இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 டிசம்பர், 2016

அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்


இஸ்லாம் என்றால் என்ன?
. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது! .
ஆக, இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி....... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் நமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும். மேலும் ஒருவர் இறைவனுக்கு கீழ்படியும் வரைதான் முஸ்லிமாக இருக்கிறார் என்பதும் எப்போது கீழ்படிதலை விட்டுவிட்டாரோ அப்போது இஸ்லாமிய வட்டத்தில் இருந்து விலகியும் விடுகிறார் என்பதும் நாம் உணரவேண்டிய உண்மையாகும்
இஸ்லாத்தின் அடிப்படைகள்
இந்த இறைவனின் மார்க்கம் முக்கியமாக மூன்று நம்பிக்கைகளை முன்வைக்கிறது. இவை எல்லாக் காலங்களிலும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வந்த இறைவனின் தூதர்களால் அந்தந்த மக்களுக்கு போதிக்கப்பட்டது. அவை இவையே:
1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்என்று பொருள்)
2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (திருக்குர்ஆன் 2:21.)
அவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.
3. வினைகளுக்கு விசாரணையும் மறுமை வாழ்க்கையும்: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)
இஸ்லாத்தை தோற்றுவித்தவர் முஹம்மது நபி அல்ல!
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு கொள்கை அல்லது பண்பின் பெயர் என்பதையும் இதைக் கடைப்பிடிப்பவரே முஸ்லிம் என்பதையும் அறிந்து கொண்டீர்கள். எனவே இது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையையும் இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இந்தத் தவறு இன்றும் கூட பள்ளிக்கூடப் பாட புத்தகங்களில் திருத்தப்படாமலே தொடர்கிறது.
ஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது. அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தா.ன் இஸ்லாம்என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.
ஏன் அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்?
படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ்என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. இறைவனை ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் அவனைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்!
வானத்தில் காணும் சூரியனை இங்கு தமிழர்கள் சூரியன் அல்லது கதிரவன் என்று அழைகிறோம். அதே சூரியனை வட இந்தியாவில் காண்பவர்கள் தங்கள் மொழியில் சூரஜ் என்று அழைப்பதை அறிவோம். அதே சூரியனை பூமியின் மறுபாகத்தில் இருந்து காணும் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் ஆங்கிலத்தில் சன் என்று அழைப்பதை அறிவோம். இவ்வாறு ஒரே சூரியனை உலகின் பல்வேறு மொழிகளில் விதம் விதமாக அழைத்தாலும் இந்த பூமியைப் பொறுத்தவரை சூரியன் ஒன்றே என அறிவோம். அது போலவே இவ்வுலகை படைத்து பரிபாலிக்கும் இறைவனை பல்வேறு மொழிகளில் பலவாறு அழைத்தாலும் அந்த இறைவன் ஒரே ஒருவனே என்பதையும் அவன் மட்டுமே நம் வணக்கத்துக்கும் மற்றும் அழைத்துப் பிரார்த்திப்பதற்கும் தகுதியானவன் என்பதை நாம் அறியவேண்டும். அல்லாஹ் என்ற அரபு வார்தையின் உண்மைப்பொருளும் அதுவே! வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்என்பதே இவ்வார்த்தையின் பொருளாகும்.
எனினும் இறைவனைக் குறிக்கும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு வேறு ஒரு தனிச் சிறப்பும் உள்ளது:
= இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess அல்லது கடவுள் கடவுளர்கள் என்றும் பகவான் பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
-----------------------------------------
இஸ்லாம் கூறும் இறைக் கொள்கை
= இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
அதாவது இவ்வுலகைப் படைத்தவனான அந்த ஏகஇறைவன் தனித்தவன். அவனது படைப்பினங்களைப் போல உணவு, நீர், காற்று போன்ற தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் புதிதாக உருவானவன் அல்ல. அவனுக்கு மனிதர்களைப்போல பெற்றோர்களும் பிள்ளைகளும் சந்ததிகளும் மனைவிகளும் என யாருமே இல்லை. அவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லை. அவனுக்கு நிகரான எதுவும் எவரும் எங்கும் இல்லை. இந்த குணங்களை இறைவனுக்கு இலக்கணமாகக் போதிக்கிறது இஸ்லாம்.
= வணக்கத்துக்கு உரியவன் யார்?
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 3:6).
= இடைத்தரகர்களுக்கு இடமில்லை
இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் நேரடியாக வணங்கவும் இஸ்லாம் சொல்கிறது.
திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்:
* நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம" (திருக்குர்ஆன் 50:16)
* (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ""நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்'' (திருக்குர்ஆன் 2:186)
இறைவனை எவ்வாறு அறிவது?
கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.
நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இறைவனை அறியுமாறு இறைவன் நம்மை அறிவுறுத்துகிறான்.
2:164 நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (இறைவனுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
---------------------------------------------------
முந்தைய வேதங்களில் ஏகத்துவம்
இன்று இறுதிவேதம் திருக்குர்ஆன் வலியுறுத்துவது போலவே இறைவனின் முந்தைய வேதங்கள் என்றும் புனித நூல்கள் என்றும் மக்களால் பரவலாக நம்பப்படும் நூல்களிலும் இவ்வுண்மை வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ( திருமந்திரம்)
தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (திருக்குறள்)
ஏகம் ஏவாதித்யம் ( (அவன் ஒருவனே, அவனுக்குப் பிறகு எவருமில்லை) - சாந்தோக்ய உபநிஷத்- Chandogya Upanishad, Chapter 6, Section 2, Verse 1
நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) - ஸ்வேதஸ்வதாரா உபநிஷத் Svetasvatara Upanishad, Chapter 6, Verse 9
நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) நாதஸ்ய ப்ரதிம அஸ்தி ( அவனைப்போல் எதுவுமில்லை) - ஸ்வேதஸ்வதாரா உபநிஷத் மற்றும் யஜூர் வேதம்- Svetasvatara Upanishad, Chapter 4, Verse 19 & Yajurveda, Chapter 32, Verse 3
யா ஏக இத்தமுஸ்துஹி (நிகரில்லாதவனும் தனித்தவனும் ஆகிய அவனைத் துதிப்பீராக) ரிக் வேதம்- Rigveda, Book No VI, Hymn 45, Verse 16
'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது இஸ்லாத்தின் மூலமந்திரம்-
வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை' என்பது இதன் பொருள்.
இதை எந்த ஒரு கருத்துச் சிதைவும் இல்லாமல் 'பிரம்ம சூத்திரம்' சொல்லித்தருவதைப் பாரீர்:
ஏகம் பிரஹம் தவித்யே நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஐன்.
பொருள்: இறைவன் ஒருவனே வேறு இல்லை. இல்லவே இல்லை
பைபிளில் இறை ஏகத்துவம்
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -
கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு எரேமியா 10:10)
இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்(உபாகமம் 6:4)
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்(ஏசாயா 44:6)
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்(யோவான் 17:3)
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்(மத்தேயு 4:10)
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்(மாற்கு 12:29)

இறைவன் அல்லாதவற்றை வணங்குதல் மகாபாவம்
இணைவைத்தல் என்றால் என்ன?
படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக
- மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பினங்களை வணங்குவது மற்றும் பிரார்த்திப்பது,
- இவ்வுலகிலிருந்து மறைந்துவிட்ட மனிதர்களின் உருவச்சிலைகள்,, சமாதிகள் (தர்காக்கள்), அல்லது வேறு கற்பனை உருவங்களை வணங்குவது அல்லது அவர்களிடம் பிரார்த்திப்பது
- இறைவன் அல்லாத எதனையும் இறைவன் என்றோ கடவுள் என்றோ அழைப்பது மற்றும் பிரார்த்திப்பது
- ஏகனான இறைவனுக்கு இல்லாத மக்களையும் மனைவிமார்களை எல்லாம் கற்பித்து அவர்களை வணங்குவது.
இன்னும் இவைபோன்ற செயல்களுக்கு இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறப்படும்.
திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு இப்பாவத்தைக் கண்டிக்கிறது:
'.....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்......’ (திருக்குர்ஆன் 31:13)
'நிச்சயமாக இறைவன் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.' (திருக்குர்ஆன் 4:48)
இணைவைப்பினால் நாம் அனுபவிக்கும் கொடுமைகள்
கொலை, கொள்ளை, விபச்சாரம் என்றெல்லாம் பல பாவங்கள் இருக்கும்போது இந்த இணைவைக்கும் பாவத்தை ஏன் பாவங்களில் எல்லாம் தலையாயது என்கிறான் இறைவன்? அப்படியென்ன விபரீதம் இதில் இருக்கிறது? பெரும்பான்மையான மக்களால் இப்பாவம் பரவலாக செய்யப்பட்டு வருவதால் இதன் விபரீதம் மக்களால் உணரப்படாமலேயே தொடர்கிறது. ஆனால் சற்று கவனமாக சிந்தித்தால் இது நம்மையும் நம் நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கும் எவ்வளவு கொடிய புற்றுநோய் என்பதை அறிந்து கொள்வீர்கள்:
1. இது மிகப்பெரிய நன்றி கேடு: நம்மைப் படைத்தது மட்டுமல்ல , ஒன்று விடாமல் நம் தேவைகளை ஒவ்வொரு நொடிகளும் அயராது நிறைவேற்றி வருபவன் அந்த மாபெரும் கருணையாளன். நாம் தாயின் கருவறையில் உருவானது முதல் நமக்கு உணவு, நீர் , காற்று, தாய் தந்தை அரவணைப்பு, என்று தொடங்கி நாம் மரணத்தைத் தழுவும் வரை நம் மீது அவன் காட்டிவரும் கருணை அளப்பரியது. நமது தேவைகளை நிவர்த்தி செய்யும் விதம் நமது உடலையும் , உறுப்புக்களையும், இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் வடிவமைத்து இயக்கி வருபவன் அவன். அவற்றுக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா? இந்த அருட்கொடைகளில் ஏதாவது ஒன்று தடைபடும் பொது நாம் படும் பாட்டை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இணைவைத்தல் என்ற செயல் மூலம் என்ன செய்கிறோம்? அவனுக்கு காட்ட வேண்டிய நன்றியறிதலை ஒரு உயிரற்ற உணர்வற்ற ஒரு பொருளுக்கு நாம் காணிக்கையாக்குகிறோம். இதோ இறைவன் கேட்கிறான்:
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்? .(திருக்குர்ஆன் 35:3)
''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் - இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' (திருக்குர்ஆன் 30:40)
2. பாவங்கள் பெருக மூல காரணம் இது : மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக கடவுளைப் பற்றிய பயம் வேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வந்ததன் விளைவு மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. ஆக, இந்த இறைவனுக்கு இணை வைக்கும் செயல்தான் இன்று நாட்டில் காணப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணம் அல்லது ஊற்றுக் கண் என்றுணரலாம். அப்படிப்பட்ட கடவுள் பயமற்ற தலைமுறைகள் உருவாகும் போது பாவங்கள் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.
ஒரு உதாரணமாக, எவரது வீட்டிலாவது சில நண்பர்கள் மது அருந்தக் கூடுவார்களாயின், அப்போது அங்கு ஏதாவது சாமிப்படங்களோ சிலைகளோ இருந்தால் முதலில் அதை மூடிவிட்டு தங்கள் பாவத்தைத் தொடர்வதை நீங்கள் காணலாம். அதுதான் கடவுள் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஊறியிருப்பதே அதற்குக் காரணம்!
3. இது இறைவனை இழிவு படுத்தும் செயல் . நமது அன்புக்கும் மரியாதைக்கும் முழு முதற்தகுதி வாய்ந்தவன் நமது இரட்சகன். அவனது வல்லமையும் ஆற்றலும் அறிவும் அளவிட முடியாதவை. அவனுக்கு மரியாதை செய்கிறோம் என்று சொல்லி கற்களையும் மரங்களையும் மனிதர்களையும் சமாதிகளையும் சூரியனையும் சந்திரனையும் நட்சந்திரங்களையும் காட்டி இவை எல்லாம் கடவுள்கள் என்று கற்பிப்பது பொய் மட்டுமல்ல, அது அவனை சிறுமைப் படுத்தும் செயல். உதாரணமாக நமது தாய்க்கு பதிலாக ஒரு நாயின் அல்லது பன்றியின் உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப் பெற்றெடுத்த தாய்' என்று யாராவது கூறினால் எவ்வாறு வெகுண்டேழுவோம்? அகில உலகத்தையும் அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு உயிரற்ற உணர்வற்ற பொருட்களை ஒப்பாக்குவது எவ்வளவு பெரிய இழிசெயல்!
4. இது மிகப்பெரிய பொய்! எப்படி? உதாரணமாக ஒருவர் ஒரு பேனாவைக் காட்டி இதோ இது ஓர் யானை நம்புங்கள் !என்று கூறினால் அதை பொய் என்பீர்களா? இல்லை உண்மை என்பீர்களா? ஆம், சிந்தியுங்கள் அன்பர்களே! எப்படிப்பட்ட படுபயங்கரமான பொய்! அதை மக்கள் பரவலாக நம்புகிறார்கள் என்றால் அந்த மக்களை எவ்வாறு அழைப்பீர்கள்? இன்று உங்கள் கண் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறது பாருங்கள்! உணர்வற்ற உயிரற்ற உருவங்களையும் சமாதிகளையும் காட்டி இவர்தான் கடவுள் அல்லது இதுதான் கடவுளின் உருவம் என்றோ சொன்னால் எவ்வளவு பெரிய பொய் அது! அதிகமான பேர் அந்தப் பொய்யை நம்பி விட்டால் அது உண்மையாகி விடுமா?
ஆதியும் அந்தமும் அற்ற என்றென்றும் உயிர் வாழும் சர்வ வல்லமை கொண்ட இறைவன் எங்கே? மனித கரங்கள் உருவாக்கிய உயிரற்ற உருவங்கள் எங்கே? எதனோடு எதனை ஒப்பாக்குகிறார்கள்? இது படித்தவர்களையும் பாமரர்களையும் தனக்கு பலியாக்குக்கின்ற ஒரு பொய்!
5. மோசடிகளில் எல்லாம் மிகப் பெரிய மோசடி இது: மேற்கண்ட மாபெரும் பொய்யை மையமாக வைத்து மிகப்பெரிய மோசடி அரங்கேறுகிறது. கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத் தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும் கொள்ளை அடிக்கிறார்கள். படைத்த இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள். அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு படைப்பினங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது. மிக மிக வேகமாகப் பரவும் நாசக்கார மோசடி இது. எந்த அளவுக்கு என்றால் நாட்டின் இயற்க்கை வளங்களும் பொருள் வளங்களும் மனித வளங்களும் சூறையாடப்பட்டு நாடு பிற்போக்கான நிலைக்கு தள்ளப்படுகிறது. வளங்கள் பல இருந்தாலும் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடும் நிலை ஏற்படுகிறது.
இதற்கு உலகிலேயே மிகப் பெரிய உதாரணம் எது தெரியுமா? வேறு ஏதுமல்ல, நமது தாய்த்திரு நாடுதான்!
இயற்கை வளங்களாலும், செயற்கை வளங்களாலும், மனித வளத்தாலும் அறிவு வளத்தாலும் ஒருசேர தன்னிறைவு பெற்றுள்ள நாடு நம்நாட்டைப் போல் உலகில் எங்குமே இல்லை எனலாம். உலகிலேயே முன்னிலை வல்லரசாக திகழ வேண்டிய நம்மை பின்னுக்குத் தள்ளி வைத்திருப்பது எது? நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கேள்வி இது.
கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்.
. இந்நாட்டில் எந்த வித உற்பத்தியோ சேவையோ மக்களுக்கு தராமல் மக்களின் பணத்தை மட்டும் கறந்து கொண்டிருக்கும் வியாபாரம் எது?
. மக்களின் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த வித முதலீடும் மூலதனமும் இல்லாமல் மூலைக்கு மூலை, நாளுக்கு நாள் பெருகி வரும் வியாபாரம் எது?
. நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களின் நலனுக்கோ எவ்வித பங்களிப்பும் செய்யாது பெரும் ஊதியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்கள் யார்?
. நாட்டின் கறுப்புப் பண முதலைகளுக்கும் சுரண்டல்காரர்களுக்கும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அலைகழித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் யார்?
இவற்றுக்கும் இன்னும் இவை போன்ற கேள்விகளுக்கும் நாம் பெறும் ஒரே விடை - இறைவன் அல்லாதவற்றை கடவுளாக சித்தரித்து செய்யப்படும் மோசடி வியாபாரமும் அந்த வியாபாரிகளும் ஊழியர்களும்தான்.
இன்று இந்தியாவில் உள்ள தர்காக்கள், கோவில்கள், மடாலயங்கள், ஆசிரமங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு இவற்றின் சராசரி வருமானங்களைக் கணக்கிட்டு பார்த்தால் நம் நாட்டின் வளங்களும் மக்களின் உழைப்புகளும் எங்கே போய் கொட்டபடுகின்றன என்ற உண்மை உங்களுக்கு புலப்படும். சமீப காலங்களில் சில ஆசிரமங்களில் இருந்தும் மற்றும் கோவில் அறைகளிலிருந்தும் கண்டெடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பை அனைவரும் அறிவீர்கள்! இவையெல்லாம் நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்தால் இங்கு வறுமை இருக்குமா சிந்தியுங்கள்.
உண்மையான இறைவனை வணங்குவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை, சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவை இல்லை என்பதை அறிவோம். ஆனால் மக்கள் உயிரும் உணர்வும் அற்ற படைப்பினங்களை கடவுளாக பாவித்து அவற்றை நாடும் போது அவர்கள் எப்படிப்பட்ட மோசடிகளுக்கு இரையாகிறார்கள், நாட்டு மக்களின் உடமைகளும் உழைப்புகளும் எப்படி கொள்ளை போகின்றன என்பதை சுட்டிக்காட்டவே இந்த உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறோம். யாரையும் புண்படுத்துவது நமது நோக்கமல்ல.
அணு முதல் அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருபவன், அளவிட முடியாத ஆற்றல் உள்ளவன், எல்லை அற்ற ஞானம் கொண்டவன், என்றென்றும் வாழ்பவன், தன அயராத கட்டளைகளைக் கொண்டு உயிர்கள் அனைத்தையும் இயக்கி வருபவன், தனக்கு எந்த வித உவமையும் இல்லாதவன் இறைவன்! ஆனால் இங்கு என்ன நடக்கிறது? அறவே உயிரற்ற, உணர்வற்ற பொருட்களை நமக்குக் காட்டி இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என்று கற்பித்து எவ்வளவு பெரிய மோசடிகள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள்! எவ்வளவு தலைமுறைகளை தொடர்ந்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்?
6. மனித குலத்தை பிளவு படுத்தும் கொடிய பாவம் இது: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. இந்தக் கொடுமைக்கு பலியான நாடுகள் பல. அவற்றில் சிறந்த உதாரணம் நமது நாடுதான். நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம், ஒரே மாமிசம், ஒரே உடலமைப்பு என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்? ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்ல, ஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன. இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால், இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றால் எந்த பயனும் கிடையாது. அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.
இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து மதம் மாறியவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்த இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே! அம்பேத்கர் , பெரியார் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் தங்களின் வாழ்நாளை இத்தீமைகளுக்கு எதிராக போராடிக் கழித்தனர். ஆனால் இவர்கள் யாராலும் செய்ய முடியாத தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு இவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது இந்த ஏக இறைக்கொள்கை!
நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் மக்களைப் பிரித்து பகைமையை விதைத்து வரும் இனவெறி, நிறவெறி, மொழிவெறிப் பேய்களை அடக்கி அழிக்கிறது இந்த ஓரிறைக் கொள்கை! அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி மற்றும் இனவெறி கொண்டு சிதறுண்டு ஒருவரையொருவர் வேட்டையாடிக்கொண்டு இருந்த மக்கள் இன்று ஒரே அணியில் தோளோடு தோள் நின்று தொழுவதும் அன்னியோன்னியமாகப் பழகுவதும் இன்று உலகம் கண்டுவரும் கண்கொள்ளாக் காட்சிகள்! ஆம், இன்று அங்கெல்லாம் வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த ஓரிறைக்கொள்கை!
7. மனிதனின் சுயமரியாதையை அடகு வைக்கச் செய்யும் இழிவு:
பகுத்தறிவு படைத்த மனிதனை அவனைப் போன்ற மனிதனுக்கு முன்னாலும் அவனைவிட அறிவில் குறைந்த இன்ன பிற ஜீவிகளின் முன்னாலும் மட்டுமல்ல, அறவே அறிவும் உணர்வும் அற்ற படைப்பினங்களுக்கும் முன்னால் தலைகுனியவும், சாஷ்டாங்கம் செய்யவும் வைக்கிறது இந்த இணைவைக்கும் பாவம். சர்வ வல்லமையும் ஆற்றலும் கொண்ட இறைவன் முன்னால் மட்டுமே மனிதன் தலைகுனிய வேண்டும். அவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ வேண்டும் என்கிறது இஸ்லாம். அவ்வாறு வாழ்ந்தால் எந்த படைப்பினகளையும் அஞ்ச வேண்டியதில்லை என்ற மனோ உறுதி வளர்க்கப் படுகிறது. இந்த இறைவன் கற்றுத் தரும் மார்க்கத்தைப் போல ஒரு சுயமரியாதை இயக்கத்தை உலகில் எங்கிலும் காணமுடியாது.
ஆக, பற்பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் மோசடிகளுக்கும் வழிகோலும் அனைத்து போலி வழிபாடுகளையும் நாம் அனைவரும் எதிர்த்தாக வேண்டும் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்! இறைவனுக்கு இணைவைக்கும் செயல் யார் செய்தாலும் அது பாவமே! மறுமையில் அவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் காத்திருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க இவ்வுலக வாழ்விலேயே இப்பாவம் எப்படிப்பட்ட அழிவையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் அறிந்தோம். நாம் எம்மதத்தில் பிறந்திருந்தாலும் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் சரி, அனைவருமே நம்மைப் படைத்த இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மட்டுமே நமது இம்மை மற்றும் மறுமையின் வெற்றி அமைந்திருக்கிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை(திருக்குர்ஆன் 5:72)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்: புகாரி)
------------------------------------------------------------
மறுக்க முடியாத மறுமை வாழ்க்கை!
மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? பிறப்பில் துவங்கி மரணத்தோடு முடியும் இந்த தற்காலிக வாழ்வு எதற்காக? மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? இம்மை வாழ்வு பற்றியும் மரணத்திற்குப் பிறகு அவனுக்கு என்ன காத்திருக்கிறது என்பது பற்றியும் இவ்வுலகை எந்த இறைவன் படைத்து இயக்கி வருகிறானோ அவன் கூறுவது மட்டுமே 100 சதவீதம் உண்மை. மற்றவை அனைத்தும் ஊகங்களே. இறைவனின் வார்த்தைகளில் இருந்தே அவற்றை அறிந்து கொள்வோம்.
= இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
= ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவும்!
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்!
39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.
நேரம் குறிக்கப்பட்ட நாள் அது!
அது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.
78:17 .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
இன்று நம் வினைகள் பதிவாகின்றன!
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
நம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்!
99:6-8 .அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், (தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!
4:57 (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
தீயோர் நரகில் நுழைவர்!
78:21-26 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
உண்மை இதுவே, மற்றவை ஊகங்களே!
நம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை! மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
மறுமையை நம்பமுடியவில்லையா?
36:77 .மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78 .மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று.
36:79 .''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80 .''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81 .வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82 .எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
= நீங்கள் கடந்து வந்த கட்டங்களைப் பாருங்கள்:
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
=மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
75:3, 4 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
= உங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான்:
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
= மரணத்தையும் உயிர்தெழுதலையும் ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம். திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
39:42 .அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.
= மரணம் நம்மைத் தழுவும் முன் அவன்பால் திரும்புவோம்!
10:31. ''உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் ; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.
ஆம் அன்பர்களே! நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவன் நம் இறைவன். அவனுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். நமது உடல் பொருள், ஆவி என அனைத்தும் அவனுடையதே. அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் நாம் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். மாறாக அவனுக்குக் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தால் இங்கும் அமைதியின்மையே. மறுமையிலும் நரகமே!
நபிகள் நாயகம் (ஸல்) யார்? - அவரது முக்கியத்துவம்
அடுத்ததாக திருக்குர்ஆனை மனிதகுலத்துக்கு அறிமுகப்படுத்தியவரும் அந்த திருக்குர்ஆனின் ஒவ்வொரு கட்டளைகளையும் தன் தனது வாழ்வில் தவறாது செயல்படுத்தியவரும் மனிதகுலத்துக்கு ஓர் அழகிய முன்மாதிரி என்று இறைவனால் சிறப்பித்துக் கூறப்பட்டவருமான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பற்றி நாம் அறியக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நபிகளாரின் வாழ்க்கை முன்னுதாரணமும் திருக்குர்ஆனும்தான் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு அடிப்படையாகின்றன.
நம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் அதுவே இஸ்லாம்) என்ற அதே கொள்கையைத்தான் தத்தமது மக்களுக்கு போதித்தார்கள்.
அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான்.
கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது.என்று போதித்தார்கள். மேலும் அவர்கள் மக்களுக்கு பாவம் எது புண்ணியம் எது என்பதை விளக்கிக் கூறுவதோடு ஒரு முன்மாதிரி புருஷர்களாகவும் மக்களிடையே வாழ்ந்து காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் தத்தமது ஊர்களில் மக்களோடு இணைந்து தர்மத்தை நிலை நாட்டினார்கள். மக்களும் கலப்படமில்லாத ஏக இறைவழிபாடு மூலம் ஒன்றிணைந்த நல்லொழுக்கமுள்ள சமூக வாழ்வில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அமைதியையும் அனுபவித்தார்கள்.
ஆனால் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது?
பிற்கால மக்களில் சிலர் இறந்து போன இறைத் தூதருக்கு அஞ்சலி என்ற பெயரில் அவருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து மரியாதை செய்ய ஆரம்பித்தார்கள். நாள் செல்லச் செல்ல ஷைத்தானுடைய தாக்கத்தால் அந்த இறைத்தூதர்களுக்கு சிலைகளை வடித்தார்கள்! அவ்வாறு மக்கள் அந்த இறைத்தூதர்களையே வணங்க முற்பட்டார்கள் !
என்ன விபரீதம்! ‘படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் , மனிதர்களையோ, புனிதர்களையோ, சிலைகளையோ எதையுமே வணங்காதீர்கள் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டியவர்களுக்கே சிலை வடிக்கப்பட்டு அவர்களயே வணங்கும் மடத்தனம்! .... இல்லை இல்லை அவரது சிலையை வணங்கும் மடத்தனம் தொடர்ந்தது! நாளடைவில் அவர்களுக்காக கோவில்களும் கட்டப்பட்டன.
இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின. இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
எந்த ஓரிறைக் கொள்கையை முன்னாள் இறைத்தூதர்கள் வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும் இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சுருக்கமான வரலாறு
முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.
அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள்.
இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களா? கற்பனை செய்து பாருங்கள்! ஆம், நபிகளாரும் அவரோடு சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. . பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து பொறுமையோடு தீயோரின் அடக்குமுறைகளை எதிர்கொண்டாலும் ஒருகட்டத்தில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகவே, இறைவனின் கட்டளைப்படி நபிகளார் மக்காவைத் துறந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மதீனா நகருக்குச் செல்ல நேர்ந்தது.
அங்கு ஏற்கனவே இஸ்லாம் பரவியிருந்ததால் அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றார்கள். அது மட்டுமல்ல மதீனாவில் இஸ்லாம் வளர வளர ஒரு இறை நம்பிக்கையாளர்களின் சமூக அமைப்பும் அரசும் அமையும் அளவுக்கு வலிமை பெற்றார்கள். ஆனால் மக்காவின் கொடுங்கோலர்கள் அங்கும் படை எடுத்து வந்து தாக்க நபிகள் நாயகமும் ஆதரவாளர்களும் தற்காப்புப் போர் புரிய நேரிடுகிறது. தொடர்ந்து நடந்த போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி சத்தியத்திற்கே. மக்கவும் வெற்றி கொள்ளப் படுகிறது. கொடுமை செய்தவர்களுக்கும் நபிகளார் இறுதியில் பொது மன்னிப்பு வழங்க அனைவரும் சத்தியத்தை ஏற்க்கிறார்கள். அராபிய நாடு முழுவதும் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் தனது 63-வது வயதில் நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் தனது நபித்துவ வாழ்வின் போது அதாவது 40-வது வயதிலிருந்து 63-வது வயது வரை சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளின்போது அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவுரைகளாகவும் கட்டளைகளாகவும் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சிறப்புகள்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது ஒருசில சிறப்புகளை அறிந்துக்கொள்வது அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் நமக்கு எடுத்துணர்த்தும். முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை:
1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள். நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.
2. அடுத்த வேறுபாடு: முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது,
மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம் பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம்.
இது எப்படி?
முஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதை அறிவீர்கள்.
இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக் காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர். தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.
இதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். பாலும் பழமும் கைகளிலேந்தி.......அல்லது நான் ஆணையிட்டால்...போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா? ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.
புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும் பலரும் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ஓதப்படுவதுஎன்பதே!
ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.
உலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே! குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்)! இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்(திருக்குர்ஆன் 15:9)
இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன், பைபிள், பகவத்கீதை உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும், மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?
இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா? அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.
3. அடுத்த வேறுபாடு: முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபடுவதைப் போல் இவரை யாரும் வழிபடுவதில்லை.
இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள் படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்என்று எச்சரித்தார்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.
4. அடுத்த வேறுபாடு: இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.
இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள் அவர் செய்த செயல்கள் பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.
அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது. அவர் மூலமாக இறைவன் அறிவித்துள்ள செய்திகள்தான் ஹதீஸ் அல்லது நபிமொழிகள் என்று அறியப்படுகின்றன.
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
அடுத்ததாக இந்த இஸ்லாம் ஏன் பலரின் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்பதை அறிய முற்படுவோம்.இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவம் என்பதை அறிந்தோம்.
அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.
இது அனைவருக்கும் பொதுவான ஓர் கொள்கை!
.இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப் பட்டது.
தலைசிறந்த வாழ்க்கை இலட்சியம்
யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம்
இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் அவர்கள் மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.
மனிதகுல ஒற்றுமையும் சகோதரத்துவமும்
இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.
நன்மையை எவுதலும் தீமையைத் தடுப்பதும்
இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.
இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று!
= தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் வெகுண்டெழுகிறார்கள்.
= இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது! மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது!
= நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.
= மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள். இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரையும் அதர்மங்களுக்கு எதிராகப் போராடுவோரையும் ஊடகங்கள் மூலமாக தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள்.
ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
--------------------------------------------------------
இஸ்லாம் மலரும்போது என்ன நடக்கும்?
மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப் படுவதால் பாவங்கள் விலகும். மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை உணர்வு மிக்கவனாக அது வார்த்தெடுக்கும். அநீதியும், அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து அங்கே தர்மங்களும், நல்லறங்களும் நீதியும் நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் நாட்டுவளங்களை நெறியோடு பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே வளர்ந்து வரும்.
மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப் படுவதாலும் அவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுவதாலும் தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கை, சுயமரியாதை உணர்வு, வீரம், பாவங்களில் இருந்து விலகியிருத்தல், தியாகமனப்பான்மை, பொறுமை, பிற உயிர்களிடம் அன்பு, பணிவு போன்ற நற்பண்புகள் மக்களின் வாழ்வில் தழைக்கும்.
பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிந்தால் கடவுளின் பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும் வீண்சடங்குகளும் ஒழியும். பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுவார்கள். இந்த நிமிடம் வரையும் அயராமல் நடைபெறும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வரும். தொடர்ந்து நாட்டில் செல்வ வளம் செழித்தோங்கும், ஆக்கபூர்வமான வழிகளில் நாட்டின் செல்வம் செலவிடப்படும்.
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை மேலோங்க ஜாதிகளும் தீண்டாமையும் ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் ஒழியும். இனத்துக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதி மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது நடைமுறைக்கு வரும். மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர அன்பும் மலரும்.
. பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளரும். இறையச்சத்துடன் இணைந்து கற்கப்படும் கல்வியும் அறிவியலும் மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும். இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும் பயன்படும்.
பகைமைகளும் மோசடிகளும் அகன்று போவதால் பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்து வரும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற கோட்பாடு உண்மையாகப் பின்பற்றப்படும். நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறையும், நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் மறையும்.

இறை நேசத்துக்காகவும் மறுமை இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால் அவ்வுலகு நிறைந்திருக்கும்!   

2 கருத்துகள்: