இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 பிப்ரவரி, 2014

நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?

தனது நாற்பதாவது வயதில் சத்தியப் பிரச்சாரத்தை தான் பிறந்த மக்கா நகரில் துவங்கினார்கள் முஹம்மது நபி அவர்கள். (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) 

அன்று அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். மக்காவில் இன்று காணப்படும் சதுர வடிவான கஅபா என்ற இறையில்லம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் இப்ராஹீம் (ஆப்ரஹாம்) என்ற இறைத் தூதரால் ஏக இறைவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். ஆனால் காலப்போக்கில் அதற்குள் 360 சிலைகள் நிறுவப்பட்டு  தினம் ஒரு சிலைக்கு வழிபாடு என்றவாறு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர். குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.   பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள். இன்னும் இவைபோன்ற பல அனாச்சாரங்களும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.

 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க இவற்றுக்கான தீர்வுகளுக்காக அவரது மனம் ஏங்கிக கொண்டிருந்த வேளையில்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.  இறைவன் வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறியின் பால் மக்களை அழைக்குமாறு இறைவனால் பணிக்கப் பட்டார்கள். அந்த வாழ்க்கை நெறியே  இஸ்லாம் (இறைவனுக்குக் கீழ்படிதல்) என்று அறியப்படுகிறது.

நபிகளார் எதன்பால் மக்களை அழைத்தார்கள்?

 நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியோ அழைக்கவில்லை. மாறாக அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தின்பால்தான் அழைத்தார்.

= ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களே. குலமோ, இனமோ மொழியோ நிறமோ இடமோ உங்களைப் பிரித்துவிடக் கூடாது. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும்  சுரண்டிக் கொண்டும் மோசடி செய்தும் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் என் சமுதாயமே! வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்! ஒரு இனிய புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்! இந்த குறிக்கோளை அடைய நீங்கள் மறந்துபோன சில உண்மைகளை நினைவூட்டி அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கவே நான் இறைவனால் அனுப்பப் பட்டுள்ளேன்.
மறுக்கமுடியாத உண்மைகள் 
= நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய முதல் உண்மை எதுவெனில் இவ்வுலகத்தை படைத்த இறைவன் ஒரே ஒருவனே என்பதும் அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதுதான். அவன்தான் நமக்கு தன் புறத்திலிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி நம்மை பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அவன் மட்டுமே நம் நன்றிக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவனும் நம் பிரார்த்தனைகளை ஏற்பவனும் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனது படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும்  உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதும் எல்லாம் இறைவனை சிறுமைப் படுத்தும் செயலும் வீணும் மோசடியும் ஆகும். எனவே பொய்யான தெய்வங்களை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவன்பால் வாருங்கள்.
= அடுத்த உண்மை – இவ்வுலகம் தற்காலிகமான ஒரு பரீட்சைக்கூடம் போன்றது. இதில் நீங்கள் இறைவனின் வழிகாட்டுதல்படி அவன் கூறும் நன்மைகளைச் செய்தும் அவன் கூறும் தீமைகளில் இருந்து விலகியும் வாழ்ந்தீர்களானால் உங்கள் தனி நபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியைக் காண முடியும். அவ்வாறு நீங்கள் படைத்தவனுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தீர்களானால் அதற்குப் பரிசாக அவன் மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்கத்தில் உங்களைப் புகுத்துவான். மாறாக அவனுக்குக் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தீர்களானால் அதற்கு தண்டனையாக மறுமையில் நரகத்தையும் வைத்துள்ளான்.
 = இந்த மறுக்கமுடியாத சத்தியங்களை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவன் நமக்காக வகுத்துத் தந்துள்ள அழகிய வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பூமியை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம் வாருங்கள்.
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தத் திட்டத்தின் பால்தான் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை அழைத்தார்கள்.
ஆனால் என்ன நடந்தது?
புரிந்து கொண்டவர்கள் இந்த உயர்ந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். முழுமூச்சாக அண்ணலாரோடு இணைந்து பாடுபட்டார்கள். கொண்ட கொள்கைக்காக தங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள். படைத்த இறைவனுக்காக அனைத்தையும் இழந்தாலும் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா? மறுமையில் சொர்க்கமல்லவா காத்திருக்கிறது!
ஆனால் இக்கொள்கையின் அருமையைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். இந்த இயக்கம் வெற்றி பெற்றால் அனைவரும் சுபிட்சமாக வாழலாம் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து சிலரை அவர்களுடைய தற்பெருமையும் சிலரை சுயநலமும் சிலரை ஆதிக்கபலமும் தடுத்தது. பெரும்பாலோரை முன்னோர்கள் எது செய்தாலும் சரியே என்ற குருட்டு நம்பிக்கை தடுத்தது! 
தொடர்ந்த சித்திரவதைகள்
இயக்கம் தொடங்கி பதிமூன்று வருடங்கள் தொடர் சித்திரவதைகளுக்கு மத்தியில் கழிந்தது. ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ' நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.

ஒன்று இரண்டல்ல, பதிமூன்று வருட காலம் தொடர்ச்சியாக சித்திரவதைகளை அனுபவிக்க எவ்வாறு இவர்களால் முடிந்தது? கொடுமையாளர்களுக்கு எதிராக இவர்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை? எண்ணிக்கைப் பெருகும் போதும் எதிர்த்து நிற்க எது தடை செய்தது?......... இதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
பொறுமை என்ற ஆயுதம்
ஆம், தன்னை மக்கள் தாக்கியபோதும் நபிகளார் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்கள். தன் சகாக்கள் தாக்கப்பட்ட போதும் பொறுமையை மேற்கொள்ளுமாறு பணித்தார்கள். இறைவனின் கட்டளைகளை அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (திருக்குர்ஆன் 41 : 34)
அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.”  (திருக்குர்ஆன் 28 :54)
அதர்மவாதிகள் தங்கள் பயங்கரவாதத்தால் தர்மம் வேரூன்றுவதைத் தடுக்க முழுமூச்சாக முற்பட்டாலும் தர்மத்தின் காவலர்கள் எதிர் நடவடிக்கைகளிலோ தாக்குதல்கள் நடத்துவதிலோ ஈடுபடவில்லை. தங்கள் இலக்கு எதிர்போரையும் அவர்களின் உடமைகளையும் அழிப்பதல்ல, மாறாக அவர்களைத் திருத்துவதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். அதன் காரணமாக பொறுமையையும் மன்னிப்பையும் இறைஉதவியையுமே தங்கள் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள். அதர்மவாதிகள்  நாளடைவில் தோல்வியே கண்டார்கள். 

இவ்வாறு உலகம் தொடங்கிய நாள் முதல் ஆரம்பித்த தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான போராட்டம் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இறுதிநாள்வரை இது தொடரும். இதில் தர்மத்தைக் காக்கப் போராடியவர்களுக்குப் பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும். அதர்மத்தை வளர்ப்பதற்காகப் போராடியவர்களுக்கு நரகமும் கிடைக்கும். 

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?   

1 கருத்து: