இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 நவம்பர், 2016

பெண்களே, அழியாத அழகு வேண்டுமா?


Related image ஏக இறைவனின் திருப்பெயரால்
நீங்கள் தினமும் நின்று அழகு பார்க்கும் கண்ணாடியின் முன் ஒருகணம் நின்று பாருங்கள்..... இம்முறை அழகு பார்ப்பதற்காக அல்ல... அதைத்தான் தினமும் பார்க்கிறீர்களே!
இப்போது நீங்கள் நிற்ப்பது... உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக... நீங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பதை அறிந்து கொள்வதற்காக!
உங்கள் கண்கள், மூக்கு, வாய், காதுகள் பற்கள், நாக்கு, தலைமுடி என தொடங்கி அடிமுதல் முடிவரை சற்று பார்வை இடுங்கள்...
எத்தனை எத்தனை அற்புதங்களை நீங்கள் தாங்கி நிற்கிறீர்கள்! கோடிக்கணக்கான செல்கள் வெளியே தோலாகவும் உள்ளே சதையாகவும் ஒரு இடத்தில் கண்ணாகவும் நாக்காகவும் மூக்காகவும் மூளையாகவும் மறு இடத்தின் கல்லீரல் நுரையீரல், கணையம், இதயம் என உங்களை இயக்கிக்கொண்டிருக்கும் உறுப்புக்களாகவும் உருக்கொண்டு நிற்பதை அறிவீர்கள்... இவற்றில் எதற்காகவும் வேண்டி நீங்கள் உழைத்தது கிடையாது. இவற்றை வாங்க நீங்கள் எந்த ஒரு பைசா கூட செலவிட்டது கிடையாது. இவற்றின் அழகும் ஆரோக்கியமும் குன்றாமல் பராமரிக்க எந்த ஒரு முயற்சியும் உங்கள் தரப்பில் இருந்து பெரிதாக ஒன்றும் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு பெரும் பொக்கிஷம் உங்கள் கைவசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பை அளவிட அருகாமையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சென்று பணம் செலுத்தும் இடத்தில் (cash counter) சென்று நின்று பாருங்கள். சிறுநீரகம் பழுதான ஒரு நோயாளிக்கு இரத்தத்தை சுத்தீகரிக்க செய்யப்படும் டயாலிசிஸ் என்ற செயற்கை சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 650 முதல் 1000 வரை வசூலிக்கப்படுவதை நீங்கள் காணலாம். சிறுநீரகம் அறவே செயலிழந்து போனவர்களுக்கு நீங்கள் உங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை விற்க முன்வந்தால் அதை 5 இலட்சம் ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்க வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உடலின் ஒரே ஒரு உறுப்பின் கதை. அப்படியென்றால் உங்கள் உடல் என்ற பொக்கிஷங்களின் தொகுப்பின் மொத்த மதிப்பையும் இதைப் பராமரிப்பதற்கான செலவையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!
எத்தனை அரிய பொக்கிஷம் உங்களுக்கு தரப்பட்டு உங்கள் உழைப்பின்றியே பராமரிக்கப் பட்டு வருகிறது!
உங்கள் ஆடையை வடிவமைத்தது யார் என்று தெரியும். அந்த ஆடைக்கு அஸ்திவாரமான உங்கள் உடலை வடிவமைத்து வழங்கியது யார்? சிந்தித்திருக்கிறீர்களா?
ஆம், சந்தேகமின்றி அது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த கருணையுள்ள இறைவனே. ஏனெனில் அவனைத் தவிர வேறு யாரும் இவ்வாறு கூறக் கேட்டு இருக்க வாய்ப்பில்லை:
அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:6)
உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் 16:78)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
= இது எவ்வளவு நாட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது?
அதை நாம் யாரும் அறிய மாட்டோம். எப்போது நம்மிடம் இருந்து இது பறிபோகும் என்பதை இதைத் தந்தவன் மட்டுமே அறிவான்!
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். (திருக்குர்ஆன் 20:15)
= இது எதற்காக தரப்பட்டுள்ளது?
இதற்கான உண்மையான விடையும் இதைத் தந்தவனிடமிருந்தே அறிய முடியும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35.)
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
ஆம் சகோதரிகளே இதற்காகத்தான் இந்த அறிய பொக்கிஷம் நம்மிடம் தற்காலிகமாக தரப்பட்டுள்ளது. அதாவது இந்த வாழ்க்கை என்ற பரீட்சையில் நமது செயல்களும் நடவடிக்கைகளும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவை மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது பாவங்களாகவும் புண்ணியங்களாகவும் வெளிப்பட உள்ளன. அவற்றின் அடிப்படையில் மறுமையில் நமக்கு சொர்க்கமோ நரகமோ வாய்க்க உள்ளன என்பதே இந்த பொக்கிஷத்தை நமக்கு வழங்கியுள்ள இறைவனின் கூற்று!
எனவே இந்த அரிய பொக்கிஷத்தை முறைப்படி பாதுகாத்து இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களுக்கு ஏற்ப பேணி வந்தால் நாம் நாளை மறுமையில் சென்றடையும் இடம் சொர்க்கச் சோலையாக இருக்கும். மாறாக இதைத் தவறாக பயன்படுத்தினால் நாம் சென்றடையும் இடம் நரகத்தின் எரிகிடங்காக இருக்கும்.
இவ்வாறு நம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழும் வாழ்க்கை நெறிதான் அரபுமொழியில் ‘இஸ்லாம்’ என்று அறியப்படுகிறது. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் மட்டுமே நம் வணக்கத்துக்கு உரியவன் என்பதும் அந்த ஏக இறைவன் நம் அனைவரையும் கண்காணித்து வருகிறான் என்பதும் நமது வினைகளுக்கு ஏற்ப மறுமையில் சொர்க்கமோ அல்லது நரகமோ நிரந்தர வாழ்விடங்களாக விதிக்கப்படும் என்பதும் இஸ்லாம் கற்பிக்கும் அடிப்படைக் கல்வியாகும்.
இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது வரையறைகளை வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆனும் ஆடை மற்றும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை அறிவிக்கின்றன. அதன்படி
= ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்பட வேண்டியவையாகும்.
= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.
= உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.
= பெண்ணைப் பொறுத்தவரை அவளது நெருங்கிய உறவினர் அல்லாத மற்ற ஆண்களுக்கு முன்னர் வரும்போது மேற்படி உடலை முழுமையாக மறைத்துக் கொண்டே வரவேண்டும்
= தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.
.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும்.
=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது இவ்வுலகிலேயே தண்டனைக்குரிய பாவம்.
ஆக, அந்த வகையில் மறைக்க வேண்டிய உடலின் பாகங்களை திறந்தோ மூடியோ வெளிப்படுத்தும் எந்த உடையும் இறைவனால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இதை அணிவதால் சமூகத்தில் உண்டாகும் குழப்பங்களுக்கும் விளைவுகளுக்கும் உரிய தண்டனையை இதை அணிபவர்கள் மறுமையில் பெறுவார்கள் என்பது நிச்சயம்!
உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்
சகோதரிகளே, இப்போது உங்கள் ஆடை இறைவன் விதித்த வரம்புகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணிந்துள்ள ஆடை மேற்படி இறைவனின் வரம்புகளை மீறுகிறதா? அது மறைக்கப்பட வேண்டிய உடலின் பாகங்களை வெளிப்படுத்துகிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் உங்கள் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (National Crime Record bureau) கணக்குப்படி நாளொன்றுக்கு 106 பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப் படுகிறார்கள்.
உங்கள் உடலழகின் தாக்கம்
இவ்வாறு நீங்கள் உங்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும்போது பொது இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது. தொடர்ந்து சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றது. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், பெற்று வளர்த்தவர்களுக்கு நன்றிகேடு, டென்ஷன், கருக்கொலை, சிசுக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன.

= இவற்றைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கக்கூடும்.
= என் உடல், என் உரிமை, என் விருப்பம் என் ஆடை... என்று நீங்கள் உரிமை கொண்டாடக்கூடும்.
= நாட்டு நடப்புதானே, குடும்ப வழக்கம்தானே என்று உங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கூடும்.
= ஆபத்து வரும்போது சமாளிக்க எனக்குத் தெரியும், எனக்கு தற்காப்புக் கலை தெரியும், நான் படித்தவள், புத்திசாலி, எல்லாவற்றுக்கும் தீர்வு காண என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டவராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.
= அப்படியே நான் கற்பழிக்கப் பட்டாலும் அதற்கும் நாட்டில் தீர்வுகள் உண்டு, எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு வாழ்க்கையைத் தொடர என்னால் முடியும் என்றமுற்போக்குசிந்தனை கொண்டவராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.
நீங்கள் எப்படிப்பட்ட பெண்மணியாக இருந்தாலும்......

இதற்குத் தீர்வு உண்டா உங்களிடம்?
ஆனால் மரணம் என்ற ஒன்றை வெல்ல உங்களிடம் தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்!
மற்றவர்களைப்போல நீங்களும் மரணிப்பீர்கள்,
அன்று உங்கள் உடலைவிட்டு பிரிந்து விடுவீர்கள்,
அன்று உங்களை அழகிய பெயர் கொண்டு அழைக்க மாட்டார்கள்!
அனைவரும்இது இன்னாருடைய பிணம்!’ என்றே கூறுவார்கள்!
அன்றோடு உங்கள் கதை முடிவதில்லை, ஆனால் அன்றுதான் நீண்ட பயணமே ஆரம்பமாகிறது!
ஆம், மரணத்தின்போது பிரிந்த உயிர் மீண்டும் உங்கள் உடலுக்குள் நுழையும்!

மீண்டும் நீங்கள் உடலுக்குள் நுழையும்போது உங்களுக்கும் இவ்வுலகுக்கும் தொடர்பு இருக்காது. ஆம், மரணித்தவர்கள் பேசுவதில்லை என்பதை அறிவீர்களே!
தொடர்வது மறுமை வாழ்க்கை....!
அங்கு உங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உடலையும், அழகையும், அருட்கொடைகளையும் பற்றிய இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப் படுவீர்கள்.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும்.
= “ஒரு மனிதர் இறுதி விசாரணை நாளில் தன்னுடைய ஆயுளை எப்படி கழித்தார்? என்றும், அவருக்கு கொடுக்கப்பட்ட கல்வியை எவ்வாறு பயன்படுத்தி னார்? என்பதை பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தார்? எவ்வாறு செலவு செய்தார்? என்பதை பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்ட உடலை எவ்வாறு பயன்படுத்தினார்? என்பதை பற்றியும் கேட்கப்படாத வரை ஒருவரின் பாதம் அது நின்ற இடத்தை விட்டு நகராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ 2341)
எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் ?
முதலில் இறைவனின் பூமியில் இறைவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றம்.
உங்களுக்கு விபரீதங்கள் நேர்ந்திருந்தாலும் சரி, ஒன்றுமே நேராதிருந்தாலும் சரி இறைவனின் வரம்புகளை மீறும் வண்ணம் உடையணிந்து வெளியில் சென்று வரும்போது அந்நிய ஆண்களின் பார்வை உங்கள் மீது பட்டிருந்தாலும் சரி, படாதிருந்தாலும் சரி, குற்றம் குற்றமே! உங்கள் பதிவு புத்தகத்தில் அது பாவமாகப் பதிவாகிறது.
தொடர்ந்து உங்கள் உடலழகை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்ததன் காரணமாக மேலே கூறப்பட்டவாறு சமூகத்தில் உண்டான அனைத்து குழப்பங்களுக்கும் பாதிப்புகளுக்கும் நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோனதன் காரணமாக உண்டான பாவமும் உங்களுக்கு சேரும். ஒவ்வொருவரும் அவரவருக்குரியதை அடைந்தே தீருவார். இறுதித்தீர்ப்பு நாளின்போது அனைத்துமே வெளியாகும். வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பது அன்று நூறு சதவீத உண்மை!
எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும்(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

விசாரணை என்பது எந்த அளவுக்கு முழுமையானது என்றால் இவ்வுலகில் கருக்கொலை அல்லது சிசுக்கொலைக்கு உள்ளான குழந்தையும் அன்று உயிர் கொடுக்கப்பட்டு அதுவும் கூட குற்றவாளிகளைக் காட்டிக் கொடுக்கும்.
'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது)
(திருக்குர்ஆன் 82:8-9)
உங்கள் உடல் உறுப்புகளும் தோல்களும் உங்களைக் காட்டிக் கொடுக்கும்.
= அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்.
அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும்.
உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவைகளில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.
(திருக்குர்ஆன்41:20- 22)
= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)
= .....அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

கட்டுப்பாடுகள் உங்களின் நன்மைக்கே!

ஆம் சகோதரிகளே, மேற்கூறப்பட்டவை மனித வார்த்தைகளோ ஊகங்களோ அல்ல. இவ்வுலகைப் படைத்தவனின் மறுக்க முடியாத வார்த்தைகள். நாளை நடக்க இருப்பவற்றை இங்கேயே எச்சரிக்கிறான். சமூக நலன் கருதியே அவன் நமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளான். அவற்றைப் பேணி வாழ்ந்தால் இங்கு நமது தனி நபர் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் அமைதி மிக்கதாக மாறும். அந்த கட்டுப்பாடுகளைப் பேணி வாழும்போது ஒரு சில மன இச்சைகளைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை அல்லவா தயார் செய்து வைத்துள்ளான்.
சொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
= விசுவாசிகளான ஆண்களுக்கும் விசுவாசிகளான பெண்களுக்கும் இறைவன் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு இறைவனின் திருப்திதான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)
ஆம் சகோதரிகளே, உங்கள் நன்மை நாடியே உங்கள் இம்மை மற்றும் மறுமை நலன் நாடியே - இறைவன் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ அழைக்கிறான். நீங்கள் புறக்கணிக்கலாமா?
மனிதனே! கொடையாளனான சங்கைமிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். (திருக்குர்ஆன் 82:6- 8) 


ஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்?  http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_7422.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக