இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 டிசம்பர், 2019

கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம்


Image result for white sheet marginஒரு வெள்ளைக் காகிதத்தில் கடிதம் அல்லது கட்டுரை எழுத முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கடிதத்தின் எல்லைகளை வரையறுக்க கீழும்  பக்கவாட்டிலும் மார்ஜின் போட்டு ஒழுங்குபடுத்துவோம். எழுதத் துவங்கும்போது  கடித வரிகள் ஒன்றன்கீழ் ஒன்று சீராக இருக்க ரூல் போடுகிறோம். எழுத நினைப்பதை வாக்கியங்களாகப் பிரிக்கிறோம். வார்த்தைகளுக்கிடையே ஒரே மாதிரியான ஸ்பேஸ் விட்டு வரிகளை எழுதுகிறோம். ஒரு கட்டுரை எழுத நினைத்தால், முன்னுரை, முக்கிய உரை, முடிவுரை என தரம் பிரித்து பத்திகள் பிரித்து எழுதுகிறோம். இவ்வாறு வரம்புகளும் வரையறைகளும் விதிமுறைகளும் பேணுவது எதற்காக? அப்போதுதான் நாம் எழுதுவது ஒரு அர்த்தமுள்ள கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ அல்லது ஒரு காவியமாகவோ ஆகும். பிறரால் படிக்கவும் இரசிக்கவும் முடியும். மாறாக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மேற்கண்ட வரையறைகள் எதுவுமே பேணாமல் மனம்போன போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்படுபவை எழுத்துக்களே ஆனாலும் அதை கிறுக்கல் என்றும் எழுதியவரை  கிறுக்கன் என்றும்தான் மக்கள் அழைப்பார்கள்!
வீடு கட்டினாலும்..
அதேபோல நீங்கள் ஒரு காலி மைதானத்தில் வீட்டை கட்ட நினைத்தாலும் முதலில் என்ன செய்வீர்கள்?
மைதானத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வீட்டிற்கான எல்லை வகுப்பீர்கள். வரைபடம் வரைந்து வீடு கட்டுவதற்கு தேவையானவற்றை சேகரிப்பீர்கள். தொடர்ந்து தரையில் அஸ்திவாரம் போட கோடு போடுதல்குழி வெட்டுதல், வரையறுக்கப்பட்ட அளவையில் கலவை தயாரித்தல், அஸ்திவாரக் குழியில் கலவை போட்டு  அஸ்திவார  கற்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுக்குதல், கலவை போடுதல், அடுத்த வரிசை கற்களை அடுக்குதல் எனத் தொடங்கி இறுதியில் கூரை போட்டு முடிக்கும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் (do’s and don’ts) ஒழுங்கையும் (order) பின்பற்றியே வீட்டைக் கட்டி முடிக்கிறீர்கள். 
இனி, மேற்கண்ட எந்த எல்லைகளையும் வரையறைகளும் ஒழுங்கையும் எல்லாம் புறக்கணித்துஎன் வீடு இது, என் விருப்பம் எனது உரிமைஎன்று கூறிக் கொண்டு மனம்போன போக்கில் நடந்து கொண்டால் என்ன நடக்கும்? மைதானத்தில் அங்கொரு குழி இங்கொரு குழி அங்கொரு கல் இங்கொரு கல் என ஒரு குப்பை மேடுதான் உருவாகி இருக்குமே தவிர குடியிருக்க ஒரு வீடு அங்கு அமையாது என்பதை அறிவோம். 

எல்லைகளும் கட்டுப்பாடுகளும்
இவ்வாறு நீங்கள் உணவு சமைப்பதாக இருந்தாலும், ஆடை தைப்பதாக இருந்தாலும், ஏதேனும் உபயோகமுள்ள ஒரு பொருளை தயாரிப்பதாக இருந்தாலும் அங்கெல்லாம் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் ஒழுங்கையும்  பின்பற்றினால்தான் அந்த முயற்சி பயனளிப்பதாக இருக்கும் என்பது  திண்ணம்!  மாறாக தான்தோன்றித்தனம் பயனுள்ள எதையுமே விளைவிக்காது என்பதும் தெளிவு! ஆக, எல்லைகளும் கட்டுப்பாடும்  ஒழுங்கும்தான் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கும். 
 இவ்வாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளும் கட்டுப்பாடும்தான் அவற்றை பயனுள்ளதாக ஆக்குகின்றன. 
அதேபோல அவ்வாறு நீங்கள் தயாரித்த உணவானாலும் ஆடையானாலும் வீடானாலும் அவற்றை பயன்படுத்துவதற்கும் விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, மேலாடையைக் கீழாடையாக பயன்படுத்தவோ, சமைத்த உணவை சுவற்றில்  பூசவோ, மனிதர்களுக்காகக் கட்டிய வீட்டை மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தவோ  மாட்டோம். ஆக, பொருட்களின்  தயாரிப்பு  விஷயத்திலும் சரி, பயன்பாட்டு விஷயத்திலும் சரி, நாம் யாருமே
தான்தோன்றித்தனமாக செயல் படுவதில்லை .  காரணம் நான் அதன் தீய விளைவுகளை நன்றாக அறிவோம்.
அப்படியானால் உலகத்திலேயே மாபெரும் தயாரிப்பான மனித உடலைப் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் அதன் பயன்பாட்டு விஷயத்தில்  தான்தோன்றித் தனமாக செயல்பட முடியுமா?
கண்டிப்பாக, இந்த மனித உடலின்  பயன்பாடு ஆக்கபூர்வமாக அமைய வேண்டுமானால் மன இச்சைக்கு அடிபணிந்து செயலாற்றுவதை விட இந்த உடலை வடிவமைத்து உருவாக்கியதோடு நில்லாமல் அதனை இடைவிடாது பரிபாலித்தும் வருபவன் எவனோ அவனது வழிகாட்டுதல்படி- அதாவது அவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல்- விலக்கல்களையும் மதித்து-  செயல்படுவதுதானே முறை?
இதுதான் இஸ்லாம்
அந்த இறைவன் நமக்கு கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களைப் பேணி அவனது வழிகாட்டுதல் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் ஒரு பொருள் அமைதி என்பதாகும், அதன் இன்னொரு பொருள் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்தல் என்பதாகும். அதாவது கீழ்படிதல் ( discipline) மூலம் பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம் என்பதாகும்.
உலகம் என்ற  பரீட்சைக் கூடம் 
இப்போது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி ஒப்புகொண்டாலும் சரி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, நீங்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனமான உண்மை இதுதான். அதாவது இவ்வுலக வாழ்க்கையை  ஒரு பரீட்சையாக அமைத்துள்ள இறைவன் இந்த கீழ்ப்படிதலைத்தான் நம்மிடம் பரீட்சிக்கிறான். அதாவது யாராவது இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் -அதாவது  இறைவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல் - விலக்கல்களையும்  பேணி  அதன்படி வாழ்ந்தால் - அவர்களுக்கு  இவ்வுலக வாழ்க்கையில் ஒழுங்கும் நல்லொழுக்கமும்  கைகூடுகிறது. அதன்மூலம் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது
மேலும் மறுமை வாழ்க்கையில் அதற்குப் பரிசாக நிரந்தரமான சொர்க்கத்தையும் அடைகிறார்கள்.
  மாறாக யாரெல்லாம் இந்த உண்மையைப்  புறக்கணித்து, - அதாவது படைத்தவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை அலட்சியம் செய்து - அவனுக்குக்  கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக இந்த வாழ்க்கையை வாழ்கிறார்களோ   அவர்களுக்கு இம்மை வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் உரிய முறையில் கைகூடுவதில்லை. தனி நபர் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் குழப்பங்கள் நிறைந்ததாக அமைகிறது. படைத்தவனை மதிக்காமல் அவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றத்திற்கு 
தண்டனையாக மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.

இறைவன் தனது இறுதிவேதத்தில் தெளிவாக அறிவிக்கிறான்: 
 = ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதாகவே இருக்கிறது, தீமையை (துன்பங்களை)க் கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம், மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப்படுவீர்கள்.(திருக்குர்ஆன்  21:35)
= திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! (திருக்குர்ஆன் 18:7)
கீழ்படிந்த வாழ்க்கை மட்டுமே ஏற்புடையது 
இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த வாழ்க்கை என்ற  பரீட்சையில்  மனிதர்கள் சுயமாக உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும், முன்னோர் வகுத்த நெறிகளும், நாத்திகர்கள் உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும்  தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறைகளும் எல்லாமே தோல்வியை சந்திக்கும். இறைவன் அவர்களைப் பார்த்து கேட்பதைப் பாருங்கள்:
= இறைவனின்  மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.(திருக்குர்ஆன் 3:83)
இவ்வுலகையும் அவர்களையும் படைத்தவன் பக்குவமான வாழ்க்கை நெறியை வழங்கியிருக்க அதைப் புறக்கணித்து உருவாக்கப்பட்டவை அவனுக்கு ஏற்புடையதல்ல என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறான்: 
= திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே இறைவனிடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி  ஆகும். (திருக்குர்ஆன் 3:19)
அவ்வாறு வாழ்ந்து செல்பவர்களின் மறுமை நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இறைவன் இன்றே எச்சரிக்கிறான் :
= இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக