இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 டிசம்பர், 2016

சத்தியத்தை மறுப்போருக்குக் கேடுதான்!


திருக்குர்ஆன் அத்தியாயம் 'அல்முர்ஸலாத்' (அனுப்பப்படுபவை) (எண்  77)  மனித குலத்திற்கு நினைவூட்டும் செய்திகள்: 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
சொல்லப்போகும் உண்மைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் அவனது சிந்தனையைத் தட்டி எழுப்பும் விதமாகவும் மனிதனை இப்பரந்த பிரபஞ்சத்தில் அவனைச்சுற்றி அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கை அற்புதங்களின்பால் அவனது கவனத்தை ஈர்த்து அவற்றின் மேல் சத்தியம் செய்கிறான் வல்ல இறைவன்.
1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!
3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!
5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!
7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
ஆம், உங்களைச்சுற்றி ஆனால் உங்களால் கட்டுப்படுத்த இயலாத இயற்கை சக்திகள் எவ்வாறு தங்களது இயக்கங்களை தங்கு தடையின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனவோ அவ்வாறே யுக முடிவு அல்லது உலக அழிவு என்பதும் திண்ணமாக நடந்தேறும். அவற்றை எவன் இயக்குகிறானோ அவனது கட்டளையின்படியே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உலக அழிவும் தீர்ப்பு நாளும் தொடர்ந்து மறுமை நிகழ்வுகளும் நடைபெறும். உலக அழிவின்போது என்ன நிகழும்? திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடும் ஒரு சில நிகழ்வுகளை இங்கும் கோடிட்டுக் காட்டுகிறான்:
8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,
9. வானம் பிளக்கப்படும் போது,
10. மலைகள் சிதறடிக்கப்படும் போது,
11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும் போது (அது நடந்தேறும்)
இன்று நிலையானவை என்றும் உறுதியானவை என்றும் நீங்கள் ‘மலை’போல நம்பியிருக்கும் அடித்தளங்கள் எல்லாம் அன்று நிலைகுலைந்து போய்விடுமே! அப்போது என்ன செய்வீர்கள்? எந்த இறைவன் இன்ன இன்ன வஸ்துக்கள் இப்படி இப்படி இருக்கவேண்டும் அல்லது இயங்க வேண்டும் என்று அவற்றின் விதிகளை எழுதி வைத்தானோ அவனே அவற்றின் காலத் தவணையையும் எழுதி வைத்துள்ளான்! நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது?
13. தீர்ப்பு நாளுக்காகவே!
14. தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
ஆம், இந்த அழிவுகள் நடைபெற வேண்டும் என்றும் அவற்றைப் படைக்கும்போதே விதியில் எழுதப்பட்டுள்ளது. எதற்காக அது பிற்படுத்தப்பட்டுள்ளது? நீங்கள் ஒவ்வொருவரும் இந்தத் தற்காலிக உலகில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தவணையில் உங்கள் பரீட்சையை முடிப்பதற்காக! இந்த உலகம் உங்களுக்கான பரீட்சைக் கூடம் போன்றது. பரீட்சை முடிந்ததும் இந்தக் கூடம் இழுத்து மூடப்படும். அதுவரைதான் இப்போது நீங்கள் காணும் இந்த ஏற்பாடு! இதை நிலையானது என்று ஏமாந்து விடாதீர்கள்! சற்றே சிந்தித்துப் பார்த்தால் இது விளங்காதா? இதோ பிறிதோர் அத்தியாயத்தில் இறைவன் கூறுகிறான்:
30: 8. அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்கவில்லையா? வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். மனிதர்களில் அதிகமானோர் தமது இறைவனின் சந்திப்பை மறுப்பவர்கள்.
இது பரீட்சை முடிவுகள் வெளிவரும் நாள்! நல்லோருக்கு வெகுமதியும் தீயோருக்கு தண்டனையும் வழங்கப்படும் நாள்! “உங்கள் செயல்களுக்கு நீங்கள் இறைவன் முன்னால் பதில் சொல்லியாக வேண்டும். இறுதித் தீர்ப்புநாள் வர இருக்கிறது, எனவே இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்!” என்று இறைத்தூதர்கள் மூலமாக இறைவன் விடுத்த எச்சரிக்கையைப் புறக்கணித்தோருக்கும் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் எடுத்துரைத்த சத்தியத்தை ஏற்காமல் அவற்றைப் பொய்யாக்கி தான்தோன்றித்தனமாக வாழ்வைக் கழித்தோருக்கும் அந்நாளில் கேடுதான் என்று எச்சரிக்கிறான் இறைவன்.
16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடுதான்.
இறைவனை மறந்து அநியாயங்களும் அட்டுழியங்களும் செய்து வாழ்ந்த உங்கள் முன்னோர்கள் இப்போது எங்கே? அவர்கள் நிலையாக வாழ்ந்தார்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? பின்தொடர்ந்து கொண்டிருக்கும் பின்னோர்களின் கதியும் அதுவல்லவா? இதைப்பற்றி இறைவன் இன்னொரு இடத்தில் கூறுகிறான்:
30:9. அவர்கள் பூமியில் பயணம் செய்து அவர்களுக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா? இவர்களை விட வலிமையுடன் அவர்கள் இருந்தனர். பூமியைப் பண்படுத்தி இவர்கள் பயிரிட்டதை விட அதிகம் பயிரிட்டனர். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.
30:10. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதி அவற்றைக் கேலி செய்ததால் தீமை செய்தோரின் முடிவு தீமையாகவே அமைந்தது.
இதைக் கண்கூடாக உணர்ந்தும் நீங்கள் சத்தியத்தை மறுத்தால் தீர்ப்பு நாளில் உங்களுக்குக் கேடுதான்!
20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?
21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதை பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?
23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
உங்கள் பகுத்தறிவு எங்கே போனது? நீங்கள் கடந்துவந்த பாதையை மறந்து விட முடியுமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இன்று திடகாத்திரமான உடலும் வாலிப முறுக்கும் அல்லவா உங்களை திமிர் பிடித்து அலையச் செய்கிறது! ஆனால் சில வருடங்களுக்கு முன் பச்சிளம் பாலகனாக இப்பூமியில் அடியெடுத்து வைத்தீர்கள்..... அதற்கும் முன்னர் எங்கிருந்தீர்கள்? தாயின் கர்ப்பத்தில் ஊற்றப்பட்ட அற்பமான விந்திலிருந்தல்லவா உங்கள் தொடக்கம்? அதனை அங்கு பாதுகாத்ததும் அதிலிருந்து உங்களுக்கு வடிவம் கொடுத்ததும் பக்குவமான ஒரு சிசுவாகவும் உருவாக்கி உணவளித்ததும் யார்? உங்கள் தேவைகளையும் வளர்ச்சியையும் வேகத்தையும் மிக நுட்பமாக நிர்ணயித்துப் பரிபாலித்தவன் யார்? இதில் ஏதேனும் பிசகு நேர்ந்திருந்தால் உங்கள் கைகள் சிறிதாகவும் மூக்கு கையளவு நீண்டதாகவும் போயிருக்குமல்லவா? எந்த உடலுக்குள் நின்று கொண்டு இறைமறுப்பைப் பேசுகிறீர்களோ அதன் உரிமையாளன் நீங்களோ உங்கள் பெற்றோரோ அல்ல! இருந்தும் அந்த இறைவனுக்கு நன்றி மறந்து செயல்படலாமா? அதே இறைவன் உங்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும்போது ஒளிந்தோடலாமா? ஒளிந்தோடினால் விளைவு என்னவாக இருக்கும்? விடுவானா அவன்?
25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?
27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.
28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
உங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவந்த நாள் முதல் இந்த நிமிடம் வரை இப்பூமியின்மீது அனுபவித்துவரும் அருட்கொடைகளை அளவிட முடியுமா? உங்கள் உடலுக்கேற்ற விதவிதமான சுவைமிக்க பயிர்கள், காய்கறிகள், பழங்கள், சமைப்பதற்காக நெருப்பு, உங்களுக்குப் பயனளிப்பதற்காக கால்நடைகள், உங்கள் தாகம் தீர்க்க சுவைமிக்க இனிய நீரைக் கொண்டுவரும் நீர் ஊற்றுக்கள், ஓடைகள், நதிகள், மிதமான ஒளியையும் வெப்பத்தையும் தருவதற்காக சூரியன், உழைப்பிற்காக பகல், ஓய்வுக்காக இரவு , பூமியின் சமநிலையைக் காக்கும் மலைகள் ........... என வரையறுக்க முடியாத அருட்கொடைகளை வழங்கிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு செய்நன்றி கொல்லாதீர்கள், அவனுக்குக் கட்டுப்பாட்டு நடங்கள் என்றுதானே இறைவனின் தூதர்கள் உங்களை ஏவினார்கள். அதை மறுத்தால் அதற்குரிய தண்டனையே நரகம் என்பது. அதைத்தான் அந்த நாளில் நேருக்குநேர் குற்றவாளிகள் காண்பார்கள். அன்று அவர்களுக்கு இடப்படும் கட்டளைகளை மறுக்காமல் நிறைவேற்றுவார்கள். தப்பியோட வழியேதும் இராது!
29. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி நடங்கள்!
30. மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!
31. அது நிழல் தரக் கூடியது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.
32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
அந்த நர.கத்தின் கடுமையை அல்லது கோரத்தை மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளால் வருணிக்க இயலாது. காரணம் அது வேறு ஒரு உலகம். அதற்கு இணையான ஒன்றை மனிதன் அதுவரைப் பார்த்திருக்க மாட்டான். எனவே மனிதனுக்கு அதைப் புரியவைக்க இவ்வுலக காட்சிகளை ஒரு உவமானமாக மேற்கண்டவாறு இறைவன் குறிப்பிடுகிறான்.
35. இது அவர்கள் பேச முடியாத நாள்!.
36. சமாதானமும் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.
37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
இவ்வுலகில் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்த நாவுகளெல்லாம் அடங்கிவிடும். தங்கள் பாவங்களை மறுத்துக் கூறவோ அவற்றிற்கு சமாதானம் கூறவோ வாதாடவோ தப்பிக்கவோ முடியாத நாள் அது.
38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்! உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.
39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்!
40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
ஆம், முன்னோர்களின் கட்டுக்கதைகள் என்று கூறி நீங்கள் கேலி செய்து மறுத்துக் கொண்டிருந்த தீர்ப்புநாள் இதுவே என்று குற்றவாளிகளிடம் எடுத்துரைக்கப்படும். பூமியில் வாழும்போது வக்கீல்களைக் கொண்டு வாதாடியும் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தும் கட்டப் பஞ்சாயத்துக்கள் செய்தும் பற்பல சூழ்ச்சிகள் மூலம் உங்களை தற்காத்துக் கொண்டீர்கள். ஆனால் அவை எதுவுமே உதவாத நாளல்லவா இன்று!
41. பயபக்தியுடையோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
42. அவர்கள் விரும்புகிற கனிகளிலும் இருப்பார்கள்.
43. ''நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!'' (எனக் கூறப்படும்.)
44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
மறுபுறம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்ந்த நல்லோர்களுக்கு மகிழ்வூட்டும் நாளாக அது இருக்கும். அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நல்லாசிகளும் நற்கூலிகளும் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இவ்வுலகில் அனுபவித்த துன்பங்களுக்கு பிரதிபலனாக முடிவில்லாத இன்பங்களை வெகுமதிகளாகப் பெறுவார்கள் அன்று. தெவிட்டாத இன்பங்களில் திளைத்த வண்ணம் அவர்கள் இருப்பார்கள்.
இதுதான் உண்மை நிலை. சத்தியத்தை ஏற்றுக்கொண்டோருக்கு ஏற்றமும் உபசரிப்பும் ஏற்றுக் கொள்ளாமல் பொய்யாக்கியோருக்கு தாழ்வும் இழிவும் வேதனையும் காத்திருக்கிறது! இந்த உண்மையைக் கண்மூடித்தனமாக மறுப்போர்க்கு இறைவன் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறான்.
45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.
நிலையற்ற இவ்வுலகின் உண்மை நிலையை மறந்து வாழ்வோரை எச்சரிக்கும் வண்ணம் மீண்டும்மீண்டும் அந்நாளின் கெடுதி பற்றி இறைவன் நினைவுபடுத்துகிறான். நீங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கும் இந்த தற்காலிக இன்பங்களைக் கண்டு ஏமாந்தும் இறுமாந்தும் விடாதீர்கள் இவை அனைத்தும் முடிவுக்கு வரும் முன்னேயே உணர்வு பெறுங்கள் என்று அழைக்கிறான்.
47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
48. 'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
படைத்த இறைவன், இவ்வுலகின் பரிபாலகன், அவனே இவ்வுலகின் உரிமையாளன், அவனுடையதே ஆட்சியதிகாரம், அவனால் படைக்கப்பட்ட மனிதன் அவனுக்கு சிரம் பணியக் கடமைப்பட்டவன். அந்த இறைவனுக்குக் கீழ்படிந்தவர்களாக அவனை வணங்கி வாழுங்கள் என்ற செய்தியைத்தானே இறைத்தூதர்கள் உங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ஆயினும் அதை தங்கள் கர்வம் தலைக்கேறிய நிலையில் மறுத்து வாழ்ந்தவர்களுக்கு மறுமையில் காத்திருப்பது நரகமே! மனிதனின் பகுத்தறிவைத் தூண்டி நாளை நடக்கவிருப்பதை அறிவுபூர்வமாக விளக்கும் இந்த செய்தியை நம்பாதவர்கள் இனி எதைத்தான் நம்புவார்கள்? படைத்த இறைவனே நேரடியாகச் சொல்லும் இந்த செய்தியை நம்பாதவர்கள் இதை விடுத்து எதைத்தான் நம்புவார்கள்?
49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

50. இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்?

திங்கள், 26 டிசம்பர், 2016

நற்செய்தி நல்லிணக்க இதழ் - இரண்டு

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்
இஸ்லாமிய கிருஸ்தவ நல்லிணக்க சிறப்பிதழ் - இரண்டு
இந்த இதழை கீழ்கண்ட இணைப்பிலும் படிக்கலாம்:
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusR3k3bFNaQjJ1b28/view
------------------------------------- 
இதன் முதல் பகுதியை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்
http://quranmalar.blogspot.com/2016/12/blog-post_25.html


நற்செய்தி நல்லிணக்கச் சிறப்பிதழ் - ஒன்று

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -
இஸ்லாமிய - கிருஸ்துவ நல்லிணக்க சிறப்பிதழ் - ஒன்று

இந்த இதழின் தொடர்ச்சியை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்
http://quranmalar.blogspot.com/2016/12/blog-post_96.html

சனி, 24 டிசம்பர், 2016

திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்

Image result for wealth and abundance
செல்வம் அல்லது பொருள் என்பது இறைவனுக்கு சொந்தமானது. தற்காலிகமான, குறுகிய இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகத்தை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் அமைத்துள்ள இறைவன் தான் விரும்பியவாறு இந்த பரீட்சையை நடத்துகிறான்.  இதில் வெல்வோருக்கு மறுமையில் சொர்க்க வாழ்வும் வெற்றிப் பாக்கியங்களும் காத்திருக்கின்றன. தோல்வியுறுவோருக்கு இறைவன் புறத்தில் இருந்து தண்டனைகளும் நரக வேதனைகளும் காத்திருக்கின்றன.
அன்றாடம் வாழ்வில் நாம் பல திடீர் பணக்காரர்களைக் காண்பதுண்டு. செல்வம் வரும்போது அவர்களின் குணமும் பிறரோடு உள்ள அணுகுமுறைகளும் மாறுவதை நாம் காண முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உருவான ஒரு திடீர் பணக்காரரைப் பற்றிய சம்பவத்தை திருக்குர்ஆன்  விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்கள். (அது வருமாறு:)
ஸஅலபா பின் ஹாத்திப்
-----------------------------------
அன்சாரிகளில் ஒருவரான ஸஅலபா பின் ஹாத்திப் என்பார் தொடர்பாகவே திருக்குர்ஆனின் வசனங்கள் 9: 75 - 77  அருளப்பெற்றது என்றே பெரும்பாலான விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்
அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸஅலபா பின் ஹாத்திப் அல்அன்சாரீ என்பவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், “(இறைத்தூதரே!) இறைவன் எனக்குச் செல்வத்தை வழங்க வேண்டுமென அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “ஸஅலபா! உமக்குக் கேடுதான்! உம்மால் நன்றி செலுத்த முடிகின்ற அளவுக்கு நீர் குறைவான செல்வத்தைப் பெற்றிருப்பதே, நீர் நன்றி செலுத்த இயலாத அளவுக்கு அதிகமான செல்வத்தைப் பெற்றிருப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
அவர் மற்றொரு முறையும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் அல்லாஹ்வின் நபியைப் போன்று (குறைந்த செல்வம் உடையவராக) இருக்க விரும்பவில்லையா? என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது ஆணையாக! இந்த மலைகள் வெள்ளியாகவும் பொன்னாகவும் (மாறி) என்னுடன் வர வேண்டும் என்று நான் நினைத்தால் கண்டிப்பாக அவ்வாறே வந்துவிடும்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர், “உங்களை உண்மையுடன் அனுப்பிய (இறை)வன் மீது சத்தியமாக! நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து, அதையடுத்து இறைவன் எனக்குச் செல்வம் வழங்கினால், நான் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமைகளை நிச்சயமாக வழங்கிவிடுவேன்” என்றார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! ஸஅலபாவுக்குச் செல்வத்தை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
பல்கிப் பெருகிய ஆடு
---------------------------------
பின்னர் அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். அந்த ஆடு, புழுக்கள் பல்கிப் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகியது. எனவே, அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றியது. எனவே, அங்கிருந்து நகன்று, மதீனாவின் (புறநகரிலுள்ள) பள்ளத்தாக்குகளில் ஒன்றில் வசித்தார்.
இஸ்லாத்தில் ஐவேளைத் தொழுகை என்பது கட்டாயக் கடமை. ஆனால் ஸஅலபா நாளடைவில் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளுக்கு மட்டுமே (மதீனாவுக்குச் சென்று) கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுவிட்டு, மற்ற தொழுகைகளைக் கைவிடலானார்.
அதன் பின்னரும் அந்த ஆட்டு மந்தை பல்கிப் பெருக, அந்த இடத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். அதன் விளைவாக, வாரம் ஒருமுறை தொழப்படும் கூட்டுத் தொழுகையான ஜுமுஆ தொழுகையைத் தவிர மற்ற கடமையான தொழுகைகள் அனைத்தையும் கைவிடும் நிலைக்கு ஸஅலபா ஆளானார்.
அந்த ஆட்டு மந்தை இன்னும் அதிகமாகப் புழுக்கள் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகவே, இறுதியில் ஜுமுஆ தொழுகையைக்கூடக் கைவிட்டுவிட்டார். வெள்ளிக்கிழமையன்று, (மதீனாவின்) தகவல்களை விசாரிப்பதற்காக (அங்கிருந்து வரக்கூடிய) பயணக் கூட்டத்தாரை எதிர்பார்த்துக் காத்திருக்கலானார்.
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸஅலபாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். (அது பல்கிப் பெருகி பெரிய மந்தையாகவே) அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றிற்று” என அவர் தொடர்பான தகவல்களைத் தெரிவித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று கூறினார்கள்.


ஜகாத் எனும் கட்டாய தர்மம் கடமையாக்கப்படுதல்
அதையடுத்து வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன், “(நபியே!) அவர்களின் செல்வங்களிலிருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக” (9:103) எனும் வசனத்தை அருளினான். கட்டாய தர்மம் தொடர்பான சட்டதிட்டங்களும் நபியவர்களுக்கு அருளப்பெற்றன.
எனவே, முஸ்லிம்கள் வழங்கியாக வேண்டிய (கட்டாய தர்மமாகிய) ஸகாத் பொருட்களைத் திரட்டுவதற்காக இரண்டு பேரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஸ்லிம்களிடமிருந்து தர்மப் பொருட்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் எனும் விவரத்தை அவ்விருவருக்கும் எழுதிக் கொடுத்தார்கள்.
அவ்விருவரிடமும், “நீங்கள் இருவரும் ஸஅலபாவிடமும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த இன்ன மனிதரிடமும் சென்று அவ்விருவரும் தருகின்ற தர்மப் பொருட்களைப் பெற்று வாருங்கள்” என்று கூறினார்கள்.
ஸகாத்தா? அப்படியென்றால்...?
-----------------------------------------------------
அவ்விருவரும் புறப்பட்டு ஸஅலபாவிடம் வந்து, அவர் வழங்க வேண்டிய (கட்டாய) தர்மத்தை வழங்குமாறு அவரிடம் கோரினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை அவரிடம் படித்தும் காட்டினர்.
அதற்கு ஸஅலபா, “கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம்தான் இது; இது எனக்கு என்னவென்றே தெரியாது; எனவே, நீங்கள் (இப்போது) போய்விட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பிறகு வாருங்கள் (பார்க்கலாம்)” என்று கூறினார். எனவே, அவ்விருவரும் சென்றுவிட்டனர்.
பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்தவரோ (ஸகாத் பொருட்களை வசூல் செய்வதற்காக) அவ்விருவரும் வந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு, தம் ஒட்டகங்களில் விலைமதிப்புள்ள தரமான ஒட்டகத்தைத் தேடிக் கண்டு பிடித்து, அதைத் தர்மம் வழங்குவதற்காகத் தனியாகப் பிடித்து, அவ்விருவரும் இருந்த இடத்திற்குத் தாமாகவே அழைத்துச் சென்றார்.
அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைக் கண்டபோது, “இவ்வளவு உயர்ந்த ஒட்டகத்தை நீர் செலுத்த வேண்டியதில்லை; உம்மிடமிருந்து இதை வசூலிப்பதும் எங்கள் திட்டமன்று” என்று கூறினர்.
அதற்கு அவர், “பரவாயில்லை; இதையே பெற்றுக்கொள்ளுங்கள்; இதை நான் மனமுவந்தே கொடுக்கிறேன்” என்றார். அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைப் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மற்ற மக்களிடம் சென்று அவர்கள் வழங்கிய தர்மப் பொருட்களையெல்லாம் வசூல் செய்துவிட்டுப் பின்னர் மறுபடியும் ஸஅலபாவிடம் சென்றனர். அப்போது ஸஅலபா, “நீங்கள் கொண்டுவந்துள்ள ஏட்டைக் கொடுங்கள், பார்க்கிறேன்” என்று கூறி, அதை (வாங்கி)ப் படித்தார்.
பின்னர், “கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம் தான் இது; எனவே, நீங்கள் சென்று வாருங்கள்; நான் யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கிறேன்” என்றார்.
ஸஅலபாவுக்குக் கேடுதான்!
--------------------------------------------
அவ்விருவரும் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அவ்விருவரிடமும் பேச்சுக் கொடுப்பதற்கு முன்னர், “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று நபியவர்கள் கூறினார்கள். பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழருக்கு அருள் வளம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்தார்கள்.
பின்னர் அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ஸஅலபாவின் நடவடிக்கையையும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழரின் நடவடிக்கையையும் தெரிவித்தனர்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்,  கீழ்கண்ட மூன்று வசனங்களை (75-77) அருளினான்


9: 75. அவர்களில் சிலர், “இறைவன்தனது அருளை எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நிச்சயமாகத் தானதர்மம் செய்வோம்; நிச்சயமாக நல்லோராகவும் திகழ்வோம் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி அளித்தனர்.
9:76. அவர்களுக்கு இறைவன் தனது அருளை வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் அலட்சியம் செய்து பின்வாங்கிவிட்டனர்.
9: 77. அவர்கள் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள்வரை அவர்களின் உள்ளங்களில் (குடிகொண்டிருக்கும்) நயவஞ்சகத்தையே அவர்களுக்குத் தண்டனையாக இறைவன் வழங்கினான். அல்லாஹ்விடம் அவர்கள் அந்த உறுதிமொழிக்கு அவர்கள் மாறு செய்ததும் அவர்கள் பொய்யுரைத்துக்கொண்டிருந்ததுமே இதற்குக் காரணமாகும்.
அந்த ஸஅலபா அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார். இறைவன் மேற்படி இவ்வுலகில் அதற்கான தண்டனை அனுபவித்தாரா இல்லை இறுதி காலத்தில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரினாரா என்பது பற்றிய விவரங்கள் மேற்படிக் குறிப்புகளில் இருந்து கிடைப்பதில்லை.
ஆனாலும் இறைவன் செல்வம் வழங்கும்போது அதை முறைப்படி கையாளாதவர்கள் உள்ளங்களில் நயவஞ்சமும் கஞ்சத்தனமும் நுழைகின்றன என்பது மேற்படி வசனங்களில் இருந்து நாம் பெறும் பாடமாகும். இறைவனின் நீதி விசாரணைப்படி இம்மைyயில் இல்லாவிட்டாலும் மறுமையில் அதற்கு உரிய தண்டனைகளை அவர்கள் அடைவார்கள் என்பது மட்டும் உறுதியான ஒன்று

நன்றி: தப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் - கான் பாக்கவி 

புதன், 21 டிசம்பர், 2016

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2017 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் இதழின் மின் பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் வாசிக்கலாம் :

https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusbFFVdWFfbFBISFk/view?usp=sharing