இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜனவரி, 2019

விழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வழிகாட்டுவோர் யார்?


Image result for broken world

= மகாராஷ்டிராவின் மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!
= தலைவிரித்தாடும் சாதிக்கொடுமையால், தாயின் சடலத்தை ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த மகன்!- (நாள் 17 -1-19 இடம்: ஓடிஸா)
= கல்லூரி மாணவரை கொலை செய்துவிட்டு அவரது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நாள் 17 -1-19, இடம்: திருச்சி
= கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி உயிரிழப்பு!
= கடன் வாங்கித்தருவதாகக் கூறி வரவழைத்து இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்! இடம்: டெல்லி நாள் 16-1-19
(News7Tamil நாள்:17-1-19)
குற்றங்களின் கோரமுகம்!
இவையெல்லாம் வெறும் ஓரிரு நாட்களில் நம் நாட்டில் நடந்த குற்றங்களில் ஒருசில மட்டுமே . வெறும் ஒரு உதாரணத்துக்காக மட்டுமே இவற்றை எடுத்துக் கூறியுள்ளோம். இவை சற்றும் நின்ற பாடில்லை.
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப் படி 2016 ஆம் ஆண்டு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம். பதிவு செய்யப்படாதவை பல மடங்கு அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளதை சிந்திப்போர் அறியமுடியும். இந்த எண்ணிக்கை ஏறுமுகமாகவே தொடர்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நம் வீட்டுக்குள்ளும் கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிப்புகளும் சகஜமாகவே நிகழும் நாட்கள் தூரத்திலில்லை. ஏற்கெனவே மக்கள் வாழவே வெறுக்கும் நிலை நாட்டில் உள்ளதையும் ஆவணக்காப்பகத் தகவல் எடுத்துரைக்கிறது. ஆம், நாளொன்றுக்கு 371 தற்கொலைகள் .. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே இது. போலீஸ் மற்றும் போஸ்ட்மார்ட்டம் போன்ற தொல்லைகளை பயந்து பெரும்பாலான தற்கொலைகளை உறவினர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்வதில்லை என்பது ஊரறிந்த உண்மை!

கீழ்கண்டவை இங்கு பரவலாக நடப்பதை நாம் இனிமேலும் கண்டும் காணாமல் இருக்கமுடியாது.
= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக எந்தக் குற்ற உணர்வுமின்றி தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள்.
= பெருகிவரும் கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலைகள்.
= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்... பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,
= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.
= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.
= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள்.
= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.
= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும்! (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு. இவை வெறும் ரிபோர்ட் செய்யப்படும் புகார்களின் அடிப்படையிலானவை. உண்மை கற்பழிப்புகள் குறைந்த பட்சம் 3 மடங்காவது அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது)
= மது, போதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.
.....என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!
மக்களை சுரண்டுவது ஒன்றே இலட்சியமாகக் கொண்ட அரசுகளுக்கும் அவர்களின் அடியாள்களுக்கும் இது பற்றி என்றுமே குற்ற உணர்வு இருப்பதில்லை.

தவறுகளை வேண்டுமென்றே வளர்க்கும் அரசியலார்
சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம், காவல்துறை, சட்டமன்றம், பாராளுமன்றம், ஆன்மீக போதனைகள், வழிபாட்டுத்தலங்கள், போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன. இதில் சட்டம் ஒழங்கை நிலைநாட்டுவதைத் தலையாய பணியாகக் கொண்ட அரசாங்கம் நேர்மாற்றமாக செயல்படுவதை நாம் காணமுடிகிறது. நாடு எக்கேடோ கெட்டுவிட்டுப் போகட்டும் முடிந்தவரை சுரண்டுவது ஒன்றே நம் பணி என்று அரசியல்வாதிகள் செயல்படுவதையும் நாம் காணலாம். நாட்டின் சீர்கேட்டுக்கு இட்டுச்செல்லும் குற்றங்களின் பெருக்கம் பற்றியோ பாவங்களின் பெருக்கங்கள் பற்றியோ எந்தப் பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ யாரேனும் எப்போதேனும் பேசுவதைக் கேட்டுள்ளீர்களா?

விபரீதத்தின் உச்சகட்டம்

நாட்டில் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பாவங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பணிக்காக நிறுவப்பட்டவைதான் நீதித்துறையும் காவல்துறையும். ஆனால் எப்படி விபரீதமாக அவை செயல்படுகிறது என்று பாருங்கள். பெரும்பாவங்க்ளான விபசாரமும் ஓரினசேர்க்கையும் சூதாட்டங்களும் கள்ளக்காதலும் எல்லாவற்றுக்கும் சட்ட அங்கீகாரங்கள் கொடுக்கப்படும் அவலத்தை நாம் யாரிடம் சொல்ல?
திருமணம், குடும்ப உறவுகள், தாய்தந்தை மரியாதை, மனிதநேயம் என அனைத்தையும் தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிர்கதியாக நின்றுக்கொண்டிருகிறது சமுதாயம். யாரிடம் நாம் உதவிக்கு கையேந்த முடியும்?

சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்
அனைவரும் சிந்திக்கவேண்டிய கேள்வி இது. சமூக நலன் நாடும் அனைவரும் ஒன்றுகூடி அவசர அவசரமாக விடை காண வேண்டிய கேள்வி இது. நாளொன்றுக்கு சுமார் 500 இல் இருந்து ஆயிரம் பேர்வரை தற்கொலை செய்துகொள்வது என்ற தகவலை நாம் அலட்சியமாகக் கடந்து போக முடியாது. .
உலகைக் காப்பாற்ற என்னதான் வழி? இனியொரு விடியல் ஏற்பட வாய்ப்புண்டா? அதை ஆராய அழைக்கிறோம். ஆன்றோர்களே, சான்றோர்களே, சமூகத்தை வழிநடத்த வேண்டிய தலைவர்களே, முன்வாருங்கள்..
------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

திங்கள், 28 ஜனவரி, 2019

ஆளுமை வளர்ப்பின் அஸ்திவாரம் இறைஉணர்வு!

கல்வியில், தொழிலில், வணிகத்தில் உயர்ந்த விருதுகளைப் பெற்றவர்கள், அரிய சாதனைகளைப் படைத்தவர்கள் அல்லது உயர்பதவி அடைந்த ஆளுமைகள் அந்நிலையில் திடீரேன தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்வது என்பது எவ்வளவு நாசகரமான செயல்!
சமீபத்தில் ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் தலைவர் சங்கர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்' என்ற செய்தியை கவனியுங்கள்.
இந்தியாவெங்கும் கலெக்டர்களாகவும், போலீஸ் கமிஷனர்களாகவும், எஸ் பிக்களாகவும், வெளியுறவுத்துறை செயலர்களாகவும் இருப்பவர்களில் பல பேர் இவரிடம் பாடம் பெற்றவர்கள். இது ஒரு ஒற்றை நிகழ்வு என்று நாம் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம்  தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் தற்கொலை செய்கிறார்கள். அவற்றுள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதும் அதிர்ச்சித் தகவல்.
 பள்ளிப் பருவத்தில் இருந்து உயர்கல்வி பெற்ற பட்டதாரிகள் வரை அவர்களில் அடங்குவர்.

Image result for falling from cliff தற்கொலை செய்துகொள்ளும் நபரைப் பொறுத்தவரையில் அவர் எதையுமே இழப்பதில்லை என்று அவர் கருதலாம். ஆனால் அந்த ஒரு  ஆளுமையை உருவாக்க வேண்டி அவ்வளவு காலம் இரவுபகலாக உழைத்த பெற்றோர்கள் சந்திக்கும் அதிர்ச்சியை அல்லது இழப்பை அவ்வளவு இலேசாக எடுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு ஏற்படாமல் இருக்க அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?
தற்கொலை உணர்வு:
தோல்விகள் அல்லது இழப்புக்கள் அல்லது அவமானங்கள் வரும்போது தனக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வு, மனிதனில் நிராசையையும் விரக்தியையும் தூண்டும் காரணியாகும். தொடர்ந்து வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்வும் தன் வாழ்வை முடித்துக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் என்ற அறியாமை உணர்வும் எல்லாம் சேர்ந்து தற்கொலைகளாக அரங்கேறுகின்றன. 
 ஆனால் அதேவேளையில் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை மனிதனுக்கு நினைவூட்டினால் அவனுள் தற்கொலை உணர்வே எழாமல் பாதுகாக்கலாம். 
படைத்தவனையும் அவன் நெருக்கத்தையும் அறிதல் 
நம்மை இவ்வளவு பக்குவமாக படைத்ததோடு நில்லாமல் நம்மை சற்றும் கைவிடாமல் அயராது பரிபாலித்து வரும் அவனது இறைவனைப் பற்றிய அறியாமையே நமக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வுக்குக் காரணம். 
இறைவனைப்பற்றிய தவறான கருத்துக்கள் 
ஒருபுறம் இறைவனே இல்லை என்று சொல்லும் நாத்திகமும் மறுபுறம் இறைவன் அல்லாத அற்பமான படைப்பினங்களைக் காட்டி அவைகளே கடவுள்கள் என்ற தவறான சித்தரிப்பும் இறைவனைப் பற்றிய அறியாமையை மக்களிடையே வளர்க்கின்றன. பகுத்தறிவை பயன்படுத்தி நம்மைப் பற்றியும் நமது நிலையைக் குறித்தும் சற்று சிந்தித்தால் மட்டுமே இந்த அறியாமை விலகும். இல்லாமையில் இருந்து இபேரண்டத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் அளவற்ற ஆற்றல்களும் கொண்டவனையே இறைவன் அல்லது 'அல்லாஹ்' என்கிறது இஸ்லாம்.  மாறாக மனிதர்கள் சித்தரித்து உருவம் கொடுக்கும் அளவுக்கு அற்பமானவல்ல இறைவன் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள உடல் என்ற பேரற்புதமும் நம்மைச்சூழ்ந்து நிற்கும் இந்தப் பேரண்டம் என்ற அற்புதமும் தானாகவோ தற்செயலாகவோ தோன்றவும் முடியாது. தானாகவோ தற்செயலாகவோ அதி பக்குவமான முறையில் இயங்கவோ முடியாது என்கிறது பகுத்தறிவு! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு உரக்கவே எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.

இந்த விசாலமான பிரபஞ்சமும் அது உட்கொண்டுள்ளவற்றின் பேரமைப்பும் நமது உடல் என்ற அற்புதமும் இவற்றின் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
= நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164) 

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)

= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28) 


அந்த இறைவன் எப்படிப்பட்டவன்? 
அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்போருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச் சொல்லும் பாடமாகும்.
= கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். (திருக்குர்ஆன் 112 :1-4) 
(அல்லாஹ் என்ற அரபுச்சொல்லுக்கு ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதுதான் பொருள்)

அதாவது நம்மைப் படைத்த இறைவன் அவனது படைப்பினங்களைப் போலல்லாது ஏகனாகவும் தனித்தவனாகவும் தேவைகள் ஏதும் இல்லாதவனாகவும் உள்ளான். படைப்பினங்களைப் போல பெற்றோரும் பிள்ளைகளும் உறவினரும் இல்லாதவனாக உள்ளான். ஆதியும் அந்தமும் இல்லாமல் என்றென்றும் நிலைத்திருப்பவனாகவும் தன்னிகரற்றவனாகவும் உள்ளான்.
இறைவனின் நெருக்கத்தை உணருதல் 
ஆம் அன்பர்களே, அந்த தன்னிகரற்ற சர்வவல்லமை கொண்ட இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்று நமக்கு உதவக் காத்திருக்கிறான் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா? இதோ இறைமறைக் குர்ஆனில் அவன் கூறுவதைக் காணீர்:
= நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். (திருக்குர்ஆன் 50:16) 

= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186) 

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நெருக்கத்தில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்கக் காத்திருக்கிறான் என்ற ஆழமான புரிதல் யாருக்காவது உண்டாகிவிட்டால் அந்த மனிதனின் ஆளுமைக்கு மிக உறுதியான அஸ்திவாரம் அமைகிறது. அவனுக்குள் நிராசையும் மனச் சோர்வும் ஏற்பட வழியே இல்லை.
மேற்படி இறைநம்பிக்கையோடு இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும்போது வாழ்க்கையில் கட்டுப்பாடும் (discipline) அமைதியும் உண்டாகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டோடு வாழ்ந்ததற்காக மறுமை வாழ்வில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பமும் நித்திய வாழ்வும் பரிசாகக் கிடைக்கிறது. 
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
-------------------------- 

இஸ்லாம் என்றால் என்ன?

புதன், 23 ஜனவரி, 2019

காத்திருக்கும் மண்ணறையும் தொடரும் மறுமையும


மண்ணறையாவது, மறுமையாவதுமண்ணாங்கட்டியாவது...? எல்லாம் கற்பனை! முன்னோர்கள் எழுதி வைத்த கற்பனை ! என்று உதாசீனம் செய்பவர்கள் நம்மில் உண்டு. சற்றே நிதானமாக நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த மற்றும் கடந்து செல்லும் கட்டங்களைப் பற்றி சிந்தித்தால் நமக்குப் பல  உண்மைகள் புலப்படும்.
 நாம் இவ்வுலகுக்கு தாய் வயிற்றிலிருந்து குழந்தையாக வெளிப்பட்டோம் என்பதையும் அதற்கு முன் கற்பத்தில் பத்து மாதங்கள் இருந்தோம் என்பதையும் நாம் நம்புகிறோம். அதே போல் இன்று வாழும் வாழ்வின் பல கட்டங்களைக் கடந்து நாம் மரணமடைந்த பின்  புதைக்கப்பட அல்லது எரிக்கப்பட இருக்கிறோம் என்பதையும் நம்பத் தயாராக இருக்கிறோம்.
 இக்கட்டங்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நம் நிலை என்ன?
இறைவேதங்களும் இறைத்தூதர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்:  நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று நல்லவர்களுக்கு சொர்க்கமும் தீயோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 
இவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு எட்டும் தகவல்களை சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். அவ்வாறு ஆராயாமல் அப்பட்டமாக மறுப்பவர்களை எப்படி பகுத்தறிவுவாதிகள் என்று அழைக்க முடியும்? நம்மை மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? அது மடமையல்லவா? அது மட்டுமல்ல, இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இவற்றை அப்பட்டமாக மறுப்பதும் உதாசீனம் செய்வதும் பேராபத்தல்லவா?
அறிவுபூர்வமான வாதங்கள்
மனிதன் பகுத்தாய்வு செய்து மறுமையை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அறிவுபூர்வமான தன் வாதங்களை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.
நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல கட்டங்களைக் கடந்து கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
 மீணடும் உயிர்த்தெழுதல் பற்றி சந்தேகம் கொண்டோரைப் பார்த்து அவன் சொல்கிறான்;:
22:5 மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
வறண்ட பூமியின் மீது மழை நீர் பொழியும்போது
வறண்ட பூமியின் மீது மழை நீர் பொழியும்போது அது உயிர் பெற்று அதில் புதிதாக தாவரங்கள் செழிப்பதுபோல் மீண்டும் நாம் உயிப்பிக்கப் படுவோம் என்கிறான் இறைவன்
ஸ்ரீ 30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன் நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
உயிரற்ற பொருட்களில் இருந்து உயிருள்ளவை
உயிரற்ற பொருட்களில் இருந்து உயிருள்ளவை வெளிப்படுவதும் உயிருள்ளவற்றிளிருந்து உயிரற்றவை வெளிப்படுவதும் நம் கண்முன்னே அன்றாடம் நடக்கும் அற்புதங்கள். இருந்தும் மீணடும் நாம் உயிர்பிக்கப் படுவோம் என்று படைத்தவன் கூறுவதை நம்பாமல் இருக்க முடியுமா?
ஸ்ரீ 30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரில்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரில் அவ்வூர் மக்களிடம் தனது சத்தியப் பிரசாரத்தை செய்து கொண்டிருந்த வேளை மறுமை வாழ்வைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் இறந்துபோன மனிதர்களின் மக்கிப் போன எலும்புகளைக் கொண்டுவந்து காட்டி நபிகள் நாயகத்திடம் இளக்காரமாகக் கேட்டார்கள்: இவற்றையா நீர் மீணடும் உயிர்பெற்று வரும் என்று சொல்கிறீர்?”.
அவர்களுக்கு பதில் கூறும் விதமாக இறைவன் தன் புறத்திலிருந்து கீழ்கண்ட திருமறை வசனங்களை இறக்கி வைத்தான்:
ஸ்ரீ 36: 77-80. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான்
'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!
அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
தொடர்ந்து மனிதனைச் சிந்திக்கச் சொல்கிறான்:
ஸ்ரீ 36: 81.82 வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன். ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை.உடனே அது ஆகி விடும். 
ஆம், அவ்வளவுதான் அவன் ஆகுஎன்றால் ஆகி வந்தவர்கள்தானே நாம்!  இவ்வுலகின் சொந்தக்காரன் அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறான்:
ஸ்ரீ 10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; நம்பிக்கை கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு
------------------------------- 

இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

புதன், 9 ஜனவரி, 2019

அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு


நெரிசல் நிறைந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் பயணி ஒருவரிடம் கண்டக்டர் வந்து, “அய்யா, எங்கே போகிறீர்கள்?” என்று கேட்கிறார்.
அந்தப் பயணியோ, “எங்கே போகிறேன்?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு பேந்தப்பேந்த விழிக்கிறார்.
தொடர்ந்து கண்டக்டர், “நீங்கள் எங்கே ஏறினீர்கள்?” என்கிறார்.
“தெரியாது”
“சரி, நீங்கள் யார்?” என்கிறார் கண்டக்டர்.
“தெரியாது” என்று மீண்டும் சொல்கிறார் பயணி.
இவரைப் பற்றி மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை நாம் அறிவோம். இதைப் போலவே இருக்கிறது இன்று மக்களில் பலருடைய நிலையும்.
ஆம் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்..
= ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் தலைவர் சங்கர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். எல்லா முன்னணிப் பத்திரிகைகளிலும் வந்த செய்தி இது.
நாள்: அக்டோபர் 11, 2018.
தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கர்.  முக்கியமாக இந்தியாவெங்கும் கலெக்டர்களாகவும், போலீஸ் கமிஷனர்களாகவும், எஸ் பிக்களாகவும், வெளியுறவுத்துறை செயலர்களாகவும் இருப்பவர்களில் பல பேர் சங்கரின் மாணவர்கள். இப்போது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வருடத்துக்கு பல ஆயிரம் மாணவர்களுக்கும் மேல்  படித்து வருகிறார்கள்.

IAS
அகாடமி வைத்து நாளைய ஆளுமைகளை உருவாக்கும் பணி செய்து வந்த சங்கர், குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டார் என்பது எவ்வளவு வேதனையான ஒரு நிகழ்வு! நாட்டில் உயர்ந்த ஒரு பதவிக்காக வைக்கப்படும் பரீட்சையில் தேர்வதற்காக மாணவர்களுக்குப் பயிர்ச்சி கொடுக்கும் ஒரு நபர் வாழ்க்கை என்ற அதிமுக்கியமான பரீட்சையில் தோல்வி அடைவது மிகமிக சோகமான ஒன்றல்லவா?
வாழ்க்கையின் முக்கியத்துவம் அறியாமல் வளரும் மாணவர்கள்
= இவர் மட்டுமல்ல வருடாவருடம் பரீட்சை முடிவுகள் வெளியாகும் பல மாணவர்கள் மிகவும் அற்பமான காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதை அவ்வப்போது செவியுறுகிறோம். பள்ளிப் பருவத்தில் இருந்து உயர்கல்வி பெற்ற பட்டதாரிகள் வரை அவர்களில் அடங்குவர்.  தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான். பலருக்கும் பல காரணங்கள்!
வாழ்வென்றால் அவ்வளவுதானா? அவ்வளவு அலட்சியம்!! அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா? அவர்கள் மீது உயிரையே வைத்து இராப்பகலாக உழைத்து சம்பாதித்து வளர்த்ததும் அதற்காகத்தானா? படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று? என்ன காரணம்?
"மரணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு... இறந்து விட்டால் எல்லாமே முடிந்துவிடும்" என்ற சிந்தனை தான் இதற்குக் காரணம். பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பற்றிய தெளிவு கிடையாது என்பதே உண்மை!
தேவை வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கல்வி
உண்மையில் மரணம், முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள்தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும். கல்விக்கூடங்களில் வெறுமனே உயர்ந்த பதவியும் வருமானமும் பெறுவதற்கான கல்வி அறிவு மட்டும் போதிக்கப்பட்டால் போதாது. அவர்கள் கல்விக்கூடங்களில் செலவிடும் அவர்களின் இளமைக் காலம்தான் அவர்களின் உண்மையான ஆளுமைகளை வடிவமைக்கும் காலகட்டமாகும்.  மாணவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் மரணம் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் ஆராய்தலை ஊக்குவிக்கும் முகமாக பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். குறைந்தபட்சம் அவற்றைப்பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன என்பது பற்றியாவது பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
= அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 67:2)
==============
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

திங்கள், 7 ஜனவரி, 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்

பொருளடக்கம்
------------------------
கொலை கொலையாகத் தற்கொலைகள்!-2
அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு -6
ஆளுமை வளர்ச்சிக்கு ஆழமான அடித்தளங்கள்
நம்மை நாமே அறிந்து கொள்வோம் -8
படைத்தவனை பகுத்தறிவு கொண்டு அறிதல் -11
இறைவன் அல்லாதவற்றிடம் ஏமாறாதிருத்தல் -13
மன அமைதிக்கான மாமருந்துகள்-15
வாழ்க்கையின் நோக்கம் பற்றி அறிதல்-16
வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை அறிந்து பயணித்தல் -18
தற்கொலை பற்றி இறைவன்-20
ஊகங்களைத் தவிர்த்து உறுதியானதைக் கடைபிடித்தல்-21
தோல்விகளை எதிர்கொள்ளும் நிதானம்-22
இறைவன் பரிந்துரைக்கும் அழகிய ஆளுமை!-24
--------------------------
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும் . நான்கு மாத சந்தா இலவசம்