இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 செப்டம்பர், 2018

திருடனுக்கும் காலம் வரும்!


அது ஒரு நள்ளிரவு நேரம்...
ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது...
நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்...

திடீரேன உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது...
திடுக்கிட்டு எழுகிறீர்கள்..
இன்னும் பலமாக கதவு தட்டப்படுகிறது...
பயந்து போய் "யாருப்பா அது?" என்று கேட்கிறீர்கள்..
"போலீஸ்!" கண்டிப்பான குரலில் பதில் வருகிறது..
மேலும் பயம் உங்களைக் கவ்விக்கொள்கிறது. 

போலீஸ் எனும்போது கதவை திறக்காமல் இருக்க முடியுமா? விடுவார்களா?
கதவைத் திறந்தால்.. அங்கே...

நான்கு போலீஸ்காரர்கள்... நடுவே ரவுடியின் கோலத்தில் ஒருவன்..கையில் துப்பாக்கி ஏந்தியபடி... 
போலீஸ்காரர்களும் துப்பாக்கி வைத்திருந்தார்கள். 
நீங்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ்காரரே பேசினார்..
"அய்யா இவங்கதான் மிஸ்டர் ரங்கன்.. இந்த ஏரியால நீண்டகால திருடர். திருடர்கள் சங்க உறுப்பினர்.  இவங்களோட கோரிக்கைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பது பத்தி டிவியில் செய்தி கேட்டிருப்பீங்க. இவங்களோட தொழில தடங்கல் இல்லாம செய்ய அனைத்து ஒத்துழைப்பும் காவல்துறை குடுக்கனும்னு சொல்லி அரசு உத்தரவு. அதுதான் நாங்கெல்லாம் வந்திருக்கோம்"
உங்கள் தலைசுற்றல் அடங்குவதற்குள் ரங்கன் தன் அடையாள அட்டையை பாக்கெட்டில் இருந்து உருவி எடுத்துக் காட்டினார்..
"அண்ணே இதுதாங்க என்னோட ஐடி கார்டு. கவர்மென்ட் இஷ்ஷு பண்ணது.. பாருங்க கோபுரம் போட்ட சீல்!"
நீங்கள் வாயடைத்து நிற்கவே மிஸ்டர் ரங்கனே தொடர்ந்தார்...
"நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்ணே.. எல்லாம் நானே பாத்துக்கறேன்.. உங்க பீரோ சாவி, பெட்டிச் சாவி எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு நீங்க அந்த சோஃபால ரிலாக்ஸ் பண்ணுங்க. பத்து நிமிஷத்திலே என் சோலிய முடிச்சுடறேன்.. எனக்கு வேணுங்கறத மட்டும்தான் எடுப்பேன்..அதுக்குள்ளாற உங்க மிஸ்ஸிஸ் போட்டிருக்கற நகையெல்லாம் கழட்டி இந்த சுட்கேஸ்ல போட்டுடுங்க"  
போலீஸ் பரிவாரங்கள் வெளியே காவல் நிற்க அதிகார பூர்வமாக ஹாலுக்குள் நுழைந்தார் மிஸ்டர் ரங்கன். 
திடுக்கத்தில் நீங்கள் தயங்கி தயங்கி செய்வதறியாது நிற்கவே மிஸ்டர் ரங்கனின் துப்பாக்கி உங்களை நோக்கி நீள்கிறது... 
"அண்ணே, சொன்ன பேச்ச கேளுங்கண்ணே!" சற்று அதட்டல் தொனியில் ரங்கன். 
-------------------- 
அரண்டுபோய் தூக்கத்தில் இருந்து எழுகிறீர்கள். 
கண்டது கனவுதான் என்று உணர்ந்ததும் பெருமூச்சு ஒன்று உங்களை அறியாமலேயே வெளிவருகிறது.

சரி, இது நனவாக வாய்ப்புள்ளதா? 
ஆம்.. வாய்ப்புள்ளது என்பதைத்தான் இன்றைய நாட்டு நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் பாவங்களாகக் கருதப்பட்டவை மக்களின் வெட்க உணர்வுகள் மக்கிப்போய்விட்ட நிலையில் இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. வெட்கம், நாணம், நீதி, நியாயம் என்பவை வேகமாக தூரமாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகவே அறிகிறோம். மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அலட்சியம் செய்வதன் விளைவாகவும் தங்கள் மனம்போன போக்கில் தாங்களாகவே உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் ஒவ்வொரு பெரும் பாவங்களும் சட்ட அங்கீகாரம் பெற்று வருவது கண்கூடு.

= ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மது, போதைப்பொருட்கள், என இவையெல்லாம் அதற்கு உதாரணங்கள்.  இந்த ஈன செயல்களைச் செய்பவர்கள் இன்று சங்கம் அமைக்கிறார்கள். தங்களுக்கு உரிமை கோரி அரசாங்கங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வக்கீல்களை வைத்து வாதாடி சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து தங்களின் காரியங்களுக்கு சட்ட அங்கீகாரமும் அரசு அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

வன்பாவங்களுக்கும் அங்கீகாரம் விரைவில்..
இதே போக்கு தொடருமானால் நாளை கற்பழிப்பும், திருட்டும், கொலையும் இலஞ்சமும் கொள்ளையும் எல்லாம் சட்ட அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு பலமாகவே உள்ளது. பலமான வக்கீல்களை வைத்து வாதாடுவதன் மூலமும் நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலமும் இவை சாத்தியமே என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு தங்கள் தொழிலை தடையின்றி தொடர உரிமங்கள் (licence) வழங்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.

இன்று எவ்வாறு சினிமாக்களில் காட்டப்படும் ஆபாசமும் அந்நிய ஆண் பெண் தகாத உறவுகளும் கலை என்று போற்றப்படுகின்றனவோ அதேபோல கற்பழிப்பும் திருட்டும் கொலையும் எல்லாம் கலைகளாக மதிக்கப்பட்டு போற்றப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. இந்த வன்பாவங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வோர் நலனுக்காக அரசு நாளை புதுப்புது திட்டங்கள் தீட்டலாம்.

"அக்கலைகளைக்" கற்றுக்கொடுப்பதற்காக தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.

அரசாங்கம் மக்களிடம் இருந்து திரட்டும் வரிப்பணத்தில் இருந்து திரைக் கூத்தாடிகளுக்கு ... மன்னிக்கவும் திரைக் கலைஞர்களுக்கு... உயர்ந்த விருதுகள் வழங்குவதுதான் சகஜமாகி விட்டதே.

ஆள்வோரின் பொறுப்பற்ற போக்கு:
இன்று ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மதுப் புழக்கம் போன்ற பாவங்கள் மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறிபவை. குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் சமூகத்தில் சீர்கேடுகள் பரவவும் தலைமுறைகளை பாதிக்கவும் செய்பவை இவை. மக்கள் வெட்க உணர்வின்றி இப்பாவங்களில் மூழ்கி திளைக்கும்போது இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நாட்டின் அரசாங்கங்களுக்கு உண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவையாக இருந்தால் இப்பாவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை கல்வி நிறுவனங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தப் பாவங்களைத் தடுப்பதற்காக பதிலாக அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் படுமோசமான நிலையை இன்று கண்டு வருகிறோம்.

  தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கை மிகவும் எச்சரிப்பதாக இருக்கிறது. அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. அதாவது மக்கள் உயிர் வாழ்வதற்கே வெறுத்த நிலை அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. நிலைமை திருத்தப் படாவிட்டால் இன்னும் பல விபரீதங்கள் நிகழவே செய்யும். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இதற்காக முன்வந்தால் சீர்திருத்தங்களை நிகழ்த்த வழிகள் பிறக்கும்.

தடுப்பு நடவடிக்கை என்ன? 

மேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்

அதற்கு முதற்கண் தனிநபர் ஒழுக்கத்தை மக்களுக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து அதைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் பேணாவிட்டால் இம்மையில் ஏற்படும் விளைவுகளையும் மறுமையில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் தண்டனைகளையும் பற்றி எச்சரிக்க வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒழுக்கத்தைப் பேணும்போது உலகில் ஏற்படும் ஒழுங்கையும் அமைதி நிறைந்த வாழ்வையும் பேணுவோருக்கு மறுமையில் பரிசாகக் கிடைக்கவுள்ள நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வையும் பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும். இதைக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பள்ளிகளில் இந்த நீதி போதனையை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

அடுத்ததாக குற்றங்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதை எவ்வாறு சட்டங்கள் மற்றும் நீதித்துறை மூலம் தடுப்பது

குற்றவாளிகள் தாங்கள் செய்யும் பெரும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு பதிலாக கவுரவிக்கப் படுவதும் ஆட்சிக் கட்டில்களில் அமர்த்தி வைக்கப்படுவதும் நாட்டில் நடப்பதற்குக் காரணம் நமது வலுவற்ற சட்டங்களே என்பதை அறியலாம். மனிதர்கள் தங்கள் சிற்றறிவு கொண்டு இயற்றிய சட்டங்களே இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன.

நன்மை எது தீமை எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மனிதன் தன்னிடம் உள்ள சிற்றறிவு கொண்டும் தன் ஆசாபாசங்களுக்கு உட்பட்டும் தீர்மானித்து அதன் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். அதே வேளையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே அனைத்து படைப்பினங்களையும் அவற்றின் சூட்சுமங்களையும் அவற்றுக்கு எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன். தன் படைப்பினங்களுக்கு எது எப்போது நல்லது அல்லது தீயது என்பதை அதி பக்குவமாக அறிந்தவனும் அவன் மட்டுமே. எனவே அவன் தரும் சட்ட திட்டங்கள் எவையோ அவை மட்டுமே குறைகள் இல்லாதது. மேலும் இவ்வுலகை மனிதர்களுக்கு ஒரு தற்காலிக பரீட்சைக்கூடமாக உருவாக்கிய இறைவன் நாளை இறுதித்தீர்ப்பு நாளின்போது அவன் வழங்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலேதான் நம்மை விசாரிக்கவும் செய்வான்.

அந்த சர்வவல்லமை பொருந்திய இறைவன் இவ்வுலக மக்களுக்காக வழங்கிய வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. அவன் வழங்கும் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய பெட்டகமே இறுதி வேதம் திருக்குர்ஆன். அந்த திருமறைக் குர்ஆனின் செயல்முறை விளக்கமே இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி! எனவே இறைவன் வழங்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்போமாக!

 மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே இறைவன் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (திருக்குர்ஆன் 5:48)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக