இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஏப்ரல், 2022

இறைவன் ஏன் செவிப்புலனை முதன்மைப் படுத்துகிறான்?


பொதுவாகவே இறைவன் மனிதனுக்கு வழங்கிய மாபெரும் பொக்கிஷம் அவனது உடல். தெருவோரத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட எளியோர் ஆயினும் சரி, மனநலம் குன்றி சமூகத்தின் பரிகாசத்துக்கு ஆளாகும் மனிதர்களும் சரி, உடல் என்ற பொக்கிஷத்தைப் பொறுத்தவரை கோடீஸ்வரர்களே! அந்த அளவுக்கு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் புலன்களும் மதிப்பு மிக்கவை.

பொதுவாகவே ஐம்புலன்களைப் பற்றிப் பேசும் போது மக்கள் அனைவரும் பார்வைப் புலனையே- அதாவது கண்களையே- மிக்க மதிப்பு மிக்கதாக முன்னிலைப்படுத்தி பேசுவதை நாம் அறிவோம்.  ஆனால் நம்மைப் படைத்தவன் பார்வைப் புலனைவிட செவிப்புலனை முதன்மைப்படுத்தி கூறுவதை நாம் திருக்குர்ஆனில் காணலாம். இதில் மிகப்பெரிய சூட்சுமம் இருப்பதை நீங்கள் காணலாம். திருக்குர்ஆன் நம்மைப் படைத்தவனின் வேதமே என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

கீழ்க்கண்ட வசனங்களை படித்து விட்டு தொடரும் அறிவியல் உண்மைகளை கவனியுங்கள்..

= இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன் : 23:78)

= உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் அல்லாஹ்என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக. (திருக்குர்ஆன்: 10:31)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
= உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் : 16:78)


செவிப்புலன் செய்யும் முக்கியப் பணி:

காது அல்லது செவிப்புலன்களின் பணி ஒலி உணர்தல் மட்டுமல்ல. நம் உடலை சமநிலையில் வைத்திருத்தல் என்ற அதி முக்கியமான பணியும்தான். நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்குக் காரணம், நம் காதுதான். மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப்படுத்த உதவுவது செவிப்புலன்தான்.

ஒரு இறந்துபோன சடலத்தை நாம் செங்குத்தாக நிறுத்தவோ அல்லது உட்காரவோ வைக்க முடியுமா சிந்தித்துப்பாருங்கள். ஒரு சைக்கிளை நாம் அதன் சக்கரங்களின் மீது நிறுத்தி வைக்கவும் ஒரு ஸ்டான்ட் இல்லாமல் ஆகாது. ஆனால் ஒரு உயிருள்ள மனிதனால் நிற்கவும் குனியவும் குதிக்கவும் எல்லாம் முடிகிறது என்றால் அதற்குக் காரணம் செவிப்புலனில் அமைந்துள்ள புலன் உணர்வுக்கான கட்டமைப்புதான். மட்டுமல்ல, அவனால் கயிற்றின் மீது நடத்தல், உயரத்திலிருந்து நீருக்குள் குதித்தல், நீந்துதல் போன்ற சாகசங்களையும் நிகழ்த்த முடிகிறது. இந்தப் புலன் உணர்வை equilibrioreception என்கிறார்கள்.

உடல் எந்த வாட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு தன்னைத்தானே சமநிலைப் படுத்திக்கொள்வது இதன் மூலம்தான். கண்பார்வை , தசைகளின் இறுக்கம் அல்லது தளர்வு நிலை இதைத்தவிர , உடலின் பிரத்தியேக சென்சார் நம் செவிப்புலனில்தான் உள்ளது.  அந்த சென்சார் தரும் உள்ளீட்டை , பார்வை மற்றும் தசைகளின் நிலை இவற்றோடு கோர்த்துப்பார்த்து மூளை புரிந்துகொள்கிறது. செவிப்புலனில் அமைந்துள்ள காக்லியா (cochlea) திரவம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்போது யோசித்துப்பாருங்கள், செவிப்புலன் இப்பணியைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று. பார்வை இல்லாமல்கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் மேற்படி சமநிலை தவறிய மனிதனால் எவ்வளவு நாள் வாழ்ந்திட முடியும்? யோசியுங்கள். 

ஒலி உணரும் பணி:

ஒலி அலைகளை காது மடல்கள் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

காதின் மடல்கள் அல்லது சோனைகள் மிக அற்புதமான வடிவம் கொண்டது,. மண்ணெண்ணெய் அடுப்பில் புனல் வைக்காமல், அப்படியே எண்ணெயை ஊற்றினால் எப்படி சிதறி போகும். அதே போன்றுதான், காது மடல்கள். இல்லாவிடில், ஒலி அலைகள் நேரடியாக மண்டைக்குள் மோதி, அதுவே நம்மை கொன்று விடும் அளவுக்கு வலுவானவை. அதைத்தான், காது மடல்களும் அதை சுற்றியுள்ள சிக்கலான அமைப்புகளும வடிகட்டும் வேலையை செய்கின்றன.

இனி படைத்தவன் கூறும் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்போம் வாருங்கள்:

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் 95:4)

 = (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 76:2) 

மேற்படி வசனத்திலும் இறைவன் செவிப்புலனை முதன்மைப்படுத்தி இருப்பதை கவனியுங்கள். ஆம், இந்த செவிப்புலனும் பார்வைப் புலனும் நமக்கு வழங்கப்பட்டு இருப்பது முக்கியமாக இந்தக் குறுகிய வாழ்க்கை என்ற பரீட்சையை செவ்வனே நிறைவேற்றுவதற்காகவே. இந்தப் பரீட்சையின் நோக்கம் என்ன?

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக