
= திருவனந்தபுரம்: கணவருக்கு
கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தீக்குளித்துத் தற்கொலை (தினகரன் 2020-06-01)
= கொரோனா பாதித்த
நபர் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். (தினமலர் Apr 27, 2020, பெங்களூரு)
= அகமதாபாத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..(சமயம்தமிழ்.காம்)
= கரோனா ஊரடங்கு காரணமாக சரிவர வருமானம் இல்லாமல்
குடும்பத்தினரை பட்டினி போட வேண்டிய சூழ்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பிஹார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். (தமிழ் இந்து நாளிதழ்
செய்தி)
----------------------------
கொரோனாவால் இந்தியாவில் கணிசமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மன அழுத்தத்தால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. சாமானியர்கள் முதல் அரசு
அதிகாரிகள், பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கொரோனா
தொற்று கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த கூலித் தொழிலாளர்கள், ஐ.டி ஊழியர்கள், நஷ்டம் சந்தித்த சிறியது முதல் பெரிய வியாபாரிகள் எனப் பலர் தற்கொலை
செய்துள்ளனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாகவும் சிலர் தற்கொலை செய்து
கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப் படி
நாளொன்றுக்கு 371 தற்கொலைகள் காவல்
நிலையங்களில் பதிவாகின்றன! அவ்வாறு பதிவாகாத தற்கொலைகள் இதைவிட ஆறு மடங்கு
என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்!
கல்வி கற்றவர் நிலையும் கல்லாதவர் நிலையும் இங்கு ஒன்றாகவே
இருப்பதைப் பார்க்கலாம். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் மூழ்கியுள்ள ஒருவருக்கு
துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் இனியும் வர இருக்கின்றன என்று உணரும்போது அவர்,
‘இனி எதற்காக வாழவேண்டும்?’ ‘வாழ்ந்து என்ன பயன்?’ ‘வாழ்க்கையை முடித்துக் கொள்வதே
நல்லது’ என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் உணர்வுகள் மேலிட அவர்
தன் வாழ்க்கையை முடித்திட தற்கொலையில்
சரணடைகிறார்.
தற்கொலையில் தவறு உண்டா?
இதில் என்ன தவறு? என்று நீங்கள் கருதலாம். சூழ்நிலைகளைக்
காரணம் காட்டி ஏதாவது தற்கொலையை நியாயப் படுத்தவும் கூடும். தற்கொலையில் தவறு
இல்லை என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்களானால் கீழ்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில்
சொல்வது என்பது பற்றி யோசியுங்கள்:
= நீங்கள் சிறுவயது முதல் இறைவுபகலாக உழைத்து கஷ்டப்பட்டு
ஆளாக்கிய உங்கள் மகன் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்து போனதற்காக தற்கொலை
செய்து கொண்டால் சரி என்பீர்களா?
= உங்களை வளர்த்து ஆளாக்கும் முன் திடீரென்று ஏதோ ஒரு
காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டு உங்களை நிர்கதியாக விட்டுச்சென்ற பெற்றோரின் செயலை நீங்கள் சரி
என்று கூறமுடியுமா?
= நீங்கள் விற்ற சரக்குக்கு பணம் தரவேண்டிய ஒரு வியாபாரி
உங்களுக்கு பணம் தராமல் தற்கொலை செய்து கொள்கிறார்..
= ஒரு நாட்டின் முக்கியமான பொறுப்பை நிர்வகிப்பதற்காக
நியமிக்கப்பட்ட ஒரு நபர் திடீரென தற்கொலை...
இவ்வாறு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம்.
ஆக, தற்கொலைகளில் தவறில்லை என்ற முடிவுக்கு மக்களோ அல்லது
சமூகங்களோ வருமானால் அங்கு வாழ்க்கையில் கட்டுப்பாடு, சட்டம், ஒழுங்கு என்பவை
அர்த்தமற்றதாகிவிடும் என்பதை உணரலாம். மேலும் தற்கொலை என்பது தனிநபரை மட்டுமல்ல,
அவர் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கக் கூடியது என்பதையும் நாம் அறியலாம்.
ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளும் நபர் நினைக்கலாம் ‘என்
தற்கொலையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, நான் இவ்வுலகை விட்டுப் போகிறேன்
அவ்வளவுதான், இதில் என்ன தவறு?” என்று. ஆனால்
அவர் தற்கொலை செய்துகொண்டால் அவராக வந்து தன் உடலை அடக்கம் செய்வது இல்ல. அவரது
உடல் அழுகினாலும் நாற்றமடித்தாலும் அவராக வந்து அதை அகற்றுவதில்லை. எல்லாம் அவர்
சார்ந்த குடும்பமோ சமூகமோதான் செய்ய வேண்டிய உள்ளது.
எனவே என் உயிர், எனது உரிமை, என்னுயிரை போக்கிக் கொள்வது என்
விருப்பம் என்ற வாதம் அனைவருக்கும் ஆபத்தானது. இன்னும் பொய்யானது என்பதே உண்மை!
‘என்னுயிர்’ உண்மையில் எனதா?
என்
உரிமை என் உரிமை என்று மனிதன் எதைக் கோர முடியும்? அதை
அறிவதற்கு முன்னால் அவனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இவ்வுலகில்
அவனுடையது
என்று என்ன இருக்கிறது, மற்றும்
அவனது அதிகாரத்தின் பலம் எவ்வளவு என்பதை அறிந்த பின்னரே அவனது உரிமை அல்லது
சுதந்திரம் பற்றி தீர்மானிக்க முடியும். மனிதன் தனது என்று எதை சொல்லிகொண்டாலும்
உண்மையில் அவனது உடல், பொருள், ஆவி
அல்லது உயிர் என அனைத்துமே அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளவை அல்ல என்பதை அறிவோம்.
அவை யாவும் இவ்வுலகைப் படைத்தவனால் அவனுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டவையே. அந்த
இறைவன் அவன் நாடும்போது இவற்றைக் கொடுக்கவும் பறிக்கவும் செய்கிறான் என்பதுதான்
உண்மை. எனவே மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் இவ்வுலகுக்கும் அதில் உள்ளவற்றுக்கும்
உண்மையான சொந்தக்காரன் எவனோ அவன் மட்டுமே இதைத் தீர்மானிக்க முடியும். எனவே மனிதன்
தானாக தன் உரிமையை தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக, இறைவன் மட்டுமே அவனது
படைப்பினங்களையும் அவர்களின் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகமிக நுணுக்கமாகவும்
அறிந்தவன். முக்காலத்தையும் முழுமையாக உணர்ந்தவன். யாருக்கு எவ்வளவு உரிமைகளைக்
கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு ஞானம் அவனுக்கு மட்டுமே உள்ளது,
= அடுத்ததாக, இந்தத் தற்காலிக உலகம் என்பது ஒருநாள்
அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய
தவணையில் இங்கு வந்து போகிறான் என்பதும் அனைவரும் புரிந்துகொண்ட ஓர் உண்மை. அதாவது
இவ்வுலகை ஒரு பரீட்சைக் களமாகப் படைத்துள்ளான் இறைவன். மறுமையில் இறுதித்
தீர்ப்புநாள் அன்று அவரவர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பற்றியும் அவரவர்க்கு
விதிக்கப்பட்ட கடமைகளைப் பற்றியும் அவன் முழுமையாக விசாரிக்கவும் உள்ளான்.
அவற்றைப் பேணி நடப்போருக்கு வெகுமதியாக சொர்க்க வாழ்வையும் பேணாமல்
தான்தோன்றிகளாக நடப்போருக்கு தண்டனையாக நரகத்தையும் அவன் வழங்கவுள்ளான்.
எனவே அந்த இறைவன் தரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனிமனித
உரிமைகளைத் தீர்மானிப்பதே அனைவருக்கும் சிறந்தது என்பதை நாம் அறியலாம். அந்த
இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே சரி அல்லது நன்மை அல்லது புண்ணியம்
என்பதையும் அவன் எதை செய்யக்கூடாது என்று தடுத்துள்ளானோ அதுவே தவறு அல்லது தீமை
அல்லது பாவம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
தற்கொலை
இறைவனால் தடுக்கப் பட்டது
இறைவனின் அளவுகோல் படி
தற்கொலை என்பது தடுக்கப்பட்டது. எனவே இது ஒரு பாவச்செயல் ஆகும் என்பதை நாம்
கவனிக்க வேண்டும். இறைவன் புறத்தில் இருந்து வந்துள்ள இறுதி வேதம் திருக்குர்ஆனும்
இறுதி இறைத்தூதர் மொழிகளும் அவற்றை கூறி நிற்கின்றன.
தற்கொலை பற்றி இறைவன்
என சொல்கிறான்?
= உங்கள் கைகளாலேயே
நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! (அல்குர்ஆன்2:195)
= உங்களை நீங்களே கொலை
செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-
(குர்ஆன் 4:29)
இறைவனின் எச்சரிக்கையையும்
மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்)
தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக்
கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக்
கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்"
என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக