப்பதற்கே அவலட்சணமாகக் காட்சியளித்தது. அதைக்கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னாரும் இன்னாரும் எங்கே? என்று சற்று முன் பேசிக் கொண்டிருந்த அவ்விருவரையும் அழைத்தார்கள். இருவரும் அருகில் வந்தவுடன், ''நீங்கள் இருவரும் அந்தப் பள்ளத்தில் இறங்கி அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தைத் திண்ணுங்கள்!'' என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதும், அதிர்ந்து போன அவ்விருவரும், ''நாயகமே! ((ஸல்)) இதை யாராவது சாப்பிடுவார்களா? என்று பதறிப்போய் கேட்டார்கள்.

 நபி(ஸல்) அவர்கள் அமைதியாக அவர்களிடம், ''நீங்களிருவரும் சற்று முன்னர் உங்களின் சகோதரரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது, அந்த கழுதையின் பிணத்தை திண்பதை விடவும் மிகக் கொடியதாகும். எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது அணையாக இப்பொழுது அவர் (விபச்சாரம் செய்ததற்குப் பரிகாரமாக கொல்லப்பட்டவர்) சுவனத்தின் ஆறுகளில் மூழ்கி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பு: அபூஹுரைரா (அபூதாவூது)

கவனிக்க வேண்டிய விடயங்கள்:

1.      விபச்சாரத்திற்குரிய தண்டனை பெற்றவர் உலகின் கண்களுக்கு கேவலமாகவும்,  இழிவாகவும் காட்சியளிக்கலாம். ஆனால், அவர் தவறிலிருந்து தூய்மை பெற்று விடுகின்றார். மரணத்திற்குப்பின் சுவர்க்கவாசியாகி விடுகிறார் என்பது இங்கே ஒரு முக்கியமான விஷயமாகும்.

2.      ஒருவரைப்பற்றி இழிவாகப் பேசுவது கழுதையின் அழுகிப்போன பிணத்தை திண்பதைவிட கேடுகெட்டதாகும். 

-------------------------------- 

திருக்குர்ஆன்  நற்செய்தி மலர்- 2021 ஜனவரி இதழ் 

htwww.quranmalar.com/2020/12/2021.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக