இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 மார்ச், 2017

உங்கள் விசாலமான முகவரி

Image result for video icon 
வாழ்க்கைப் பருவங்களின் பல படித்தரங்கள் கடந்து தற்போது ஒரு முழு மனிதனாக நீங்கள் உருவெடுத்திருக்கக் கூடும். உங்கள் தற்போதைய முகவரி என்ன என்று கேட்டால் தங்களின் பெயர், வீடு, தெரு,ஊர் விவரங்களைக் கூறுவீர்கள்தானே?
உதாரணத்துக்கு இதுதான் உங்கள் முகவரி..
ராஜா, 13, சந்நிதி தெரு, கருமத்தம்பட்டி, கோவை 641659, தமிழ்நாடு
அதே சமயம் முகவரியைக் கேட்டவர் இன்னொரு நாட்டிலேருந்து கேட்டால் கூடுதலாக  இந்தியா என்று நாட்டையும் சேர்ப்போம். அவ்வளவுதான் நாமறிந்தது. அதை மீறி நம்மில் பெரும்பாலோரது கவனம் செல்வதில்லை. 
உண்மையில் இவ்வளவுதான் நம் முகவரியா? நம் முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா?
நமது முகவரியின் விசாலத்தைப் பற்றிய அறியாமையும் கவனமின்மையும் மனிதனை குறுகிய சிந்தையுள்ளவனாக ஆக்குகிறது. நம்மைப் படைத்தவனின் உள்ளமையையும் வல்லமையையும் பறைசாற்றும் சான்றுகளின்பால் கவனத்தை செலுத்தினாலே மனிதனின் அகங்காரமும் அகந்தையும் அறியாமையும் அகலும். இறைவனுக்கு தன் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவனை ஆட்கொள்ளும்.
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்று கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 3:190,191) 
வாருங்கள் நம் முகவரி இன்னும் எவ்வளவு விசாலமானது என்பதைக் கண்டுவர முயல்வோம்...
பூமி என்ற உருண்டை
இந்தியா என்கிற இந்த நாட்டை அடுத்து தொடர்வது.. ஆசியாக் கண்டம்... தொடர்ந்து  இந்த பூமி என்ற உருண்டை. பாமரர்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் இதை கற்பனை செய்து கூட  பார்க்க முடிவதில்லை.
இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது.
சூரியக் குடும்பம்
அடுத்து நம் முகவரியில் தொடர்வது நம் சூரிய குடும்பம். சூரிய குடும்பம் என்பது சூரியன் என்ற ஒரு நட்சத்திரத்தையும் அதனை வட்ட பாதையில் சுற்றிவரும் அனைத்து பொருள்களையும் குறிக்கும். நம்முடைய சூரிய  குடும்பத்தில்  சூரியன் நமது  நட்சத்திரமாக உள்ளது - 8 கிரகங்களும், அதனதன்  துணைக்கோள்களும் , குள்ள கிரகம் எனப்படும் (dwarf planet) புளூட்டோ ஒரு Dwarf Planet. மேலும் Ceres என்ற குள்ள கிரகங்கள் உள்ளன. இன்னும் asteroids எனப்படும் எரிகற்களும்   மற்றும் Comets எனும்  வால் நட்சத்திரங்களும்  மற்றும் Meteoroids எனப்படும் வின்வீழ் கற்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன. (சூரியன் என்பது நாம் விண்ணில் காணும் நட்சத்திரங்களில் ஒன்றுதான். நமக்கு அருகாமையில் உள்ளதால் அது நமக்கு பெரிதாகத் தெரிகிறது.) மேற்கண்ட படத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாகத் தென்படும் பட்டாணி போன்ற உருவமே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.
ஒளியாண்டு
நம் சூரியனுக்கு அடுத்தது என்ன என்பதை அறியும் முன் ஒளியாண்டு பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம்.  (நமக்குத் தெரியும் 1 கி.மீ. – 1,000 மீட்டர்)
விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி என்று  சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ஒளி ஆண்டுஎன்ற அளவையை பயன்படுத்துகிறார்கள்.
ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர்  ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம் கி.மீ). அப்படியென்றால் ஒரு  வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12) கிமீ.  இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒருஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)

= நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar Neighborhood). ஆல்பா செந்தௌரி (Alpha Centauri) தான்  சூரியனிலிருந்து அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி ஆண்டுகள். அதாவது இந்த ஆல்பா நட்சத்திரத்திலிருந்து புறப்படும் வெளிச்சம் நமது பூமிக்கு வந்து நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றால் 4 வருடம் 3 மாதம் ஆகும். நாம் இங்கு காணும் அந்த  நட்சத்திரத்தின் ஒளி 4.24 வருடத்திற்கு முன் புறப்பட்ட ஒன்றுதான். (சூரியனிலிருந்து வரும் ஒளி நம் பூமிக்கு 8 நிமிடத்தில் வருகிறது. நமக்கும் சூரியனுக்கும் 15 கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)
பால்வெளி அண்டம் (Milky Way galaxy) விண்மீன் திரள் 
நம் சூரியன் போல 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதுதான்  நமது அடுத்த பெரிய குடும்பம். இதையே  “பால்வெளி அண்டம் ” (Milky Way galaxy) என்று அழைக்கிறோம்.  இக்குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் மொத்தம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை பரவி இருக்கின்றன. 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுதான் நம் சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சிறு புள்ளிதான் நம் கிழக்கே உதிக்கும் சூரியன். அதற்க்குள்தான் நாம் வாழும் இப்பூவுலகும்! உங்கள் முகவரி எப்படி விரிவாகி உள்ளது என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்!
பால்வெளி அண்டத்தில் பூமியும் சூரியனும் கேனிஸ் மஜோரிசும்
= இந்த சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த மையத்தை ஒரு முறை நம் சூரியன் குடும்பம் சுற்றிவர 25 கோடி வருடங்கள் ஆகும்!
= பால்வெளி அண்டத்தில் உள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்று  V Y Canis Majoris. நம் பூமியில் இருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரியனைவிடப் பன்மடங்கு பெரியது.
= நம் பூமியின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர்.
= நம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து கிளம்பும் தீச்சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.
= ‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு 198 கோடி கிலோமீட்டர்!
பால்வெளி அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)
= நம் குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள்களை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப் பெயர் “Local Galactic Group”
= நமது பால்வெளி திரள் தவிர்த்து, மிக அருகில் உள்ள வேறு விண்மீன் திரள் குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட விண்மீன் திரள் அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. நமது பால்வெளி அண்டத்தைவிட அண்ட்ரோமேடாமிகப்பெரியது.
=  நமது பால்வெளி அண்டத்தின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)
= அண்ட்ரோமேடா விண்மீன் திரளின் குறுக்களவு 25 லட்சம்  ஒளி ஆண்டுகள் தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1 லட்சம் கோடி. (1 ட்ரில்லியன்)
விர்கோ அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)
= சுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம் பால்வெளி அண்டம் போல உள்ள 100 விண்மீன் திரள்களின் தொகுப்பே விர்கோ அண்டங்களின் தொகுப்பு.
= இந்த இரண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தொகுப்பின் பெயர் அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு (Local Super Clusters)
= இதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு. (Observable Universe) 9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.
= இவ்வளவு அண்டங்களின் தொகுப்பும் (Observable Universe) ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா? வெறும் 0.4 சதவிகிதம் மட்டுமே. முழுமையாக ஒரு சதவீதம் கூட இல்லை.  அண்டங்களுக்கிடையேயான வாயு வெற்றிடம் வெளி   3.6 சதவீதமாகும். மீதி 96 சதவீதமும் அறிவியல் அறிவுக்குத் தட்டுப்படாத கரும்பொருளும் (23%dark matter) கருஞ்சக்தியும் (73% dark energy) ஆகும்.
இவ்வ்வளவும் மனிதன்  என்ற அற்ப ஜீவியின் பார்வைக்கு எட்டிய பிரபஞ்சத்தின் நிலை! இந்த அறிவியலின் அறிவுக்கு எட்டிய  அண்டங்களின் தொகுப்பானது (Observable universe) இறைவன் தன் திருமறையில் கூறும் முதல் வானத்தின் எல்லைக்குள் மிக மிக அற்பமான ஒன்று. இதற்கப்பாலும் வானங்கள் இருப்பதாக இறைவன் கூறுகிறான்:
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!  ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

இந்த வீடியோவில் இருந்து எவ்வளவு விசாலமானது உங்கள் முகவரி என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்களோ உங்கள் கருமத்தம்பட்டிதான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்! இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.. இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன்! அவன் நம்மை வீணுக்காகப் படைத்திருப்பானா?
51:47. நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம்  மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கின்றோம்.
இறைவனை மறுக்கும் நாத்திகர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது:
52:35. படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா?
52:36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!
மறுமையில் மனிதனை இறைவன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக