இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜனவரி, 2014

பெரும்பான்மையைத் துடைத்தெறிந்த சிறுபான்மை!

உலக சரித்திரம் பல வினோதமான அற்புதமான சம்பவங்களைத் தாங்கி நிற்கிறது. அவற்றில் ஒன்றுதான் மோசே என்று பைபிளிலும் மூஸா என்று குர்ஆனிலும் கூறப்படும் இறைத்தூதரின் சரித்திரம். அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக!
தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்து மக்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டு ஒரு கொடுங்கோலனாக எகிப்து நாட்டை ஆண்டுவந்தவன் பிர்அவன். அவன் இஸ்ரவேல் சந்ததிகளை அடிமைப்படுத்தி அவர்களின் மீது கொடுமை புரிந்து வந்தான். அவர்களின் ஆண்  பிள்ளைகளைக் கொன்றுவிட்டு பெண்களை வாழவிட்டுக் கொண்டிருந்தான். அந்த அடிமை வர்க்கமான இஸ்ரவேல் சந்ததிகளில் இருந்தே இறைவனின் தூதராகத் தேர்ந்தடுக்கப் பட்டவர்தான் மூசா.  பிர்அவ்னை திருத்துவதற்காகவும் அவனிடம் சிறைபட்டு அடிமைத்தனம் அனுபவித்து வந்த இஸ்ரவேல் சந்ததியினரை விடுவிக்கவும் வேண்டி மூசாவும் அவர் சகோதரர் ஹாரூனும் இறைவனால் உரிய அற்புத அத்தாட்சிகளோடு அனுப்பப்பட்டனர்.

பிர்அவ்னின் அரசவையில் தங்களை இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக அறிமுகம் செய்துகொண்டு இவ்வ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தனர். அவனைத் தவிர யாரும் வணக்கத்துக்கு உரியவர்கள் அல்ல என்ற கொள்கையை அரசவையில் முழங்கினர். தாங்கள் இருவரும் இறைவனின் தூதர்களே என்பதை நிரூபிக்க சில அற்புதங்களையும் நடத்திக் காட்டினர். பிறகு நடந்த சம்பவங்களை திருக்குர்ஆனின் 26 ஆம் அத்தியாயத்தில் இவ்வாறு காணலாம்.
26:34. (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி ''இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!'' என்று கூறினான்.
26:35. ''இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?'' (என்று கேட்டான்.)
26:36. அதற்கவர்கள் ''அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
26:37. (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்று கூறினார்கள்.

ஏனென்றால் சூனியக்கலையைக் காட்டிதான் பிர்அவ்ன் மக்களை தான் ஒரு கடவுள் என்று நம்பவைத்துக் கொண்டிருந்தான். அந்த மாயையைத் தகர்க்க வந்துள்ள மூஸாவையும் அவரது சகோதரரையும் எப்படியாவது வென்றாக வேண்டும். அதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டான் பிர்அவ்ன்.....
26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:39. இன்னும் மக்களிடம் ''(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?'' என்று கேட்கப்பட்டது.
26:40. ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக்  கூடும் (என்றும் கூறப்பட்டது).

சூனியக்காரர்களுக்கு பெரும் வெகுமதிகளை அளிக்கத் தயாராகிவிட்டான் பிர்அவ்ன்.
26:41.ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, ''திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?'' என்று கேட்டார்கள்.
26:42.''ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று அவன் கூறினான்.
மக்கள் அனைவரும் கூடும் திருவிழா நாளில் அந்த பலப்பரீட்சை துவங்கியது.....
சூனியமா? உண்மையா? .... எது வெல்லும்?
போலிக் கடவுளா? உண்மை இறைவனா? .... யார் வெல்வார்கள்?
நடந்த சம்பவத்தை இறைவனே கூறுகிறான்.....
26:43.மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்'' என்று கூறினார்.
26:44.ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்'' என்று கூறினார்கள்.
பாவம், தாங்கள் பலப்பரீட்சை செய்வது இறைவனோடு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
26:45.பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
அப்போதுதான் சூனியக்காரர்களுக்கு உண்மை தெளிவானது. மூஸாவும் ஹாரூனும் செய்வது சூனியக்கலை அல்ல,கண்கட்டுவித்தை அல்ல. உண்மை இறைவன் நிகழ்த்தும் நிகழ்வுகளே  என்பதை அறிந்து கொண்டார்கள்.
26:46. (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.
26:47. அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் (விசுவாசம்) கொண்டோம்.
26:48.''அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.' என்று கூறினர்.
உண்மை இறைவனின் அற்புதங்களைக் கண்ணாரக் கண்டபின் இறைநம்பிக்கை கொள்வதில் இருந்து அவர்களை எதுவும் தடுக்கவில்லை. கொடுங்கோலன் பிர்அவ்னும் அவன் பேரரசும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
26:49.(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் விசுவாசம் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.

இறைநம்பிக்கை உறுதியானபின் பிர்அவ்னின் மிரட்டல்களுக்கு மசியவில்லை அவர்கள்.

26:50. ''(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்'' எனக் கூறினார்கள்.
26:51. ''(அன்றியும்) இறைவிசுவாசிகளில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்'' என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்).

தொடர்ந்து இறைத்தூதர் மூஸா அவர்களுக்கு இறைவனின் கட்டளை வந்தது.
26:52. மேலும், ''நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்'' என்று நாம் மூஸாவுக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தோம்.

கொடுங்கோலன் பிர்அவ்னுக்கு தொடங்கியது அழிவுகாலம். தன ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எகிப்தியர்கள் என்ற பெரும்பான்மையை இஸ்ரவேல் சந்ததியினர் என்ற சிறுபான்மைக்கு எதிராகத் திருப்பினான்.

26:53. (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
26:54. ''நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
26:55. ''நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
26:56. ''நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.''

தொடர்ந்து இறைவன் கூறுவதைப் பாருங்கள்...
இந்த தற்காலிக உலகை மனிதனுக்கு ஒரு பரீட்சைக்களமாகப் படைத்திருக்கும் இறைவன் கூறும் வார்த்தைகள் இவை என்பதை நினைவில் கொள்வோமாக.....
26:57. அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
26:59. அவ்வாறுதான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசகளாகவும் நாம் ஆக்கினோம்.

உலக இரட்சகனின் திட்டம் அதுவனால் மனித ஆசைகளும் பேராசைகளும் எங்கே நிறைவேறும்? இறைவனின் திட்டத்தைப் பற்றி அவன் நாடியவர்களுக்கு முன்னறிவிப்பு செய்கிறான். அவற்றை அறிந்து கொண்டவர்கள் நடந்து கொள்வதும் அறியாதவர்கள் நடந்து கொள்வதும் எதிரும் புதிருமாக இருப்பது இயல்புதானே!
26:60.பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது; ''நிச்சயமாக நாம் பிடிபட்டோம்'' என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
26:62. அதற்கு (மூஸா), ''ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்'' என்று கூறினார்;.
26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
26:64.(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
26:65. மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
26:66. பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.

சரித்திரங்கள் இவ்வாறு பூமியில் மாற்றி மாற்றி எழுதப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவன் இறைவன். அதன் சுவடுகள் பூமியெங்கும் நிறைந்திருந்தும் பாடங்கள் பெறுவோர் குறைவே!
26:67. நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.

26:68. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

கற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை!

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே நமது வணக்கத்துக்கு உரியவன். அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. படைத்தவனை நேரடியாக எளிமையாக, ஆரவாரங்கள் இன்றி, வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி வணங்குவதற்குத்தான் இறைவனின் தூதர்களும் இறைவனால் அனுப்பபட்ட வேதங்களும் கற்பித்தன, ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் நுழைந்த சில இடைததரகர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காகவும் மக்களை கடவுளின் பெயரால் சுரண்டுவதற்காகவும் கடவுளுக்கு உருவங்களையும் வீண் சடங்கு சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் புகுத்தினார்கள்.
சிந்திக்காத மக்கள் தங்கள் அறியாமையாலும் வீண் அச்சத்தினாலும் இவர்களுக்கு இரையாகின்றனர். இவ்வாறு சர்வவல்லமை வாய்ந்த இறைவனுக்கு பதிலாக உயிரற்ற உணர்வற்ற பொருட்களை வணங்கும்போது மனிதனிடத்தில் இறையச்சம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் பாவங்கள் சமூகத்தில் மலிந்து விடுகின்றன. குற்றம் செய்ய அஞ்சாத தலைமுறைகள் உருவாகி சமூக அமைதி சீர்கெடுகிறது. மேலும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கோட்பாடு அடிபட்டு மனித குலம் அவரவர்கள் வணங்கும் கற்பனைக் கடவுள்களின் அடிப்படையில் மனிதகுலம் பிளவுண்டு ஜாதிகளாகவும் குலங்களாகவும் பிரிகிறது. இது பல கலவரங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமாகிறது. இந்தப் பாவம் இறைவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். இப்பாவம் செய்பவர்களுக்கு மறுமை வாழ்வில் நரக தண்டனை உண்டும் என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். இறுதித்தீர்ப்பு நாளின்போது இவர்களின் நிலை பற்றி திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகிறது.
26:88. ''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.''
26:89. ''எவரொருவர் பரிசுத்த இருதயத்தை இறைவனிடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).''
26:90. ''பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.''
26:91. ''வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.''
26:92. ''இன்னும், அவர்களிடம் கூறப்படும்; ''நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்ககே?'' என்று.
26:93. ''அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,''
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்” என்று பொருள்)
26:94.பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
26:95. ''இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).''
(இப்லீஸ் என்பது ஷைத்தானைக் குறிக்கும்) யாரெல்லாம் இக்குற்றத்திற்கு தூண்டினார்களோ அல்லது துணை நின்றார்களோ அவர்களும் இக்குற்றங்களைச் செய்தவர்களும் அந்த நாளில் நொந்து கொள்வார்கள்.....
26:96. அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்;
26:97. ''அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.''
26:98. ''உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
26:99. இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை  வழி கெடுத்தவர்கள்.
26:100. ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை.
26:101. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
26:102. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் இறைவிசுவாசிகளாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.)
மறுமை நாளில் நடக்கும் உரையாடலை இறைவன் இன்றே தனது வேதம் மூலம் எடுத்துரைத்து விட்டான். இதை இன்றே உணர்ந்து திருத்திக் கொள்வோர்தான் புத்திசாலிகள்.

26:103. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

வியாழன், 23 ஜனவரி, 2014

உண்மையான பகுத்தறிவுவாதி


#பகுத்தறிவுக்குப்_பாதை_வகுத்த_தந்தை!
-----------------------------------------------
#பகுத்தறிவு_என்றால்_என்ன?
தனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று பட்டம் சூட்டிக் கொள்வதை கண்டு வருகிறோம். பகுத்தறிவு என்றாலே கடவுளே இல்லை என்று கண்மூடித்தனமாக மறுப்பது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதைப் பரப்பியும் வருகிறார்கள். உண்மையில் நமது புலன்களுக்கு எட்டுபவற்றை (sensible data) வைத்து எட்டாதவற்றைப் பகுத்து அறிவதே பகுத்தறிவு எனப்படும்.
பிரபஞ்சத்தின் ஒப்பற்ற படைப்பு, அறிவார்ந்த திட்டமிட்ட இயக்கம், குறைகளில்லா பரிபாலனம் என அனைத்தையுமே செய்து வரும் இறைவனை தங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை அல்லது தங்கள் புலன்களுக்குத் தட்டுப்படவில்லை என்று காரணம் கூறி மறுக்கிறார்கள் அவர்கள்.இதுவா பகுத்தறிவுக்குப் பொருள்?
'புலன்களுக்குத் தட்டுப்படுபவற்றை மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம்' என்பவர்களுக்கு பகுத்தறிவின் தேவையே இல்லையே! ஐந்தறிவே போதுமானதல்லவா?. மிருகங்கள் அதைத்தானே செய்கின்றன. இன்னும் சொல்லப் போனால் அவைகூட பகுத்தறிவைப் பயன்படுத்துவதைக் காணலாம். உதாரணமாக, வாசனையை வைத்து உணவிருக்கும் இடத்தைப் பகுத்து அறிகின்றன, இயற்கையின் அடையாளங்களை வைத்து ஆபத்துகளை உணர்கின்றன.
#விவேகமான_பகுத்தறிவுவாதி_இப்ராஹீம்
-------------------------------------------
ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்து பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தி வாழ்வில் வெற்றி கண்ட ஒரு மனிதரைப் பற்றி திருக்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. மதத்தின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களையும் மோசடிகளையம் மூடப் பழக்கவழக்கங்களையும் அவர் கண்டு உணர்ச்சிவசப்பட்டார். கொதித்தெழுந்தார். ஆனால் அவர் நிதானத்தை இழக்கவில்லை. கோபம் அவரது கண்களை மறைக்கவில்லை. யதார்த்தங்களை மறுக்காமல் விவேகமான முறையில் செயல்பட்டார்.
சமூக சீர்திருத்தம், புரட்சி என்பதற்காக இம்மை மற்றும் மறுமைப் பேறுகளைத் தொலைத்துவிட்டு நிற்கவில்லை அவர். செய்பவைச் செவ்வனச் செய்து வெற்றி கண்டார். அவர் அடைந்தது ஈருலக வெற்றி!
அவர்தான் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்தார். அவர் சிந்திக்கும் வயது வந்தபோது அவரும் அவரது சமூகத்தவரும் செய்துவரும் மூடப்பழக்க வழக்கங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவர் கேள்விகள் எழுப்பினார்.
இதோ திருக்குர்ஆன் அவரைப்பற்றி கூறுகிறது:
26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
26:70.அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி; ''நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டபோது,
26:71. அவர்கள்; ''நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்'' என்று கூறினார்கள்.
மூதாதையர் பழக்கங்களை மூடமாக நம்பியிருந்த மக்களின் அறியாமையை அவர் சாடினார். அகிலங்களைப் படைத்த இறைவனுக்கு பதிலாக அறவே சக்தியற்ற உருவங்களை அல்லவா இவர்கள் வணக்கத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள் இவர்கள்? அவர்கள் சிந்தித்து உண்மையை உணரும் வண்ணம் வாதங்களை முன்வைத்தார்.
26:72. (அதற்கு இப்றாஹீம்) கூறினார்; ''நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
26:73. ''அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவும் கேட்டார்)
26:74. (அப்போது அவர்கள்) ''இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்'' என்று கூறினார்கள்.
26:75. அவ்வாறாயின், ''நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?'' என்று கூறினார்.
26:76. ''நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).''
தன்னந்தனியனாக மொத்த ஊருக்கும் எதிராக நின்றார் இப்ராஹீம். ஊருடன் ஒத்து வாழ் என்று தத்துவம் பேசி ஒதுங்க மனமில்லை அவருக்கு. நமக்கேன் வம்பு என்று வாளாவிருக்கவுமில்லை அவர். மக்களின் தவறுகளைத் திருத்தியே ஆகவேண்டும் என்று துணிந்தார். தன் நிலைப்பாட்டைத் தெளிவுற மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
26:77. ''நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).''
26:78. ''அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
26:79. ''அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.''
26:80.''நான் நோயுற்ற கால்த்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
26:81. ''மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.''
26:82. ''நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
மக்கள் அவரது சீர்திருத்தத்திற்கான அழைப்பை அப்பட்டமாகப் புறக்கணித்தனர். இருப்பினும் அகிலங்களைப் படைத்த இறைவனை விட்டுவிட்டு உயிரற்ற உணர்வற்ற ஜடப்போருட்களை கண்மூடித்தனமாக வணங்கிவரும் தம மக்களுக்கு எப்படியாவது பாடம் புகட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இப்ராஹீம். இறுதியில் ஒரு திருவிழாவை ஒட்டி ஊர் மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அடுத்த ஊருக்குச் சென்றிருந்தபோது இப்ராஹீம் தமது ஊரின் மிகப்பெரிய கோவிலுக்குள் ஒரு கோடாலியோடு நுழைந்தார்.
பின்னர் அங்கிருந்த எல்லா சிலைகளையும் அடித்து நொறுக்கினார். ஒரு உபாயத்துக்காக அதில் மிகப்பெரிய ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்,.
மக்கள் திருவிழா முடிந்தபின் ஊர் திரும்பினார்கள். அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்களுக்குள் விசாரித்துக் கொண்டனர். ஊர் மக்கள் அனைவரும் திரட்டப் பட்டார்கள். இப்ராஹீமும் கொண்டுவரப் பட்டார்.
இப்ராஹிமும் அதைத்தான் எதிர்பார்த்து இருந்தார். அனைவரையும் சிந்திக்க வைத்துப் பாடம் புகட்டலாமல்லவா? தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவோ உதவி செய்யவோ இயலாத இச்சிலைகளா மக்களைக் காப்பாற்றப் போகின்றன? அவர்கள் எப்படிப்பட்ட அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி இருக்கிறார்கள் எனபதை அனைவரையும் இன்று உணர வைக்க வேண்டும் என்பது அவர் திட்டமாக இருந்தது.
21:62 “இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று கேட்டனர்.
21:63 அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
ஆம், உயிரும் உணர்வும் அற்ற இந்த சிலைகளின் இயலாமையை மக்கள் அவர்களாகவே உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார் இப்ராஹீம். மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
21:65. பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
21:66. “(அப்படியாயின்) ஏக இறைவனையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
அவமானத்தால் கூனிக் குறுகி நின்ற மக்களிடம் இனியாவது படைத்த இறைவனை வணங்குங்கள் என்ற அழைப்பு விடுத்தார் இப்ராஹீம். ஆனால் மக்கள் கேட்பவர்களாக இருக்கவில்லை.
உண்மை ஒளிர்ந்த போது, போலி தெய்வங்களின் இயலாமையும் மக்களது அறியாமையும் முட்டாள்தனமும் வெட்டவெளிச்சமானது. ஆனால் தாங்கள் தோற்கடிக்கப்பட்ட ஆத்திரத்தில் மக்கள் இப்ராஹீமை பலவந்தமாகத் தண்டிக்க முற்பட்டனர். சாதாரண தண்டனை அல்ல அது!
#தனிநபர்_இராணுவம்
மிகப்பெரும் அளவில் விறகு சேகரிக்கப்பட்டது .மிகப்பெரிய கிடங்கு தோண்டப்பட்டு பெரும் தீக்குண்டம் ஒன்று வளர்க்கப் பட்டது. எப்படியாவது அவை தீர்த்துக் கட்டிட வேண்டும்- இதுதான் அம்மக்களின் இறுதி முடிவாக இருந்தது. சத்தியத்திற்கு எதிராக ஊரும் அதிகார வர்க்கமும் ஓரணியில் திரண்டாலும் அசைந்து கொடுக்கவில்லை அந்த மாபெரும் சீர்திருத்தவாதி! தனக்குத் துணையாக ஒரு நபர் கூட இல்லை! உலக சரித்திரத்திலேயே எங்காவது இப்படியொரு மனிதனைப் பார்க்க முடியுமா?
தன்னை தண்டிப்பதற்காக பலநாள் வளர்த்துப் பெருக்கிய தீக்குண்டம்! தனக்கு எதிராக தன் குடும்பம் உட்பட ஊரும் ஆதிக்க வர்க்கமும்! இப்ராஹீமின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். தீக்குண்டத்தில் எறியப்படும் போது இப்ராஹிம் என்ன செய்தார் தெரியுமா? ஒரு துளியளவுகூட தைரியத்தை இழக்கவில்லை.
ஏன் இழக்க வேண்டும்? இவ்வுலகைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கண்முன்புதானே இவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? அவனது பூமியல்லவா இது? அவனைப் பற்றிய சத்தியத்தையல்லவா நான் மக்கள் முன் நிலைநாட்டுகிறேன்? அவனது ஆட்சிக்கு உட்பட்டதல்லவா அண்டசராசரங்களும் அணுத்துகள்களும் ! அவன் எனக்குத் துணை நிற்கும்போது யார் என்னை என்ன செய்து விட முடியும்?
நெருப்பில் அவரை மக்கள் எறிந்தபோது அவர் கூறினார் : “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். காரியங்களை கைகாரியம் செய்வதில் மிகச் சிறந்தவன் அவனே!”
அகிலத்தின் இறைவன் அவரைக் கைவிடவில்லை! எந்த இறைவன் நெருப்புக்கு சுடும் தன்மையைக் கொடுத்தானோ அதே இறைவன் இப்ராஹீமுக்காக குளிரச் சொன்னான். அவனைப் பொறுத்தவரை ஒரு காரியத்தை ஆகு சொல்வதுதான் தாமதம் உடனே அது ஆகிவிட வேண்டுமல்லவா? ஆம் நெருப்பு குளிர்ந்தது. பெரும் நெருப்புக் கிடங்கினாலும் முழு ஊரினாலும் இப்ராஹீமை ஒன்றுமே செய்ய இயலவில்லை!
21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
பகுத்தறிவுவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் தந்தை இப்ராஹீம் ஓர் சிறந்த முன்மாதிரி. படைத்த இறைவன் மேல் இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை அவரைத் தனிநபராக மூட நம்பிக்கையில் ஊறிக்கிடந்த சமூகத்தை எதிர்த்துப் போராட வைத்தது.
#பக்ரீத்_சிந்தனைகள்

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

சமாதிக்குள் என்ன நடக்கிறது?

ஒரு சுவாரசியமான கதையை வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். கடைசிப் பக்கங்கள் நெருங்க நெருங்க கதை க்ளைமாக்ஸை அடைகிறது...... திக் திக் என்று உங்கள் உள்ளம் அடித்துக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.... என்ன அது?
.... புத்தகத்தின் மீதிப்பக்கங்களைக் காணோம்!!! ..... என்ன செய்வீர்கள்? அதை அறிய ஆவல் கொள்வோமா இல்லையா? அதுவும் அந்தக் கதை அப்படியே உங்கள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தால் என்ன செய்வீர்கள்? எப்படியாவது அதன் முடிவை அறிய முயற்சிப்பீர்கள் அல்லவா?
இதோ உங்கள் கதையின் தொடர்ச்சியை .... அடுத்த அத்தியாயத்தை..... தொடர்ந்து படியுங்கள்...
ஆம், உங்கள் மரணத்திற்குப் பிறகு சமாதி வாழ்க்கை என்று ஒன்று தொடங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை இறைவன் தன தூதருக்கு அறிவித்துக் கொடுத்த செய்தியில் இருந்து அறிய வருகிறோம்.... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 'உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு வானவர்கள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்' அவர்கள் இறைத்தூதரைக் குறித்து அவனிடத்தில் 'இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்' என்று கேட்பார்கள். அவன் (இறைநம்பிக்கையாளனாக  இருந்தால்) 'அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான். அப்பொழுது அந்த வானவர்கள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய சமாதி எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த சமாதி ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும். அவனை நோக்கி 'நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த வானவர்கள் 'மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
 (அந்த இரு வானவர்கள்) பாவி ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, 'மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அப்பொழுது அந்த வானவர்கள் அவனை நோக்கி 'நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்' என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி: 991)

= பி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (இந்த சமாதியே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரீ: 1379) 

திங்கள், 13 ஜனவரி, 2014

யாதும் ஊரே, யாவரும் கேளிர்! – இது சாத்தியமா?


இந்த அருமையான வாழ்வியல் இலக்கணம் எங்கும் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களும் ஆசைப்படும் ஒன்றாகும். இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் அதற்கான ஆக்கபூர்வமான செயல்திட்டம் தேவை. இல்லையேல் அது ஆசையோடும் ஏக்கத்தோடும் நின்றுவிடும்.
ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின் பெயராலும் ஒருவரை ஒருவர் பயங்கரமான முறைகளில் தாக்கிக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.
இந்நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதனிடம் குடிகொண்டுள்ள குழப்பம் நிறைந்த கடவுள் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளுமே!
பூமியில் மீணடும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நன்மையையும் அமைதியும் நிலைபெற வேண்டுமானால் மனித இதயங்களில் கடவுளைப் பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும்  தெளிவான மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை விதைக்கப் பட வேண்டும்.
அதாவது என்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் உள்ளான். அவன் சர்வ வல்லமை உள்ளவன். இந்த தற்காலிக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அவனிடமே நான் திரும்ப வேண்டியுள்ளது. அவன் நான் செய்த புண்ணியங்களுக்கு பரிசு தருவான். அதே போல் நான் பாவங்கள் செய்தால் தண்டிக்கவும் செய்வான் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழமாக விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் மனிதன் பாவம் செய்யாமல்  இருப்பான், புண்ணியங்கள் செய்வதற்கு ஆர்வம்  கொள்வான்.
  இந்த அடிப்படையை மக்களுக்கு போதிக்க இறைவன் அவ்வப்போது தனது தூதர்களை அனுப்பினான். ஒவ்வொரு காலத்திலும் இவ்வுலகின் பல பாகங்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த இறைத்தூதர்கள் மிகத்தெளிவான கடவுள் கொள்கையையே போதித்தார்கள். இவ்வுலகைப் படைத்து உங்களைப் பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். அவனை விட்டு விட்டு படைப்பினங்கள் எதையும் வணங்காதீர்கள். அவன் அல்லாத எதையும் இறைவன் என்று சொல்லாதீர்கள், அவனுக்கு உருவங்கள் எதையும் சமைக்காதீர்கள், ஏனெனில் அவனைப் போல் எதுவுமே இங்கு இல்லை. அவனை யாரும் நேரடியாக அணுகலாம். அவனை வணங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.

 “படைப்பினங்களைப் பாருங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தி படைத்தவனை உணருங்கள். அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால் அதற்குப் பரிசாக மறுமை வாழ்க்கையில் சொர்க்கத்தை வழங்குவான். நீங்கள் செய்நன்றி கொன்று அவனுக்கு மாறு செய்தால் அதற்க்கு தண்டனையாக உங்களை நரகத்தில் நுழைவிப்பான் என்றெல்லாம் போதித்தார்கள்    

  ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணியவாங்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். நாளடைவில் அவற்றையே வழிபடவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்கள் உயிரற்ற உணர்வற்ற ஜடப் பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்பத் துவங்கியதால் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டு மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டிப் பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை அக்கினிக் குண்டம்போல் வளர்த்தன.
   இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மீண்டும்மீண்டும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டனர். அவர்கள் மேற்கண்ட அடிப்படை போதனைகளை மக்களிடையே விதைத்து மீண்டும் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றனர். அந்த இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவரும் தனது வாழ்நாளில் அதே அடிப்படையில் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றார்!
  
   இனி தர்மத்தை மீணடும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நம் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதற்கு இறுதி வேதம் குர்ஆனையும் இறுதித்தூதரின் முன்மாதிரியையும் நாம் கைகொள்ள வேண்டும். அதில் அதிமுக்கியமாக திருக்குர்ஆன் கற்றுத்தரும் கடவுள் கொள்கையை நாம் மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும். இன்று` காணும் மாசுபடுத்தப் பட்ட கடவுள் கொள்கைகளை மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். உயிரற்ற உணர்வற்ற பொருட்களை எல்லாம் காட்டி இவற்றை எல்லாம் கடவுள் என்று நம் சிறார்களுக்கு கற்பிப்பதை நாம் நிறுத்த வேண்டும். இதனால் ஒருபுறம் அவர்களின் கடவுள் உணர்வைச் சிதைத்து பாவம் செய்ய  அஞ்சாத தலைமுறைகள் உருவாக வித்திடுகிறோம். மறுபுறம் இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லமையும் ஞானமும் கொண்ட இறைவனைச் சிறுமைப் படுத்துவதால் அவனது கடும் கோபத்திற்கும் ஆளாகிறோம்.
    இறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.
இறைவனின் இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் மனிதகுல ஒற்றுமையையும் இறைவனின் இலக்கணங்களையும் இவ்வாறு கற்பிக்கிறது.:
  ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
 ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும். இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் அளிக்கக் கூடாது என்று கற்பிக்கிறது திருக்குர்ஆன்.
2:186        .(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;. அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;. என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக.
50:16  நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்

ஆம் அன்பர்களே இதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவை நனவாக்க விழைவோர் மக்களுக்கு கற்பிக்கவேண்டிய அடிப்படைக் கல்வி! 
இது ஒரு வெற்றுப்பேச்சு அல்ல.     இதை நீங்கள் இந்த சத்திய இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே நிதர்சனமாகக் காணலாம். உதாரணமாக, நமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள். இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்தோ அல்லது துருக்கியிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இவர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாகவோ கிருஸ்துவர்களாகவோ இருந்து இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். இன்று இவர்கள் தீண்டாமை மறந்து பள்ளிவாசல்களில் ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் ஒரே தட்டில் உணவு உண்பதையும் காண்கிறீர்கள்

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html