பாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து
நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு
உண்டாக்குவது?
- படைத்தவனே இறைவன்,
- வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை,
- இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது
கண்காணிப்பில் உள்ளன.
- இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு
இறைவனிடம் மீள உள்ளோம்,
- அங்கு இறுதி விசாரணை நடக்க உள்ளது.
- நமது புண்ணியங்களுக்கு பரிசாக சொர்க்கம்
கிடைக்கும்.
- பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்க
உள்ளது.
இந்த உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக மனிதனுக்குள் விதைத்து
உண்டாக்கப்படும் பொறுப்புணர்வுதான் இறையச்சம் என்று அறியப்படுகிறது.
இந்த உண்மைகளை வெறுமனே போதிப்பதோடு நில்லாமல் அவற்றை சதா
நினைவூட்டும் வண்ணமாக ஐவேளைத் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள், ரமளானில் விரதம்
போன்ற இறையச்சம் வளர்ப்பதற்கான பல வழிமுறைகளையும் இஸ்லாம் கற்பித்து
நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம் என்பது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு முழுமையான
வாழ்வியல் வழிமுறைகளின் தொகுப்பு. இவற்றை ஏற்று வாழும்போது தனிநபர் வாழ்விலும்
குடும்ப வாழ்விலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் பேணப்படும். அதன் காரணமாக
ஒழுக்கம் நிறைந்த சமூகமும் உருவாகும். அவ்வாறு சமூகம் அமையும்போது அங்கு மக்களை
குற்றங்கள் செய்வதில் இருந்து தடுப்பதும் எளிதே!
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நபிகள் நாயகம்(ஸல்) தன்
வாழ்நாளில் உருவாக்கிக் காட்டினார்கள். இறையச்சம் கொண்ட ஒரு வாலிபரை எவ்வாறு நபிகள்
நாயகம் திருத்தினார்கள் என்பதைக் கீழ்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்:
நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:
“நாங்கள்
அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக
அண்ணலாரின் முன் வந்து நின்று “இறைவனின் தூதரே! எனக்கு நீங்கள்
விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.
அங்கிருந்த நபித்தோழர்கள் வெகுண்டெழுந்து அவரைத் தாக்கிட
முனைந்தனர். ஆனால் நபிகள்
நாயகம் {ஸல்} அவர்கள் ”அவரை ஒன்றும்
செய்து விட வேண்டாம்” என்பது போன்று
சைகை செய்தார்கள்.
பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள்.
அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்தால் அதை நீ விரும்புவாயா?” எனக்
கேட்டார்கள்.
”இல்லை, இறைவனின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார்
அவ்வாலிபர்.
மீண்டும் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் “உன் சகோதரி
விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள்.
பதறித்துடித்தவராக, “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார்
அவ்வாலிபர்.
அப்போது நபிகளார் ”அப்படித்தான், நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப
மாட்டார்கள்”. என்றார்கள்.
மீண்டும் அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின்
சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக்
கேட்டார்கள்.
அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய
பார தூரமான கேள்வியை இறைத்தூதரிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.
அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, “இல்லை, இல்லை, இறைத்தூதரே! ஒரு
போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார்.
அதன் பின்னர், நபிகளார் அவரை நோக்கி சீர்திருத்தும் தொனியில் “உமக்கு எதை நீ
விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும்
நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும்
வெறுப்பாயாக!” என்று
கூறினார்கள்.
இதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் “இறைவனின் தூதரே!
எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன்
கேட்டார்.
அவரை அருகில் அழைத்த நபிகளார், தமதருகே
அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, “இறைவா இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! இறைவா இவரின்
பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!” என்று
பிரார்த்தித்தார்கள்.
இறுதியாக அந்த வாலிபர் நபிகளாரிடமிருந்து
விடை பெற்றுச் செல்கிற போது…. “இந்தச் சபையில்
நான் நுழைகிற போது, விபச்சாரம்தான்
நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே
மாறிவிட்டது” என்று
சொல்லியவாறே சென்றார்.
இந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள்
கூறுகின்றார்கள்: “இதன் பின்பு
அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும்
எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.” (நூல்: முஸ்னத் அஹ்மத்,)
இது நீதிபோதனை என்ற பெயரில் புனையப்பட்ட கதையல்ல. நிஜம்!
மனிதகுலத்திற்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளார் நடத்திய கவுன்செலிங்
இது. பாலியல் இச்சைகளைத் தவறான முறையில் தீர்க்க விரும்பும் இளைஞர்களை நபிகளார்
நினைவூட்டிய அந்த உண்மைகளை நினைவூட்டி யாரும் திருத்த முயற்சி செய்யலாம்.
---------------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக